என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கலைக்கல்லூரிகள்"

    • பல கல்லூரிகளில் ஓரிரு கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், பல பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
    • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள் மட்டும் இன்னும் நிரப்பப்படவில்லை.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் கணிசமானவை இன்னும் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை நிரப்பக்கூடாது என்று கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகம் வாய்மொழியாக ஆணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்ப அரசே தடை போடுவது எந்த வகையான சமூகநீதி? என்பது தெரியவில்லை.

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 03-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஜூன் 30-ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 25,345 ஆயிரம் இடங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் கணிசமானவை பல்வேறு காரணங்களால் நிரம்பவில்லை. அவ்வாறு நிரப்பப்படாத இடங்களை இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், மற்றும் நான்காம் கட்ட மாணவர் சேர்க்கையை நடத்தி சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

    அதன் பிறகும், மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இருந்தால், பட்டியலின/பழங்குடியின ஒதுக்கீட்டு இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் பிற வகுப்பினரைக் கொண்டும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கான இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும் என்பது விதியாகும்.

    ஆனால், பல கல்லூரிகளில் ஓரிரு கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், பல பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள் மட்டும் இன்னும் நிரப்பப்படவில்லை. இதனால் அந்த இடங்களில் சேரலாம் என்று காத்திருந்த மாணவர்கள் இப்போது கொஞ்சம், கொஞ்சமாக தனியார் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசு நினைத்தாலும் கூட அவற்றில் சேருவதற்கு மாணவர்கள் எவரும் தயாராக இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.

    நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர குறைந்த எண்ணிக்கையில் 1.62 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு நினைத்தால் கடந்த காலங்களைப் போல 20% கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் இடம் வழங்க முடியும். ஆனால், விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களையே காலியிடங்களில் சேர்க்காமல், அவர்களை தனியார் கல்லூரிகளுக்கு விரட்டியடிப்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை.

    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்தி, தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை அந்த சமுதாய மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு வாய்மொழியாக தடை விதிக்கும் அதிகாரத்தை கல்லூரிக் கல்வி ஆணையருக்கு யார் வழங்கியது என்பதும் தெரியவில்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள காலியிடங்களை அடுத்த சில நாள்களுக்கும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • கடந்த 26-ந்தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய கலை கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    "புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முன்னோடித் திட்டங்களால் தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அத்தேவைகளை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 26-ந்தேதி அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26-ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட் டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வரப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் தற்போது நமது கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கல்வியாண்டில் (2025-2026) மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உயர் கல்வித்துறை சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம்-துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இதனால் இப்பகுதியிலுள்ள 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
    • கலைக்கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆர்வமாக உள்ளனர். 176 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 8-ந்தேதி தொடங்கியது.

    ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 263 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று 2 லட்சத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்டப்படிப்புகளில் சேர்ந்து போட்டித் தேர்வு மூலம் அரசு பணியில் சேரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    கலைக்கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in எனும் இணையதளம் வழியாக வேகமாக விண்ணப்பிக்க வேண்டும். இணைய தள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வளைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044- 24343106, 24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

    • அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.
    • 1 லட்சத்து 61 ஆயிரத்து 977 பேர் விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்தி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை, எளிய மாணவிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக விண்ணப் பித்து வருகின்றனர்.

    இதுவரை விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 7 ஆயிரத்து 532 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 1 லட்சத்து 61 ஆயிரத்து 977 பேர் விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்தி உள்ளனர்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க 2 நாட்கள் இருப்பதால் இன்றும் நாளையும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல் அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

    2 வார காலம் போதுமானதல்ல. மேலும் 10 நாட்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் விண்ணப்பிக்கப்படுகிறது. அதனால் விண்ணப்பிப்ப தற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    ×