search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்முகாஷ்மீர்"

    • ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர்.
    • ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது.

    ஜம்மு:

    ஜம்முவில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளதாவது: சட்டப்பிரிவு 370 மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக பிரிவினைவாதம், ஊழலால் ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருந்தது. அது நமது சகோதர சகோதரிகளுக்கு உரிய உரிமைகளை மறுத்தது. பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தானால் அந்த பிரிவு பயன்படுத்தப்பட்டது.

    பிரதமர் மோடி 370வது பிரிவை ரத்து செய்து, இந்த பகுதியில் அமைதி, முன்னேற்றம் மூலம் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது. இங்குள்ள அதன் அனுதாபிகள் பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தை அழிக்க முயன்றனர். இருப்பினும் தற்போது நிலைமை மாறிவிட்டது.

    குடும்ப அடையாள எண் வழங்கும் நடவடிக்கை குறித்து யாரும் தவறாக எண்ண வேண்டாம். இது ஜம்மு காஷ்மீரில் சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவும். ஜம்மு காஷ்மீரில் அரசுப் பணிகளில் பயங்கரவாதிகளின் உறவினர்கள் உள்ளனர். முந்தைய காலத்தில் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் எப்படி அரசுப் பணிகளில் சேர்க்கப்பட்டனர்? பிரிவினைவாதிகளுக்கு எப்படி அரசு வேலை வழங்கப்பட்டது?

    இப்போது நடக்கும் வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு குறித்த கேள்விகளை எழுப்புபவர்கள், முதலில் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு பணிகளில் ஆள் தேர்வுகள் கேள்விக்குள்ளானபோது, நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பால் அது விசாரிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என்பதை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
    • உயிரிழந்தவர்களுக்கு, ஆளுநர், மத்திய மந்திரி இரங்கல்

    கிஷ்த்வார்:

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம் மார்வாவிலிருந்து ரெனி பகுதிக்கு இன்று மாலை பயணிகளை ஏற்றிச் சென்ற கால்டாக்சி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. மீட்பு பணியில் காவல்துறை, ராணுவ வீரர்கள், மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் துணை ஆணையர் தேவன்யாதவ் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு நௌபாச்சி சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவர்களது குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    விபத்தில் நிகழ்ந்த உயிர் இழப்புகள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜனநாயக ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத், இதுபோன்ற விபத்துகளை தடுக்க அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பிரதமர் மோடியுடன், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு.
    • பாஜகவின் வாக்குறுதிகள் பொய்யாகி விட்டதாக காங்கிரஸ் கருத்து.

    ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அப்போது அங்குள்ள தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே மத்திய பாஜக ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீர் அடையாளத்தை இழந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய அந்த யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல்வானி கூறியுள்ளதாவது: பாஜக ஆட்சி ஜம்மு காஷ்மீரை பல துறைகளில் அழித்து விட்டது, அடையாளம், அந்தஸ்து, வேலைகள், நிலங்கள், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து வாய்ப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகளை ஜம்மு காஷ்மீர் இழந்து விட்டது.

    அதை மீட்டெடுப்பதற்கான போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். காஷ்மீரில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யத் நிர்வாகம் தவறி விட்டது. காஷ்மீர் சிறுபான்மையினரும், ஜம்மு ஊழியர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பாதுகாப்பற்ற பகுதிகளில் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சம்பளமும் மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஒளிமயமான எதிர்காலம், விலைவாசி கட்டுப்பாடு, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்று அவர்களது (பாஜக) வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டன. மக்கள் சுரண்டப்படுகின்றனர். வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலை தவிர வேறு ஒன்றும் இங்கு இல்லை. பிற மாநிலங்களை விட ஜம்மு காஷ்மீர் வரலாற்று ரீதியாக மிகவும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளைக் கொண்டது. ஆனால் இப்போது அது அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுகிறது.
    • இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும் அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் குலாம் நபிக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு-ஷ்மீரைச் சேர்ந்த பாஜக முக்கியக் குழு உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த யூனியன் பிரதேசத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அமைப்பு சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், தேவேந்திர சிங் ராணா, ஜம்முகாஷ்மீர் பாஜக மேலிட பொறுப்பாளர் தருண் சுக் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும், அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்ததும் அந்த யூனியன் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது. 

    • காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பாஜக கண்டனம்.
    • காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டதாக அசாதுதீன் ஒவைசி குற்றச்சாட்டு.

    சோட்டி போரா: 

    ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிபோரா பகுதியில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    உயிரிழந்தவர் சுனில் குமார் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது சகோதரர் பிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 


    இந்த கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, இந்துக்களை குறி வைத்து நடத்தப்பட்ட கோழைத்தன தாக்குதல் இது என குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் இரத்தக் களரி சூழலை பாகிஸ்தான் விரும்புகிறது, அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களின் எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த ஜூன் மாதம் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் விஜய்குமார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  காஷ்மீரில் சிறுபான்மை மக்களாக உள்ள இந்துக்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது.

    இந்நிலையில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


    ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநரை நியமித்து பாஜக ஆட்சி செய்கிறது. ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பண்டிட்கள் இப்போது காஷ்மீரை விட்டு வெளியேற விரும்புகிறார்கள், இது பிரதமர் மோடியின் தோல்விக்கு மற்றொரு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 

    • பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக வெளிமாநிலத்தவர்கள் மற்றும் இந்து பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    அவர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்கி வருகிறாரகள். இதில் பள் ளி ஆசிரியை, வங்கி மேலாளர் உள்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்

    இந்த நிலையில் அங்குள்ள பதேர்வா நகரில் உள்ள ஒரு மசூதியில் இருந்து மோதலை தூண்டும் வகையில் வீடியோ வெளியானது. சமுக வலை தளங்களில் இது வேகமாக பரவியதால். பதேர்வா நகரில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்

    இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் தோடா,கித்வார் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை இணைப்புகள் அனைத்தும் துண்டிக்க்பட்டு உள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதி நிலவுவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜிஜேந்திரசிங் கூறும் போது மூத்த மத தலை வர்கள் ஒன்று கூடி பேசி அமைதியை கடைபிடிக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க யாராவது முயற்சி செய்தால் அவர்கள் மீ து கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ×