search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thaipusam"

    • பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து 7 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றன.
    • பக்தர்கள் முருகா முருகா என எழுப்பிய கோஷங்கள் விண்னை முட்டின.

    தருமபுரி:

    தமிழகத்திலேயே வேறு எங்கும் கண்டிராத வகையில் தருமபுரியில் பெண்கள் மட்டுமே தேரினை வடம் பிடித்து இழுத்த தேரோட்டம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சிவசுப்பிர மணிய சாமி கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 21 ந்தேதியன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்து 7 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகின்றன.

    இந்த தைப்பூசத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் தைசப்பூசத்தையொட்டி பெண் பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சிவ சுப்பிரமணிய சாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    அதேபோல் ஆண் பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் காவடி எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று காலை கோலகலமாக நடைபெற்றது.

    விழாவில் சிவசுப்பிரமணிய சாமி, வள்ளி தெய்வானையுடன் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.

    தேரினை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் முருகா முருகா என எழுப்பிய கோஷங்கள் விண்னை முட்டின.

    தேர் நிலை வந்தபோது பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு வீசி நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். சிலர் சில்லறை காசுகளையும் தேரின் மீது வீசி நேர்த்தி கடன் செலுத்தினர்.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவசுப்பிரமணிய சாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் திருவிழாவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
    • தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    கொண்டையம்பாளையம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வீதியில் உலா வந்த தேர் வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    தேர் கவிழ்வதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி பக்தர்கள் உயிர் தப்பினர். இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து தொடங்கியது.
    • உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்தனர்.

    இந்த முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் கிராம மக்கள், பழங்குடி மக்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேவி பக்தர்கள் என ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியின் ரதத்தை பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.

    வரும் வழியில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மலைவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரை லிங்கபைரவி சந்நிதிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து தேவிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.

    புனிதமான தைப்பூச திருநாளில் ஏராளமான பக்தர்கள் தேவிக்கு தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருளை பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 21 நாட்கள் 'பைரவி சாதனா' என்ற பெயரில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதத்தை இன்று நிறைவு செய்தனர்.

    • சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழர்கள் இத்தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருவதாக, திருஞானசம்பந்தரின் "தேவாரப்" பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
    • கடந்த ஆட்சியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட தைப்பூசத் திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம்.

    சென்னை :

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "முருகனைக் கூப்பிட்டு

    முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே!

    உடல் பற்றிய பிணி ஆறுமே!"

    தமிழர் பெருங்கடவுள், அய்யன் முருகனுக்கு உகந்த நாளான "தைப்பூசம்" தினமான இன்று, தமிழகம் கடந்து முருகனை வழிபடும் அனைத்து மக்களுக்கும் "தைப்பூசத் திருநாள்" வாழ்த்துகள். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழர்கள் இத்தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருவதாக, திருஞானசம்பந்தரின் "தேவாரப்" பாடல்களில் குறிப்புகள் உள்ளன.

    இத்தனை வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தை, தமிழக அரசு "அரசு விடுமுறையாக" அறிவிக்க வேண்டும் என்று, நாம் மேற்கொண்ட "வேல் யாத்திரையின்" போது வைத்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆட்சியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட தைப்பூசத் திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம் என கூறியுள்ளார்.

    • திருச்செந்தூரில் முருகன் ஞானகுருவாக அருளுகிறார்.
    • திருச்செந்தூர் குரு தலமாக கருதப்படுகிறது.

    திருச்செந்தூரில் முருகன் ஞானகுருவாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், குரு தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்டயானைகள், மேதாமலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது.

    அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, `ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குருபெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், தீய பலன்கள் குறையும்.

    தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன. தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.

    கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவு படுத்துகின்றது. வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது.

    வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், பிரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப்பெற்று பரலாயிற்று, ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

    வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.

    வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடு என குறிப்பிட்டுள்ளார்.

    வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதை தெளிவு படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.

    திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவச் சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

    • பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது.
    • பழனிக்குப் பாத யாத்திரையாகவே சென்று கொடுத்தார்.

    போக்குவரத்து வளர்ச்சியடையாத 18-ம் நூற்றாண்டிலேயே மிகவும் தைரியமாக பல்வேறு வாணிபங்கள் மேற்கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனும் நகரத்தார் சமூகத்தினர். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் அவரது வாணிபம் நலிவடைந்தது. இதனால் பழனி முருகனிடம் தன் வாணிபம் பெருக செட்டியார் மனம் உருகி முறையிட்டார். வாணிபம் நல்லபடியாக நடக்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை முருகனுக்கே அர்ப்பணிப்பதாக மனதிலே பிரார்த்தனை செய்து கொண்டார். பழனி முருகன் அவருக்கு அருள் புரிந்தார். உப்பு வாணிபம் மேன்மேலும் வளரத் தொடங்கியது.

