search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WTC Final 2023"

    • இந்திய வீரர்கள் போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும்
    • ஆஸ்திரேலிய வீரர்கள் 80 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும்

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களும், இந்தியா 296 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா 234 ரன்னில் சுருண்டது.

    இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மான் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கேமரூன் க்ரீன் அவரது கேட்சை பிடித்தபோது பந்து தரையில் பட்டதுபோல் இருந்தது. இதனால் 3-வது நடுவரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர். சுப்மான் கில்லும் சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

    இந்த போட்டியில் இரண்டு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இதனால் இரு அணிகளின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சுப்மான் கில் ஐசிசி-யின் நன்னடத்தை விதிமுறையை மீறியதாக அவருக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுப்மான் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 5 ஓவர்களும், ஆஸ்திரேலியா 4 ஓவர்களும் குறைவாக வீசியிருந்தன. இதனால் அபராதத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    • கில் 2-வது இன்னிங்சில் 19 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
    • இந்தியா 234 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மான் கில் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்றிருந்த கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்தார். அப்போது அவர் பந்தை கீழே வைத்ததுபோல் தெரிந்தது.

    இதனால் மைதான நடுவர்கள் 3-வது நடுவரின் உதவியை நாடினர். அவர் கேமராவின் ஒருசில கோணங்களை மட்டுமே ஆராய்ந்து விக்கெட் கொடுத்துவிட்டார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. கேமரூன் க்ரீன் மோசடி செய்து விட்டதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    முக்கியமான போட்டியில் ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்த்து அதன்பின் அவுட் கொடுக்க வேண்டும். ஆனால், நடுவர் உடனடியாக அவுட் கொடுத்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஐ.பி.எல். தொடரில் 10-க்கும் மேற்பட்ட கேமரா கோணங்கள் உள்ளன என ஐ.சி.சி.-யை மறைமுகமாக சாடினார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ''போதுமான அளவிற்கு நடுவர்கள் பல கோணங்களில் சரிபார்க்காதது ஏமாற்றம் அளிப்பதாக உணர்கிறேன். 3-வது நடுவம் இன்னும் அதிகமாக ரீபிளே செய்து கேட்ச் எவ்வாறு பிடிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டும்.

    மூன்று அல்லது நான்கு முறை அவர் ரீபிளே செய்து பார்த்திருந்தால், கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டிருக்கிறதா? அல்லது பந்து தரையில் பட்டதா? என்பது குறித்து திருப்பதி அடையும் வகையில் முடிவு எடுத்திருக்க முடியும்.

    அது அவுட்டா? இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. எல்லாவற்றிலும் சரியான மற்றும் தெளிவான வகையில் இருக்க வேண்டியது அவசியம். கேட்ச் மட்டுமல்ல. அனைத்து விசயத்திற்கும் இது அடங்கும். விரைவாக 3-வது நடுவர் விக்கெட் வழங்கியது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    முக்கியமான போட்டி என்பதால் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு 100 சதவீதம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகப்படியான கேமரா கோணங்கள் காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கேமரா கோணங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் நாங்கள் அதிகப்படியான கேமரா கோணங்களை காட்டியுள்ளோம். 10 விதமான கேமரா கோணங்கள் ஐ.பி.எல். தொடரில் காண்பிக்கப்பட்டது.

    மிகப்பெரிய தொடரில் ஏன் இதுபோன்று காண்பிக்கவில்லை, அல்ட்ரா மோசன் மற்றும் குறிப்பிட்ட இடத்தை பெரிதாக காட்டும் ஜூம் போன்றவை குறித்து ஏமாற்றம் அடைகிறேன்'' என்றார்.

    • பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்
    • டிராவிஸ் ஹெட், ஸ்மித் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் சதம் விளாசினர்

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாள் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும், ஆடுகளத்தின் மேற்பகுதியில் அதிக புற்கள் பச்சையாக காணப்பட்டதாலும் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆனால், வெயில் நன்றாக அடித்ததால் ஆடுகளம் காய்ந்து பவுன்ஸ், சுழற்பந்து வீச்சுக்கு உதவும் வகையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா தவறான அணியை தேர்வு செய்துள்ளதாகவும், 2019-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரில் செய்த தவறை தற்போது இந்தியாவும் செய்துள்ளதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறியதாவது:-

    இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததுபோன்று நாங்களும் 2019-ல் தவறு செய்தோம். 2019-ல் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் ஆஷஸ் தொடரில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இங்கிலாந்திடம் 145 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம்.

