search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகளம் நரேன்"

    சி.வி.குமார் இயக்கத்தில் அசோக் - சாய் பிரியங்கா ருத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் விமர்சனம். #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar
    கல்லூரியில் படிக்கும் போது அசோக் - சாய் பிரியங்கா ருத் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு தெரிந்தவர் மூலமாக கடத்தல் தொழில் செய்யும் கும்பலிடம் கணக்காளராக வேலைக்கு சேர்கிறார் அசோக்.

    இந்த நிலையில், ஒருநாள் அவர்கள் கொடுத்த வேலைக்காக மும்பை சென்று திரும்பும் போது போலீசார் அசோக்கை என்கவுண்டர் செய்கிறார்கள். கணவனை இழந்த சாய் பிரியங்கா, அசோக்கை போலீசார் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன, அதன் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது பற்றி அலசுகிறார்.



    பின்னர் அசோக்கை கொலை செய்தவர்களை பழிவாங்க முடிவு செய்கிறார். அதற்காக மும்பையில் இருக்கும் டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். பிரியங்கா மூலமாக சென்னையில் மீண்டும் கடத்தல் தொழிலை ஆரம்பிக்க திட்டமிடும் டேனியல் பாலாஜி, பிரியங்காவுக்கு உதவுகிறார்.

    கடைசியில், அசோக் கொலைக்கு காரணமானவர்களை பிரியங்கா பழிவாங்கினாரா? டேனியல் பாலாஜியின் திட்டம் பலித்ததா? என்பதே கேங்ஸ் ஆஃப் மெட்ராஸின் மீதிக்கதை.



    காதல், ஆக்‌ஷன், கோபம் என படத்தின் திரைக்கதையை நகர்த்தும் முக்கிய வேடத்தில் வருகிறார் பிரியங்கா ரூத். டேனியல் பாலாஜியிடம் தொழில் கற்றுக் கொள்ளும் போதும், அதன் பின்னர் செய்யும் கொலைகள் என சிறப்பாக நடித்திருக்கிறார். அசோக் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன் வில்லத்தனத்தில் விளையாடியிருக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    தனது காதல் கணவனுக்காக பழிவாங்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சி.வி.குமார். படத்திற்கு கிடைத்த ஏ சான்றிதழுக்கு ஏற்ப படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பி இருக்கிறது. இதில் இரத்தம் தெறிக்கும் ஒருசில ஆக்‌ஷன் காட்சிகள் ஒருவித நெருடலை ஏற்படுத்துகிறது. அதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது.



    ஹரி டப்யூசியாவின் பின்னணி இசையும், கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவும், மஞ்சள் நிறமான பின்னணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' இரத்தக்களரி. #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar #SaiPriyankaRuth #AshokKumar #DanielBalaji

    சி.வி.குமார் இயக்கத்தில் பிரியங்கா ருத், அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் முன்னோட்டம். #GangsofMadras #CVKumar
    திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்'.

    பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள், டைரக்டர் ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இசை - ஹரி டஃபுசியா, இசை (OST) - ஷ்யமளங்கன், இசை மேற்பார்வை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - கார்த்திக் கே.தில்லை, படத்தொகுப்பு - ராதாகிருஷ்ணன் தனபால், கலை - விஜய் ஆதிநாதன், சிவா, சண்டைப்பயிற்சி - ஹரி தினேஷ், சவுண்ட் டிசைன் - தாமஸ் குரியன், நடனம் - சாண்டி, நிர்வாக தயாரிப்பு - எஸ்.சிவகுமார், தயாரிப்பு, இயக்கம் - சி.வி.குமார்.



    "மாயவன்" திரைப்படத்திற்கு பிறகு சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்" படத்தின் கதைக்கரு.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #GangsofMadras #CVKumar

    கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீசர்:

    ராஜன் மாதவ் இயக்கத்தில் விதார்த், அஜ்மல், காயத்ரி, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி இருக்கும் `சித்திரம் பேசுதடி 2' படத்தின் விமர்சனம். #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal
    ராதிகா ஆப்தேவின் கணவர் மிகவும் செல்வந்தர். இவருடன் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் சுப்பு பஞ்சு, ரவுடிகளான விதார்த், அசோக் மூலம் அவரை கொலை முயற்சிக்கிறார். அப்படி கொலை செய்யும் நேரத்தில் காயத்ரியின் காதலர் அதை பார்த்து விடுகிறார். விதார்த் மற்றும் அசோக் இருவரையும் போலீசில் காட்டிக் கொடுக்க நினைக்கிறார்.

