search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைலாஷ் கெலாட்"

    • மதுபான கொள்கையில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.
    • கெஜ்ரிவாலை வரும் 1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி கைது செய்தனர். அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, 22-ம் தேதி கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், மதுபானக் கொள்கை தொடர்பான ஊழலில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக வாதிடப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த கே.கவிதா ஆகியோருடன் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்து வந்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்தது.

    ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் 1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி உள்துறை, போக்குவரத்து மற்றும் சட்ட மந்திரியாக உள்ள கைலாஷ் கெலாட்டிற்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி கைலாஷ் கெலாட் இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோரை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 21-ம் தேதி டெல்லி வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா இல்லாமல் டெல்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    டெல்லி:

    டெல்லி சட்டசபையின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 17-ந்தேதி தொடங்குகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 21-ம் தேதி டெல்லி வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார்.

    டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும் கூறி சி.பி.ஐ. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. சி.பி.ஐ. நடவடிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் தான் வகித்து வந்த துறை முதல்-மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். மேலும் மந்திரிசபையில் அங்கம் வகித்து வந்த சத்யேந்திர ஜெயின் பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் பொறுப்பு வகித்து வந்த இலாகா மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருந்தது.

    இதனால் சத்யேந்திர ஜெயின் இலாகா இல்லாத மந்திரியாக தொடர்ந்தார். இந்த நிலையில் இருவரின் ராஜினாமாவையடுத்து மணீஷ் சிசோடியா பொறுப்பு வகித்து வந்த இலாகாக்கள் ஆம் ஆத்மியை சேர்ந்த வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் மற்றும் சமூக நலத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் ஆகியோரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா இல்லாமல் டெல்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    புதிதாக ஒதுக்கப்பட்ட துறைகளை பொறுப்பேற்ற ஆம் ஆத்மி மந்திரி கைலாஷ் கெலாட் இந்த முறை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவருக்கு நிதி, திட்டமிடல், பொதுப்பணி, மின்சாரம், உள்துறை, நகர்ப்புற மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு, மற்றும் நீர் துறைகள் உள்ளிட்ட துறைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    ×