search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்"

    இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் இப்போதே அளிக்கப்படவுள்ள நிலையில் சிலரது மனநிலை மட்டும் வேறுவிதமாக உள்ளது. #Thiruvarurbyelection
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழக அரசு அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் திருவாரூர் தொகுதி மக்களுக்கு தேர்தலுக்குபின் அளிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இடைத்தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டதால் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதனால் முன்னர் பொங்கல் பரிசு உரிய நேரத்தில் கிடைக்காமல் போனதே... என்று கவலைப்பட்ட திருவாரூர் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



    ஆனால், ‘நோட்டுக்கு ஓட்டு’ என்ற கொள்கையை தவறாமல் கடைபிடிக்கும் ஒருசிலர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி-தோல்வியை பணம்தான் நிர்ணயித்து தந்தது என பரவலாக பேசப்பட்டது. இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதியை தக்கவைத்து கொள்ள அக்கட்சியினரும், அந்த தொகுதியை தட்டிப்பறிக்க பிறகட்சிகளும் கடுமையான பலப்பரீட்சை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆளும் அ.தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தல் அமிலப்பரீட்சையாகவும், எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு கவுரவ பிரச்சனையாகவும் பார்க்கப்பட்டது.

    கொள்கை, வேட்பாளர் என்ற எல்லைகளையும் கடந்து இங்கும் பணம்தான் கதாநாயகனாக விளையாடும் என பரவலான கருத்து நிலவியது. ஒரு ஓட்டுக்கு குறைந்தது ஐயாயிரம் ரூபாய்வரை கிடைக்கலாம் என்னும் ஆதங்கமும் தலைதூக்கியது.

    இந்நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது சிலரின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.

    குடும்ப அட்டைக்கு அரசு அளிக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசை இடைத்தேர்தல் முடிந்த பிறகு பிப்ரவரி மாதத்தில் வாங்கி கொள்ளலாம். ஆனால், ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை வாங்க இன்னும் எத்தனை மாதம் காத்திருக்க வேண்டுமோ? என அவர்கள் தவிக்கின்றனர்.

    இதற்கேற்ப, ‘டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் திருவாரூர் இடைத்தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம்’ என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தெரிவித்துள்ள கருத்து எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்த்ததுபோல் அவர்களின் வயிற்றெரிச்சலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

    பத்து பேர் கொண்ட குடும்பமானாலும் அரசு அளிக்கும் பொங்கல் ரொக்கப்பரிசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும்தான். ஆனால், அந்த குடும்பத்தில் 4 வாக்காளர்கள் இருந்தால் போதும் தலைக்கு ஐயாயிரம் என்றால் சுளையாக இருபதாயிரம் ரூபாய் கிடைத்திருக்குமே! என சிலர் புலம்புகின்றனர். #Thiruvarurbyelection 
    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிற தொண்டர்கள் நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. #ThiruvarurByElections #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-



    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிற தொண்டர்கள் 2-ந்தேதி (நாளை) காலை 9.30 மணி முதல் 3-ந்தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்தொகையான ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை 4-ந்தேதி நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   #ThiruvarurByElections #ADMK
    அ.தி.மு.க. அரசை காத்து செயல்பட இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடித் தொண்டர்களையும் இந்த மடல் வழியாக சந்திப்பதில், நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

    பேரறிஞர் அண்ணா தனது 30 வருட பொது வாழ்வின் மூலம் ஆற்றிய பணிகள் இந்திய நாட்டின் அரசியல் போக்கினை மாற்றியதோடு மட்டுமல்லாமல், இந்திய மொழிகள் ஒவ்வொன்றும் அவற்றைப் பேசும் மக்களால் பெரிதும் நேசிக்கப்படவும், தொன்மை சிறப்பு வாய்ந்த இந்தியப் பண்பாடு புதிய கோணத்தில் புரிந்துகொள்ளப்படவும் காரணமாக அமைந்தன என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

    இந்தியத் திருநாடு வலுப்பெற்றும், பொருளாதார வளம் பெற்றும் உயர்ந்திட வேண்டுமானால், இந்நாட்டின் மாநிலங்கள் வலிமை பெறவேண்டும்; மாநில மொழிகள் மதிக்கப்பட வேண்டும்.

    ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிக்கப்படுவது நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்பனவற்றை எல்லாம் எடுத்துரைத்து, அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்த மாமேதை பேரறிஞர் அண்ணா.

    மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடியும் என்பதை முதன் முதலாக நிகழ்த்திக் காட்டினார் பேரறிஞர் அண்ணா. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் நம் நாட்டில் தோன்றி, மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதும், அதன் காரணமாக அந்தந்த மாநிலங்களின் மொழிகள், பண்பாடு, நாகரீகம், புத்துயிர் பெறுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    ஓய்வறியா கடும் உழைப்பால், அறிவுத்திறத்தால் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய புரட்சியின் விளைவாகத்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் சிறப்பான ஆட்சிகளை நடத்திக் காட்ட முடிந்தது.