    காதலருக்காக காத்திருக்கும் காயத்ரியின் பையை, பிக்பாக்கெட் திருடர்களான நிவாஸ், பிளேடு சங்கர் இருவரும் திருடி சென்று விடுகிறார்கள். பையை இழந்த காயத்ரி, காதலரிடம் எனக்கு அந்த பை வேண்டும். அது இருந்தால் தான் வீட்டிற்கு செல்ல முடியும் என்று கூறுகிறார். மேலும் இந்த பிரச்சனையால் இவர்கள் காதலில் பிளவு ஏற்படுகிறது. இதனால், பையை கண்டுபிடிக்க நிவாஸ், பிளேடு சங்கரை தேடுகிறார்.



    தங்களை காட்டிக் கொடுக்க நினைக்கும் காயத்ரியின் காதலரை கொலை செய்ய அசோக் தேடுகிறார். காயங்களுடன் உயிர் தப்பிக்கும் ராதிகா ஆப்தேவின் கணவரையும் கொல்ல திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் பிசினஸ் பிரச்சனையில் இருக்கும் அஜ்மலுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. அரசியல்வாதி அழகம் பெருமாள் சிக்கியிருக்கும் வீடியோ ஒன்றை அஜ்மலுக்கு கொடுக்கிறார் ராமன். ஆடுகளம் நரேன், காயத்ரியின் தந்தை, நிவாஸ், ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுப்பு பஞ்சுவை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

    இறுதியில் விதார்த், அசோக் இருவரும் ராதிகா ஆப்தேவின் கணவர், காயத்ரியின் காதலர் இருவரையும் கொன்றார்களா? காயத்ரி தன்னுடைய காதலனுடன் இணைந்தாரா? காயத்ரியின் காதலர், விதார்த், அசோக்கை போலீசில் சிக்க வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    உலா என்ற பெயரில் உருவான இப்படம் ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. விதார்த், அசோக், அஜ்மல், நிவாஸ், பிளேடு சங்கர், ராதிகா ஆப்தே, காயத்ரி, சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள், ஆடுகளம் நரேன் என அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

    கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ராதிகா ஆப்தே, விதார்த் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி சென்றிருக்கிறார் டிவைன் பிராவோ.



    வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதை வைத்து அதை ஒரு புள்ளியில் இணைய வைத்திருக்கிறார். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இடியாப்பம் சிக்கல் போல் தோன்றுகிறது. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம். திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. நட்சத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

    பத்மேஷ் மார்த்தாண்டனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறது. சாஜன் மாதவ்வின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘சித்திரம் பேசுதடி 2’ அதிகம் பேசவில்லை. #ChithiramPesudhadi2 #ChithiramPesudhadi2Review #Vidharth #Ajmal #Gayathrie #RadhikaApte

    கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சத்யா அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். #AndreaJeremiah
    பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புதிய படத்தை ராஜேஷ் குமார் தயாரிக்கிறார்.

    கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சத்யா இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். ஜேகே, அசுதோஷ் ராணா, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

    ஆக்‌ஷன், திரில்லர் கலந்த பேண்டஸி படமாக உருவாகும் இந்த இதில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது. படத்தின் பூஜையில் சத்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.



    சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்), ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. #AndreaJeremiah

    பவன்குமார் இயக்கத்தில் சமந்தா - ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன், பூமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `யு டர்ன்' படத்தின் விமர்சனம். #UTurnReview #Samantha
    இன்ஜினியரிங் முடித்துவிட்டு பிரபல பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்கிறார் சமந்தா. தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலையில், வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகிறார். வேளச்சேரி மேம்பாலத்தில் சாலையை கடக்கக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை நகர்த்திவிட்டு சாலையை கடப்பவர்களை தேர்வு செய்து அவர்களை பேட்டி எடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதற்காக சாலை விதிகளை மீறுபவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார்.

