search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Horticulture Department"

    • காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.
    • இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும்.

    திருப்பூர்,செப்.24-

    வெங்காயம், வாழைப்பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து பொங்கலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஷர்மிளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    ராபி பருவத்தில் பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில், சின்ன வெங்காயம் மற்றும் வாழைக்கு பயிா் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கலூர் குறுவட்டத்தில், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், தெற்கு அவிநாசிபாளையம் குறுவட்டத்தில், சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். நடவு முதல் அறுவடைக் காலங்கள் வரை ஏற்படும் வெள்ள பாதிப்பு, காற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வறட்சியால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு பெற முடியும்.

    பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.

    விவசாயிகள் தங்களின் பிரீமிய தொகையாக சின்ன வெங்காயம் பயிருக்கு ரூ.2,227ஐ அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.44,550 வரை கிடைக்கும். வாழைக்கு ஏக்கருக்கு ரூ.4,900ஐ அடுத்த ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கு ஏக்கருக்கு ரூ. 98 ஆயிரம் வரை இழப்பீடாக கிடைக்கும்.

    மேலும் விவரம் தேவைப்படுவோா் 7708328657, 9095630870 என்ற செல்போன் எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

    • நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நீர்வள நிலவளத் திட்டத்தின் இடைகால் கிராமத்தில் திறன் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது.
    • பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாவாசுகி வரவேற்புரை நிகழ்த்தி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நீர்வள நிலவளத் திட்டத்தின் இடைகால் கிராமத்தில் திறன் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாவாசுகி வரவேற்புரை நிகழ்த்தி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

    பாப்பாக்குடி வட்டார ஊராட்சி ஒன்றியத் துணைத்தலை வர் மாரிவண்ணமுத்து தலைைம தாங்கி சிறப்புரை ஆற்றினார். இடைகால் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்சினி முன்னிலை வகித்தார். அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ரஜினிமாலா மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றிய தொழில்நுட்பங்கள் பற்றி கூறினார். ராஜா வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் பற்றி பயிற்சி அளித்தார்.

    நெல்லை மாவட்ட வேளாண் அறிவியல் மையம் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் திருமலைசெல்வி வாழைபழ ஸ்குவாஷ் மற்றும் தக்காளியில் கெட்ச்அப் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துதல் பற்றி பயிற்சி அளித்தார். பனை ஓலை மற்றும் பனை நாரிலிருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் முறம் போன்ற பொருட்களை வடக்கு சிவகாமிபுரத்தை சார்ந்த காளியப்பன் மற்றும் அனஞ்சி செய்துகாட்டி பயிற்சி அளித்தனர். ஈசன் காளான் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் பயிற்சி அளித்தார்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை அலுவலர் விக்னேஷ், உதவி தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர் மற்றும் முன்னோடி விவசாயி மருதுபாண்டி ஆகியோர் செய்து இருந்தனர். இப்பயிற்சியில் இடைகால் கிராம விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது இயற்கை இடர்பாடுகளால் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • மழை நீர் வடிந்த பின் பயிர்களுக்க ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் மரகதமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது இயற்கை இடர்பாடுகளான புயல், மழை, வெள்ள பெருக்கால் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு, மரங்களின் சுமையை குறைக்க வேண்டும். காற்றால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைக்க வேண்டும். மழை நீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்த பின் நடவு அல்லது விதைப்பு பணிகளை செய்ய வேண்டும்.

    வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கு வடிகால் வாய்க்கால் அமைத்து மழை நீர் தேக்கத்தை தவிர்க்கலாம். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து செடிகள் சாய்ந்து விடாமல் தடுக்க வேண்டும்.

    மரங்களை சுற்றி மண் அணைத்து காக்க வேண்டும். மழை நீர் வடிந்த பின் பயிர்களுக்க ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்யலாம்.

    தோட்டங்களில் பசுமைக்குடில், நிழல் வலைக்குடில் அமைத்திருந்தால் அதன் அடிப்பக்கம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைத்து உறுதி செய்ய வேண்டும். பழப்பயிர், மிளகு, கொக்கோ, வாழை, காய்கறி, மரவள்ளி, பூக்கள் போன்ற பயிர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • மத்திய, மாநில அரசுகள் தோட்டக்கலைத்துறை வாயிலாக பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு ரூ. 1,200 வழங்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டாரம் தோட்டக்கலைத்துறைக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் வாயிலாக, 2022--23 நிதியாண்டில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் தோட்டக்கலைத்துறை வாயிலாக பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்க 2022 -23 ம் நிதியாண்டில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தக்காளி, கத்திரி, மிளகாய், பாகல், பீர்க்கன், சுரைக்காய் மற்றும் தர்பூசணி புதிதாக பயிரிடும் விவசாயிகளுக்கு நாற்றுக்கள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.வெங்காயம் பயிரிட, வெங்காய விதைகள் மற்றும் இடுபொருட்கள், ஒரு விவசாயிக்கு, 2 ஹெக்டர் வரை மானியம் பெறலாம்.கொய்யா, பப்பாளி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து நாற்றுக்கள் வழங்கப்படும். ஒரு விவசாயி 4 ஹெக்டர் வரை மானியம் பெறலாம்.

