search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sastha temple"

    • நேற்று காலை குற்றால தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமமும், அதனைத்தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
    • கோவிலை வந்தடைந்த சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகளுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாபேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலான மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவிலில் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டது.

    ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 3-வது புதன்கிழமை தொடங்கி 2 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 9 மணி அளவில் குற்றால தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமமும், அதனைத்தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மாலையில் கீழப்பாவூரில் இருந்து குதிரை வாகனத்தில் சாஸ்தா அதாவது மண்ணால் செய்யப்பட்ட குதிரை மற்றும் சாஸ்தா வாகனம் பக்தர்களால் தோழில் சுமந்து ஊர்வலமாக அருணாபேரி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் பூஜை நடை பெற்ற பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சாஸ்தா கோவிலை நோக்கி கொண்டு வரப்பட்டது.

    வழி நெடுகிலும் நின்று பக்தர்கள் சாஸ்தாவிற்கு மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் கோவிலை வந்தடைந்த சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜைகளுடன் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    விழாவில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஆத்தூர் அருகே மேலாத்தூர் சுப்ரமணியபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வன்னியுடையார் சாஸ்தா கோவிலில் பாலாலய விழா நடைபெற்றது.
    • வன்னியுடையார் சாஸ்தா மற்றும் பரிவார தேவதை களுக்கு பாலாலயம் நடைபெற்றது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே மேலாத்தூர் சுப்ரமணியபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வன்னியுடையார் சாஸ்தா கோவிலில் பாலாலய விழா நடைபெற்றது. இத்திருக்கோவில் வரிதாரர்கள் பங்களிப்புடன் ஆலய புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் மேற் கொள்ளப பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. அதற்கான பாலாலய விழா நடைபெற்றது.

    முன்னதாக காலையில் மஹா கணபதி ஹோமத்து டன் விழா தொடங்கியது. தொடர்ந்து மஹா லெட்சுமி ஹோமம், சுதர்ஸன ஹோமம், சரபசூலினி ஹோமம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்ற பின்பு பூர்ண புஷ்க லாம்பாள் சமேத வன்னி யுடையார் சாஸ்தா மற்றும் பரிவார தேவதை களுக்கு பாலாலயம் நடைபெற்றது. இதில் கோவில் வரிதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் வெள்ளையா, செயலாளர் குமார் சுப்பையா, செல்வம், சோமசுந்தர பாண்டி, சங்கர சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கயத்தாறு அருகே சாஸ்தா கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
    • சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமத்தில் பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசாமி கோவில் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த கோவிலில் உள்ள 3 உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா கிருஷ்ணன் மற்றும் நாட்டாமைகள் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டோனிதீலீப், காசி லிங்கம், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநெல்வேலி கோபால சமுத்திரம் கிராமத்தின் எல்லையில் சிறப்புமிக்க பசுங்கிளி சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டத்தில் ‘சமுத்திரம்’ என்ற பெயரில், பல ஊர்கள் சிறப்புடன் விளங்குகின்றன. அம்பாசமுத்திரம், ரவண சமுத்திரம், வீரா சமுத்திரம், ரெங்க சமுத்திரம், தளபதி சமுத்திரம், வால சமுத்திரம், கோபால சமுத்திரம், வடலை சமுத்திரம் (பத்மனேரி), ரத்னாராக சமுத்திரம் (திருச்செந்தூர்) ஆகிய இடங்கள் நவசமுத்திரம் என போற்றப்படுகிறது.

    இதில் கோபால சமுத்திரம் சிறப்பு மிக்க தாமிரபரணி கரையில் உள்ள கிராமமாகும். இக்கிராமத்தின் எல்லையில் தான் பச்சையாறு வந்து சேருகிறது. சிறப்புமிக்க இந்த ஊரில்தான் பசுங்கிளி சாஸ்தா அருள்புரிகிறார்.

    கோவில் வரலாறு :

    பல ஆண்டுகளுக்கு முன்பே இவ்விடம் பசுமையின் புகலிடமாய் காட்சியளித்தது. இங்கு பசுங்கிளிகள் கூடி கும்மாளமிட்டன. இங்குதான் சாஸ்தா அமர்ந்திருக்கிறார். இவருக்கு முன்பாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விளைநிலங்கள்தான். அதற்கெல்லாம் சாஸ்தா தான் பாதுகாவலர். அங்குள்ள ஒரு தோட்டத்துக்கு சொந்தக்காரர் பட்டாணி. விளை நிலம் மீது மிகுந்த பற்று கொண்டவர். எனவே நல்ல உரங்கள் இட்டு கரும்பு பயிரை செழிக்க வளர்த்திருந்தார்.

    இவர் ஓய்வுக்காக வீட்டுக்கு செல்லும் வேளையில் பசு ஒன்று வருவதும், கரும்புகளை மேய்வதும் வாடிக்கையாக இருந்தது. ஒரு நாள் அந்த பசுவை கண்ட பட்டாணி, அதை கொல்ல அரிவாளோடு துரத்தினார். பசுவானது, ஓடிப்போய் சாஸ்தா சன்னிதியின் முன்பு அடைக்கலமானது. அங்கும் துரத்தி வந்து பசுவை வெட்ட முயன்ற பட்டாணியின் முன்பு, சாஸ்தா தோன்றினார். பசுவை வெட்ட வேண்டாம். அது வாய் இல்லாத ஜீவன் என்று சாஸ்தா கூறியதைக் கேட்கும் மனநிலையில் பட்டாணி இல்லை.

