search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதி நீக்க வழக்கு"

    தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #OPanneerSelvam
    கரூர்:

    தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மாவட்ட வாரியாக ஒரு சில ஊராட்சி கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்று குறைகேட்டு பேசி வருகிறார்.

    அதன்படி கரூர் மாவட்டத்தில் 2 ஊராட்சி சபை கூட்டங்களில் இன்று அவர் பங்கேற்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசநத்தம் ஊராட்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகேட்டு மனுக்கள் பெற்றார். பின்னர் அவர் பேசியதாவது:-

    உங்கள் பிரச்சனைகளை, குறைகளை, எண்ணங்களை புரிந்துகொள்ள இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சிக்கும், மோடி தலைமையில் நடைபெறும் மத்திய பாசிச, மதவாத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

    கோவிலுக்கு வருவது போல் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். பக்தர்களுக்கு புனித இடம் கோவில் என்றால் எங்களுக்கு கிராமங்கள் தான் புனித ஸ்தலம். இங்கிருந்துதான் அரசியல் தொடங்கி இருக்கிறது. முன்பெல்லாம் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது வாக்குப்பதிவு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

    தற்போது தமிழகம் முழுவதும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 17-ந்தேதிக்குள் அனைத்து கூட்டங்களும் முடிக்கப்பட்டு விடும். இந்த ஊராட்சி சபை கூட்டத்தை பார்த்து ஆளுங்கட்சியினர் அதிர்ந்துபோய் உள்ளனர். இதனால் அப்பட்டமாக பொய்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

    நான் துணை முதல்வராக இருக்கும்போது கிராமங்களுக்கு செல்லவில்லை என்று கூறுகிறார்கள். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 12,617 கிராமங்களுக்கும், நூலகம் கொண்டு வந்தேன். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி மேம்படுத்தி வளர்ச்சி பணிகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடிக்கு சேலத்தை தவிர வேறு எந்த ஊராவது தெரியுமா? ஜெயலலிதா செல்வாக்கால் ஆட்சி செய்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி கவலையில்லை. கமி‌ஷன், ஊழல், வசூல் என்ற நிலையில்தான் அவர்கள் உள்ளனர். விரைவில் இந்த ஆட்சி தூக்கி எறியப்படும்.


    தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார். இது பற்றி விளக்கம் கேட்டால் யாகம் நடத்தவில்லை, சாமி மட்டுமே கும்பிட்டேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார். யாகம் நடத்த அது என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? மக்களின் வரிப் பணத்தில் உருவான கோட்டையில் ஏன் யாகம் நடத்தினீர்கள்? பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர். #DMK #MKStalin #OPanneerSelvam
    எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது. #SupremeCourt #OPanneerSelvam
    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பிளவுபட்ட போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது.

    அப்போது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். என்றாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.


    பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்த நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணையை தொடங்கியது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #SupremeCourt #OPanneerSelvam
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு நகலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு சட்டசபை செயலாளர் அனுப்பிவைத்தார். #18MLAsdisqualificationcase #TNElectionCommission
    சென்னை:

    அ.தி.மு.க. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் ப.தனபால் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி நீதிபதிகள் 2 பேரும் வழங்கிய தீர்ப்பு மாறுபட்டதாக அமைந்ததால், 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்திய நாராயணன் இந்த வழக்கை விசாரித்து கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி தனது தீர்ப்பை வழங்கினார்.

    அந்தத் தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று அவர் அதிரடியாக அறிவித்தார். அந்த தீர்ப்பின் சாராம்சம் 475 பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. இந்த தீர்ப்பின் நகல் சமீபத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த நகலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு நேற்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அனுப்பிவைத்தார்.



    இனி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த தீர்ப்பு நகலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பார். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடும். விரைவில் இந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAsdisqualificationcase #TNElectionCommission
    தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? என்பதற்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். #thangatamilselvan
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டசபை சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதில், சபாநாயகரின் உத்தரவை சரி என்று தலைமை நீதிபதியும், தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் கூறியிருந்தனர்.

    இதையடுத்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், வழக்கில் ஒரு மனுதாரருமான தங்க தமிழ்செல்வன், தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து, ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்தார்.

    இதையடுத்து அவர் மீது, ஐகோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பெண் வக்கீல் ஸ்ரீமதி என்பவர் தாக்கல் செய்தார். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இந்த வழக்கை பரிசீலித்துவிட்டு, தங்க தமிழ்செல்வனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.

    அதன்படி, தங்க தமிழ்செல்வன் நேற்று மாலையில் வக்கீல்கள் தமிழ்மணி, டி.மோகன் ஆகியோருடன் ஆஜரானார். அப்போது தலைமை நீதிபதி குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு, நிபந்தனையற்ற மன்னிப்பை அவர் கோரினார்.

    இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், நிபந்தனையற்ற மன்னிப்பை எல்லாம் ஐகோர்ட்டில் தான் கேட்கவேண்டும் என்று கருத்து கூறினார். இதையடுத்து, கோர்ட்டு அவமதிப்பு புகாருக்கு விளக்கம் அளிக்க தங்க தமிழ்செல்வன் தரப்பில் 6 வார காலஅவகாசம் கேட்கப்பட்டது. இந்த கோரிக்கையை அட்வகேட் ஜெனரல் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியில் வந்த தங்க தமிழ்செல்வன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார். அதன்படி இன்று (நேற்று) ஆஜரானேன். பின்னர் இந்த வழக்கிற்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் கேட்டதால், ஆகஸ்டு 29-ந்தேதி நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார்.

    தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவேன் என்று முன்பு கூறினேன். தற்போது வழக்கை வாபஸ் பெறவேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த வழக்கை தற்போது விசாரிக்கும் 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் மீது நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு விரைவாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், வழக்கை வாபஸ் பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. #MLAsDisqualification #18MLAs #disqualification
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கடந்த ஆண்டு தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து அரசு தலைமை கொறடா கொடுத்த புகாரின் அடிப்படையில், வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து, சட்டசபை சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14-ந்தேதி நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். சபாநாயகர் உத்தரவு சரிதான், அவரது உத்தரவில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். சபாநாயகர் உத்தரவு உள்நோக்கம் கொண்டது. சட்டவிரோதமானது. அதனால், அந்த உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டார்.

    இருவரது தீர்ப்பில் எது சரியானது என்று முடிவு செய்ய 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணனை நியமித்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து, 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிடும்படி, சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேலிடம், 18 எம்.எல்.ஏ.க்களின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கடிதம் கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருவதாக ஐகோர்ட்டு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.  #MLAsDisqualification #18MLAs #disqualification #tamilnews
    டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதியும், செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இவ்வழக்கு வேறு அமர்வுக்கு செல்கிறது. #18MLAsCaseVerdict #MLAsDisqualification #MadrasHighCourt
    சென்னை:

    தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

    பின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான முதன்மை அமர்வுக் மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.



    தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று காலை முதலே நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் 18 எம்எல்ஏக்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அதேசமயம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மதியம் 1.40 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது,  18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். அதேசமயம் தகுதிநீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பு கூறினார். இவ்வாறு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இனி மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு செல்லும். மூன்றாவது நீதிபதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். #18MLAsCaseVerdict #MLAsDisqualification #18MLAs #MadrasHighCourt

    ×