என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தலத்தில் நவக்கிரகங்கள் மேல் எம்பெருமான் பார்வைப்படுவதால் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நிவர்த்தியாவது சிறப்பம்சமாகும். இனி, இத்தலத்தின் வரலாற்றை பார்ப்போம்.
    நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் பிரசித்திபெற்ற சவுரிராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வைணவ திருத்தலங்கள் திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது. அவை 108 வைணவ திருப்பதிகள் ஆகும். சோழ நாட்டில் 40 திவ்ய தேசங்கள் உள்ளன. 100-க்கும் மேல் இருநூறுக்குள் பாசுரங்கள் பெற்றவை ஆகும். இவற்றுள் 129 பாடல்களால் போற்றப்படும் பெருமை திருக்கண்ண புரத்துக்கே உண்டு. ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக போற்றப்படும் இந்த திவ்யதேசம் மங்களாசாசனம் செய்த ஆறு திவ்ய தேசங்களில் ஒன்று.

    இந்த வைணவ தலத்தில் நவக்கிரகங்கள் மேல் எம்பெருமான் பார்வைப்படுவதால் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நிவர்த்தியாவது சிறப்பம்சமாகும்.
    இனி, இத்தலத்தின் வரலாற்றை பார்ப்போம்.

    முனியதரையன் என்பவர் சோழ மன்னனது அபிமானம் பெற்று இருபது நாடுகளுக்கு தலைவராக மன்னனுக்கு கப்பம் வாங்கி கொடுக்கும் பணியில் இருந்தார். அவர் சவுரிராஜப்பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். திருக்கண்ணபுரத்திலேயே வாழ்ந்து பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து வந்தார். அவருக்கு விரகாதிபோகம் என்ற காதற்கணிகை ஒருத்தி அவரிடம் பேரன்பு கொண்டு வாழ்ந்து வந்தாள். ஒரு வருடம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.

    முனையதரையர் தாம் சேகரித்த கப்பம் முழுவதும் கோவிலில் திருவாராதனத் துக்கும் அடியார்க்கும் அன்னம் வழங்குவதிலும் செலவிட்டார். இதுகேட்ட சோழ மன்னன் , தனக்குரிய பொருளை அவர் தமது கணிகைக்கு கொடுத்து விட்டார் என்று சிறையில் அடைத்தார். அந்த கணிகை, சவுரிராஜப் பெருமாளை வணங்கி 5 நாட்களுக்குள் தன் அன்பன் சிறையில் இருந்து மீளாவிடில் தீயில் பாய்ந்து உயிர்விடுவதாக சபதம் செய்தாள்.

    ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் மன்னன் கனவில் தோன்றி, முனையதரையரை விடுவிக்குமாறு கூறினார். சிறையில் இருந்து விடுதலை பெற்ற முனையதரையர் திருக்கண்ண புரத்துக்கு சென்றார். தமது கணிகை தீயில் புகுந்தருவாயில் அவளை அணைத்து வாழ்த்தினார். அன்றிரவு அவள் சமைத்த பொங்கல் அவருக்கு அ-மு-தமாயிருந்தது. இத்தகைய அடிசில் பெருமானுக்கு உரியது என்று பேரார்வத்துடன் மானசீகமாக அதை நிவேதனம் செய்து பின்பு உண்டார்.

    மறுநாள் காலையில் பெருமாள் திருமேனியில் பொங்கலுடன் நெய் வடிந்தொழுவதை கண்டு அர்ச்சகர்கள் திடுக்கிட்டனர். பின்பு நடந்த பெருமாளின் பொருளை போற்றினர். அன்று முதல் பெருமாள் நாள்தோறும் அர்த்தசாமத்தில் (இரவு 9 மணி) பொங்கல் வைத்து செய்ய கட்டளையை முனையதரையர் நிறுவினார்.

    சவுரிராஜன் சவுரிமுடி

    உற்சவமூர்த்தி எப்போதும் தலையில் சவுரி அணிந்திருக்கிறார். ஒருநாள் பெருமாளை சேவிக்க வந்த சோழ மன்னனுக்கு பிரசாதமாக கொடுக்க பூமாலை இல்லாமல் தவித்த அர்ச்சகர் தாம் சற்று முன்பு தேவதாசிக்கு அனுப்பியிருந்த புஷ்பத்தை கொண்டு வரச்செய்து அதனை மன்னனுக்கு அளித்தார். அதில் கருப்பான முடி இருக்க கண்ட மன்னன் அர்ச்சகரை கடிந்தான். அர்ச்சகரும் பெருமானுக்கு எப்போதும் கழற்கற்றை உண்டு. அதில் அணிவித்த மாலை இது என்றார். இதனால் கோபம் கொண்ட மன்னன் மறுநாள் காலை வரும்போது முடி இருப்பதை காட்ட வேண்டும் என்று கூறி சென்று விடுகிறார். அர்ச்சகரை சோழமன்னனது கடுந்தண்டனையில் இருந்து விடுவிக்க பெருமாள் கருத்த மயிர்கற்றையுடன் காட்சியளித்தார்.

    திருநெற்றியில் தழும்பு

    உற்சவமூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்துக்கு மேல் சிறு தழும்பு இன்றும் காணலாம். முன்காலத்தில் அன்னியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர் மனம்புழுங்கி பெருமானே.. பொருவரை முன்போர் கையிலிருந்த பொன்னாழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ என்று கையில் இருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானின் நெற்றியில் பட்டது. அந்த தழும்பு இன்றும் காணலாம்.

    நம்மாழ்வாரின் வாக்குப்படி திருக்கண்ண புரம் திருத்தலம் பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு தனியே வாசல் கிடையாது.

    ஆஞ்சநேயர் சன்னதி

    இக்கோவிலுக்கு எதிரில் உள்ள நித்யபுஷ்கரணியின் பிரதான படிக்கட்டின் மேல்புறம் தீர்த்தக்கரை ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பதால் இவரின் சக்தி அளவிட முடியாது. தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இவர் வரப்பிரசாதி என்று பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

    உற்சவங்கள்

    பிரம்மோற்சவம்: இது வைகாசி மாதம் பவுர்ணமி திதியில் முடிவுறும். துவஜாரோகணம் முதல் விடையாற்றி முடிய 12 நாட்கள் வாகனாதிகளுடன் விமரிசையாக நடைபெறும். இந்த உற்சவம் தல புராணத்தில் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் வஸ¨வின் பெண்ணான பத்மினி நாயகியை பெருமாள் மணம்புரிநந்து கொண்டதாக காண்பதால் அந்த கல்யாண உற்சவமே தற்போது பிரம்மோற்சவமாக நடந்து வருகிறது.

