search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "odisha cm"

    பானி புயலின் கோரத்தாண்டவத்தால் சின்னாபின்னமான ஒடிசா மாநிலத்தில் புயலின் தாக்கத்தினால் மேலும் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
    புவனேஸ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த மூன்றாம் தேதியன்று காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

    ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.

    நவீன கருவிகள் மூலம் பானி புயலின் பயணப் பாதையை மிக துல்லியமாக கணித்து இருந்ததால் அது செல்லும் பகுதிகளில் இருந்து சுமார் 12 லட்சம் மக்களை ஒடிசா மாநில அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தது. இந்த முன் எச்சரிக்கை காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். விழுந்த மரங்களுக்கு பதிலாக போர்க்கால அடிப்படையில் புதிய மரங்கள் நடப்படும் என அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி பானி புயலின் தாக்கத்துக்கு  மேலும் 21 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஒடிசாவில் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்படும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #LokSabha
    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி 118 தொகுதிகளில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக உள்ளார். அதேபோல 21 பாராளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

    நடைபெற உள்ள தேர்தலிலும் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளிலும், 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #NaveenPatnaik #LokSabha 
    ஒடிசாவில் சரண் அடைந்த மாவோயிஸ்டுகளுடன் இணைந்து முதல்வர் நவீன் பட்நாயக் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கண்டுகளித்தார். #NaveenPatnaik #SurrenderedNaxals #HockeyWorldCup
    புவனேஸ்வரம்:

    ஒடிசாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு திருந்தி வாழ வேண்டும் என்று அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு திருந்தி வாழ முன்வரும் மாவோயிஸ்டுகளுக்கு தேவையான உதவிகளையும் புனர்வாழ்வு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் சரண் அடைந்து திருந்தி வாழ தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில், சரண் அடைந்த மாவோயிஸ்டுகளை சமூகத்தின் மையநீரோட்டத்தில் இணையச் செய்யும் முயற்சியாக, அவர்களுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அமர்ந்து உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கண்டுகளித்தார்.

    ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று காலிறுதி ஆட்டம் நடைபெற்றபோது, சரண் அடைந்த 30 மாவோயிஸ்டுகளுடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார். இவர்களில் 16 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சரண் அடைந்த மாவோயிஸ்டுகள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை பார்க்க விரும்புவதாக தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மால்கங்கிரி போலீஸ் சூப்பிரெண்டு, இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடம் பேசி, முதல்வருடன் சேர்ந்து போட்டியை காண ஏற்பாடுகளை செய்திருந்தார்.



    முதல்வருடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தவர்கள், இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், இது தங்களின் வாழ்நாளில் சிறந்த அனுபவம் என்றும், உண்மையில் தாங்கள் சமூக மையநீரோட்டத்தின் ஒரு அங்கமாக உணர்வதாகவும் கூறினர்.

    இதுபற்றி முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ‘இந்த இளைஞர்கள் அனைவரும் மாவோயிச பாதையை கைவிட்டு மையநீரோட்டத்திற்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் நிறைய பேர் திரும்பி வருவார்கள் என நம்புகிறேன்’ என்றார். #NaveenPatnaik #SurrenderedNaxals #HockeyWorldCup
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மக்களிடையே துன்பத்தை ஏற்படுத்தி உள்ளதால், முதலில் அதில் கவனம் செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி ஊழல் புகாருக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்தார். #NaveenPatnaik
    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் ஆயத்த பணிகளை பாரதிய ஜனதா தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் சுற்றுப்பயணம் செய்து 2 இடங்களில் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது ஒடிசா அரசையும், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கையும் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் பேசும் போது, ஒடிசாவில் அரசு பணிகளை செய்வதற்கு கமி‌ஷன் கலாசாரம் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக பல்வேறு திட்டங்களும் தாமதமாகி முடங்கி கிடக்கின்றன. மாநில அரசு ஊழலில் திளைத்துள்ளது. மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த அக்கறை காட்டுவதில்லை என்று பிரதமர் கூறினார்.

    இதற்கு நவீன் பட்நாயக் பதில் அளித்து நிருபர்களிடம் கூறியதாவது:-


    பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒடிசா அரசு மீது ஊழல் புகார்களை கூறி இருக்கிறார்.

    உண்மையிலேயே ஊழல் நடந்து இருக்கிறது என்று சொன்னால் அவர் ஆய்வு செய்து பார்க்கட்டும் உச்வாலா திட்டம், ஸ்கில் மி‌ஷன் திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று நினைத்தால் ஆய்வு மேற்கொள்ளலாம்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுஸ்மேன் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விட ஒடிசா அரசு ஏற்கனவே சிறப்பான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை விட மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள். மத்திய அரசு ரூ.5 லட்சத்துக்கு தான் காப்பீடு வழங்குகிறது. ஆனால், மாநில அரசு ரூ.7 லட்சம் காப்பீடு வழங்குகிறது.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு திட்டத்தை விட மாநில திட்டத்தில் கூடுதலாக 25 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள்.

    மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை விட மாநில அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் இதை நாங்கள் பின்பற்றுகிறோம்.

    எங்கள் அரசு மீது வேண்டும் என்றே பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறார். பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    முதலில் மத்திய அரசு அதை முக்கிய பிரச்சினையாக எடுத்து கவனம் செலுத்தட்டும்.

    இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #PetrolDieselPriceHike #OdishaCM #NaveenPatnaik #PMModi
    ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக்குக்கு ரூ.50 கோடி தர வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் கைதி ஒருவர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். #NaveenPatnaik
    பிலாஸ்பூர்:

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக்குக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத் தில் ரூ.50 கோடி தர வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டப்பட்டு இருந்தது.

    இந்த கடிதம் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து வந்தது என்பதை ஒடிசா மாநில போலீசார் கண்டுபிடித்தனர்.இதுகுறித்து அந்த மாவட்ட போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் பிலாஸ்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த புஸ்பேந்திரநாத் சவுகான் (வயது40) என்ற கைதி மிரட்டல் கடிதம் எழுதி இருந்தது தெரியவந்தது.

    கொள்ளை மற்றும் கொலை குற்றங்களுக்காக அவர் 2009-ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியபோது பிரபலம் அடைவதற்காக இதுபோன்று மிரட்டல் கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார். ஒடிசா மாநில கலெக்டர் ஒருவருக்கும் இதேபோல் கடிதம் அனுப்பியதாக கூறினார். #NaveenPatnaik
    ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #NaveenPatnaik #PMModi #NotifyHockeyNationalGame

    புவனேஷ்வர்:

    இந்தியாவின் தேசிய விளையாட்டாக அனைவராலும் அறியப்படுவது ஹாக்கியாகும். ஆனால் அதற்கான அறிவிப்புகள் இதுவரையில் அரசு இதழில் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில், ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அவர் எழுதிய கடிதத்தில், அடுத்த ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வருகிற  நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டு என அனைவராலும் அறியப்படும் ஹாக்கி விளையாட்டு, தேசிய விளையாட்டு என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது அறிந்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.



    நீங்கள் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஹாக்கி ரசிகர்கள் மனநிலையை புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். எனவே ஹாக்கிக்கு நமது தேசிய விளையாட்டாகும் தகுதி உள்ளது. இந்தியாவை உலகளவில் பெருமைப்பட செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு சிறந்த மரியாதையாக இருக்கும். மேலும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் நவின் பட்நாயக் கூறியுள்ளார். #NaveenPatnaik #PMModi #NotifyHockeyNationalGame
    பூரி நகரில் உள்ள ஜகநாதர் ஆலயத்தின் கருவூல சாவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு ஒடிசா முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார். #SriJagannathTemple #treasurykeysmissing #judicialprobe
    புவனேஸ்வர்:

    உலக அளவில் புகழ் பெற்ற 12-ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகன்நாதர் கோவில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கருவூல அறையில் ஜெகன்நாதருக்கு அலங்காரம் செய்யும் ஆபரணங்கள் மற்றும் பக்தர்கள் செலுத்திய தங்க, வைர நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இந்த கருவூலம் 1905, 1926, 1978 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கு பார்க்கப்பட்டு, பட்டியலிடப்பட்டது.

    இந்நிலையில், ‘ரத்னா பந்தர்’ என்றழைக்கப்படும் பத்து பகுதிகளை கொண்ட இந்த கருவூல அறையின் சுவர், கூரை, தரை ஆகியவற்றின் உறுதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக 34 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. 

    நேபாள மன்னர் கஜபதி மஹாராஜ் டிப்யசிங்கா டெப்-பின் பிரதிநிதி, தொல்லியல் துறையை சேர்ந்த இரு பொறியாளர்கள், ஒடிசா ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் மற்றும் கோவில் அறங்காவல் துறை தலைமை நிர்வாகிகளை உள்ளடக்கிய பத்துபேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    அப்போது, கருவூலத்தின் உள் அறையில் நகைகள், பணம் மற்றும் இதரப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கான சாவிகள் ஆலய நிர்வாகிகள் யாரிடமும் இல்லை என்றும் அந்த சாவிகள் காணாமல் போனதாகவும் தெரியவந்தது.

    வரும் ஜூலை மாதம் 14-ம் தேதி பூரி ஜகநாதர் ஆலயத்தின் பிரசித்திபெற்ற ரத யாத்திரை நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆலயத்தின் கருவூலச் சாவிகள் மாயமான சம்பவம் ஒடிசா மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் மாநில அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர். 

    பூரி சங்கராச்சாரியர் நிஸ்ச்சலாநந்தா சரஸ்வதியும், மாநில அரசு இவ்விவகாரத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாக கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்த ஆலயத்தின் கருவூலத்தில் உள்ள பொருட்கள் கடந்த 1984-ம் ஆண்டில் கடைசியாக கணக்கு பார்க்கப்பட்டு, பதிவும் செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிந்ததும் மாவட்ட கலெக்டரிடம் கருவூலச் சாவிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில் சாவிகள் காணாமல் போனது எப்படி? என்ற கேள்விக்கு அரசால் பதில் கூற இயலவில்லை.

    இந்நிலையில், பூரி நகரில் உள்ள ஜகநாதர் ஆலயத்தின் கருவூல சாவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு ஒடிசா முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த உத்தரவு வெறும் கண்துடைப்பு வேலை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், இவ்விவகாரத்தில் பொதுமக்களின் கவனத்தை திடைதிருப்பவே நீதி விசாரணைக்கு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 18 ஆண்டுகளாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் பல நீதி விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், இவற்றால் கிடைத்த பலன் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். #SriJagannathTemple #treasurykeysmissing #judicialprobe
    ×