search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக முப்பெரும் விழா"

    • தி.மு.க. முப்பெரும் விழாவில் 17-ந்தேதி காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    • முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூரில் வருகிற 17-ந்தேதி தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதனால் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அந்த பகுதியில் தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்பதற்காக 16-ந்தேதி மாலை ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காட்பாடி வருகிறார்.

    அவருக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

    17-ந் தேதி காலை 10.15 மணிக்கு வேலூர் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு செல்கிறார்.

    அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

    இதற்காக இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு தி.மு.க கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    இதனையடுத்து அங்கிருந்து அவர் மீண்டும் வேலூருக்கு வந்து ஓய்வு எடுக்கிறார்.

    தி.மு.க. முப்பெரும் விழாவில் 17-ந்தேதி காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். வேலூரில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா-தி.மு.க. பவள விழா வருகிற 17-ந்தேதி வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, முன்னாள் அமைச்சர் மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது, பெங்களூரு ந.ராமசாமிக்கு பேராசிரியர் விருது வழங்கப்படும் என்று தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பணிகளில் நவீன தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன.
    • தி.மு.க. உதயமான தினம் செப்டம்பர் 17-ந்தேதி வருகிறது.

    சென்னை:

    கருணாநிதி, தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சர் அரியணையை அலங்கரித்தவர். தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர். கலை, இலக்கியம், அரசியலில் கோலோச்சியவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 94-வது வயதில் மரணம் அடைந்தார். கருணாநிதியின் உடல் அவரது ஆசைப்படியே சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் கருணாநிதியின் நினைவிடம் சிறப்பாக பராமரிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசும்போது, 'கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும். கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் கட்டும் பொறுப்பு பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கடல்சார் ஒழுங்குமுறை ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்ற துறைகளின் உரிய அனுமதியோடு நினைவிட கட்டுமான பணி தொடங்கியது. கருணாநிதி கலை, இலக்கியம், அரசியல் ஆகிய 3 துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக 3 வளைவுகளில் பிரமாண்ட 'உதயசூரியன்' வடிவமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    திருவாரூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட கலைஞர் கோட்டம் போன்று நினைவிட அருங்காட்சியகத்திலும் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள், அவரது பொன்மொழிகள் தொகுப்பு போன்ற தனித்தனி அரங்குகள் அமைய உள்ளன. அன்பு உடன்பிறப்பே! என்ற கருணாநிதியின் கர்ஜனை குரல் தொடர்ந்து ஒலிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பணிகளில் நவீன தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து லேசர் ஒளியில் சூரியன் உதிப்பது போன்ற தத்ரூப காட்சி அமைப்புகளும் இடம் பெறும் என்று தெரிகிறது.

    மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் கட்டுமான பணிகளை திறம்பட மேற்கொண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மெச்சத் தகுந்த பாராட்டை பெற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுதான் கருணாநிதி நினைவிட அருங்காட்சியக கட்டுமான பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

    கருணாநிதி நினைவிட அருங்காட்சியக கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது என்று அவர் கூறி இருக்கிறார். எனவே கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் விரைவில் திறப்பு விழா காணும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பணிகளும் இரவு-பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தி.மு.க. உதயமான தினம் செப்டம்பர் 17-ந்தேதி வருகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15-ந்தேதி), கருணாநிதி பிறந்தநாள் (ஜூன் 3) மற்றும் தி.மு.க. ஆண்டு விழா (செப்டம்பர் 17) ஆகிய 3 விழாக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ந்தேதி முப்பெரும் விழாவாக தி.மு.க. கொண்டாடி வருகிறது.

    எனவே முப்பெரும் விழாவையொட்டி கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் செப்டம்பர் 17-ந்தேதி அன்று திறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால் பேரறிஞர் அண்ணா நினைவிடத்துக்கு பார்வையாளர்கள் அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அத்துமீறி யாரும் உள்ளே நுழைந்துவிடாத வகையில் அண்ணா நினைவிட முகப்பு அடைக்கப்பட்டுள்ளது.

    அங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பணிகளை படம் எடுப்பதற்கு பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு அனுமதியும் மறுக்கப்படுகிறது.

    முதலில் கருணாநிதி நினைவிட அருங்காட்சியகத்தை திறந்து வைத்துவிட்டு அதன்பின்னர், அவரது நினைவிட பின்புறம் உள்ள கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து ரூ.81 கோடியில் 134 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் உரிய அனுமதி பெற்று மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

    • மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று சேர்வதாக துரைமுருகன் பேச்சு
    • திராவிட ஆட்சியின் தத்துவத்தை முதல்வர் அறிமுகம் செய்திருக்கிறார்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    ஆட்சியையும் கட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி வருகிறார். அதனால்தான் அவர் நடத்தும் ஆட்சியைக் கண்டு அகில இந்தியாவும் புகழ்கிறது.

    தளபதி அவர்கள், கட்சி தலைவராகி முதலமைச்சர் ஆனவுடன், இன்றும் அதிகமாக அவரது கவனம் வடநாட்டில் செலுத்தப்படாத காலத்திலேயே இன்றைக்கு இருக்கும் முதல் அமைச்சர்களிலேயே முதல் அமைச்சராக இருக்கக்கூடியவர் தளபதி என்று அகில இந்தியாவே ஒப்புக்கொண்டுள்ளது.

    நமக்கும் பாஜகவுக்கும் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் உண்டு. ஆனால், பிரதமர் மோடி அவர்கள், தளபதியை பார்க்கும்போதெல்லாம் சொல்வார், 'கட்சி அரசியல் இருக்கட்டும் ஸ்டாலின், உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நீ வந்தால் என் வீட்டில் தங்கு. உன்னை ஏற்றுக்கொள்கிறேன்' என்று சொல்லும் அளவிற்கு இவருடைய கண்ணியம், பண்பாடு தலைதூக்கி நிற்கிறது.

    யாராலும் இந்த ஆட்சியை பற்றி குறை கூற முடியவில்லை. மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று சேர்கின்றன. நமது முதலமைச்சர் அவர்கள் ஆட்சியையும் செம்மையாக நடத்துகிறார், கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

    இனிமேல் இது திராவிட மாடல் ஆட்சி என்று கூறியிருக்கிறார். இந்த ஆட்சியின் தத்துவத்தை அறிமுகம் செய்திருக்கிறார். எனவே, இன்னும் 60 ஆண்டு காலத்துக்கு இந்த இயக்கத்துக்கு பயமில்லை, ஆட்சிக்கும் பயமில்லை என்ற அளவுக்கு நம்மை வழிநடத்த தளபதி இருக்கிறார். 

    இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

    ×