    மகோத்சவம்:- இது மாசி மாதம் பவுணர்மி திதி 9-ம் நாள் சமுத்திரத்தில் தீர்த்த வாரியுடன் நடை பெறுகிறது. துவஜா ரோகணம் இந்த உற்சவத் திலும் உண்டு. வாகனாதிகளுடன் விமரி சையாக நடைபெறும்.

    மார்கழி அத்யன உற்சவம்:- இது பெருமாள் அத்யன உற்சவம் முடிந்து பின் 9 நாட்கள் நடைபெறும். இதில் ஏகாதசி தொடங்கி கண்ணப்புரத்தாயார் பிரகார புறப்பாடு கடைசி நாளாகிய அமாவாசை அன்று பெருமாள் நாச்சியார் திருக்கோலத்திலும் பிரகாரம் புறப்பாடு, மறுநாள் பெருமாள் சன்னதியில் இருவருக்குமான சேர்ந்த உற்சவம் நடைபெறும்.

    மாத உற்சவங்கள்: மாதந்தோறும் தமிழ் மாதப்பிறப்பு, ஏகாதசி, அமாவாசை, ஹஸதம் இவற்றில் பஞ்சவர்வ புறப்பாடு பிரகாரத்தில் நிகழும். இந்த ஐந்து நாட்களிலே தான் பெரிய பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யக்கூடும். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் கண்ணபுரத்தாயார் புறப்பாடு உண்டு. திவ்ய தேசங்களில் ஓன்றாக கருதப்படும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலுக்கு எப்போதும் பக்தர்கள் வருகை இருக்கும். குறிப்பாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகை மார்த்தத்தில் உள்ளது. நன்னிலத்தில் இருந்து திருப்புதலூர் என்ற ஊரில் இருந்து தெற்கே 1 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    புரட்டாசி மாத வழிபாடு

    மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தை போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்கி வருகிறது.

    பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமான மாதமாகும். சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம் தான். இதில் புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஒரு விசேஷம் உள்ளது. இந்த நாளில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக சனியினால் கெடுபலன்கள் குறைய பெருமாளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருக்கண்ணப்புரத்து சவுரிராஜப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று முழுவதும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். அதுமட்டுமின்றி ஞாயிறு அன்றும் பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். 
    திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 கோவில்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 47-வதாக திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 கோவில்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 47-வதாக திகழ்கிறது. இந்த கோவில் சங்க காலத்துக்கு முன்பே தோன்றிய பழம் பெருமையுடையது. வைணவ சான்றோர் களான ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் இதுவாகும். முற்கால பாண்டியர்கள் குல பரம்பரையாக வழிபட்டும் திருப்பணிகள் செய்தும் வந்த தொன்மையை கொண்டது. பெரியாழ் வாரால் திருமால் ஒருவரே பரம்பொருள் என நிர்ணயம் செய்த தலமாகவும், திருப் பல்லாண்டு விளைந்த திருத்தலமாகவும் விளங்குகிறது.

    கோவிலில் உள்ள அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 2-வது நிலையில் சூரிய நாராய ணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டபாலகர்களும் ஓவிய வடிவில் அருள் பாலிக்கின்றனர். இதனால் இந்த சன்னதியை ‘ஓவிய மண்டபம்‘ என்று அழைக்கிறார்கள்.

    3-வது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார் களுடன் அருளுகி றார். இவ்வாறு பெருமாள் இந்த தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன என 3 கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவநாதர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத் தில் தரிசிக்கலாம்.

    மலைக்கோவில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவது போல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள். இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என அழைக்கப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த பகுதியை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும்போது இவரை வேண்டி வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனால் கூடலழகருக்கு இந்த பெயர் ஏற்பட்டது எனவும் கூறுகிறார்கள்.

    பஞ்சபூத தத்துவம்

    இந்த கோவில் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் 5 கலசத்துடன் கூடிய 5 நிலை ராஜகோபுரம், 8 எழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் 8 பிரகாரங்களுடன் அமைந்த கோவில் இதுவாகும். ஆண்டாள் சக்கரத் தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார் கள், மணவாள மாமுனிகள், விஸ்வஷேனர், ராமர், கிருஷ்ணன், லட்சுமி நாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோவிலின் சுற்றுச் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பெயர் காரணம்

    ஒருமுறை மதுரையில் தொடர்ந்து மழை பெய் யவே மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தங்களை மழையில் இருந்து காத்தருளும்படி பெருமாளை வேண்டினர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை மதுரையைச் சுற்றி 4 மாடங்களாக ஒன்று கூடி மழையில் இருந்து மக்களை காத்தது. இவ்வாறு 4 மேகங்கள் ஒன்று கூடியதால் இந்த கோவில் நான்மாடக்கூடல் என்றும் கூடல் மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது. சுவாமியும் கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.

    108 திவ்ய தேசங்களில் கூடல் அழகர் கோவிலிலும், திருக்கோஷ்டி யூரிலும் மட்டுமே அஷ்டாங்க விமானத்தில் சுவாமிகள் காட்சி தருகின்றனர். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டதாகும். இதில் உள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழாது என்பது சிறப்பம்சமாகும். 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் ‘ஓம்‘ நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

    தினமும் 6 கால பூஜை

    மதுரை கூடலழகர் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை. 10 மணிக்கு சுற்று கோவில் பூஜை. 12 மணிக்கு உச்சிகால பூஜை. மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை. இரவு 7 மணிக்கு சுற்று கோவில் பூஜை. இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை.

