என் மலர்tooltip icon

    வழிபாடு

    • நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும்.
    • நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

    "பிறவி தோஷங்களை போக்கும் தினம் பிரதோஷ தினம்" என்று சொல்வார்கள். மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் பிரதோஷம் வந்தாலும், வளர்பிறை காலத்தில் அதுவும் ஞாயிற்று கிழமைகளில் பிரதோஷம் வருவது விசேஷமானது. இப்படியான மிகச் சிறப்பான நாளைய தினத்தில் "சூரிய பகவான்" மற்றும் "சிவபெருமானை" போற்றி வழிபட வேண்டிய மந்திரம் இது.

    சூரிய பகவான் மந்திரம்: ஆம் ஹுராம் ஹிரீம் ஹுராம் சஹ் சூரியாய் நமஹ

    சிவ பெருமான் மந்திரம்: ஓம் நமோ பகவதே ருத்ராய

    பிரதோஷ நேரமான மாலை வேலையில் கோவிலுக்கு சென்று முதலில் சூரிய பகவானை தரிசித்து, அவருக்கு நெய் தீபமேற்றி மந்திரத்தை 10 முறை உச்சரித்து வணங்க வேண்டும். இதனால் சூரிய தோஷம் நீங்கும்.


    பிரதோஷ நேர பூஜையின் போது சிவபெருமானை வேண்டி மந்திரத்தை 9 முறை கூறி வணங்க வேண்டும். இம்மந்திரங்களை நாளை கூறி வழிபடுவதன் மூலம் நம் ஒவ்வொருவரின் உடல், மனம், ஆன்மா தூய்மை பெற்று ஆன்மிகச் சிந்தனை நமக்குள் நிறையும். அதோடு நமது கர்ம வினைகள் நீங்கி நன்மைகள் பெருகும். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி.

    பொதுவாக பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமையன்று ராகு காலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே நாளை ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள்.

    நாளை மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

    முடிந்தால் வில்வமும், செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம், பெருகும்; நிலைக்கும் என்பது ஐதீகம்.

    • பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 8-ம் நாளான நேற்று மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள அம்மன் சன்னதி முன்பு உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராயர் கீரிடம் சாற்றி, ரத்தின செங்கோலுடன் மீனாட்சி காட்சி அளித்தார்.

    கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று பிரகாரம் சுற்றி வந்தார். அதனை தொடர்ந்து பட்டத்தரசியாக அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மாசி வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) எழுந்தருளினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    9-வது நாளான இன்று காலை மரவர்ண சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். திக்கு விஜயபுராண வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் இன்று இரவு திக்குவிஜயம் நடக்கிறது. அரசியான மீனாட்சி இந்திர விமானத்தில் 4 மாசி வீதிகளில் எழுந்தருளி அஷ்ட திக்கு பாலகர்களை போரில் வெற்றி கொள்ளும் நிகழ்வு நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இதற்காக கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ரூ.30 லட்சம் செலவில் பல டன் மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    நாளை அதிகாலை திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருளுகிறார்கள். அதிகாலை 4 மணிக்கு கோவில் மண்டகப்படிகளில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் சுவாமி-அம்மன் உலா வருகின்றனர். பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடும் நிகழ்வு நடக்கிறது.

    அதனை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முதலில் மணமேடையில் முருகப் பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளுகின்றனர். அதன்பின் மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வருகை தருவார்கள். தொடர்ந்து காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கிறது.

    கோவிலில் நேரடியாக திருக்கல்யாணத்தை காண 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி சீட்டு பெற்றவர்கள் 4 கோபுர நுழைவுவாயில் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்திரை வீதிகள் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரை மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. மறுநாள் (21-ந் தேதி) காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

    • அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவிலில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டு மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.

    பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கலெக்டர் தீபக்ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஆணையர் மகேஸ்வரி, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பின்னர், தேருக்கு முன்பாக, விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி சென்றது.

    இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது.

     

    தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர். மேலும் சிவவாத்தியங்களும் இசைக்கப்பட்டன. கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் தேருக்கு முன்னாள் நடத்தப்பட்டன.

    நான்கு ராஜ வீதிகள் வழியாக தேர் அசைந்தாடியபடி சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்து அடையும்.

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த தேர் திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வடக்கு நாதர் கோவில் மேற்கு நடை பகுதியில் 300 கலைஞர்கள் நின்று மேள வாத்தியங்களை இசைத்தனர்.
    • அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, இரவில் நடந்த வாணவேடிக்கையால் திருச்சூரே விழா கோலம் பூண்டது.

    திருச்சூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் நகரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இது புகழ்பெற்றது. திருவம்பாடி கோவில், பாரம்மேகாவு கோவில் சார்பில், தேக்கின்காடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது.

    மேலும் பட்டம் அணிவிக்கப்பட்ட யானைகள் மீது சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாண வேடிக்கை நடந்தது. இதில் 2 கோவில் தரப்பில் போட்டி போட்டு பட்டாசுகளை வெடித்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூரம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு யானைகளுக்கு பட்டம் அணிவிக்கப்பட்டு, குடை மாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் எதிர் எதிரே தலா 16 யானைகள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு யானை மீது சுவாமி வீதி உலா வந்தார். வடக்கு நாதர் கோவில் மேற்கு நடை பகுதியில் 300 கலைஞர்கள் நின்று மேள வாத்தியங்களை இசைத்தனர். செண்டை மேள கச்சேரி நடந்தது.

    சுவாமி எழுந்தருளிப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் குடை மாற்றும் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, இரவில் நடந்த வாணவேடிக்கையால் திருச்சூரே விழா கோலம் பூண்டது. விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    • ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் ரதோற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-7 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: பூரம் பிற்பகல் 3.50 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். தூத்துக்குடி ஸ்ரீ நடராஜர் பச்சை சாத்தி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் ரதோற்சவம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திக் விஜயம் செய்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-தனம்

    கடகம்-துணிவு

    சிம்மம்-நன்மை

    கன்னி-உறுதி

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-சுபம்

    தனுசு- வெற்றி

    மகரம்-போட்டி

    கும்பம்-பெருமை

    மீனம்-ஆக்கம்

    • சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வருகிற 23-ந்தேதி முதல் மே மாதம் 2-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

    10 நாட்கள் இவ்விழாவை நடத்த கோவில் அறங்காவலர் குழு ஏற்பாடு செய்து உள்ளது. 22-ந்தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை துலா லக்னம் அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 23-ந்தேதி காலை 8 மணி முதல் 8.45 மணிக்குள் சுவாமிக்கு ரிஷப லக்னத்தில் துவஜா ரோகனம் நடக்கிறது.

    அதிகாலை 5.30 மணிக்கு தர்மாதி பீடம் இரவு 7.45 மணிக்கு புன்னைமர வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி காலை 6.15 மணிக்கு சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம் இரவு 7.45 மணிக்கு சிம்ம வாகன ஊர்வலம் நடக்கிறது.

    25-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சாமி கருட சேவை-கோபுர வாசல் தரிசனமும் பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவையும் இரவு 7.45 மணிக்கு அம்ச வாகன ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 6.15 மணிக்கு சூரிய பிரவை வாகனம், இரவு 8 மணிக்கு சந்திர பிரவை வாகனம்.

    27-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு ஊர்வலம், இரவு 8.15 மணிக்கு அனுமந்த வாகனம் 28-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம், காலை 6.15 மணிக்கு ஆனந்த விமானம் இரவு 8 மணிக்கு யானை வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்கு கும்ப லக்னத்தில் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் இரவு 9 மணிக்கு தோட்டத்திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    30-ந் தேதி காலை 6.15 மணிக்கு பல்லக்கு வெண்ணெய் தாழி, கண்ணன் திருக்கோலம், இரவு 8.15 மணிக்கு குதிரை வாகன ஊர்வலம் நடக்கிறது.

    மே 1-ந் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரி, இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு 10-ம் நாள் மே 2-ம் தேதி சப்தவர்ணம்- சிறிய திருத்தேர் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    3-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இது தவிர தினமும் மாலை 5.30 மணிக்கு பக்தி உலாத்தல் நடக்கிறது. மே 1-ந்தேதி சாமி புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளின் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்தசாரதி கோவிலின் துணை ஆணையர் நித்யா செய்து வருகிறார்.

    • காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
    • பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து சூரிய சந்திர மண்டல காட்சிகள், பூதவாகனம், அன்னவாகனம், அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், புஷ்ப விமானம் கைலாச வாகன காட்சிகள் நடந்தன.

    நேற்று இரவு 10 மணியளவில் பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது.

    அப்போது வானவேடிக்கை, அதிர் வேட்டுகள் முழங்க சிவகண பூத வாத்திய இசைக்கப்பட்டது. கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கடைவீதி, மேற்குரத வீதி, வடக்கு வீதி கிழக்கு ரத வீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமி திரு வீதி உலா வரும் வீதிகளில் வழி நெடுகிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் காட்சிகள் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் வைபவம் நடக்கிறது.

    21-ந் தேதி காலை 9 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு சிறிது தொலைவு சென்றவுடன் நிறுத்தப்படுகிறது.

    22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. 24-ந் தேதி அன்று மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும், 25-ந் தேதிதெப்ப தேர் நிகழ்ச்சி நடக்கிறது.

    26-ந் தேதி மகா தரிசனம், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைப்பிடி அளவு சாதம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் ஏராளம்.
    • சாப்பாட்டை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது.

    இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

    நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி வாங்க வேண்டும் என்றாலும், பணம் கட்டாயம் தேவைதான். இருப்பினும் பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு நம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களையும் முக்கியத்துவம் கொடுத்து மதிக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக, தேவைக்கு அதிகமாக உணவு பண்டங்களை வாங்கி வைத்து வீணாக்க கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    இன்றைய சூழ்நிலையில் ஒரு வேளைக்கு, ஒரு கைப்பிடி அளவு சாதம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் ஏராளம்.

    ஆனால் அந்த சாதத்தை, அந்த அரிசி நம்மிடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தேவைக்கு அதிகமாக சமைத்து அதை கீழே கொட்டுவது என்பது மிகப்பெரிய தவறு. நீங்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, உங்களிடம் பணம் காசு நிறைய இருந்தாலும் சரி, சாப்பிடும் சாப்பாட்டை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.

    நாம் இன்றைக்கு செய்யக்கூடிய தவறு, ஒரு பருக்கை அரிசி என்பது, ஒருநாளைக்கு நம்முடைய வீட்டில் பஞ்சத்தை ஏற்படுத்த ஒரு காரணமாக அமைந்து விடக்கூடாது அல்லவா? சரி, நம்முடைய வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்கக்கூடாது என்றால், அரிசியை நாம் எப்படி நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த காலத்தில் உணவு சம்பந்தப்பட்ட நெல் அரிசி கம்பு கேழ்வரகு கோதுமை இப்படிப்பட்ட தானியங்களை எல்லாம் மண்ணால் செய்யப்பட்ட குதிர் என்று சொல்லப்படும் பெரிய அளவிலான ஒரு மண்பானையில் தான் வீட்டில் வைத்து பாதுகாத்து, சேமித்து வந்தனர். காசு பணம் குறைவாக இருந்தாலும் அப்போது நம்முடைய வாழ்க்கை நிறைவாக இருந்தது.

    இன்றைய கால சூழ்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், மாற்றங்களினால் நமக்கு கிடைக்கக்கூடிய பல நல்ல பலன்களில், சில கெடுதல்களும் சேர்ந்தே தான் இருக்கின்றது.

    அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் உங்களது சமையலுக்கு பயன்படுத்தி வரும் அரிசியை உங்கள் வீட்டு சமையல் அறையில் நீங்கள் சில்வர் பாத்திரத்தில் கொட்டி வைத்து இருந்தாலும் சரி, பிளாஸ்டிக் கவரில் கொட்டி வைத்து இருந்தாலும் சரி, அல்லது அரிசி மூட்டையாக வைத்து இருந்தாலும் சரி, அதன் உள்ளே எப்போதுமே ஒரு சிறிய மண்பானையை வைத்து, அந்த மண் பானை நிரம்ப அரிசியை வைக்க வேண்டும்.

    மண் டம்ளர் இருந்தால் கூட போதும். இப்போதெல்லாம் மண் டம்ளர்கள் கிடைக்கின்றது. அதை வாங்கி அரிசியை அளக்க ஆழாக்காக பயன்படுத்தினாலும், அது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

    உங்கள் வீட்டு அரிசி டப்பாவில், அரிசி மூட்டையில் அரிசி தீர்ந்து போனாலும் எப்போதும் இந்த சிறிய மண் குடுவையில் அரிசி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் நிச்சயம் பல நல்ல மாற்றங்களை உங்களுக்கு இந்த ஒரு சிறிய பரிகாரம் தேடித் தரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

    ஒரு மண் பானையை வைத்து விட்டால் நம்முடைய வாழ்க்கையில், கஷ்ட நஷ்டங்கள் மாறிவிடுமோ என்ற கேள்விகளை எழுப்பும் சிலரும் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்.

    கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்து வைத்திருந்தும், தன்னுடைய வீட்டில் மூட்டை மூட்டையாக அரிசியை அடுக்கி வைத்து இருந்தும் ஒரு வாய் சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிட முடியாதவர்களும் இந்த பூலோகத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பிடி அளவு அரிசியை காசுகொடுத்து வாங்க முடியாமல் பசியால் வாடுபவர்களும் இந்த உலகத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

    அரிசியை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு ஆண்டவன் உங்களுக்கு சக்தியை கொடுத்து இருக்கின்றாரா? மண்பானையில் வைத்திருக்கும் அந்த அரிசியோடு சேர்த்து, உங்களால் முடிந்த அரிசியை வாங்க இயலாதவர்களுக்கு, இயன்ற போது தானம் கொடுத்து வரும் பட்சத்தில், உங்களுக்கும் உங்களுக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும், அரிசி வாங்க கூட காசு இல்லை என்ற கஷ்டம் வராது.

    • வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
    • செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

    குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

    வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள். லட்சுமி, வழிபாட்டின்போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

    மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

    லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

    மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

    வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

    தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

    • கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வெமுலாவில் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம நவமி விழா விமரிசையாக நடந்தது.

    ராம நவமி விழாவில் மும்பை, ஐதராபாத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் குவிந்தனர்.

    பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கின் ஒரு பகுதியாக சாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.

    அப்போது திருநங்கைகள் தங்களை மணப்பெண்களை போல உடை அணிந்து அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் சிவபெருமானை மணப்பதாக கூறி தாலிகட்டிக் கொண்டனர்.

    கோவில் வளாகத்தில் குவிந்திருந்த திருநங்கைகள் ஒருவருக்கு ஒருவர் தாலி கட்டிக் கொண்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித அரிசிகளை அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

    • முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு.
    • மும்மலங்களை அடக்கி அருள்பவன் முருகன்.

    முருகனின் வாகனம் என்றாலே, மயில் தான் அனைவர் எண்ணத்திலும் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு. அவை மயில், யானை, ஆட்டுக்கிடா ஆகும்.

     * தேவர்களுக்கு அருள் செய்த தலைவனாக இருப்பதாலும், ராஜகம்பீரம் கொண்டவர் என்பதாலும் அவருக்கு யானை வாகனம் பொருத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

    * ஒருசமயம் நாரதர் வேள்வி ஒன்றை செய்தார். அந்த வேள்வியில் மந்திரங்களை தவறாக உச்சரித்தார். அதன் விளைவாக யாகத்தில் ஒரு பெரிய ஆட்டுக்கிடா தோன்றியது. யாராலும் அடக்க முடியாத வலிமையுடன் அது விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் அச்சுறுத்தியது. அச்சம் கொண்ட தேவர்கள் முருகனிடம் சென்று முறையிட்டனர். முருகப்பெருமான் வீரவாகு தேவரை அனுப்பி அந்த ஆட்டுக்கிடாவைப் பிடித்து அடக்கச் செய்து தனது வாகனமாக ஆக்கிக்கொண்டார்.

