search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வப் பெருந்தகை"

    • காலையில் இருந்து மாலை வரை அங்கு தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
    • சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து செல்வப் பெருந்தகையை சந்தித்து செல்கின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சி அலுவலகங்களும் பரபரப்பாக காணப்படுகின்றன.

    கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு போன்ற காரணங்களுக்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தினமும் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாகி உள்ளது. காலையில் இருந்து மாலை வரை அங்கு தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவராக கு.செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்ட பிறகு கட்சி நிர்வாகிகள் வருகை அதிகரித்தன. முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து செல்வப் பெருந்தகையை சந்தித்து செல்கின்றனர்.

    தலித் சமூகத்தை சேர்ந்தவர் தமிழக தலைவராக இருப்பதோடு மட்டுமின்றி அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பக்குவத்தில் அவர் செயல்படுவதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் சத்திய மூர்த்தி பவனுக்கு வருகின்றனர்.

    மேலும் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து வருவதால் பத்திரிக்கையாளர் கூட்டமும் தினமும் அங்கு காணப்படுகிறது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் வருகை அதிகரிப்பால் காங்கிரஸ் கட்சி அலுவலகம் களை கட்டியுள்ளது.

    • பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை.
    • எங்கள் கட்சியில் சிலரிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எ

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகை தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்துவதே முதல் வேலை என்று குறிப்பிட்டுள்ளார். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவது காங்கிரஸ் மட்டும் தான்.

    கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளுக்கும் அதிகாரம் வழங்கி அவர்களை உயர்த்தி வருவது காங்கிரஸ். இப்போது தமிழகத்துக்கு எனக்கு தலைவர் பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள். அகில இந்திய தலைவராக இருக்கும் கார்கேவும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

    எனவே எல்லா கட்சிகளில் இருக்கும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களும் காங்கிரஸ் பக்கம் ஓடி வாருங்கள்.

    தமிழகத்தில் பா.ஜனதா வளர்ச்சி என்பது செயற்கை தனமாக மிகைப்படுத்துவது. அந்த கட்சியால் வளர முடியாது.

    குற்றப் பின்னணி கொண்டவர்களை எல்லாம் அவர்கள் கட்சியில் சேர்த்து வைத்துள்ளார்கள். இவர்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு என்ன லாபம்?

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வோம்.

    எங்கள் கட்சியில் சிலரிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனக்கு எதிராகவே புகார் செய்தவர்களும் உண்டு. அவர்கள் மீது எனக்கு எந்தவிதமான அதிருப்தியும் கிடையாது அனைவரும் இணைந்து கட்சியை பலப்படுத்துவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
    • தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முதல் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் தமிழக காங்கிரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் அதிரடி மாற்றங்கள் புயலை கிளப்பியுள்ளன.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த கே.எஸ்.அழகிரி தேர்தல் நேரத்தில் மாற்றப்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அவரை மாற்றி விட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகையை நியமனம் செய்துள்ளது.

    இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சியில் விஜயதாரணி சேரப்போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகளை மறுக்காமல் டெல்லியிலேயே முகாமிட்டுள்ள அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளார். அதற்கான காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.

    இது தொடர்பாகவும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டது பற்றியும் விஜயதாரணி எம்.எல்.ஏ. இன்று மாலைமலர் நிருபருக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.தொகுதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். குமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதி முன் மாதிரியான தொகுதியாக விளங்கி வருகிறது.

    தொகுதி மக்களுக்காக தொடர்ந்து நான் பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக முழு மூச்சுடன் உழைத்துள்ளேன்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் உழைப்புக்கு மரியாதை கிடைக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற தொகுதி தலைவராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் செய்யப்படும் போது எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

    ஆனால் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்காமலேயே ஆலோசனை செய்யாமல் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.

    பெண் என்பதால் என்னை தொடர்ந்து புறக்க ணித்து வருகிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பேசப்பட்டு வருகிறது. எனது முடிவை விரைவில் முறைப்படி அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக சட்டசபையில் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் விஜயதாரணியை போன்று மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களும் விரைவில் கட்சி மாறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது எம்.பி.யாக உள்ள சிலர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் எம்.பி.க்கள் சிலரும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரிகிறது.

    எனவே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை முடிந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகும் போது எம்.பி.க்கள் சிலரும் பாரதிய ஜனதா பக்கம் சாயலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பான கட் டத்தை எட்டியிருக்கும் நிலையில் தமிழக காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் புகைச்சல் கட்சியினர் மத்தியிலும் தேர்தல் களத்திலும் சூட்டை கிளப்பி இருக்கிறது.

    ×