    முக்கிய திருவிழாக்கள்

    மதுரை கூடலழகர் கோவிலில் நடை பெறும் திருவிழாக்கள் விவரம் வருமாறு:-

    சித்திரை மாதம்: தமிழ் வருட சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பெருமாள் புறப்பாடு.
    வைகாசி மாதம்: 14 நாட்கள் தேர்த் திருவிழா நடைபெறும். 9-வது திருநாளன்று அனுஷ நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும்.
    ஆனி மாதம்: கருட சேவை, சயனத் திருவிழா, முப்பழ விழா மற்றும் எண்ணை காப்பு விழா நடைபெறும்.
    ஆடி மாதம்: ஆடிப்பூரத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
    ஆவணி மாதம்: திருப்பவித்திர திருவிழா மற்றும் உறியடித்திருவிழா கொண்டாடப்படும்.
    புரட்டாசி மாதம்: நவராத்திரி விழா 9 நாட்களும் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும் பவுர்ணமி அன்று தாயாருக்கு பாலாபிஷேகம், 5 கருட சேவை, 4 மாசி வீதி புறப்பாடு மற்றும் விஜயதசமி அன்று அம்பு போடுதல் விழாக்கள் பாரம் பரிய முறைப்படி நடை பெறும்.
    ஐப்பசி மாதம்: தீபாவளி அன்று மூலவ ருக்கு தைலக் காப்பு மற்றும் மணவாள மாமுனிகள் திருநட்சத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
    கார்த்திகை மாதம்: திருக்கார்த்திகை மற்றும் திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்தி ரத்தில் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
    மார்கழி மாதம்: திருப்பல்லாண்டு தொடக்கம், பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, ராப்பந்து வைபவங்கள் நடைபெறும்.
    தை மாதம்: கனுப்பானரி வேட்டை (அனுப்பானடிக்கு எழுந்தருளல்) மற்றும் தை மாதம் முதல் தேதியில் தாயார் பெருமாள் மாலை மாற்றுதல் போன்ற வைபவங்கள் நடைபெறும்.
    மாசி மாதம்: 12 நாட்கள் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    பங்குனி மாதம்: பங்குனி உத்திரத்தன்று மதுரவல்லித் தாயார் திருக்கல்யாணம். வசந்த உற்சவம் 5 நாட்கள் நடைபெறும். சுக்ல பட்ச துவாதசி அன்று கஜேந்திர மோட்சம், கோவர்த்தனகிரி புறப்பாடு நடைபெறும்.

    மண்டல தரிசனம் மாங்கல்ய பாக்கியம்

    மதுரை கூடலழகர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை கூடலழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவார்கள். கூடலழகர் கோவில் வேண்டுதல் ஸ்தலமாக திகழ்கிறது. கோவிலை 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    சென்னை மணலிப்புதுநகரில் அய்யா வைகுண்டர் கோவில் உள்ளன. இந்த கோவிலில் நாளை 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகலில் தேரோட்டமும், இரவு பட்டாபிஷேகத் திருஏடு வாசிப்பும், பல்லக்கு வாகன பவனியும், திருக்கொடி அமர்தலும் நடைபெற உள்ளது.
    உலகைப் படைத்த ஆதிமூலப் பரம்பொருள் உருவத்தாலும், செயல்களாலும் மாறுபாடு உடையதாக 84 லட்சம் வகையான உயிரினங்களைப் படைத்தார். எல்லா உயிர்களுக்கும் இப்படி இப்படித்தான் வாழ வேண்டும் என்ற இயல்பினைக் கொடுத்த ஆதிமூலப் பரம் பொருள், மனித இனத்திற்கு மட்டும் உலகத்தை செப்பனிடத்தக்க வல்லமை பொருந்திய பகுத்தறிவைக் கொடுத்தார். அதோடு தம்மையும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் அதிபதிகளாகிய சிவன், பிரம்மா, விஷ்ணு என்று மும்மூர்த்திகளாக்கிக் கொண்டார்.

    ஆனால் இந்த உலகமும், உயிரினங்களும் சில காலம் படைத்த நிலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதை உணர்ந்த மும்மூர்த்திகளும் “இப்போது நல்வினை மட்டுமே இருப்பதால்தான் உலகம் இயக்கமற்று இருக்கிறது. எனவே இந்த உலகத்தை இயங்கச் செய்ய வேண்டுமானால், தீவினையும் வேண்டும்” என்று முடிவுசெய்தனர்.

    சணப்பொழுதில் தீய சக்தியாக குறோணி என்ற அசுரன் தோன்றினான். அவன் பசி பொறுக்காமல் இந்த உலகத்தையே உணவாகக் கொள்ள முனைந்தான். அதைப் பார்த்த இறைவன், உலக இயக்கத்திற்கு பசியையே அடித்தளமாக அமைத்தான். இதன் காரணமாக அற்புதமான பகுத்தறிவைப் பெற்ற மனித இனம் வயிற்றுப்பசி, பணப் பசி, பதவிப் பசி, அதிகாரப் பசி, காமப் பசி போன்றவற்றின் மயக்கத்தால் பேராசை என்ற வலைக்குள் அகப்பட்டு, பகுத்தறிவைப் பயனுள்ளதாகப் பரிபாலனம் செய்யாதவர்களாயினர். அதனால் அசுர சக்திகள் மனிதர்களை ஆக்கிரமித்தது. தர்மம் தடம்புரண்டது. அதர்மம் ஆட்சி புரிந்தது. அந்த அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் இறைவன் அவதரித்திருக்கிறார். அப்படி இந்த கலியுகத்தில் அவதரித்தவரே அய்யா வைகுண்டர்.

    கலியுகத்திற்கு முன்புள்ள ஆறு யுகங்களிலும் அராஜகம் புரிந்த அரக்கர்களுக்கு உடல் இருந்தது. ஆனால் இந்த கலியுகத்து அரக்கனுக்கோ உடல் இல்லை. கலி என்பது ஒரு விதமான மாயை. அதை பொய், புரட்டு, வஞ்சகம், சூழ்ச்சி, போலித்தனம், நுண்மையான சூது, வாது என்று வேத நூல்கள் விளம்புகின்றன. இத்தகைய கலியானது, உலகில் உள்ள அனைத்து மக்களின் சிந்தை பீடத்திலும் சிம்மாசனம் அமைத்து அமர்ந்துவிட்டது. ஆகவே நேர்த்தியான அன்பு, அறம், அமைதி, பண்பு, பாசம், பக்தி, பொறுமை, செம்மை, உண்மை, தியாகம், இணக்கம், இரக்கம் போன்ற நற்பண்புகள் எல்லாம் நலிந்துபோய் விட்டன.

    இதற்கொரு விடிவுகாலம் வேண்டும் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும் இறைவனை வேண்டி முறையிட்டனர். இதனால் இரக்கமுற்ற விண்ணவர்களும், கலியின் கொடுமையை இறைவனிடம் விண்ணப்பித்தனர். அதற்கு இசைந்த மும்மூர்த்திகளும் கலிக்கு, அவதார காலத்தை கவனத்தில் கொண்டு ஆலோசிக்கலாயினர்.