     * சூரபதுமனுடன் முருகப்பெருமான் போர் செய்தார். ஒவ்வொரு முறையும் ஒரு வடிவம் கொண்டு போரிட்டான் சூரபதுமன். ஆனாலும் அவன் தோல்வியையே தழுவினான். ஒரு முறை சக்கரவாகப் பறவையாக மாறி போரிட்டான். அப்போது இந்திரன் மயிலாக மாறி முருகனை தாங்கினான். பின்னர் சூரன் மாமரமாகி கடல் நடுவே மறைந்து நின்றான். அந்த மரத்தை வேல் கொண்டு இரண்டு கூறாக முருகன் பிளந்தார். அதில் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் மாறியது.

    மயில் `ஆணவம்' என்றும், யானை `கன்மம்' என்றும், ஆடு `மாயை' என்றும், மும்மலங்களை அடக்கி அருள்பவன் முருகன் என்பதே இதன் சான்று.

    • சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில்.
    • மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில்.

    கோவில் தோற்றம்

    இந்த ஆலயத்தின் கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதன் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இந்த கருடாழ்வார் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடை மீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வக் கோலம் ஆகும்.

     நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலை என மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில், அமர்ந்த நிலையில் வணங்கி நிற்கும் கருடாழ்வார் அருளும் தலம், விஜயநகர மன்னர் காலத்துக் கோவில், செஞ்சி நாயக்கர்கள் திருப்பணி செய்த ஆலயம், சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோவிலாகும்.

     புராண வரலாறு

    கலியுகத்தின் தொடர்ச்சியில் சடமர்ஷனர் என்ற மகரிஷி, வடநாட்டில் தவமிருந்து வந்தார். ஆனால், அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும், அதர்மமும் தலைதூக்கியதால் அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதிக்கு வந்தார்.

    அப்போது இப்பகுதி பஞ்சகிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப்பகுதியாக இருந்தது. வனத்திற்குள் சடமர்ஷனர் அலைந்து திரிந்தபோது, வெப்பம் தாளாமல் தவித்தார். அப்போது அங்கே தென்கரை ஓரமாக ஓடிய நீரூற்று தென்பட்டது. அதில் தன் கால்களை நனைத்து வெப்பத்தை தணித்தார்.

    பின்னர் அந்த நீரூற்று ஓடிய பாதையில் பயணம் செய்தார். அந்த நீரூற்று பாதை, வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார்.

    அந்த மகரிஷியின் தவத்தால் மகிழ்ந்த திருமால், தாயாரோடு அவருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த மகரிஷி, "இறைவா.. தாங்கள் இந்த உலகத்தைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் காட்டி அருள வேண்டும்" என்று கேட்டார். அதன்படியே அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார்.

    பின்னர் மகரிஷி, "இந்த இடத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து அடியவர்களுக்கு அருளாசி வழங்க வேண்டும்" என்றும் கேட்டார். அதன்படியே நின்ற கோலத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபாலராகவும், கிடந்த கோலத்தில் ஆதிசேஷனின் பாம்பணையில் பள்ளிகொண்ட ராமராகவும் காட்சி அருளினார்.

    தொன்மைச் சிறப்பு

    தமிழகக் கோவில்களின் வரலாற்றை அறிய உதவும் மெக்கன்சி வரலாற்றுக் குறிப்புகளும், கி.பி. 1464-ல் எழுதப்பட்ட செப்புப் பட்டயமும், புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பேடும் இத்தலத்தின் தொன்மையையும், வரலாற்றினையும் அறிய உதவுகிறது.

    செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் காலத்தில் (கி.பி. 1464-1478), இத்திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு, செழிப்புடன் விளங்கியது. தெலுங்கு மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்டம்மாள் என்ற பெண்மணியின் நினைவாக இவ்வூர் `வெங்கட்டம்மாள்பேட்டை' என அழைக்கப்பட்டது. இதுவே மருவி, தற்போது 'வெங்கடாம்பேட்டை' என அழைக்கப்படுகிறது.

    கி.பி.1464-ல் இருந்து சுமார் 12 ஆண்டுகள் செஞ்சி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் சிறப்புப் பெற்றிருந்ததை, செப்புப் பட்டயத்தின் வாயிலாக அறிய முடிகிறது. புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சுக் காரர்களின் ஆட்சியில் துபாஷி எனும் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ஆனந்தரங்கம் பிள்ளைக்கு இவ்வூர் மானியமாக வழங்கப்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது.

    மேலும், புதுச்சேரியின் வரலாற்று ஆவணமாகத் திகழும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் இவ்வூர் வெங்கட்டம்மாள் பேட்டை என்றே குறிப்பிடப்படுகிறது.

    ஆலய அமைப்பு

    ஊரின் கிழக்கே பெரிய மதில்சுவர்களைக் கொண்டு சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் சிதிலம் அடைந்த ஏழுநிலை ராஜ கோபுரத்துடன் திருக்கோவில் அமைந்துள்ளது. வாசலின் முன்பாக கருட மண்டபம் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கி.பி.1884-ம் ஆண்டின் கல்வெட்டு விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது.

    மகாமண்டபத்திற்குள் தெற்கு நோக்கி, வைகுந்த வாசன் அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவருக்கு ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து நிற்கிறார். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சி கொடுத்த வேணுகோபாலரை தரிசிக்கலாம்.

    கருவறைக்குள் சுமார் ஆறடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி, மற்ற இரு கரங்களில் புல்லாங்குழல் பிடித்து ஊதும் பாவனையில் வலது காலை சற்றே மடித்து, பெருவிரலால் தரையில் ஊன்றியுள்ளார். நின்ற நிலையிலான இந்த எழிலான கோலத்தைக் காண கண்கோடி வேண்டும். வேணுகோபால சுவாமியின் இருபுறமும் ருக்மணி மற்றும் சத்யபாமா காட்சி தருகின்றனர்.

    மூலவரைத் தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார், தனிச் சன்னிதியில் உள்ளார். பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

    வடக்கே ஆண்டாள் சன்னிதி உள்ளது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் ராமபிரான் அருளும் சயனக்கோலம் நம்மை பரவசப்படுத்துகிறது. இவரது மார்பில் திருமகளும், திருவடியில் சீதாதேவியும், வீர ஆஞ்சநேயரும் உள்ளனர்.

    இந்த ஆலயத்தில் ஆவணி மாதம் 25-ந் தேதியில் இருந்து 6 நாட் களுக்கு காலை 6 மணிக்கு சூரியன் தன் கதிர்களால் மூலவரை வணங்குகிறார். அதேபோல புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும், தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களை செங்கமலவல்லி தாயார் மீது பாய்ச்சுகிறார்.

    ஊஞ்சல் மண்டபத்தில் அருகே அழகிய திருக்குளம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்தக் குளத்தின் கிழக்குக் கரையில் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளது. கோவிலின் எதிரே சுமார் ஐம்பதடி உயர பதினாறு கற்தூண்கள் கொண்ட ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தில் குதிரை வீரர்களின் உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.

    ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் திருமால் தன் சக்கரத்தை ஏவி உருவாக்கிய சக்கரத் தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்திருப்பதாக தல வரலாறு கூறுகிறது.

    இவ்வாலயத்தில் தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை, கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள் ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் வெங்கடாம்பேட்டை உள்ளது. சென்னைக்குத் தெற்கே 215 கிலோமீட்டர் தொலைவிலும், வடலூருக்கு வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும், கடலூருக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.

    ×