search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவு"

    முன்பெல்லாம் உறவுகளுக்குள் இருந்த சந்தோஷமும், நெருக்கமும் இன்றைய தலைமுறையிடம் படிப்படியாக மறைந்து வருகிறது. உறவுகளின் தேவையை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
    முன்பெல்லாம் கல்யாணம் என்றதும், வீடு முழுவதும் சொந்தங்களின் வருகை நிரம்பி வழியும். ஆளாளுக்கு ஒரு வேலையைப் பார்ப்பார்கள். பலகாரங்களும், இனிப்புகளும் வீட்டிலேயே செய்யப்படும். கல்யாணம் முடிந்தும், உறவினர்களின் வருகை பந்தலை பிரிக்கும் வரை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாய் மாறிவிட்டது.

    மணமகளின் கழுத்தில் மணமகன் தாலிக்கட்டும் நேரத்துக்கு சற்று முன்புதான், உறவினர்களே வரத்தொடங்குகிறார்கள். அதுவும் திருமணம் நடக்கும் வீட்டுக்கல்ல. கல்யாண மண்டபத்துக்கு. அப்படியென்றால், கல்யாண பந்தல் போடப்பட்டு இருக்கும் வீட்டின் நிலைமை? யாரும் இன்றி வெறிச்சோடிக் கிடப்பதுதான், அவ்வீட்டின் இன்றைய நிலைமையாகும்.

    பொதுவாக, இட வசதி இல்லாதவர்களும், ஆள்பலம் இல்லாதவர்களுமே, முன்பெல்லாம் கல்யாணத்தை மண்டபங்களில் வைத்தார்கள். கல்யாணத்துக்கு வந்து செல்பவர்களுக்கும் அது வசதியாக இருந்தது. ஆனால், இன்று எல்லா வசதிகள் இருந்தும், கல்யாணத்தை மண்டபங்களில் தான் வைக்கிறார்கள்.

    பொதுவாக, கல்யாணம் என்றால், வீடுகளில் கலகலப்பு வேண்டும். சொந்தங்களாலும், பந்தங்களாலும் கல்யாண வீடுகளை கட்ட வேண்டும். ரத்த உறவுகளின் வருகையால் மனம் சந்தோஷமடைய வேண்டும். இவையனைத்தும் இன்று கல்யாண வீடுகளில் காணாமல் போய்விட்டன. இதனால் ஏற்பட்ட உறவுகளின் பாதிப்புகளை மனித மனத்தை தனித்தனித் தீவுகளாக மாற்றிவிட்டன.

    எந்த விசேஷமாக இருந்தாலும் செல்போனில் அழைப்பது, மொய்ப்பணம் தவிர்க்கப்பட்டது என அழைப்பிதழ்களில் அச்சிடுவது, வீட்டுக்கு உறவினர்கள் வந்தால், உணவுகளை ஓட்டல்களில் வாங்கி வருவது, உடல் நலமில்லாத உறவினர்களை ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மட்டும் விசாரிக்க செல்வது, வாழ்க்கை முறையை முறைப்படுத்த தவறியது என உறவுகளை மதிக்காத மனித செயல்பாடுகளையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறோம்.

    அவ்வாறு நம் செயல்பாடுகள் மாறும்போது, தலைமுறைகளுக்கிடையே இடைவெளிகள் குறையும். மனிதநேயம் முறியாத மரமாக வளரும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது கட்டாயமாக்கப்படும். இல்லையென்றால், உறவுகளின் ஆணிவேர் அற்றுப்போகும். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப்பேசும் நிலையும் மாறிவிடும். இதை மனிதர்களான நாம் சிந்திப்போமாக...!

    எழுத்தாளர் ஜவ்வை இஜெட்
    உறவுகள் என்பது நம்மை பாதுகாக்கும் அழகிய வலை. நாம் அதனை அறுத்தெறியும் போது அபாயகரமான பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.
    உறவுகள் என்பது நம்மை பாதுகாக்கும் அழகிய வலை. நாம் அதனை அறுத்தெறியும் போது அபாயகரமான பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தமும், தனிமையும் தற்கொலைக்கு கூட தூண்டுகோலாக மாறிவிடுகிறது. இதில், குடும்ப பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்ளும் விஷயம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை என அனைத்திலும் ஆணுக்கு பெண் நிகராக இருந்து வரும் நிலையில் புரிதல் என்பது அதிகமாக இருக்க வேண்டும். இதுதான் படித்த சமுதாயத்தின் சரியான போக்காக இருக்க முடியும். ஆனால் தற்போது, கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் பெற்ற குழந்தைகளையே கொன்றுபோடும் அளவுக்கு வக்கிரமாகிவிட்டது. எப்போது, விட்டுகொடுக்கும் மனப்பான்மை குறைந்துபோகிறதோ, அப்போதே உறவுகளை சிதைக்கும் விரிசல் என்ற வியாதி தாக்கத் தொடங்கிவிடும்.

    கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. கரம் பிடித்தவர்களுக்குள் பிரச்சினைகள் இருந்தால், அந்த காலத்தில் இதனை சமரசம் செய்து வைக்க பெரியவர்கள் வருவார்கள். குடும்பத்தின் கவுரவத்தை நான்கு சுவர்களுக்குள் கட்டி காப்பாற்ற முடிந்தது. பிரிவுகள் தவிர்க்கப்பட்டன.

    ஆனால், இன்று பெரும்பாலும் கூட்டுக் குடும்பத்தை யாரும் விரும்புவதில்லை. கணவன், மனைவி, குழந்தைகள் என அவர்களின் மகிழ்ச்சியும், துக்கமும் அவர்களுக்குள்ளேயே முடங்கி விடுகிறது. இக்கூட்டுக்குள், வேறுஉறவுகள் யாரையும் இவர்கள் அனுமதிப்பதில்லை. இதனால் தனிமை சிறைக்குள் குடும்பமே தவிக்கும் நிலை.

    மகிழ்ச்சி பறிபோய் பல குடும்பங்கள் மனஅழுத்தத்தில் தவிக்கின்றன. பெற்றோரே பிள்ளைகளை கொன்று தாங்களும் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துவிட்டன. பத்திரிகைகளின் எந்த பக்கம் திருப்பினாலும், எந்த செய்தி தொலைக்காட்சியை பார்த்தாலும் குழந்தைகளோடு பெற்றோர் தற்கொலை என்ற செய்தியை பார்க்க முடிகிறது.

    இது நம் சமூகத்தில் பெருகி வரும் தடுத்த நிறுத்தப்பட வேண்டிய ஒரு அபாயகரமான போக்கு. கண்முன் நிற்கும் சவால்களை, பிரச்சினைகளை எதிர்கொள்ள பயந்து தங்கள் உயிரை மாய்ப்பதோடு, வாழ பிறந்த பிள்ளைகளின் இறுதிநாளையும் தீர்மானிப்பது தவறானது. ஒன்றும் அறியாத பிஞ்சுக்குழந்தைகள் பலி ஆவது ஆறா துயரம்.

    நல்ல நண்பர்கள், ஆரோக்கியமான சூழல், துயரத்தின்போது நம்மை தாங்கி தோள் கொடுக்கும் உறவுகள் இருந்தால், உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை நிச்சயம் வராது. ஆனால் எந்திர காலத்தில் உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    நம் குழந்தைகளுக்கு உறவினர்களின் உறவுமுறை கூட சரியாக தெரிவதில்லை. சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என எந்த உறவுமுறையும் அவர்களுக்கு தெரிவதில்லை. முழுஆண்டு தேர்வு விடுமுறைக்கு கிராமத்துக்கு சென்று உறவுகளை காணும் வழக்கம் குறைந்துவிட்டது. கிராமத்தில் எந்த வசதியும் இல்லை என்று விடுமுறைக்கு செல்வதை தடுத்து விடுகிறார்கள். வசதிகள் குறைவான கிராமத்தில்தான் உறவுகளின் உன்னதத்தை கற்க முடியும்.

    குல தெய்வ வழிபாடு, பங்காளி திருமணம் என குழந்தைகளை அழைத்து கொண்டு மாமா, அத்தை என உறவுகளிடம் உறவாடும் பழக்கம் கானல் நீராகி விட்டது.

    இன்று, தாத்தாவும், பாட்டியும் மாடி வீட்டில் மணியார்டர் பணத்தை வாங்கி கொண்டு தொலைக்காட்சியில் வரும் சீரியல் கதாபாத்திரங்களை தங்களுடைய உறவாக நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

    அன்பு மட்டும் இருந்தால், எந்த ஒரு உறவையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அனைத்து உறவுகளுடனும் தொடர்பிலாவது இருங்கள். உறவினர்களின் இல்ல விழாக்களில் தோன்றுங்கள். கோவில் விழாக்களில் குடும்பதோடு கலந்துகொள்ளுங்கள். உறவுகள் பலப்படும்.

    உறவுகள் வலுப்பெற்றால், எத்தகைய சவால்களையும் சந்திக்கும் துணிவு வரும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். எதையும் எதிர் நின்று போராடலாம் என்ற எண்ணம் பிறக்கும். தற்கொலை எண்ணம் தவிடுபொடியாகும். எனவே உறவுகளை நேசிப்போம்.

    எழுத்தாளர் கலைச்செல்வி சரவணன்
    திருமண வாழ்வில் அதிக பிரச்சனைகளையும் அந்த பிரச்சனைகளை எந்த முறையில் தீர்வு கண்டு குடும்பத்தில் சந்தோஷத்தை கொண்டு வரலாம் என்றும் பார்க்கலாம்.
    உங்களின் பார்ட்னர் உங்களிடம் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்கிறார் என்றால், அது உங்கள்மீதான கோபமல்ல. நிதானமாக இருந்து அந்தச் சூழ்நிலையை சகஜநிலைக்கு மாற்றுங்கள். என்ன செய்தால் உங்களின் பார்ட்னர் சகஜமாக மாறுவார் என்பதைத் தெரிந்துகொள்ள, கொஞ்சம் `ஹோம் வொர்க்' செய்யவேண்டியிருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஹோம் வொர்க் செய்யலாமே!