    ஓவல் எப்போதுமே ஒரு தந்திரமான (tricky) ஆடுகளம். மேற்பகுதி பச்சையாக இருப்பதுபோல் தோன்றும், ஆனால், அடியில் சற்று காய்ந்த நிலையில், உடையும் நிலையில் இருக்கும்.

    பச்சை ஆடுகளம், சீதோஷ்ண நிலை ஆகியவற்றை மனதில் கொண்டு பந்து வீச்சில் சாதித்து விடலாம் என இருக்கலாம். ஆனால், சூரியன் வெளியே வந்தபின் ஒட்டுமொத்தமாக ஆடுகளத்தின் தன்மை மாறிவிடும்.

    மேலும், இந்தியா தவறான அணியை தேர்வு செய்ததாக நினைக்கிறேன். சுழற்பந்து வீச்சு ஏற்றத்தாழ்வுடன் முக்கிய பங்கு வகிக்கும். நானாக இருந்தால் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அஸ்வினை தேர்வு செய்திருப்பேன். அவர் டெஸ்டில் ஐந்து சதங்கள் அடித்துள்ள நிலையில், அவர் பேட்டிங் செய்யமாட்டார் என என்னால் நம்ப முடியாது. இந்த முடிவு விசித்திரமானதாக இருந்தது.

    இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.

    முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. ஆனால், இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்னில் சுருண்டது.

    • கே.எஸ். பரத் நேற்றைய ரன்னிலேயே ஆட்டம் இழந்தார்
    • ஆஸ்திரேலிய வீரர்கள் ஏராளமான கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர்

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 29 ரன்களும், கே.எஸ். பரத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எஸ். பரத் இன்று ரன் கணக்கை தொடங்காமல் நேற்றைய ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து ரகானே உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். ஷர்துல் தாகூர் முதலில் உடலில் அடி வாங்கினார். நேரம் செல்ல செல்ல சுதாரித்து விளையாட ஆரம்பினார். மறுமுனையில் ரகானே சிறப்பாக விளையாடினார். அவர் 92 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இன்று ஆஸ்திரேலியாவின் பீல்டிங் சிறப்பாக அமையவில்லை. 4 கேட்ச்களை தவறவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் எல்.பி.டபிள்யூ. ஆகிய பந்து நோ-பால் ஆக வீசப்பட்டதால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

    இதனால் 3-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட்டுக்கு மேல் இழக்கவில்லை. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது. ரகானே 89 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • கே.எஸ். பரத் இன்று ரன்ஏதும் எடுக்காமல் அவுட்
    • கம்மின்ஸ் பந்தில பவுண்டரி, சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 38 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 29 ரன்களுடனும், கே.எஸ். பரத் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எஸ். பரத் ரன்ஏதும் எடுக்காமல் நேற்றைய ரன்னுடன் போலண்ட் பந்து வீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். ஷர்துல் தாகூர் உடலில் அடி வாங்கினாலும் ஆட்டமிழக்காமல் தடுத்து ஆடினார்.

    மறுமுனையில் ரகானே நம்பிக்கையுடன் விளையாடினார். 46-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரகானே, கடைசி பந்தில் சிக்சர் அடித்து அரரைசதம் அடித்தார்.

    92 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். தற்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    • ஐசிசி தொடர்களில் இந்திய அணி நாக்அவுட் சுற்றில் தடுமாற்றம் அடைவது நீடிக்கிறது
    • அதிக அழுத்தம் தருகின்ற சூழல் வரும் பொழுது ஒருவிதமான இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுகிறார்கள்

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2013-ம் வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் பல தொடர்களில் இந்திய அணி, நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதனால் தற்பொழுது நடைபெறும் போட்டி, இந்தியாவிற்கு இழந்த நற்பெயரை மீட்கும் ஒரு அரிய வாய்ப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த போட்டி, உலகெங்குமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

    ஆனால் தற்போதைய இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவிக்க, பிறகு பேட்டிங் செய்து வரும் இந்தியா சொற்ப ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் இந்தியாவின் ஆட்டம் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளதால் ரசிகர்களும் விமர்சகர்களும் பல விமர்சன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும், இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பங்கேற்று விளையாடிய சாதனையாளருமான ஹர்பஜன் சிங் இந்த போட்டி குறித்து கூறியதாவது:-

    ஒரு உலகக் கோப்பை போட்டியில் விளையாட தேவைப்படும் மன உறுதியும், தைரியமும் இந்திய அணி வெளிப்படுத்த தவறி விட்டது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடச் சென்றதும் சற்று அதீதமானது. ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம், அணித்தேர்வுக்கு முன் முதல் நாள் சூழ்நிலையை கணக்கில் கொண்டு தெர்வு செய்திருக்கலாம்.

    நம்முடைய வீரர்களின் திறனில் குறை இல்லை. ஆனால், அவர்கள் இன்னும் அதிகளவில் பெரிய கோப்பைகளுக்கான விளையாட்டில் பயமோ, கவலையோ இன்றி ஆடப் பழக வேண்டும். இப்பொழுது வீரர்கள், அதிக அழுத்தம் தருகின்ற சூழல் வரும் பொழுது ஒருவிதமான இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுகிறார்கள். அவர்களால் இயல்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த இயலவில்லை. ஆட்டத்தின் முடிவை பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக விளையாட வீரர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

    வீரர்களுக்கு அவர்களின் இயல்பான விளையாட்டை ஆடுவதற்கு ஊக்கமளிக்கப் பட வேண்டும். அணி தோல்வியடைந்தால், தாம் உடனே வெளியேற்றப்படுவோம் என்ற வகையில் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களின் தன்னம்பிக்கை தகர்ந்து விடும். மாறாக அவர்கள் தங்களின் திறமையை முழுதும் வெளிக்கொண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை காண்பித்தால் போதும் என ஊக்குவிக்கப்பட வேண்டும்

    இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்தார்.

    இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சிறப்பாக விளையாடும் என அனைவரும் நம்புகின்றனர்.

    • சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    • உலகின் தரம் வாய்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வினை தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்று என கங்குலி குறிப்பிட்டார்.

    லண்டன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வின் இடம்பெறவில்லை. அவரை சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு 4 வேகப்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அஸ்வினை நீக்கியது கடினமான முடிவு என்றும் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் அஸ்வினை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், கங்குலி, ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் தனது டுவிட்டர் பதிவில் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் இல்லை. அவரை நீக்கியது மிகப்பெரிய தவறு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான கங்குலி கூறும்போது, "ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்கள். உலகின் தரம் வாய்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வினை 11 பேர் கொண்ட அணியில் தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்" என்றார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் நிக்கி பாண்டிங் கூறும்போது, "ஆடுகள தன்மையை பொறுத்து வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் ஆவார்" என்றார்.

    • அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    • சூழ்நிலையை பார்த்து இந்த முடிவை எடுத்ததாக பந்து வீச்சு பயிற்சியாளர் தெரிவித்தார்.

    லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியில் இந்திய அணியில் அனுபவ வீரரும், நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அணியின் தேர்வு குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விமர்சனங்களையும் கண்டனத்தையும் பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

    அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "இந்த போட்டியில் முதல் இன்னிங்சுக்கு தகுந்தாற்போன்ற பவுலிங் அட்டாக்கை மட்டும் தேர்வுசெய்து இந்திய அணி தவறு செய்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களுக்கு ஜடேஜாவை விட அஸ்வின் சவாலாக இருந்திருப்பார். இருந்தும் இந்திய அணி அவரை அணியில் எடுக்காமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது" என்றார்.

    இந்நிலையில், அஸ்வினை அணியில் சேர்க்காதது ஏன்? என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், 'அஸ்வின் போன்ற சாம்பியன் பந்துவீச்சாளரை அணியில் இருந்து நீக்குவது மிகவும் கடுமையான முடிவு. காலையில் ஆடுகளத்தின் தன்மை, சூழ்நிலையை பார்க்கும்போது கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். கடந்த காலங்களில் இந்த முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால், கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் பலன் அளித்திருக்கும் என நீங்கள் நினைக்கலாம் ஆனால், ஆடுகள சூழ்நிலையை பார்த்து நாங்கள் இந்த முடிவு எடுத்தோம்' என்றார்.

    • ஆஸ்திரேலியா போட்டிகளில் விளையாடாமல் ப்ரெஷ்யாக வருகிறது
    • இந்திய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி சோர்வாக வந்துள்ளனர்.

    இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் விவரிக்கிறார்.

    இரு அணிகள் குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு சற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஓவல் சூழ்நிலை இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் பொருத்தமானதாக இருக்கும். இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்றதைவிட அதிக அளவில் எதிர் அணிகளை வீழ்த்தியுள்ளன. இதனால் இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடத்திற்கும் தகுதியானவை.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அதேவேளையில் இந்திய வீரர்கள் உச்சக்கட்ட போட்டித்தன்மை வாய்ந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளனர்.

