search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Cup 2023"

    • முதல் பாதியில் இந்தியா 6-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியிலும் இந்திய அணி கோல் மழை பொழிந்தது.

    ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், இன்று ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி, சிங்கப்பூர் அணியும் மோதின.

    முதல் பாதி முடிவில் இந்திய அணி 6-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது.

    இறுதியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    • பாபர் அசாம்- வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
    • முகமது ரிஸ்வான் தலையிட்டு சமரசம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இலங்கையிடம் தோற்று பாகிஸ்தான் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

    இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்- வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. முகமது ரிஸ்வான் தலையிட்டு சமரசம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இடையே மோதல் இல்லை என்று அங்கு அணியின் மூத்த வீரர் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக அந்த கூறும்போது, அணியின் ஒரே கவனம் கிரிக்கெட்டில் உள்ளது. விமர்சனங்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை .ஒரு போட்டியில் தோல்வியடைவது விமர்சகர்களுக்கு அவர்களின் கருத்துக்களை சொல்ல வாய்ப்பளிக்கிறது.

    அணியின் கூட்டத்தில் அனைவரும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் வார்த்தை மோதல் ஏற்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அனைவரும் ஒன்றாக கூட்டத்தை விட்டு வெளியேறினர். பல வீரர்கள் ஒரே விமானத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பினர் என்றார்.

    • இந்தியா 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
    • இலங்கை அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார்.

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை முகமது சிராஜ் வீசிய அதிரடியான ஸ்விங் பந்துகளை கணிக்க முடியாமல் வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனை படைத்தது.

    இப்போட்டியில் 4-வது ஓவரை வீசிய முகமது சிராஜ் முதல் பந்தில் நிசங்காவை அவுட்டாக்கி 3, 4 ஆகிய பந்துகளில் முறையே சமரவிக்ரமா மற்றும் அசலங்கா ஆகியோரையும் அவுட்டாக்கினார். அதனால் ஹாட்ரிக் எடுப்பதற்கு வாய்ப்பை பெற்றார். அதனால் அவரே பீல்டிங்கை தெர்வு செய்தார்.

    மிட் ஆன் திசையில் யாருமே பில்டிங் விடவில்லை. சிலிப்பில் 4 பேர் நின்றனர். ஹாட்ரிக் வாய்ப்புக்கான பந்தை சிறப்பாக வீசியும் டீ சில்வா மிட் ஆன் திசையில் பவுண்டரி அடித்தார். இருப்பினும் அதை பவுண்டரிக்கு விடக்கூடாது என்ற நோக்கத்தில் வேகமாக ஓடி துரத்திய முகமது சிராஜ் முடிந்தளவுக்கு போராடியும் தடுக்க முடியவில்லை. அதை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் வாய் மீது கை வைத்து சிரித்தார்கள். குறிப்பாக ஏற்கனவே 8/4 என இலங்கை சரிந்தும் அந்த பவுண்டரி போனால் போகட்டும் என்று விடாமல் வெறித்தனமாக சிராஜ் துரத்தியதை நினைத்து விராட் கோலி வெளிப்படையாகவே சிரித்தார்.

    இருப்பினும் தம்முடைய ஓவரில் ஒரு ரன் கூட எக்ஸ்ட்ரா கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் வேகமாக துரத்திய சிராஜ் நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் பெற்றார். அத்துடன் அடுத்த பந்திலேயே டீ சில்வாவை அவுட்டாக்கிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் சரித்திரம் படைத்து அதிவேகமாக 5 விக்கெட்டுகள் (16 பந்துகளில்) எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.



    • ரோகித் தலைமையில் ஆசிய கோப்பையை இந்தியா 2-வது முறையாக வென்றுள்ளது.
    • அதிக ஆசிய கோப்பைகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சச்சின், டோனி உட்பட வேறு யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் தலைமையில் ஆசிய கோப்பையை இந்தியா 2-வது முறையாக வென்றுள்ளது.

    ரோகித் 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஆசிய கோப்பையில் விளையாடினார். அதன் பின் 2010, 2016 ஆகிய தொடர்களிலும் விளையாடினார். மேலும் 2018 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு ஆசிய கோப்பையை கைப்பற்றினார்.

    அந்த வகையில் 2008, 2010, 2016, 2018, 2023* ஆகிய 5 தொடர்களில் விளையாடியுள்ள அவர் வரலாற்றில் அதிக ஆசிய கோப்பைகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சச்சின், டோனி உட்பட வேறு யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.