    தற்போது பெண்களும் அலுவலகம் செல்கின்றனர். எனவே, வீட்டுவேலைகளை சமமாகப் பிரித்து செய்வது அவசியம். பொதுவாக ஆண்கள், வீட்டுவேலைகள் செய்யத் தெரியாமலோ அல்லது செய்யப் பிடிக்காமலோ இல்லை. வீட்டுவேலைகள் செய்வதிலிருக்கும் கடுமையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் மிக முக்கியமான காரணம். ஒருமுறை தன் மனைவியோடு நின்று அனைத்து வேலைகளையும் சமமாகப் பங்கிட்டு செய்தால் மட்டுமே, இந்தப் பிரச்னை தீரும். அன்பை அளவில்லாமல் பரிமாறிக்கொள்வதுபோல், வீட்டுச்சுமையையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்!



    உங்கள் பார்ட்னரின் சிரிப்பு, அழுகை, கோபம் போன்ற `ரியல் நோட்டிஃபிகேஷனை'விட, உங்கள் போனில் வரும் `ரீல் நோட்டிஃபிகேஷனை' சரிபார்க்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. குறைந்தபட்சம், வார இறுதிநாளில் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்களுக்கு விடுதலை கொடுத்து, உங்கள் பார்ட்னரோடு நேரத்தை முழுமையாகச் செலவிடுங்கள். மனம்விட்டு பேசும்போது எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் இருப்பது சிறந்தது.

    வங்கிக்கணக்கில் பணம் இருந்தாலும் சரி... இல்லைன்னாலும் சரி, பண விஷயத்தில் கணவன் - மனைவிக்கிடையே சண்டைவருவது இயல்பு. கணவன்-மனைவியாய் இருந்தாலும், ஒவ்வொருவருடைய தேவை என்பது வேறு. எண்கள் நிறைந்த தாள் என்பதையும் தாண்டி அது உணர்வுகளின் வெளிப்பாடு. `ஆசை' இருக்கும் வரையில் `காசு' வாழும். எது அத்தியாவசியம், எது வீண் செலவு என்பதை கணவன் - மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம். தேவைக்கு மீறி செலவு செய்வதில் இருக்கும் பிரச்னைகளை நன்கு ஆராய்ந்து, பிறகு அடி எடுத்து வைப்பது நல்லது. உங்கள் அன்பை முறிக்கும் எந்த விஷயத்தையும் இருவருக்குமிடையில் அனுமதிக்காதீர்கள்.

    சந்தோஷமான வாழ்க்கைக்காக சிறிது நேரம் உங்கள் பார்ட்னருக்குச் செலவிடுங்கள். அன்பைவிட வேறென்ன பெரிதாக இருக்கப்போகிறது.
    கணவன் - மனைவி உறவுகளில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
    கணவன் - மனைவி உறவுகளில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொண்டாலே ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க முடியும். கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான, ஒளிவுமறைவு இல்லாத தொடர்பாடல் இருக்க வேண்டும். தெளிவாக பேச வேண்டும், உண்மையைப் பேச வேண்டும். ஒருவருக்கு ஒருவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்

    உங்கள் துணை மீது உள்ள ஆர்வத்தை குறைத்து கொள்ளாதீர்கள். ஆசையை வெளிப்படுத்துதல், கொஞ்சுதல், விளையாட்டாக நடந்துக் கொள்வது என உங்கள் துணை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்த மறக்க வேண்டாம், மறுக்க வேண்டாம்.

    உடலுறவு என்பது அவசியமானது தான். ஆனால் துணையாக இருந்தாலும் விருப்பதுடன் இணைவது தான் இனிமை. சரியான நேரங்களில் இருவரின் புரிதலுடன் இணைவது தாம்பத்தியம் சிறக்க உதவும். தாம்பத்தியத்தில் இருவருக்குள்ளும் புரிதல் இருப்பது மிகவும் அவசியமானது.

    உங்களின் உணர்வுகளை கணவரிடம் வெளிப்படுத்த தயங்க வேண்டாம். கோபத்தை கொட்டுவது போல, மகிழ்ச்சி, அழுகை, என அனைத்தையும் வெளிப்படையாக காட்டுங்கள். இது தான் உங்கள் இருவர் மத்தியிலான நெருக்கத்தை அதிகப்படுத்தும் கருவி. எந்த ஒரு செயலாக இருப்பினும் அதை தைரியமாக செய்யுங்கள். வேலையாக இருந்தாலும் சரி, இல்லறமாக இருந்தாலும் சரி, தைரியம் தான் உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். 
    ×