search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apartments"

    • பொது பயன்பாட்டுக்கான மின் கட்டண குறைப்பு சலுகையை பெற தாழ்வழுத்த மின் இணைப்பையும், டேரீப் மாற்றி கொள்ளலாம்.
    • லிப்ட் வசதியில்லாத 3 மாடிக்கும் குறைவாக உள்ள வீடுகள் 10 வீட்டுக்கும் குறைவாக உள்ள வளாகங்கள் இந்த இணைப்பு பெறலாம்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரே வளாகத்தில் அமைந்துள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ள கட்டடங்களுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்பு யூனிட்டுக்கு 8.15 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது. இதுதவிர கிலோவாட்டுக்கு 204 ரூபாய் நிலை கட்டணமும் விதிக்கப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்போர் நல அமைப்புகள், மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின் கட்டணம் குறைக்கப்படுமென 18-ந்தேதி முதல்வர் அறிவித்தார். அதற்கான உத்தரவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

    10 வீடுகள் அல்லது அதற்கு குறைவான வீடுகள் உள்ள வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, லிப்ட் வசதியில்லாத குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 8.15 ரூபாய் என்பது 5.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

    பொது பயன்பாட்டுக்கான மின் கட்டண குறைப்பு சலுகையை பெற தாழ்வழுத்த மின் இணைப்பையும், டேரீப் மாற்றி கொள்ளலாம். பொது பயன்பாட்டு மின் இணைப்பு, 1டி என்ற வகையில் இருந்தது. இதில் யூனிட்டுக்கு 5.50 ரூபாய் மின் கட்டணம் செலுத்த தகுதியான பொது பயன்பாட்டு இணைப்புகளை 1இ என, வகை மாற்றம் செய்து கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

    இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடியிருப்பு வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 1இ என்ற தாழ்வழுத்த மின் இணைப்பு வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியில்லாத 3 மாடிக்கும் குறைவாக உள்ள வீடுகள் 10 வீட்டுக்கும் குறைவாக உள்ள வளாகங்கள் இந்த இணைப்பு பெறலாம்.

    அரசு உத்தரவுப்படி மின்வாரியம் 1இ இணைப்பை அறிமுகம் செய்துள்ளது. தகுதியானவர்கள் 1டி இணைப்பை 1இ என்று வகை மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்வது குறித்து விரைவில் அறிவிப்பு செய்யப்படும் என்றனர். குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்புக்கு நிலை கட்டணமாக கிலோவாட்டுக்கு 204 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பயன்படுத்தும் மின்அளவை காட்டிலும் நிலை கட்டணம் தான் பெரும் சுமையாக வருகிறது. வாடகை வீடுகளில் வசிப்பவருக்கு கூடுதல் சுமையாக இருக்கிறது.எனவே வீடுகளுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்புக்கு நிலை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என மின்நுகர்வோர் எதிர்பார்த்து ள்ளனர்.

    • 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.
    • குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பல்லடத்தை அடுத்த பெரும்பாளியில் 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.கடந்த 2019ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு க்கான கட்டுமான பணிகள் துவங்கின. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவடையவுள்ள சூழலில் பயனாளிகள் யார், எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

    வீட்டு வசதி வாரிய அதிகாரிஒருவர் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் 60 சதவீதம்வரை நிறைவடைந்துள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்க ப்படும். மொத்தமுள்ள 432 குடியிருப்புகளுக்கு, நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஏற்க னவே பெறப்பட்டுள்ளன. குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வரும் சூழலில் கலெக்டர் உத்தர வின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

    • நீதிமன்றம் உத்தரவின்படி அந்த வீடுகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 10 மற்றும் 9-வது வார்டுக்குட்பட்ட நல்லாறு, செட்டிபாளையம் பகுதிகளில் 187 வீடுகள் நீர்வழி ஆக்கிரமிப்பாக இருப்பதாக கண்டறியப்பட்டது. மேலும் சென்னை நீதிமன்றம் உத்தரவின்படி அந்த வீடுகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படாததால் இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் ஆத்துப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நீர்ப்பாசனத்துறை உதவி பொறியாளர் நல்லதம்பி வரவேற்றார்.

    இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:- நீதிமன்ற உத்தரவின்படி இந்த பகுதியில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டாலும், இங்கு வசிக்கும் அனைவருக்கும் நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

    திருப்பூர் 9 மற்றும் 10-வது வார்டுகளில் நீர்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டாலும் அங்கு வசிப்பவர்களுக்கு அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.அந்த வீடுகளுக்கு வழங்க வேண்டிய தொகைக்கான வங்கிக் கடன் வசதியையும் அதிகாரிகளே சுயஉதவிக்குழுக்கள் மூலமாக ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் திருப்பூர் வடக்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • வேலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்தில் நடந்தது
    • 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் காலியாக உள்ள வீட்டு மனைகள், குடியிருப்புகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சென்னை விட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராமகிருஷ்ணா, நிர்வாக செயற்பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது. இதில் 864 காலி மனைகள் 38 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 25 வீடுகளுக்கு குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு நடந்தது.

    குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் ஒரு மாத கால அவகாசத்தில் பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும்.
    • மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள கூலி உயா்வை திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமல்படுத்த வேண்டும்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும். தற்காலிக ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள கூலி உயா்வை திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத் தொடா்ந்து சங்கத்தின் புதிய தலைவராக பி .சுப்பிரமணியம், செயலாளராக லோகநாதன், பொருளாளராக விஜயராணி, துணைத் தலைவராக ஆனந்தன், துணைச் செயலாளராக வீரன் உள்பட 16 போ் கொண்ட கமிட்டி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

    சிஐடியூ. மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகி பழனிசாமி, விவசாய சங்க மாவட்ட நிா்வாகிகள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    191 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    “தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம், 2017” மற்றும் அதற்கான விதிகள் இன்றுமுதல் அறிவிக்கை செய்யப்பட்டு, அமல்படுத்தப்படுகிறது.

    இச்சட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தவும், பொது மக்கள் எளிதாக பின்பற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்ட www.tenancy.tin.goc.in என்ற வலைதளத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

    இந்த வலைதளத்தில், சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இப்புதிய சட்டத்தின்படி, ஒருமித்த கருத்தின் மூலமே அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியும். வாடகை ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாடகை விதிக்கப்படும். குத்தகை விடுபவர் 3 மாத வாடகையை முன்பணமாக பெறமுடியும்.

    இப்புதிய “தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம், 2017” புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

    வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் அயப்பாக்கம் திட்டப்பகுதியில் 2.45 ஏக்கர் பரப்பளவில் 64 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 336 குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    கொரட்டூர் திட்டப் பகுதியில் 1.45 ஏக்கர் பரப்பளவில், 54 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 222 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகள், ஒசூர் புறநகர் திட்டப் பகுதி 15ல் 4.04 ஏக்கர் பரப்பளவில், 19 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 90 வீடுகள்; ஈரோடு மற்றும் வேலூர் டோபிகானா திட்டப் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 191 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருநெல்வேலி, விருதுநகர், கடலூர், திருவாரூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 332 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பணி, 4 ஆற்றுப்பாலங்கள் மற்றும் ரெயில்வே கடவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    திருப்பூர் மாநகரத்தில் 4 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 34 காவலர் குடியிருப்புகள் மற்றும் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 69 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையக் கட்டடம் ஆகியவற்றை காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    மேலும், 11 கோடியே 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 காவலர் குடியிருப்புகள், 5 காவல் நிலையங்கள், ஒரு காவல் துறை கட்டடம், ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ், சிவகங்கையில் 44 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 201 வீடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ், சீருடை பணியாளர்களுக்காக சிவகங்கை வட்டம், பையூர் பிள்ளைவயல் கிராமத்தில் 44 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 201 வீடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

    தமிழ்நாடு காவல் துறையின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் காலியாகவுள்ள உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 234 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 13 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்களையும் காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 126 கோடியே 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார். #TNCM #EdappadiPalaniswami
    மதுரை துணைக்கோள் நகரத்தில் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #TNMinister #RBUdhayakumar
    மதுரை:

    மதுரையில் இருந்து நெல்லைக்கு நடத்துனர் இல்லாத விரைவு பஸ் சேவையை திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று தொடங்கி வைத்தார்.

    திருமங்கலத்தில் இருந்து 6 விரைவு பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விரைவு பஸ் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் நடத்துனர் இல்லாத பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து திருமங்கலம் வழியாக நெல்லைக்கு 6 விரைவு பஸ் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் நடத்துனர்கள் அதற்குரிய ஸ்டே‌ஷன்களில் இருப்பார்கள். இந்த பஸ் சேவை மூலம் மக்கள் விரைவாகவும், பாதுகாப்புடனும் செல்ல முடியும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்படுவதை புள்ளி விவரங்களுடன் எடுத்துக்கூறினார்.

    சட்டம், ஒழுங்கை காப்பாற்றக்கூடிய இந்த அரசின் யுக்தியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் மாற்றுக்கொள்கை, லட்சியம் உள்ளவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

    எந்த ஒரு கட்சிக்கும் லட்சியம், கொள்கை, எதிர் பார்ப்பு இருக்கும். அதில் தவறு இல்லை. தங்களது கட்சி தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக லட்சியங்களையும், கொள்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்வது மரபு. அது தான் வாடிக்கை.

    அந்த வாடிக்கையே சில சமயங்களில் வேடிக்கையாகவும் அமைவது உண்டு.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைந்ததில் 7 கோடி தமிழர்களுக்கும் பங்கு உண்டு. வருவாய்த்துறை அமைச்சர் என்ற முறையில் அதற்கு உரிய நிலத்தை ஆர்ஜிதம் செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற பணியில் மன நிறைவோடு செயல்பட்டுள்ளேன்.


    எய்ம்ஸ் அருகே துணைக்கோள் நகரம் அமைய இருக்கிறது. இது மறைந்த முதல்-அமைச்சர் அம்மா கண்ட கனவு திட்டம் ஆகும்.

    இந்த துணைக்கோள் நகரத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் 5 ஆயிரம் வீடுகளும், வீட்டு வசதி வாரியம் மூலம் 5 ஆயிரம் குடியிருப்புகளும் மொத்தம் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

    மேலும் பள்ளி, கல்லூரிகளும் அங்கு வர உள்ளது. அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    பஸ் போர்ட்டும் அமைவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கோவை, சேலம், அடுத்து மதுரைக்கு பஸ் போர்ட் வருகிறது. அதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    துணைக்கோள் நகரம் அமைப்பதற்கு தேவையானதை விட கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் அதிகாரி குணாளன், நிர்வாகிகள் வெற்றிவேல், ஜான் மகேந்திரன், அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  #TNMinister #RBUdhayakumar
    ×