    அதே போல ஆசிய கோப்பை வரலாற்றில் 2 சாம்பியன் பட்டங்களை (2018, 2023) வென்ற இந்திய கேப்டன் என்ற முகமது அசாருதீன் மற்றும் எம்எஸ் டோனி ஆகியோரது சாதனைகளையும் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

    அத்துடன் 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் ரோஹித் தலைமையில் 10 விக்கெட் வித்யாசத்தில் வென்ற இந்தியா இந்த தொடரில் நேபாளுக்கு எதிரான போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த நிலையில் நேற்று 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை 10 வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற யாராலும் தொட முடியாத சாதனை ரோகித் படைத்துள்ளார்.

    ஏனெனில் இதற்கு முன் சீனிவாசன் வெங்கட்ராகவன், சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், டோனி, கேஎல் ராகுல் ஆகியோர் தலைமையில் தலா 1 முறை மட்டுமே 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.

    இது போக கடந்த ஜனவரியில் இதே இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 317 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் தலைமையில் வென்ற இந்தியா நேற்று 6.1 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து வென்றது.

    இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் (317) வித்தியாசத்திலும் அதிக பந்துகள் (263) வித்தியாசத்திலும் அதிவேகத்தில் சேசிங் செய்தும் (6.1 ஓவர்களில்) வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற 3 சரித்திரத்தையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    • இந்தியா இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் கற்பனை செய்யவில்லை.
    • ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    கராச்சி:

    6 அணிகள் பங்கேற்ற 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இதில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்நிலையில் எதிர்வரும் உலகக்கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவின் கேப்டன்சி மேம்பட்டுள்ளது. அவரும் அணி நிர்வாகமும் சிறப்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்தியா இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் கற்பனை செய்யவில்லை.

    இங்கிருந்து, உலகக்கோப்பையில் இந்தியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கலாம். நல்ல வேலை செய்தீர்கள் சிராஜ். நீங்கள் இந்தியாவின் வெற்றிக்கு உதவி செய்தீர்கள். உங்கள் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்குக் கொடுத்து நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள்.

    இந்தியா உலகக்கோப்பைக்கு அவர்களின் நம்பிக்கையை உயர்த்திய பிறகு செல்கிறது. இந்தியா பின்தங்கிய நிலையில் தொடங்கியது. ஆனால் இப்போது இந்திய அணியின் செயல்பாடு பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கும் கவலையாக இருப்பதாக உணர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன்.
    • நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம்.

    ஆசிய கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் இந்தியா இலங்கை மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இஷான் கிஷன் 23 ரன்களும், சுப்மன் கில் 27 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு ஓவர் வீசிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த போட்டியில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு இந்த ஆசிய கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.


    இந்த போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது பேசிய தொடர் நாயகன் குல்தீப் யாதவ் கூறியதாவது:-

    கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறேன். தற்போது நான் மேலும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வகையில் பந்துவீசி வருவதாக நினைக்கிறேன்.

    டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை லென்த் மிகவும் முக்கியம். அதேபோன்று ஒருநாள் போட்டிகளிலும் லென்த் மிகவும் முக்கியமான ஒன்று. இப்போது எல்லாம் நான் விக்கெட்டைப் பற்றி யோசிக்காமல் என்னுடைய லைன் மற்றும் லென்த்தில் கவனம் வைத்து அப்படியே பந்துவீசி வருகிறேன். மேலும் என்னுடைய இந்த சிறப்பான பந்துவீச்சுக்காக நான் பெரிய அளவில் பயிற்சி செய்து வருகிறேன்.

    இன்று நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம். அவரின் என்கரேஜ்மென்ட் தான் என்னுடைய பந்துவீச்சில் என்னுடைய வேகத்தை மாற்றி அமைக்க உதவியது. எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கட்டுகளை எடுத்துக் கொடுத்தால் ஸ்பின்னர்களுக்கு இன்னும் அது உதவிகரமாக இருக்கும் என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • சிராஜின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது.
    • முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார்.

    இலங்கையின் பேட்டிங் முதுகெலும்பை சுக்குநூறாக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.

    மேலும் சில சாதனை விவரம் வருமாறு:-

    * முகமது சிராஜியின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் வாக்கர் யூனிஸ் 1990-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இலங்ைகக்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

    * அற்புதமாக பந்து வீசிய இந்திய பவுலர்களில் ஸ்டூவர்ட் பின்னி (4 ரன்னுக்கு 6 விக்கெட், வங்காளதேசம் எதிராக), அனில் கும்பிளே (12-6, வெஸ்ட் இண்டீஸ் எதிராக), பும்ரா (19-6, இங்கிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு அடுத்த இடத்தை முகமது சிராஜின் பந்து வீச்சு பிடித்துள்ளது.

    * முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார். பந்து வாரியாக சாதனை விவரம் கணக்கிடப்பட்ட 2002-ம் ஆண்டில் இருந்து ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை அறுவடை செய்த 4-வது பவுலராக முகமது சிராஜ் திகழ்கிறார். ஏற்கனவே இலங்கையின் சமிந்தா வாஸ் (2003-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக), பாகிஸ்தானின் முகமத் சமி (2003-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக), இங்கிலாந்தின் அடில் ரஷித் (2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோர் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள்.

    * 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். அதன் பிறகு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் எடுத்த வீரர் சிராஜ் தான்.

    * இலங்கையின் 50 ரன், ஒரு நாள் போட்டி இறுதிப்போட்டிகளில் ஒரு அணியின் மோசமான ஸ்கோராக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான இறுதிசுற்றில் இந்தியா 54 ரன்னில் ஆல்-அவுட் ஆகி இருந்ததே இந்த வகையில் சொதப்பல் ஸ்கோராக இருந்தது.

    * இந்தியாவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த ஸ்கோரும் இது தான். 2014-ம் ஆண்டு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 58 ரன்னில் அடங்கியதே முந்தைய தாழ்ந்த ஸ்கோராகும்.

    • இந்திய அணி இலங்கையை 50 ரன்னில் சுருட்டியது.
    • இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையை 50 ரன்னில் சுருட்டி சூப்பர் வெற்றியுடன் கோப்பையை 8-வது முறையாக சொந்தமாக்கியது.

    ஆசிய கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக களத்தில் நின்று கொண்டு பேசி வந்தனர். அப்போது இஷான் கிஷன், விராட் கோலி போல நடந்து காட்டினார். அதை பார்த்த விராட் கோலி என்னை மாதிரி நடப்பதாக கூறி, பின்னாடி தூக்கி கொண்டு நடக்கிறாய் என கிண்டலாக அவரும் நடந்து காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    சில தினங்களுக்கு முன்பு நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தண்ணீர் கொடுக்க வந்த வீடியோ ஒன்று வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


    • எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திறமையுடன் வித்தியாசமாக பந்து வீசக்கூடியவர்கள்.
    • ஸ்லிப்பில் நின்றபடி முகமது சிராஜ் பந்து வீசிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இது போன்று வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் மனநிறைவை தருகிறது. எங்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திறமையுடன் வித்தியாசமாக பந்து வீசக்கூடியவர்கள். ஸ்லிப்பில் நின்றபடி முகமது சிராஜ் பந்து வீசிய விதத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இது ஒரு அற்புதமான செயல்பாடு. அதுவும் இறுதிப்போட்டியில் இது மாதிரி அசத்துவது நீண்ட காலம் மனதில் நிலைத்து நிற்கும்.

    சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு லேசான தசைகிழிவு தான். ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். ஸ்ரேயாஸ் அய்யர் நன்றாக இருக்கிறார். பயிற்சியில் ஈடுபடுகிறார். கிட்டத்தட்ட அவர் 99 சதவீதம் உடல்தகுதியை எட்டிவிட்டார்' என்றார்.

    • இலங்கை 50 ரன்னில் சுருண்டது. சிராஜ் 6 விக்கெட் சாய்த்தார்
    • இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இலங்கை 50 ரன்னில் சுருண்டது. பின்னர், இந்தியா விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    100 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி 21.3 ஓவர்களிலேயே முடிவடைந்தது. போட்டி முன்னதாகவே முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் உடனடியாக இந்தியா திரும்பினர். அவர்கள் இன்று காலை மும்பையில் உள்ள கலினா விமான நிலையம் வந்தடைந்தனர். அதன்பின், சொகுசு காரில் தங்களது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்றோர் தங்களது சொகுசு காரில் புறப்பட்டுச் சென்றனர். வெறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள், மும்பையில் இருந்து விமானங்கள் மூலம் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    • இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

    டாஸ் வென்ற இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியில், இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்திய அணி 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

    இந்நிலையில், ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆசிய கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள். போட்டியின் மூலம் நமது வீரர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    • 6 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    • அதற்கான பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கினார்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா இலங்கை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய இலங்கை அணி 50 ரன்னில் சுருண்டது. முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட் உள்பட 6 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.

    இறுதியில், இந்தியா 8-வது முறையாக ஆசிய கோப்பை வென்று சாம்பியன் ஆனது.

    இந்நிலையில், 6 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. பரிசு பெற்ற சிராஜ், அந்தத் தொகையை கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

    இதுதொடர்பாக, சிராஜ் கூறுகையில், இந்த ரொக்கப் பரிசை மைதான வீரர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் என தெரிவித்தார்.

    முகமது சிராஜின் இந்த செயலுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    ×