    ஒருநாள் தனது லிஸ்டில் இருக்கும் பெயர்களில் ஒன்றை தேர்வு செய்து, அவரை பேட்டி காண செல்கிறார். ஆனால் குறிப்பிட்ட அந்த நபரை சந்திக்க முடியாமல் திரும்பி விடுகிறார். இந்த நிலையில், சமந்தா பேட்டி காண சென்ற நபர், மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். அதில் மரணத்தில் சமந்தாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் போலீசார் சமந்தாவை கைது செய்கின்றனர்.

    இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான ஆதி, சமந்தாவிடம் கொலை பற்றி விசாரிக்க தான் அந்த கொலையை செய்யவில்லை என்றும், கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறுகிறார். ஆனால் சமந்தா சென்ற நேரத்தில் தான் கொலை நடந்ததாக போலீசார் கூற, தான் ஒரு பத்திரிகை நிருபர் என்பதையும், அங்கு சென்றதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.



    சமந்தாவின் பேச்சில் உண்மை இருப்பதாக உணரும் ஆதி, சமந்தாவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடிவு செய்கிறார். அதேநேரத்தில் சமந்தாவிடம் உள்ள அனைவரின் தகவல்களையும் வாங்கி தனது விசாரணையை தொடங்குகிறார். அதில் சமந்தா சேகரித்த பட்டியலில் உள்ள அனைவருமே இறந்து விடுகின்றனர். 

    இந்த மரணங்களில் இருக்கும் ஆதியும், அந்தமும் புரியாமல் தவிக்கும் ஆதி இந்த மரணங்களுக்கான காரணங்களை கண்டுபிடித்தாரா? சமந்தாவின் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் இறக்க காரணம் என்ன? சமந்தா இந்த வழக்கில் இருந்து எப்படி தப்பித்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஒரு இளம் பத்திரிகை நிருபராக, என்னவென்றே புரியாத ஒரு வழக்கில் சிக்கித் தவித்தும், அதை சமாளிக்க போராடும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பு அபாரமாக இருக்கிறது, பாராட்டுக்களை வாங்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியான ஆதி திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்த தவறவில்லை. அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கிய அங்கமாக பயணிக்கிறது. எப்போதுமே வித்தியாசமாக கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்கும் நரேனின் கதாபாத்திரம் படத்திற்கு அச்சாணியாக விளங்குகிறது. பூமிகா இந்த படத்தில் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று, அதை சிறப்பாகவே நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 



    சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனின் கதாபாத்திரமும் ரசிக்கும்படியாகவே வந்துள்ளது. மற்றபடி ஆடுகளம் நரேன், ரவி பிரகாஷ், கீதா ரவிசங்கர் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் விறுவிறுப்புக்கு துணையாக இருந்துள்ளனர்.

    கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற யு டர்ன் படத்தின் ரீமேக் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலுவான அச்சாணியை போட்டியிருக்கிறார் இயக்குநர் பவண் குமார். படம் ஆரம்பிக்கும் நிமிடம் முதல் இறுதி வரை படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு செல்வதே இயக்குநரின் பலம். அடுத்ததடுத்த காட்சிகள் வேககமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்வது ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கிறது. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

    அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வியின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `யு டர்ன்' விறுவிறுப்பு. #UTurnReview #Samantha #Aadhi

    ராம்ஷேவா இயக்கத்தில் அங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிப்பில் உருவாகி வரும் `என் காதலி சீன் போடுறா' படத்தின் முன்னோட்டம். #EnKadhaliScenePodra #Mahesh
    சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படம் `என் காதலி சீன் போடுறா'. 

    இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி. கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - வெங்கட், இசை - அம்ரீஷ், பாடல்கள் - ராம்சேவா, ஏகாதசி, கலை - அன்பு, நடனம் - சாண்டி, டி.முருகேஷ், சண்டைப்பயிற்சி - மிரட்டல் செல்வா, படத்தொகுப்பு - மாரி, தயாரிப்பு மேற்பார்வை - தண்டபாணி, தயாரிப்பு - ஜோசப் பேபி. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராம்ஷேவா.

    இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது...



    இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அதி புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம். படப்பிடிப்பு சென்னை, பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது என்றார். #EnKadhaliScenePodra #Mahesh

    ×