    தான் போற்றி வளர்ந்த பயிரை தின்ற பசுவை கொன்றே தீருவேன் என்று பசுவை வெட்ட முயன்றார். அப்போது சாஸ்தா, “நீ பசுவை வெட்ட அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் என்னை வெட்டிக்கொள்” என்றார் சாஸ்தா. ஆத்திரம் கண்ணை மறைத்ததால், சாஸ்தாவின் இரு கரங்களையும் பட்டாணி வெட்டி விட்டார். ரத்தத்தை பார்த்ததும் சுயநினைவுக்கு வந்த பட்டாணி, தான் செய்த தவறை உணர்ந்து வருந்தினார். அப்படியே மயங்கி சரிந்தார் பட்டாணி. அதில் அவரது உயிர் பிரிந்தது.

    இந்த நிலையில் பட்டாணியின் மனைவி, பிள்ளைகள் ஓடிவந்தனர். அவரது உடலைப் பார்த்து கதறினர். அவரது உயிரை மீட்டுத் தரும்படி சாஸ்தாவிடம் வேண்டினர்.

    கருணை நிறைந்த சாஸ்தா, “பட்டாணிக்கு முக்தி காலம் வந்து விட்டது. அவனை எனது தென் பாகத்தில் நான் அமரச் செய்கிறேன். என்னை வணங்க வரும் பக்தர்கள் அனைவரும் அவனையும் வணங்குவார்கள்” என்றார். அதன்படியே சாஸ்தாவின் தென்பாகத்தில் பட்டாணிக்கு பீடம் அமைக்கப்பட்டது. பின்னர் கல் மண்டபம் கட்டி, பரிவார தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    இந்த ஆலயத்தில் அருளும் பசுங்கிளி சாஸ்தா வேண்டும் வரம் அருளும் தெய்வமாக திகழ்கிறார். குழந்தை வரம் வேண்டுவோர், நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள், அரசு வேலை கிடைக்க காத்திருப்பவர்கள், திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வணங்கிச் சென்றால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    தற்போதும் இத்தல சாஸ்தா கரம் இல்லாமல் தான் காட்சி தருகிறார். ஒரு முறை இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், சாஸ்தா கரம் இல்லாமல் இருக்கிறாரே என்று நினைத்து, புதிய சாஸ்தா சிலையை செய்து அதை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். புதிய சிலை செய்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தார் சிற்பி. அவர் கோபாலசமுத்திரம் கிராம எல்லையில் வரும் போது திடீரென்று நிலை தடுமாறினார். அவருக்கு கண் பார்வை பறிபோனது போல் இருந்தது. ஊர் மக்கள் அதிர்ந்து போனார்கள்.

    பின்னர் “சாஸ்தாவே.. நீங்கள் கையில்லாமலேயே இருங்கள். இந்த சிலையை அங்கு பிரதிஷ்டை செய்ய மாட்டோம். தயவு செய்து சிற்பிக்கு கண் பார்வை தாருங்கள்” என்று வேண்டினர். அதன்பிறகே அவருக்கு கண்பார்வை வந்தது. புதியதாக செய்த சிலையை சிவன் கோவிலில் வைத்துவிட்டனர்.

    இந்தத் திருக்கோவில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்டது என்பதற்கு சான்றாக, சாஸ்தா சன்னிதி மேல்தளத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

    திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் தருவை ஆற்றுபாலம் இருக்கிறது. அங்கிருந்து வலது புறம் சென்றால் கோபாலசமுத்திரத்தில் உள்ள பசுங்கிளி சாஸ்தாவை தாமிரபரணி ஆற்றங்கரையில் தரிசனம் செய்யலாம்.
    நாகர்கோவில், வடசேரி டிஸ்டிலரி ரோட்டில் மிகவும் பழமையான பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
    நாகர்கோவில், வடசேரி டிஸ்டிலரி ரோட்டில் மிகவும் பழமையான பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. காலை 6 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜை, 9.30 மணிக்கு சுதர்சன ஹோமம், மாலை 3.45 மணிக்கு ஒழுகினசேரி ஆறாட்டு துறையில் இருந்து புனித நீர் எடுத்து, யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து 6.30 மணிக்கு வாஸ்து ஹோமம், இரவு 8 மணிக்கு முதலாம் கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, நள்ளிரவு 11 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை காலை 6 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9 மணிக்கு பிம்ப சுத்தி, தீபாராதனை, கடப்பிரதஷனம் ஆகியவை நடைபெறுகிறது. 9.15 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகள், பரிவார தேவதை விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10.30 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, 11.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அதிகாரிகள் உதவியுடன் பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோவில் திருப்பணிக்குழு மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். 
    ×