    தோட்டங்களில் நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க, ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. 20 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரம் அளவில் கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் 300 மைக்ரான் அளவில் தார்ப்பாய் அமைத்து நீரை சேமித்து சாகுபடிக்கு பயன்படுத்தலாம். இது பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.அயல் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க தேனீ வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. தேனீப்பெட்டிகள், தேனீக்கள், தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் வாங்குவதற்காக, ஒரு யூனிட்டிற்கு ரூ.24 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.பவர் ஸ்பிரேயர் வாங்க 2,500 ரூபாயும், 8 எச்.பி., க்கு மேல் குதிரைத்திறன் கொண்ட பவர் டில்லர் மானியத்தில் பெற ஒன்றுக்கு 60,000 வழங்கப்படுகிறது.விவசாயிகள் 600 சதுர அடி அளவில் சிப்பம் கட்டும் அறை தோட்டங்களில் அமைத்து கொள்ள ரூ. 2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    சின்ன வெங்காயம் இருப்பு வைத்து விலை கிடைக்கும் போது விற்பனை செய்யும் வகையில் ஒரு யூனிட் வெங்காய பட்டறை அமைக்க பின்னேற்பு மானியமாக ரூ.87,500 மானியம் வழங்கப்படுகிறது.நீர் அதிகம் ஆவியாகாமல் தடுக்கவும், களைகளை கட்டுப்படுத்தவும் நிலப்போர்வை பயன்படுகிறது. தக்காளி, மிளகாய், கத்திரி, தர்பூசணி பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

    விவசாயிகள் விளை பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் நகரும் காய்கறி வண்டிகள் ரூ.15 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில் ஏழை வியாபாரிகளும் பயன்பெறலாம்.இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் அல்லது ஏற்கனவே செய்து வரும் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியமும், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு, ரூ. 1,200 ரூபாயும் வழங்கப்படுகிறது.

    திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமை சான்று, ரேஷன் கார்டு, ஆதார், பேங்க் பாஸ் புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-, 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.மைவாடி, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி, காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், பாப்பான்குளம், கண்ணாடிப்புதூர், கடத்தூர், வேடபட்டி, கணியூர் விவசாயிகள் விமல்குமார் 99438 38146, சங்கராமநல்லூர், கொழுமம், கொமரலிங்கம், சோழமாதேவி விவசாயிகள் நித்யராஜ், 84890 95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர், சுரேஷ்குமார் 97905 82010, தோட்டக்கலை அலுவலர் காவ்ய தீப்தினி 99524 47266 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • காளான் வளர்ப்பைப் பொறுத்தவரை ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • மழைக் காலங்களில் அதிக மகசூலும், கோடை காலத்தில் குறைந்த மகசூலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

    உடுமலை :

    உடுமலை வட்டாரத்தில் 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட வழிகாட்டும் வகையில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தலைமையில் ஆனைமலையையடுத்த பெரியபோது கிராமத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயி கோபால் காளான் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கினார்.

    இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

    காளான் வளர்ப்பைப் பொறுத்தவரை ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மழைக் காலங்களில் அதிக மகசூலும், கோடை காலத்தில் குறைந்த மகசூலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. காளான் வளர்ப்பைப் பொறுத்தவரை சந்தைப்படுத்துதல் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தந்த பகுதிகளின் தேவை அறிந்து சிப்பிக் காளான், பால் காளான், மொட்டுக்காளான் உள்ளிட்ட ராகங்களின் வளர்ப்பில் ஈடுபடலாம். குறைந்த முதலீட்டில் சிறந்த லாபம் முதல் கட்டமாக சிறிய அளவில் உற்பத்தியைத் தொடங்கி தேவை அடிப்படையில் படிப்படியாக அதிகரிக்கலாம். உழவர் சந்தை உள்ளிட்டவற்றின் மூலம் பொதுமக்களிடம் நேரடியாக சந்தைப்படுத்துதல் கூடுதல் லாபம் தரும். தினசரி 2 மணி நேரம் ஒதுக்கி முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நல்ல மகசூல் ஈட்ட முடியும். குறைந்த அளவிலான முதலீட்டில் சிறந்த லாபம் ஈட்டக்கூடிய தொழிலாக காளான் வளர்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×