search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvarur constituency"

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம், அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ், மக்கள்நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம், நாம் தமிழர் வினோதினி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் திருவாரூர் திரு.வி.க.கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கண்காணிப்பு கேமிராக்கள், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை திரு.வி.க. கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    முன்னதாக காலை 7 மணியளவில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் வந்தனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர், துணை தேர்தல் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 4 சுற்று முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம்:-

    பூண்டி கலைவாணன் (தி.மு.க.)-18,891

    ஆர்.ஜீவானந்தம் (அ.தி.மு.க.)-9,892

    எஸ்.காமராஜ் (அ.ம.மு.க.)-3166

    அருண் சிதம்பரம் (மக்கள் நீதி மய்யம்):-538

    வினோதினி (நாம் தமிழர்):-1249

    மறைந்த தி.மு.க. தலைவர் சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    திருவாரூர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
    இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் இப்போதே அளிக்கப்படவுள்ள நிலையில் சிலரது மனநிலை மட்டும் வேறுவிதமாக உள்ளது. #Thiruvarurbyelection
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழக அரசு அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் திருவாரூர் தொகுதி மக்களுக்கு தேர்தலுக்குபின் அளிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இடைத்தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டதால் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதனால் முன்னர் பொங்கல் பரிசு உரிய நேரத்தில் கிடைக்காமல் போனதே... என்று கவலைப்பட்ட திருவாரூர் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



    ஆனால், ‘நோட்டுக்கு ஓட்டு’ என்ற கொள்கையை தவறாமல் கடைபிடிக்கும் ஒருசிலர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி-தோல்வியை பணம்தான் நிர்ணயித்து தந்தது என பரவலாக பேசப்பட்டது. இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதியை தக்கவைத்து கொள்ள அக்கட்சியினரும், அந்த தொகுதியை தட்டிப்பறிக்க பிறகட்சிகளும் கடுமையான பலப்பரீட்சை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆளும் அ.தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தல் அமிலப்பரீட்சையாகவும், எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு கவுரவ பிரச்சனையாகவும் பார்க்கப்பட்டது.

    கொள்கை, வேட்பாளர் என்ற எல்லைகளையும் கடந்து இங்கும் பணம்தான் கதாநாயகனாக விளையாடும் என பரவலான கருத்து நிலவியது. ஒரு ஓட்டுக்கு குறைந்தது ஐயாயிரம் ரூபாய்வரை கிடைக்கலாம் என்னும் ஆதங்கமும் தலைதூக்கியது.

    இந்நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது சிலரின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.

    குடும்ப அட்டைக்கு அரசு அளிக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசை இடைத்தேர்தல் முடிந்த பிறகு பிப்ரவரி மாதத்தில் வாங்கி கொள்ளலாம். ஆனால், ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை வாங்க இன்னும் எத்தனை மாதம் காத்திருக்க வேண்டுமோ? என அவர்கள் தவிக்கின்றனர்.

    இதற்கேற்ப, ‘டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் திருவாரூர் இடைத்தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம்’ என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தெரிவித்துள்ள கருத்து எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்த்ததுபோல் அவர்களின் வயிற்றெரிச்சலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

    பத்து பேர் கொண்ட குடும்பமானாலும் அரசு அளிக்கும் பொங்கல் ரொக்கப்பரிசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும்தான். ஆனால், அந்த குடும்பத்தில் 4 வாக்காளர்கள் இருந்தால் போதும் தலைக்கு ஐயாயிரம் என்றால் சுளையாக இருபதாயிரம் ரூபாய் கிடைத்திருக்குமே! என சிலர் புலம்புகின்றனர். #Thiruvarurbyelection 
    இடைத்தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டதால் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. #Thiruvarurbyelection #pongalcashprize
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவையடுத்து காலியாக இருந்த திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகள் இன்னும் முடியாததால் இந்த இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.



    இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் கமிஷன் இன்று காலை உத்தரவிட்டது.

    இதனால் அந்த தொகுதியில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளும் ரத்தாகி உள்ளது. முன்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் திருவாரூர் தொகுதி மக்களுக்கு பின்னர் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், தற்போது அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றிலிருந்து அளிக்கப்படவுள்ள பொங்கல் ரொக்கப்பரிசு திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கும் சேர்த்து வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. #Thiruvarurbyelection #pongalcashprize 
    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோற்றால் அ.ம.மு.க.வுடன் இணைய தயாரா? என்று தங்க தமிழ்செல்வன் சவால் விடுத்துள்ளார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் வருகிற 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட டி.டி. வி.தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது குட்கா விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால் குற்றத்திற்கு ஆளான அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் பதவி விலகி தங்களை குற்றமற்றவர் என்று நிரூபித்து அதன் பின்னர் மீண்டும் பதவியில் அமர வேண்டும்.


    ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையானதே. எங்கள்மீது பழி சுமத்தவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் இதுவரை ஓ.பி.எஸ்.ஐ. அழைத்து விசாரணை செய்யாதது ஏன்? இந்த ஆணையத்தால் உண்மை வெளிவராது.

    குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் உண்மையை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மறைத்து விட்டனர். அப்போதே உண்மை தெரிந்திருந்தால் பதவியிலிருந்து அவர்களை தூக்கி இருப்பார்.

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாங்கள் அவர்களுடன் செல்ல தயார். இதேபோல் நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுடன் அ.தி.மு.க. வர தயாரா என்று சவால் விடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கடந்த சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது-
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்தார்.

    கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் நேற்று (10-ந் தேதி) அறிவிப்பாணை வெளியிட்டார். அந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    எனவே அந்தத் தேதியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் இனி மேற்கொள்ளும். எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியானதாக சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது, நினைவுகூரத்தக்கது.
    ×