    செட்டியாரும் தான் வேண்டிக் கொண்டபடி முருகனுக்காக ஒதுக்கிய வருமான பங்கு பணத்தை ஆண்டு தோறும் தன் ஊரில் இருந்து பழனிக்குப் பாத யாத்திரையாகவே சென்று கொடுத்தார். முருகனின் கருணை வெள்ளத்தில், அவர் அடுத்து வந்த ஆண்டுகளில் நோன்பிருந்து ஒரு குழுவாக நடைப்பயணம் வந்து ஆண்டு தோறும் வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொண்டார்.

    இதை அறிந்த மற்ற நகரத்தார்களும் ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் முருகனை தரிசிப்பதற்காக பல குழுக்களாகப் பாதயாத்திரை மேற்கொண்டு பழனி நோக்கி வந்தனர். இப்படித்தான் பழனி பாதயாத்திரை பிரபலமாகியது.

    ஒரு குழு, பல குழுக்களாகி பல குழுக்கள் நூறாகி, நூறு ஆயிரங்களாகி இன்று லட்சக்கணக்கான மக்கள் தைப்பூசத் திருநாள் விழாவிற்கு செட்டிநாட்டுப் பகுதிகளில் இருந்து பழனி வருகின்றனர். இச்சமூகத்தினர் அனைவரும் தங்கள் ஊர்களில் இருந்து நடந்து குன்றக்குடி வந்தடைந்து அங்கு ஒன்று கூடி குன்றக்குடி முருகப்பெருமான் ரத்தினவேல் துணைக்கு வர காவடிகளுடன் தங்கள் குருவான சாமியாடிச் செட்டியாரின் தலைமையில் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

    இதேபோன்று பல்வேறு பிரிவினர்களும் காவடி எடுத்துப் பழனிக்கு நடந்து வருவர். வழியில் நாட்டார் காவடிகள் என்றும் நகரத்தார் காவடிகள் என்றும், நடைப்பயணத்தில் வரும் அனைத்துக் காவடிகளும் ஒன்று சேர்ந்து பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் செல்லும் காட்சிகள் மிகவும் அற்புதமானவை.

    நாள் தோறும் அன்றாடப் பயண முடிவில் ஓரிடத்தில் ஒன்றாகக் காவடிகளை இறக்கி பூஜைகள் செய்து நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், பசி, தாகம் தீர்த்து விட்டு மறுபடியும் பயணம் மேற்கொள்வர். இவ்வாறு ஒரு வார காலம், பசி, தாகம், தூக்கம், உடல் வலி, கால்கள் வலி, ஊர், உறவு, வீடு, வாசல் எல்லாவற்றையும் மறந்து ஒரே சிந்தனையுடன் பழனி ஆண்டவனையே நெஞ்சில் வைத்து பாடியும் ஆடியும் நடந்து செல்வார்கள்.

    பழனியை அடைந்ததும் காவடிகளையும் தங்கள் மனபாரங்களையும் ஒன்றாக முருகனிடம் இறக்கி வைத்துப் பூஜைகளும் நேர்த்திக் கடன்களும் செய்து முடிப்பார்கள். அங்கேயே ஓரிரு நாட்கள் தங்கி இறைவனிடம் மனம் உருகி வேண்டுதல்கள் செய்து தைப்பூசத் தேரோட்டம் காண்பார்கள். பிறகு மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் காவடி களை எடுத்துக் கொண்டு நடந்து ஊர் திரும்புவார்கள்.

    இன்று உலகம் முழுவதிலும் இருந்து வரும் பாத யாத்திரையாளர்கள் பெருகிப் பெருகி ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாததாகி விட்டது. தமிழகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஒரு மாதத்திற்கு முன்பே பழனி நோக்கி பக்தர்கள் நடக்கத் தொடங்கி விடுவர். தமிழகத்தின் வேறு எந்த கோவிலிலும் பாதயாத்திரைப் பக்தர்கள் இந்த அளவுக்கு கூடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்
    • அறுவரும் ஒருவர் ஆன நாள் - கார்த்திகை.

    * முருகன் தோன்றிய நாள் - வைகாசி விசாகம்

    * அறுவரும் ஒருவர் ஆன நாள் - கார்த்திகையில் கார்த்திகை

    * அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்

    * அசுரரை அழித்தாட்கொண்ட நாள் -ஐப்பசியில் சஷ்டி

    * வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் - பங்குனி உத்திரம் இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே -தைப்பூசம்.

    `வேல்' என்றால் என்ன?

    வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம். `வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு `வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் -வெற்றி என்று அர்த்தமாகும். ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் -வேல் ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு.