    அந்த ஆலோசனையில், கலி என்பது சிறிய எலியின் அளவு உடல் கூட இல்லாத ஓர் அளப்பரிய நினைவு மாய்மாலம். உண்மையைத்தான் பேச வேண்டும் என்று உறுதியாக இருப்போரையும் பொய் பேசவைத்து, அந்த பொய்க்குள்ளே ஐக்கியமாக்கிவிடும் அரக்கத்தனம் கொண்ட அந்த அருவற்ற கலியை, வாள், அம்பு, தடி போன்ற எவ்வகை ஆயுதங்களாலும் அழித்துவிட முடியாது. இதற்கு முன்பு நிகழ்ந்த ஆறு யுகங்களிலும் இருந்த அரக்கர்களை, இந்தக் கலியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் அனைவரும் கலிக்கு முன்பு தூசுக்கு சமமானவர்களே.

    ஆகையால் எல்லா யுகங்களிலும் மகாவிஷ்ணு மட்டுமே அவதரித்து அரக்கர்களை அழித்ததுபோல, இந்தக் கலியாகிய மாயையை அழிக்க முடியாது. மும்மூர்த்திகளும் தனித்தனியாக சென்றும், கலியரக்கனின் கண் முன்பு நின்று வென்றுவிட முடியாது. எனவே நாம் மூன்று மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி, பரப்பிரம்ம நிலையோடு மண்ணகத்து மனிதனைப் போல் சென்று, அன்பு, பொறுமை, தர்மம் ஆகியவற்றின் வலிமையை மக்களின் மனதில் விதைத்து, அவரவர் மனதில் மாசாகப்படிந்திருக்கும் மாயக்கலியை தானாகவே கரைந்துபோகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

    அதன்படி கலியுகம் பிறந்த 4934-ம் ஆண்டு, கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ந் தேதி, மும்மூர்த்தியும் ஒரு மூர்த்தியாகி திருச்செந்தூர் திருப்பாற்கடலின் உள்ளிருந்து அரூபமாய் வெளிப்பட்டு, வைகுண்டர் என்ற திருநாமத்தோடு, திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ்திசையாகிய கன்னியாகுமரிக்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ள தாமரைகுளம் என்ற இடத்தில் வந்து அமர்ந்தார்.

    வைகுண்டரின் அருள் பிரவாகத்தால் அந்தப் பகுதி மக்களெல்லாம் அவரை அதிசயமாய் பார்த்தனர். அருள்வேண்டி நின்றனர். மக்களின் நோய், மன சஞ்சலம் போன்ற அனைத்தையும் தம் பார்வையாலேயே பறந்தோடச் செய்தார். அதனால் அவரைக் காணவரும் அன்பர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. அப்போது மண்ணையும், தண்ணீரையும் மருந்தெனக் கொடுத்து, ஊமை, கூன், குருடு, செவிடு, முடம் போன்ற அனைத்து ஊனங்களையும் நலமடையச் செய்தார். மக்கள் அவர் மீது அபரிமிதமான பக்தி செலுத்தினர். நாளடைவில் அந்த இடத்தை ‘சாமிதோப்பு’ என்றும், வைகுண்டரை ‘அய்யா’ என்றும் அழைத்தனா்.

    தன்னிடம் வந்த மக்களுக்கு அய்யா வைகுண்டர் பல உபதேசங்களையும் வழங்கினார். கலி என்பது எலியளவு உருவம் கூட இல்லாதது. அதை அழிக்க மோதிரம் அளவிலான ஆயுதம் கூட அவசியமில்லை. நீங்கள் பவ்வியமாக வாழ்ந்தீர்கள் என்றால், அதற்குள் கலியானது அகப்பட்டுக் கொள்ளும். மானத்தோடு வாழ்ந்தால் கலியானது தன்னாலேயே மாண்டுவிடும். எனவே சொத்து, சுகமென்று எண்ணாதீர்கள். அடிப்பார் அடிக்க வந்தால் அதைச் சகித்து விட்டு விடுங்கள். சத்ருவோடும் சாந்தமுடனே இருங்கள். அற்பமான இந்த வாழ்வில் அநியாயங்களைச் செய்யாதீர்கள். நினைத்ததெல்லாம் உங்களுக்கு நிச்சயமாய் நிறைவேறும் என்பது போன்ற பல உபதேசங்கள் செய்தார்.

    அதன் காரணமாக ஜாதி, மத பேதங்களைக் கடந்து சகலரும் ஒரு தலத்தில் குவிந்தனர். ஒரே கிணற்று நீரைக் குடித்தனர்; குளித்தனர். ஒரே சமையலை உண்டு மகிழ்ந்தனர். இதைக் கண்டு சில ஆதிக்கவர்க்கத்தினரின் மனம் சஞ்சலப்பட்டது. அவர்கள் திருவாங்கூர் மன்னனிடம் இதுபற்றி கூறி அவனது கோபத்தை தூண்டும் வகையில் கோள் மூட்டினர். மன்னன் படைகளை அனுப்பி, அய்யா வைகுண்டரை கைது செய்ததோடு, அவருக்கு ஆலகால விஷம் கொடுத்து அருந்தச் செய்தான். சுண்ணாம்பு காளவாயில் வைத்து நீற்றினான். பெரிய நெருப்பு குண்டத்தில் நடந்துவரச் செய்தான். புலியுடன் கூண்டில் அடைத்தான். இப்படி பல சோதனைகள் செய்தாலும், அதில் இருந்து மீண்டும் 112-ம் நாள் சாமிதோப்புக்கு வந்து சேர்ந்தார்.

    ஏழை, எளிய மக்களும் பிரபஞ்ச வரலாற்றைத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, எழுதப்படிக்கத் தெரியாத அரிகோபால கீசரை வைத்து, அகிலத்திரட்டு என்னும் ஆகமத்தை அருளினார். கலியுகத்தில் 18 ஆண்டுகள் மட்டுமே தெய்வமாய், மனிதனாய் மக்கள் மனம் போற்ற வாழ்ந்தார் அய்யா வைகுண்டர். அவர் தனது அன்புக்கொடி மக்களிடம், “நீங்கள் அனைவரும் நான் அருளியுள்ள ஆகமத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாழுங்கள். அப்படி வாழ்ந்தீர்கள் என்றால், தர்மயுக வாழ்வினைப் பெறுவீர்கள்” என்று திருவாய் மலர்ந்துவிட்டு விண்வெளியில் மறைந்தார்.