    ஒரு அணி ப்ரெஷ் ஆக வருகிறது. மற்றொரு அணி சோர்வாக உள்ளது. இதுபோன்ற பெரும்பாலான காரணிகள் போட்டியை பாதிக்கலாம்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சிறந்த போட்டிகளில் ஒன்று. இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 32 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்திய அணி ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு பேரையும் தேர்வு செய்ய வேண்டும். ஜடேஜா 6-வது இடத்தில் பேட்டிங் செய்யலாம். அவரது பேட்டிங் திறனை மேம்படுத்தியுள்ளதால், அவரை ஒரு பேட்ஸ்மேனாக கருதலாம். தேவைப்பட்டால் சில ஓவர்கள் வீச வைக்கலாம்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட அஸ்வின் சிறந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜடேஜாவை அணியில் வைத்துக் கொண்டால், போட்டி நான்காவது அல்லது ஐந்தாவது நாள் செல்லும் நிலை ஏற்பட்டு, ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலை ஏற்பட்டால், சிறந்த 2-வது சுழற்பந்து வீச்சு வாய்ப்பாக இருக்கும்.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

    • பும்ரா இருந்திருந்தால் கூடுதல் பலமாக இருந்திருக்கும்
    • முகமது சமி முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார்

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இரண்டு அணிகளின் பலம் பலவீனம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்தியாவை விட சில இடங்களில் ஆஸ்திரேலியா கூடுதல் பலத்துடன் திகழ்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில், இந்திய அணியில் பும்ரா இருந்திருந்தால் முகமது சமி, முகமது சிராஜ் உடன் ஆஸ்திரேலியாவுக்கு சமமானது என நான் சொல்லியிருப்பேன். ஆனால், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரின் தலைசிறந்த தாக்குதலுடன் பிட்னஸ் முக்கிய பங்காற்றும்.

    பிட்னஸ் இந்த போட்டியில் முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை. தினந்தோறும் வலைப்பயிற்சியில் இரண்டு அல்லது மூன்று பணி நேரம் பயிற்சி மேற்கொள்வதை விட, ஆடுகளத்தில் ஆறு மணிநேரம் நின்று விளையாட, வீரர்கள் அதற்கு ஏற்ப போட்டியில் விளையாடியிருக்க வேண்டியது அவசியம்.

    இரண்டு மாத டி20 தொடர் சற்று மாற்றத்தை ஏற்படுத்தலாம். இந்திய அணி சிறந்த முறையில் தயாராகியிருந்தாலும் ஓவல் ஆடுகளம் ஆஸ்திரேலியாவுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருக்கும்.

    முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் முகமது சமி எதிரணியை மிரட்டலாம். அவரது சிறந்த லைன் மற்றும் லெந்த் பந்து வீச்சால் ஒரு வீரரை நிலைத்து நின்று விளையாட அனுமதிக்கமாட்டார்

    இவ்வா ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

    • பரத் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என யோசித்தேன்
    • ஜடேஜா, அஸ்வின் இரண்டு பேருக்கும் இடம்

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டியில் களம் இறங்குகிறது.

    இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற துடிப்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஆடும் லெவன் அணியில் இடம் பெறும் வீரர்கள் யாராக இருப்பார் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.

    இங்கிலாந்து சூழ்நிலை பெரும்பாலும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாட சாதமாக இருக்காது. வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என்பதால் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருந்தாலும் இந்திய அணி ஜடேஜா, அஸ்வின் ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    இந்த கவாஸ்கர் தன்னுடைய ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளார். அந்த அணி வருமாறு:-

    1. ரோகித் சர்மா, 2. சுப்மான் கில், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. கே.எஸ். பரத், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. முகமது சமி, 10. முகமது சிராஜ், 11. ஷர்துல் தாகூர்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறியிருப்பதாவது:-

    பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் ரோகித் சர்மா, சுப்மான் கில் தொடக்க வீரர்கள், புஜரா 3-வது, விராட் கோலி 4-வது. ரகானே ஐந்தாவது இடத்தில் களம் இறங்குவார்.

    6-வது இடத்திற்கு விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத்தா? அல்லது இஷான் கிஷனா? என யோசித்து பார்த்தேன். எல்லோரும் பரத்தை பற்றி பேசுகிறார்கள். ஏனென்றால் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். ஆகவே, 6-வது இடத்திற்கு அவர் சரி எனத் தோன்றுகிறது. சுழற்பந்து வீச்சில் இரண்டு ஜடேஜா, அஸ்வின் ஆகிய இருவருக்குமே இடம் கொடுத்துள்ளார்.

    • இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார்.
    • ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வினும் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11-ந் தேதி வரை லண்டனில் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்திய போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டியில் மாற்று வீரராக பங்கேற்க இயலாது. இதனால் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக ஜெய்ஷ்வால் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் முடிந்ததும் சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்காக லண்டன் சென்றனர்.

    இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார். ஜெய்ஸ்வாலுக்கு பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வினும் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலா இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    ×