    சங்ககாலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது. பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்.

    இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது. வேல் வழிபாடுன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது. பல தொன்மையான கோவில்களில் முருகன் சிலையே இருக்காது வெறும் வேல் வழிபாடு தான்.

    பழமுதிர்சோலை, திருச்செங்கோடு, ஈழத்தில் செல்வர் சந்நிதி, மலேசியாவில் பத்துமலை, உள்ளிட்ட பல ஊர்களில் எல்லாம் வேல் வழிபாடு தான் நடைமுறையில் உள்ளது. வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்.

    * வேலின் முகம் -அகன்று விரிந்து இருக்கும் ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்.

    * வேலின் கீழ் நுனி - வட்டமாக முடியும் ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.

    * வேல் - பெருமை மிக்கது மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்.

    * ஈட்டி - அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு.

    * வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை.

    * ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன.

    இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், `வேல்' முன்னிறுத்தி, தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது. இன்றும் கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள். தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி நாதர் முயற்சிகள் பல செய்தார்.

    பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள் பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம் முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்.

    அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர். முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்.

    முருகன் வேறு, வேல் வேறு அல்ல. முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு. ஆறு படைகள் உண்டு.

    • இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
    • கோவில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க கண்டு தரிசனம் செய்தனர்.

    இதனைதொடர்ந்து வெள்ளித்தேரில் சாமி வீதிஉலா நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் 7-ம் நிகழ்ச்சியாக இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு தோழுக்கினியானில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சாமி திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பல்வேறு அமைப்புகளால் அன்னதானம், பழங்கள், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல்அறைகள், பக்தர்கள் தங்கும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன. இடும்பன்குளம், சண்முகாநதி பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டு நீராடி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பான முறையில் குளித்து செல்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 2000-ககும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கல்யாண நிகழ்ச்சியை நாளை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 1லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரமே குலுங்கியது.

    தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவில் பாரவேல் மண்டபம் உள்பட முக்கிய இடங்களில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.


    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா.
    • முருகர் தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    தைப்பூசத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரத வீதியில் உள்ள இல்லத்தார் தைப்பூச மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திரளான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் குழுக்களாக, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகபெருமானின் உருவப் படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியவாறும் பாதயாத்திரையாக வந்தனர்.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலையில் திருச்செந்தூருக்கு பக்தர்கள் அணிவகுத்து சென்றனர். திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் தங்கினர். திருச்செந்தூர் நகரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சியளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.

     இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கடற்கரை, கோவில் வளாகம் நிரம்பி வழிகிறது.

    • முருகர் பார்வதிதேவியிடம் இருந்து வேல் பெற்ற நாளே தைப்பூச விழா.
    • அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்தநாள். தமிழர்கள் இந்த நன்னாளை தைப்பூச விழாவாக கொண்டாடுகிறார்கள். இது, ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பவுர்ணமியும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். கேரளாவில் இந்த விழா `தைப்பூசம்' என்று அழைக்கப்படுகிறது.

    சூரபத்மனை அழிப்பதற்காக முருகப்பெருமான் தனது தாயார் பார்வதிதேவியிடம் இருந்து வேல் பெற்ற நாளே தைப்பூச விழாவாக கொண்டாடப்படுவதாக பெரும்பாலான வரலாற்று பதிவுகள் மற்றும் புராணங்கள் கூறுகின்றன.

    தமிழகத்தில் பழங்காலம் முதலே முருகன், சிவன் கோவில்களில் இந்த விழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவார பதிகங்களில் குறிப்புகள் உள்ளன. திருஞானசம்பந்தர் தனது பாடலில் தைப்பூசம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோவில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன.

    தைப்பூச தினமான இன்று அதிகாலையில் பக்தர்கள் எழுந்து குளித்துவிட்டு முருகப்பெருமானை வேண்டி வழிபடுவார்கள். முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் காவடி எடுத்துச் சென்றும், பால்குடம் சுமந்து சென்றும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

     அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் தைப்பூச விழா இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள்.

    அவர்கள் பலநாட்கள் விரதமிருந்து மயில் காவடி, மச்சக்காவடி, தீர்த்தக்காவடி, பால் காவடி, பறவைக்காவடி என பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வருகிறார்கள். பலர் அலகு குத்தி வருகிறார்கள். காவடி எடுப்பவர்கள் வழிநெடுக பாடி வரும் பாடல்கள் காவடிச்சிந்து என்று அழைக்கப்படுகிறது.

    கடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக வருகிறார்கள்.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் ஒளியானார். இதையொட்டி கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள ஞானசபையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், திருக்கல்யாணமும் மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது.

