search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "I.N.D.I. Alliance"

    • 2014, 2019 தேர்தல்களில் எளிதாக மோடி வென்று பிரதமர் ஆனார்
    • கூட்டணி தலைவர்களின் ஒற்றுமையின்மை பா.ஜ.க.விற்குத்தான் பயன்படும்

    பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. சில தினங்களில் அதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிடுவார்.

    2014ல் பாரதிய ஜனதா கட்சியை தலைமையாக கொண்டு அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை எதிர்த்து களமிறங்கியது. அதுவரை குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வினால் முன்னிறுத்தப்பட்டு, தேர்தலில் வென்று பிரதமரானார்.

    2019 தேர்தலில் மீண்டும் என்.டி.ஏ போட்டியிட்டு வென்று, பா.ஜ.க.வின் மோடி இரண்டாம் முறையாக பிரதமரானார்.

    2024 தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த கடந்த 2023ல் பல மாநிலங்களில் உள்ள பா.ஜ.க.வை எதிர்க்கும் சுமார் 25க்கும் மேற்பட்ட கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கின.

    ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட தங்கள் மாநிலங்களில் அதிக வெற்றி வாய்ப்புகளை உடைய கட்சிகளின் தலைவர்கள் இதை உருவாக்கினர்.

    இவர்கள் ஒருங்கிணைந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து மோடிக்கு எதிராக முன்னிறுத்துவார்கள் என்று அரசியல் விமர்சகர்களாலும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களாலும் பெரிதும் நம்பப்பட்டு வந்தது.

    ஆனால், அண்மையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் தனித்து போட்டியிட போவதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கூட்டணி ஆட்சி குறித்து பேச முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். "திரிணாமுல் காங்கிரஸ் இல்லையென்றால் இந்தியா கூட்டணி இல்லை" என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.


    இதே போல், ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து விட்டது.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன. காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி சம்பந்தமாக சரிவர பேசுவதில்லை என சில மாதங்களுக்கு முன் நிதிஷ் விமர்சித்திருந்தார்.

    தொடக்கம் முதலே கூட்டணிக்கு தலைமை பொறுப்பை காங்கிரஸ் விரும்பியது தெளிவாக தெரிந்தது. பிரதமர் வேட்பாளராக ராகுலை பிற கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என அதன் தலைமை விரும்புகிறது.

    கடந்த நவம்பரில் காங்கிரஸ் கட்சி, வட இந்தியாவில் ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியடைந்தது.


    இப்பின்னணியில், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை காங்கிரசுடன் ஒத்து போகவில்லை.

    மேலும், கேரளாவில் பா.ஜ.க. இன்னும் செல்வாக்கு பெற்ற கட்சியாக வளரவில்லை. அங்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்று என காங்கிரஸ் உள்ள நிலையில், அவர்களாலும் மாநிலத்தில் எதிர்த்து மத்தியில் ஆதரிக்க முடியுமா என்பது சந்தேகமே.

    தமிழ்நாட்டில் "நாற்பதும் நமதே" என களமிறங்கியுள்ள தி.மு.க. தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை கொடுக்க சம்மதிப்பதும் கேள்விக்குறிதான்.


    தமிழகத்தை பொறுத்த வரை நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், கேட்கும் இடங்களை தி.மு.க. தராவிட்டால் அக்கட்சி 40 இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் வதந்திகள் உலா வருகிறது.

    நாம் தமிழர் கட்சி 40 இடங்களிலும் வழக்கம் போல் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளில் எத்தனை பேர் அ.தி.மு.க. அணிக்கு தாவி செல்வார்கள் என்பதும் உறுதியாகவில்லை.

    இப்பின்னணியில், வெல்வதில் தீவிரம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள தி.மு.க., காங்கிரசுடன் சமரசம் செய்து கொள்வது கடினம்.

    தே.ஜ.கூ. அணியில், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த பிரதமர், அந்த வெற்றியை அரசியல் பிரசாரத்தில் பயன்படுத்தலாம். இது மக்களவை தேர்தலில் முக்கிய மாநிலமான உ.பி.யில் உள்ள இடங்களை வெல்ல பா.ஜ.க.விற்கு பயன்படும்.

    காங்கிரசின் முதன்மை பதவிக்கான ஆசை, பிரதான கூட்டணி தலைவர்களின் மாநிலத்தில் மட்டுமே உள்ள செல்வாக்கு, தற்போது நிலவும் ஒற்றுமையின்மை, ஒரு சில தலைவர்களின் "மதில் மேல் பூனை" நிலைமை ஆகியவை "வெல்ல முடியாதவர்" என்கிற பிம்பம் கொண்ட பிரதமர் மோடிக்கு வலு சேர்க்கவே பயன்படும் என்பதை இந்தியா கூட்டணி உணர்ந்தாக வேண்டும்.


    "ஊர் ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும் பழமொழியை "இந்தியா கூட்டணி" தலைவர்கள் நினைவில் வைத்து கொள்வது நல்லது. அவர்களது ஒற்றுமையின்மையால் மோடி "ஹாட்ரிக்" அடிக்க வாய்ப்புண்டு.

    • சட்டசபை தேர்தல் வெற்றி பா.ஜ.க.வை ஊக்கமடைய செய்துள்ளது
    • இந்தியா கூட்டணி கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை

    இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தலைவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து பிரபல பத்திரிகையில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது.

    அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் வெற்றி பா.ஜ.க.வை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விட்டது.

    மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க போவது மோடிதான். இது தவிர்க்க முடியாதது.

    மனோதிடம் மிக்க அரசியல் தலைவராக தன்னை வெளிப்படுத்தி கொண்டுள்ள மோடி, இந்துக்கள் அதிகம் உள்ள நாட்டில், இந்துத்வா சித்தாந்தத்தினால் மிக பிரபலமான தலைவராக உருவெடுத்துள்ளார்.

    மாநிலங்கள் அளவிலும், மத்திய அளவிலும் மோடிக்கு சாதகமான சூழலே நிலவுகிறது.

    பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ், நாடு முழுவதிலுமே 3 மாநிலங்களில் மட்டுமே உள்ளது. மேலும், உட்கட்சி குழப்பங்கள் அக்கட்சியில் அதிகம் காணப்படுகிறது.

    பா.ஜ.க.விற்கு எதிரான "இந்தியா கூட்டணி" கட்சிகளிடம் முக்கிய விஷயங்களில் ஒற்றுமை இல்லை.

    மோடியின் வெற்றி உறுதி; ஆனால், வெற்றியின் அளவை எந்தெந்த காரணிகள் முடிவு செய்யும் என்பதை வரும் காலம் தெரிவிக்கும்.

    2019ல் பெற்ற பெரும் வெற்றியை மீண்டும் பெறுமா என்பதை தற்போது கூற இயலவில்லை.

    இவ்வாறு அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்துள்ளார் சோனியா காந்தி
    • கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், அவரது மகளும் கட்சியின் பொது செயலாளருமான  பிரியங்கா காந்தியும் சென்னை வந்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள கூட்டணியின் தமிழகத்தின் முக்கிய கட்சியான தி.மு.க.வின் சார்பில் அக்கட்சி எம்.பி. கனிமொழி முன்னிலையில் இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். அங்கு சோனியா மற்றும் பிரியங்கா, தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தனர்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் கட்சி எம்.எல்.ஏ,க்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவருடனும் கட்சி நிலவரம், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கான வழிமுறைகள் மற்றும் தி.மு.க.வுடன் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    முன்னதாக கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுமாறு நிர்வாகிகளுக்கு சோனியா அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

    சுமார் 5 வருடங்கள் கழித்து சோனியா, தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×