    இந்த அகிலத்திரட்டு ஆகமம் கூறும் உபதேசங்களை எல்லாம் உலகுக்குச் சொல்லும் விதமாக, தற்போது அய்யா வைகுண்டர் வழிபாட்டு ஆலயங்கள் பல உள்ளன. சென்னையிலும், சென்னை புறநகர்களிலும் ஏறத்தாழ 26 ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ராஜகோபுரமும், பற்பல மண்டபங்களும், கொடிமரமும், தேரும் அமையப்பெற்ற ஆலயம் சென்னை மணலிப்புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள தர்மபதி ஆகும். அய்யா வழிபாட்டு ஆலயங்களில் சாமிதோப்பு பதியைப்போல, நித்திய வாகன பவனியும், நித்திய அன்னதானமும் இங்கே நடைபெறுகிறது.

    இந்த மணலிப்புதுநகர் வைகுண்டபுரம் தர்மபதியில் 10 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகலில் தேரோட்டமும், இரவு பட்டாபிஷேகத் திருஏடு வாசிப்பும், பல்லக்கு வாகன பவனியும், திருக்கொடி அமர்தலும் நடைபெற உள்ளது.

    -ஆ.மணிபாரதி
    கடமையிலிருந்து நழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே “கீதோபதேசம்” செய்த கண்ணன் வீற்றிருக்கும் தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்.
    கடமையிலிருந்து நழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே “கீதோபதேசம்” செய்த கண்ணன் வீற்றிருக்கும் தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில். இக்கோவிலானது வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் வேங்கடவன், தொண்டைமானுக்கு பார்த்தசாரதியாக சேவை அளித்த தலமும் ஆகும். தலத்திற்கு பஞ்ச வீரத் தலம் என்ற பெயரும் உண்டு.

    கோவிலில் ஐந்து சந்நிதிகள் இருக்கின்றன. மூலசந்நிதியில் உள்ள மூலவரின் நாமம் வேங்கட கிருஷ்ணன் ஆகும். இவருடைய ஒரு புறத்தில் ருக்மணி தாயாரும் பலராமரும் மறுபுறத்தில் சாத்தகி, பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக மூலவர் சேவை தருகின்றார். தன்னுடைய மனைவி, தமையன், இளையோன், புதல்வன், பேரன் என்று முத்தலைமுறையினருடன் சேவை தருவது தனிச் சிறப்புடையது ஆகும்.

    பாரதப் போருக்கு முன்பாக கவுரவரின் தலை மகனான துரியோதனனுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது இல்லை என்ற வாக்கிற்கு ஏற்ப இவரது வலது கரத்தில் சக்கராயுதம் காணப்படவில்லை. ஆனால் இடது கையில் இருக்கும் சங்கானது வலது கரத்தில் இருக்கிறது. தேரோட்டியான பார்த்தசாரதி முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். ஆனால் முகத்தில் விழுப்புண்கள் உள்ளன. இவை பாரதப் போரின் போது ஏற்பட்டவை ஆகும். இடைப் பகுதியில் வாள் ஒன்று தொங்குகிறது. இன்னொரு கையில் சாட்டை காணப்படுகின்றது. இவ்வாறாக தேரின் முன்பாக நின்ற கோலத்தில் தோன்றுகின்றார்.

    தொண்டைமான் சக்கரவர்த்தியின் பிரார்த்தனைக்கு இணங்க வேங்கடவன் இங்கு சேவை தந்தருளிய காரணமாய் வேங்கட கிருஷ்ணன் என்ற திரு நாமம் பெற்றார். இரண்டாம் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு மூலவர் அரங்கநாதன் கிடந்த கோலத்தில் சேவை தருகிறார். இவருக்கு மனநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தாயாருக்கு வேதவல்லி என்று பெயர். திருவல்லிக்கேணியில் முன்பொரு காலத்தில் துளசிச்செடிகள் மண்டிக் கிடந்தனவாம்.

    இப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகவும் இருந்திருக்கிறது. இங்கு ஒரு வந்தன மரத்தின் அடியில் தாயார் குழந்தை வடிவெடுத்துத் தோன்றியதாகவும் அக்குழந்தையை முனிவர் எடுத்துச் சென்று வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்ததாகவும் நாராயணன் ராஜ குமாரனாஉருவெடுத்து வந்து தாயார் வேதவல்லியை மணம் புரிந்து தலத்திலேயே தங்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.

    மூன்றாவது சந்நிதியில் தனது வாகனமாகிய கருடன் மீது அமர்ந்தபடி வரதராஜ பெருமாள் சேவை தருகின்றார்.இவரது மறுபெயர் தேவப்பெருமாள் ஆகும். கிழக்கு நோக்கிய சந்நிதியாகும். நான்காவது சந்நிதியில் மேற்குப்புறமாக நோக்கியபடி அழகிய சிங்கரான நரசிம்மர் வீற்றிருக்கும் கோலத்தில் மூலவர் சேவை தருகிறார். நரசிம்மரின் சந்நிதிக்கு அடுத்த படியாக ஆண்டாள் சந்நிதி உள்ளது.

    ஐந்தாவது சந்நிதியில் தெற்கு நோக்கியபடி சக்ரவர்த்தி திருமகனாக ராமர் நின்ற கோலத்தில் சேவை அளிக்கின்றார். மூலவருடன் சீதாப் பிராட்டியார், பரதன், லட்சுமன், சத்ருக்கன், அனுமன் ஆகியோரும் சேவை தருகின்றனர். இந்த ஐந்து சந்நிதிகளிலும் உள்ள மூலவர்கள் ஐந்து பேரும் மங்களாசாசனம் பெற்றிருப்பதால் தலத்திற்கு பஞ்சமூர்த்திதலம் என்ற பெயரும் உண்டானது.

    திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களாலும் பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். கோவிலில் உள்ள அல்லிக்கேணி புஷ்கரணி தீர்த்தத்தில் இந்திர, கோம, மீன அக்னி, விஷ்ணு தீர்த்தங்கள் ஐந்தும் சூழ்ந்திருப்பதாக கூறப்படுவது உண்டு. கோவில் குளத்தில் அல்லி மலர்கள் அதிகமாய் இருந்தபடியால் அல்லிக்கேணி என்ற பெயர் பெற்றது. கோவிலில் முன் மண்டபங்கள் முதலில் உள்ளன. அடுத்து மகா மரியாதை மண்டப வாயில் உள்ளது. இதன் மீது ராஜகோபுரம் அமைந்துள்ளது.

    ஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட கோபுரம் சில வருடங்களுக்கு முன்பாக புதுப்பிக்கப்பட்டது. கோவிலில் உள்ள ஐந்து விமானங்கள் ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம் ஆகியவை ஆகும். புராண காலத்தில் இத்தலம் “பிருந்தாரயண்ய சேத்திரம்” என அழைக்கப்பட்டது. மகாபாரத யுத்தத்தின் போது பஞ்ச பாண்டவர்களில் “பார்த்தனாகிய” “அர்ஜுனனுக்கு” அவனின் ரதத்தை செலுத்தும் “சாரதியாக” பகவான் கண்ணன் சேவை புரிந்தார். அந்த கண்ணனே இங்கு கோவில் கொண்டுள்ளதால் இந்த இறைவனுக்கு “பார்த்தசாரதி” பெருமாள் என பெயர் ஏற்பட்டது.

    கேணி என்றால் குளம் என்றும் ஒரு பொருள் உண்டு. முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் “அல்லி” மலர்கள் நிறைந்திருந்ததால் இந்த ஊர் “திரு அல்லிக்கேணி” என்று அழைக்கப்பட்டது. காலப் போக்கில் அது திருவல்லிக்கேணி என்றானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக இது இருந்தாலும் இக்கோவிலை 7-ம் நூற்றாண்டில் முதன் முதலாக நன்கு வடிவமைத்து கட்டியவர்கள் “பல்லவ” மன்னர்கள் ஆவர். பின்னாளில் “சோழர்களும், விஜயநகர பேரரசர்களும் இக்கோவிலை மேம்படுத்தி கட்டியிருக்கின்றனர்.

    ஆழ்வார்களில் “திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும். இது 108 திவ்ய தேசங்களில் முக்கியமான கோவில்களில் ஒன்றானதாகும். புகழ் பெற்ற மனிதர்களான சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் போன்றோர் அவர்களின் காலத்தில் இக்கோவிலில் வந்து வழிபட்டுள்ளனர்.

    இக்கோவிலின் மூலவரான பார்த்தசாரதி பெருமாளின் சிலை 9 அடி உயரம் கொண்டது. அனேகமாக பாரதத்தில் இந்த கோவிலின் பெருமாள் மட்டுமே முகத்தில் மீசையுடன் காட்சி தருகிறார். இங்கு பார்த்தசாரதி பெருமாள் தன் மனைவி மற்றும் சகோதரர் என குடும்பம் சகிதமாக இருக்கிறார். பொதுவாக எல்லா பெருமாள் விக்கிரகங்களும் கையில் ஏதேனும் ஒரு ஆயுதம் ஏந்தியிருப்பதை காணலாம். ஆனால் இத்தல கடவுளான பார்த்தசாரதி பெருமாள் தனது கையில் ஆயுதம் ஏதும் இன்றி இருப்பது கூடுதல் சிறப்பு.

    தனிச் சன்னதிகள் :

    * அத்திரிமுனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அழகிய சிங்கராகக் காட்சியளிக்கிறார். இதனைத் தெள்ளிய சிங்கர் எனச் சாற்றப்படுகிறது. இவர் நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். துளசிங்கர் என மருவிற்று.

    * பிருகு முனிவருக்காக ஸ்ரீரங்கநாதர், மன்னாதன் புஜங்கசயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் வேதவல்லி.

    * மதுமான் மகரிஷிக்காக ஸ்ரீராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், பரதன், சத்துருக்கன், ஆஞ்சநேயர் ஆகியோருடன் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.

    * சப்தரோமர் ரிஷிக்காக வரதராஜர், தேவப்பெருமாள் கருட வாகனத்தின் மீது கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.

    ஆண்டாள், கூரத்தாழ்வார், முதலியாண்டான், மணவாள மாமுனிகள், ராமானுஜர், தேசிகர், திருக்கச்சி நம்பிகள் ஆகியோர்களுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன.

    சுமதி என்ற மன்னன் திருவேங்கடமலையில் வழிபடப் பெருமாள் இத்தலத்தில் பார்த்தசாரதியாய் தரிசனம் தந்தார். பிருகு முனிவரின் தவச்சாலைக்கு அருகில் திருமகள் குழந்தை வடிவில் தோன்ற முனிவர் அதை வளர்த்து வந்தார். திருமால் இவளே தமது பிராட்டி என்று அரசகுமாரனாகத் தோன்றி முன்னே நிற்கப் பிராட்டி, இவரே என் கணவர் என்று கூறினாள். அதனால் மந்நாதர் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

    கோவிலில் உள்ள நரசிம்மர் சந்நிதியில் வழிபட்டு அந்த நரசிம்மருக்கு உரிய சங்கு தீர்த்தத்தை நமது முகத்தில் தெளித்து, அத்தீர்த்ததை அருந்தினால் நம்மை பீடித்திருக்கும் துஷ்ட ஆவிகள், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், தேவையற்ற பயங்கள் போன்ற பாதிப்புகள் நீங்கும். பார்த்தசாரதி பெருமாளை வணங்குவதால் ஒருவரின் ஆளுமை திறனும் மேம்படும். கல்வியில் சிறப்பு, நல்ல இல்வாழ்க்கை துணை அமைய இக்கோவிலில் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு சர்க்கரை பொங்கலை நிவேதனமாக அளித்து வழிபடுகின்றனர்.

    குடும்பத்துடன் கிருஷ்ணர்

    வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே அதே கம்பீரத்தோடு, கூர்மையான நாசியும் புன்சிரிப்பு தவழும் உதடும் வலது கையில் குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார். ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார். வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம் தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் காட்சி தருகிறார்கள். குடும்பத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால் குடும்ப ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை.

    வேதவல்லித்தாயார்

    பார்த்தசாரதி சன்னதிக்கு வலது புறத்தில் வேதவல்லித் தாயாரின் சன்னதி அமைந்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேதவல்லித் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பெருமாளுக்கு நைவேத்தியத்தில் கடலை எண்ணை, மிளகாய் சேர்ப்பதில்லை. இதற்கு பதிலாக நெய் மற்றும் மிளகு சேர்க்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல் பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசை இல்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும் மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.
    திவ்யதேசங்கள் எனப்படும் 108 வைணவ தலங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திவ்யதேசங்கள் எனப்படும் 108 வைணவ தலங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் நாகர்கோவிலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறமாக திரும்பி 2 கிலோ மீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த பழையாற்றங்கரையில் கோவில் அமைந்துள்ளது.

    திருவாழ்மார்பன் பெயர்காரணம்

    இந்த கோவிலில் திருமாலின் அவதாரமான திருவாழ்மார்பன் அருள்பாலிக்கிறார். சாமிக்கு திருவாழ்மார்பன் என்ற பெயர் வந்தது எப்படி? என்பதை பக்தர்கள் அறிவது அவசியமான ஒன்றாகும்.

    நரசிம்மர் இரணியரை வதம் செய்த பின் தன் சினம் மாறாமல் நின்றார். அவரது ஆவேசம் அடங்கவில்லை. பிரபஞ்சம் நடுங்கியது. இரணியன் மகனான பிரகலாதன் நரசிம்மனை துதித்தான். அப்போதும் வேகம் அடங்கவில்லை. லட்சுமி தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்தாள். பெருமாள் அமைதி ஆனார். லட்சுமியை அவரது மார்பில் அமர்த்திக் கொண்டார். அந்த கோலத்தில் குடிகொண்டது தான் இந்த கோவில் என்கிறார்கள். லட்சுமியை மார்பிலே இருத்திக் கொண்ட மார்பன் திருவாழ்மார்பன் ஆனார். திருவாகிய லக்குமி தன் பதியாகிய விஷ்ணுவை சார்ந்து இவ்வூரில் தங்கியதால் இவ்வூர் திருப்பதிசாரம் என அழைக்கப்பட்டது. இறைவியாக கமலவல்லி நாச்சியார் உள்ளார்.

    புரட்டாசி சனி வழிபாடு


    பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு விசேஷமானது. அதேபோல திருவாழ்மார்பன் கோவிலிலும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
    வழக்கமாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு தான் திறக்கப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்படுகிறது. மூலவருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறும். மூலவர் திருவாழ்மார்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    காலை 5.30 மணிக்கு உஷ பூஜை, 9 மணிக்கு நிஷ்டான பூஜை, 10.30 மணிக்கு உச்ச பூஜை நடைபெறும். அன்றைய தினங்களில் மதியம் ஒரு மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மாலையில் 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 8 மணிக்கு அத்தாள பூஜை நடைபெறும். இரவு 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    கருட சேவை

    கோவிலில் நடைபெறும் கருட சேவை விசேஷமானது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகள் வருகின்றன. இந்த 4 சனிக்கிழமைகளிலும் இரவு 9 மணிக்கு கருடசேவை நடைபெறும். முதல் 3 சனிக்கிழமைகளில் சிறிய கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வருவார். கடைசி சனிக்கிழமை அன்று பெரிய வெள்ளிக்கருட சேவையில் சுவாமி எழுந்தருளுவார்.

    பின்னர் மேள, தாளம் முழங்க கோவிலை சுற்றி வருவார். கருட சேவை நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவையை தவிர்த்து வேறு எந்த வித வாகன பவனியும் இங்கு நடைபெறுவது இல்லை.

    புரட்டாசி சனிக்கிழமையை போல மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியும் விசேஷமானது. அன்று அதிகாலை கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி பரமபதவாசல் வழியாக எழுந்தருளுவார்.

    ஊஞ்சல் சேவை


    ஆவணி மாதம் ஓணம் திருநாளன்று இரவு சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். சித்திரை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 10 நாள் திருவிழா தொடங்கி நடைபெறும். 5-ம் திருவிழாவன்று கருடசேவை, 9-ம் நாள் தேரோட்டம். சுவாமி தேர் மட்டும் ரத வீதியை சுற்றி வலம் வரும். விஜயதசமியில் திருவாழ்மார்பனின் தங்கையான திருப்பதிநங்கை வெள்ளை குதிரை வாகனத்தில் அம்பெய்யச் செல்லும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும்.

    சுவாமிக்கு வழிபாடு நைவேத்யங்களில் அரவணை, பால்பாயாசம், பொங்கல், புளியோதரை, அப்பம் குறிப்பிடத்தக்கவை. பஞ்சகவ்ய தீர்த்தம் பூஜைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற துலாபார நேர்ச்சை செலுத்துகிறார்கள். நிஷ்டான பூஜை வழிபாட்டிலும் பங்கேற்கிறார்கள்.

    அமர்ந்த கோலத்தில் மூலவர்

    கோவிலில் உள்ள மூலவர் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். மூலவர் உயரம் 7 அடி உயரம். நான்கு கரங்கள், பின் கைகள் சங்கு, சக்கரம் ஏந்தியவை. முன் இரண்டும் அபய வரத, முத்திரை காட்டுபவை. கழுத்தில் லெட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கம் காணப்படுகிறது. மூலவர் கடுசர்க்கரை படிமம். அதாவது கடுகு, சர்க்கரை மற்றும் மலை தேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் அபிஷேகம் கிடையாது. மூலவரின் பின் சுவரில் அத்திரி, வசிஷ்டர், காசியபர், பரத்வாசர், விசுவாமித்திரர், ஜமதக்னி, கவுதமர் ஆகிய ரிஷிகள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர்.

    பரிவார தெய்வங்கள்

    நமஸ்கார மண்டபத்தின் வடபுறம் விஷ்வசேனர், நடராஜர், நம்மாழ்வார் ஆகியோர் பரிவார தெய்வங்களாக சிறு சன்னதிகளில் உள்ளனர். விஷ்வசேனர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரம் ஏந்தி விஷ்ணுவின் அம்சமாக உள்ளார். இது நின்ற கோல கல்படிவம். மூலவருக்கு அணிவித்த மாலையை விஷ்வசேனருக்கு அணிவித்தல் என்ற நடைமுறை இக்கோவிலில் இல்லை.