    தமிழகம் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் தமிழர்கள் தைப்பூச விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

     மலேசியாவில் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவில், இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் முக்கியமானது ஆகும். சுண்ணாம்பு பாறைகளாலான புகழ்பெற்ற இந்த மலைக்கோவிலுக்கு செல்ல 272 படிகள் உள்ளன. இந்த மலையையொட்டி சுங்கை பத்து என்ற ஆறு ஓடுகிறது.

    இங்கு நடைபெறும் தைப்பூச விழா உலகப்புகழ் பெற்றது. தைப்பூசத்தின் போது மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் இருந்து அதிகாலை முதல் பக்தர்கள் பத்துமலைக்கு ஊர்வலமாக நடந்து வருவார்கள். ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நோத்திக்கடன் செலுத்துவார்கள்.

     மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் அருகே உள்ள தண்ணீர் மலை கோவிலிலும் தைப்பூச விழா ஆண்டு தோறும் 3 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

    இதேபோல் குனோங் சீரோ என்ற இடத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலிலும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் நடைபெறும் தைப்பூச விழாவில் ஏராளமான சீனர்களும் கலந்து கொள்கிறார்கள்.

     இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் ஊரில் உள்ள முருகன் கோவில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

    சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தைப்பூச விழாவை மிகவும் எழுச்சியுடன் கொண்டாடுகிறார்கள். இங்குள்ள முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் எழுந்தருளி லயன் சித்தி விநாயகர் கோவில் வரை பவனி சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். பக்தர்கள் தேரை இழுத்துச்செல்வார்கள். அப்போது பலர் காவடி எடுத்தும், அலகு குத்தியபடியும் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். சீனர்கள் கூட முருகப்பெருமானை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

     மொரீஷியசில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.

    தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் உள்ள ஸ்ரீ சிவா சுப்பிரமணியர் கோவிலில் தமிழர்கள் காவடி எடுத்து தைப்பூச விழாவை கொண்டாடுகிறார்கள். கேப்டவுன் நகரிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

    இதேபோல் பிஜி தீவில் வசிக்கும் தமிழர்கள் நாடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழாவை கொண்டாடுகிறார்கள்.

     ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகமும், தேரோட்டமும் நடைபெறும். பக்தர்கள் பால் குடம் எடுப்பார்கள். அன்னதானமும் வழங்கப்படும்.

    • தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாள்.
    • ஏதாவது சிவன் கோவிலில் பிராகார வலம் வருவது கிரிவலத்துக்குச் சமம்.

    இன்று தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாள். கிரிவலம் வருவதற்கு மட்டுமல்ல, ஏதாவது ஒரு சிவன் கோவிலிலாவது பிராகார வலம் வருவது கிரிவலத்துக்குச் சமம். அது தவிர, பூச நட்சத்திரமும் குரு வாரமும் இணைந்து வருவதால் எல்லா முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய" வள்ளலார். "அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி" என்று பாடிய வள்ளலார்.

    இந்தியாவில் ஆயிரக்கணக்கான வள்ளலார் மன்றங்கள் இயங்குகின்றன. சிறு வள்ளலார் கோவில்கள் இயங்குகின்றன. அத்தனைக் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு அன்னதானம் நடத்தப்படும்.

    வள்ளலாரின் மிகப்பெரிய தத்துவம்

    1.ஜீவகாண்ய ஒழுக்கம்.

    2.தனி மனித ஒழுக்கம்

    3.உயிர்கள் இடத்தில் அன்பு.

    4.செய்யவேண்டிய தொண்டில் மிகச்சிறந்த தொண்டு மனித குலத்தின் பசியைப் போக்குதல்.

    புத்தரைப் போலவே ஒருவனுக்கு பசி இருக்கும் வரை அவனிடத்திலே எந்த ஆன்மிக எண்ணமும் எழுவதற்கு வழி இல்லை என்று கண்டவர் வள்ளலார். எல்லா பிணிகளுக்கும் மூல காரணம் பசிப்பிணி தான் என்பதை எடுத்துச் சொன்ன வள்ளலார் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஜனவரி மாதம் தைப்பூசத் திருநாளில் தான் சத்திய ஞான சபையைத் தொடங்கினார். ஏழு திரைகளை விளக்கி ஜோதி தரிசனத்தை காட்டும் உன்னத விழாவான தைப்பூச திருவிழா வடலூரில் பெருவிழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

    • தேர் 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
    • தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விராலிமலை:

    விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

    விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதியன்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. தேரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேர் 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், முன்னாள் ஆவின் சேர்மன் பழனியாண்டி, அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, முன்னாள் யூனியன் சேர்மன் மணி, தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 25-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 26-ந் தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மண்டக படிதாரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ×