search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uterus"

    • சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
    • குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    காஞ்சிபுரம்:

    கர்ப்பப்பை பிரச்சினைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    நவீன மருத்துவத்தில் இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளை போல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்தும் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.

    பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் கருவுற முடியாததால் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிறவியிலேயே இருவருக்கும் கர்ப்பப்பை இல்லாமல் போனதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததை விளக்கி இருக்கிறார்கள்.

    வாடகைத்தாய் மூலம் முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உறுப்புமாற்று சிகிச்சை முறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள்.

    அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இல்லை. ஆனால் கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகியவை நல்ல நிலையில் உள்ளன. இதையடுத்து கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர்.

    அவர்கள் இருவரும் 54 மற்றும் 56 வயதுடையவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனர். இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்க சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆபரேசன் தேதி குறிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட நாளில் தானம் செய்யும் பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டு இரண்டு பெண்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது.

    இந்த சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

    இந்த மாதிரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது சில நேரங்களில் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உறுப்பை ஏற்றுக் கொள்ளாது. அதை தவிர்க்க விலை உயர்ந்த ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும்.

    அந்த வகையில் இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் கருமுட்டையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக்கப்படும். பின்னர் ஆபரேசன் மூலம் பிரசவம் செய்யப்படும்.

    இந்த மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை கருவுறும் தன்மை பெற்றிருக்கும். இந்த கால கட்டத்துக்குள் 2 அல்லது 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும்.

    தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன.
    கர்ப்பப்பை கோளாறுகளின் அறிகுறிகள் :

    கருப்பை கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது கணைச்சூடு என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணைச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெயை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்துகொடுக்கப்படுகிறது.

    இந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச்சூடாக மாறும். இதனால் ரத்தசோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படுகிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு நோயிற்காக தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.

    நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள் தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்தமாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் “பாஸ்ட் புட்” கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோம்.



    நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.

    முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய்சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினை மாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.

    நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக்கட்டி, கருப்பைக்கட்டி போன்றவைகள் உருவாகி மாத விடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
    தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.

    உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்சனைகள் தாக்கும். சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்சனை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும். பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.

    ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல் மார்பக புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.

    பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல் வலி சிறிய கட்டிகள் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம். இது போன்ற பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம்.

    பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது. நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும். கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்சனைகளும் இருக்கும்.

    கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். 24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
    ×