    அதன் தொடர்ச்சியாக, புரட்சித் தலைவி அம்மா அமைத்துத் தந்த கழக அரசு இன்றளவும் தொடர்ந்து சிறப்பாக வெற்றிப்பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

    நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்றால், அது அண்ணா எடுத்துரைத்த சமத்துவ, ஜனநாயக வழியில்தான் சாத்தியமாகும் என்பதை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நன்கு உணர்ந்திருந்தார்கள்.

    அதன் காரணமாகத்தான், தான் ஆரம்பித்த மக்கள் இயக்கத்திற்கு ``அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’’ என்று இயக்கத்தின் பெயரிலேயே அண்ணாவின் திருப்பெயரை இணைத்தார்கள். பேரறிஞர் அண்ணா காண விரும்பி, அயராது உழைத்த புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைப்பதற்கு தனது ஆற்றல் முழுவதையும் செலவிட்டார் புரட்சித் தலைவி அம்மா.

    பேரறிஞர் அண்ணா தனது ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைத்த மக்கள் நலப் பணிகளை மிகப்பெரிய அளவுக்கு விரிவுபடுத்தி, எல்லா நிலைகளிலும் உள்ள மக்கள் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பெண்கள் பயன்பெறும் திட்டங்களை நாடு போற்றும் வண்ணம் செயல்படுத்திக் காட்டினார் புரட்சித் தலைவி அம்மா.

    தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பேரறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் வகுத்தளித்த பாதையில் கழக அரசு தொடர்ந்து நடைபோடும் என்ற உறுதியை, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    பேரறிஞர் அண்ணாவின் அரும் பணிகளையும், சாதனைகளையும், சிறப்புடன் நினைவுகூர்ந்து, அவருக்கு ``பாரத் ரத்னா’’ விருது வழங்க வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். இது குறித்து பாரதப் பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. விரைவில் இது பற்றிய நல்ல செய்தி மத்திய அரசிடம் இருந்து வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.


    பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா, ஆகியோரது வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் தொண்டாற்றுவதற்கு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்று, கழக அரசைக் காத்து, மக்களிடையே நற்பெயர் பெற்று எதிர்வரும் இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்பதை கழக உடன்பிறப்புகளுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

    பேரறிஞர் அண்ணாவின் புகழ் காப்போம்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நடப்போம்; புரட்சித் தலைவி அம்மா அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வெற்றி மேல் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.  #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆட்சிக்கு முடிவு கட்டும் என்று மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி. வி. தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தனை குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களாக இருக்கின்றன.

    இவர்களின் ஊழல்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் காலம் விரைவில் வரும்.

    அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது போல முதல் அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முடியாது.

    இப்போது மின்துறை அமைச்சரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். யாருடைய பிளஸ்சிங்கோ அவருக்கு இருப்பதாக நினைக்கிறார். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது.

    அவர் மின்சாரத்துறைக்கு அமைச்சராக இல்லை. மின்வெட்டுத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார்.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டது. அதன் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போதும் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த ஆட்சியின் முடிவின் அறிகுறியாக இந்த மின்வெட்டு உள்ளது.


    இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் துரோக ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் விரும்பாத இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தேவையற்ற திட்டம். மக்கள் விரும்பாத திட்டம். மலைகள், நீராதாரங்கள், இயற்கை வளங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

    தமிழகத்தில் எத்தனையோ சாலைகள் போக்குவரத்து நெருக்கடியில் உள்ளன. அவற்றை சரி செய்யாமல் இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.

    இப்போது அந்த திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்ற உள்ளதாக தெரிகிறது. அதுவும் கண்டிப்பாக நிறைவேறாது.

    ஒரு நோயாளி தனது இறுதிக்கட்டத்தில் நோய் முற்றி எப்படி இறப்பாரோ அது போல இந்த ஆட்சியும் நோயாளியின் இறுதிக் கட்டத்தை போல உள்ளது. இது விரைவில் முடிவுக்கு வரும்.

    கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.

    முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஒரு ஆண்டாக போராடி வருகிறார்கள். அதற்கும் விரைவில் தீர்வு ஏற்படும்.

    எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் அரசாகவே எடப்பாடி-பன்னீர் செல்வம் அரசு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை.

    இந்த துரோக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் நடைபெற உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வேட்பாளர்களை நிறுத்தும்.

    எங்கள் வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அமோக வெற்றி பெறுவோம். 2 தொகுதிகளிலும் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. 2-வது இடத்திற்கு தான் மற்றவர்கள் போட்டியிட வேண்டும். இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    கடந்த 3 மாதங்களாக இந்த தொகுதிகளில் எங்கள் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுவும் தேர்தல் பணி தான். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது லட்சியங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.

    எனவே மத்திய அரசின் அடிமையாக உள்ள இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். தமிழக மக்களுக்கும் நல்லதொரு விடிவு காலம் பிறக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam
    ×