    விஷ்வசேனர் சன்னதியை அடுத்து விழாக்கால படிமங்கள் இருக்கும் சன்னதி உள்ளது. இதில் உமா மகேஸ்வரர், நடராஜர், காரைக்கால் அம்மையார், சிவகாமி, சாஸ்தா ஆகியோரின் செப்பு படிமங்கள் உள்ளன. அடுத்து நம்மாழ்வார் இருக்கிறார். இடது கை மடியிலும், வலது கை சின் முத்திரையுடன் பத்மாசனம் இட்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நமஸ்கார மண்டபத்தின் தென்மேற்கில் ராமர், லெட்சுமணர், சீதை ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அருகே விபீஷனர், அகத்தியர், குலசேகர ஆழ்வார் உள்ளனர். அதன் எதிரே கருடாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது.

    கோவில் அமைப்பு

    கோவில் முன் வாசலை அடுத்து இருப்பது கிழக்கு பிரகாரம். இது மகா மண்டபம் என அழைக்கப்படுகிறது. இம்மண்டப வேலை திருவிதாங்கூர் அரசரான ஸ்ரீமூலம் திருநாள் காலத்தில் (1931-1948) முடிந்தது. இந்த மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. 40 அடி உயரமுள்ள இக்கொடிமரம் செம்புத்தகடு வேயப்பட்டது. இதன் உச்சியில் தங்கமுலாம் பூசப்பட்ட கருடனின் விக்ரகம் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் லட்சுமி தீர்த்தம். விமானம் இந்திர கல்யாண விமானம் என்ற அமைப்பினை சேர்ந்தது.

    திருப்பதிசாரம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஊர். நம்மாழ்வாரின் தாய் திருவடைய நங்கை பிறந்த தலமாகும். குலசேகர ஆழ்வார் கி.பி. 8-ம் நூற்றாண்டில் இத்தலத்தை புதுப்பித்து இறைவனுக்கு வாகனம், கோவில் மதில் போன்ற திருப்பணிகள் பலவும் செய்து கொடிக்கம்பத்தையும் நிர்மாணித்து விழா எடுத்துள்ளார்.

    தலபுராணம்

    நம்மாழ்வாரின் தாய், நம்மாழ்வாரை ஈன்ற 41-ம் நாள் (வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் பிறந்தார்) குருகூரிலுள்ள ஆதிநாதன் சன்னதியில் இட்டார். அந்த குழந்தை மெல்லத்தவழ்ந்து கோவிலிலுள்ள புளியமரப் பொந்திற்குள் புகுந்தது.

    இதைக் கண்டு அனைவரும் வியந்தது நிற்க, பொந்தில் இருந்து குழந்தை யோக முத்திரையுடன் பத்மாசன யோகத்தில் அமர்ந்து மதுரகவி ஆழ்வாருக்கு திருவாய்மொழி அருளியதாக தல புராணம். இந்த இடத்தில்தான் ஆஞ்சநேயரின் பிரார்த்தனைக்கு இணங்க அகஸ்தியர் ராமாயணம் அருளியதாகவும் சொல்லப்படுகிறது. பெற்றோர்கள் இம்சையில் இருந்து விடுபட, பாவங்களில் இருந்து குடும்பத்தைக் காப்பாற்ற வறுமையில் இருந்து தப்ப, ஆரோக்கியத்தை குலைக்கும் நோய்களில் இருந்து விலக திருப்பதி சாரம் வந்து நம்மாழ்வாரை ஆட்கொண்ட திருக்குறளப்பன் சன்னதியில் மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும்.

    திருவாழ்மார்பனை வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும், குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    பஸ் வசதி

    திருப்பதிசாரம் கோவிலுக்கு செல்ல நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. ரெயிலில் வருபவர்கள் அங்கிருந்தே கோவிலுக்கு செல்ல ஆட்டோ, கார் வசதியும் உள்ளது. இல்லாவிட்டால் அண்ணா பஸ்நிலையம் வந்து பஸ்சில் சென்று திருவாழ்மார்பனை தரிசிக்கலாம்.

    கோவில் போன்: 04652- 282495.
    அருள்மிகு வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சிவகாசியிலிருந்து கழுகுமலைக்கு செல்வதற்கு முன்னர் 17 கி.மீ தொலைவில் உள்ள வெம்பக் கோட்டை அடுத்த துலுக்கன்குறிச்சி என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.
    கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட பெரியோர்கள் வாக்கை மெய்பிக்கும் வகையில் இறைவனே தேடி வந்து குடியிருந்த ஒரு கிராமம் தான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கன்குறிச்சி எனும் சிறிய கிராமம். குடியமர்ந்த இறைவன் எம்பெருமான் சிவனின் மைந்தன் முருகப்பெருமான். அப்படிப்பட்ட இறைவன் தேடிவர காரண மாயிருந்தவர் “முருக பக்தர் வேலாயுதம்”

    அருள்மிகு வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சிவகாசியிலிருந்து கழுகுமலைக்கு செல்வதற்கு முன்னர் 17 கி.மீ தொலைவில் உள்ள வெம்பக் கோட்டை அடுத்த துலுக்கன்குறிச்சி என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.

    சுமார் 150 வருடங்களுக்கு முன், தேரியப்பர் - வீரம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த முருகபக்தர் வேலாயுதம் துலுக்கன் குறிச்சி கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் இளம் வயதிலிருந்தே கடவுள் மீது பக்தி கொண்டவர். அவர் பல வித்தைகளையும் கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர். முருக பக்தர் வேலாயு தம் தன்னுடைய வயலின் அருகில் வாழை மரங்களை வைத்து பராமரித்து வந்தார். அவரின் கனவில் இறைவன் காட்சி தந்து, “ வேலாயுதம்! நீ பராமரிக்கும் வாழை மரங்களில் இப்பொழுது எந்த வாழை மரத்தில் குலை தள்ளியிருக்கிறதோ அம்மரத்தில்தான் நான் இருக்கிறேன்.“ என்று கூறி மறைந்தார். திடீரென்று விழித்தெழுந்த வேலாயுதம் தன் கனவில் இறைவன் வந்து காட்சி தந்ததை பக்த பெருக்கோடு அகம் மகிழ்ந்தார்.

    மறுநாள் வேலாயுதம் தனது வயலுக்கு அருகில் பராமரித்து வந்த வாழை மரங்களைச் சென்று பார்த்தபோது ஒரே ஒரு மரத்தில் மட்டுமே வாழை குலை தள்ளியிருந்தது. இறைவன் அம்மரத்தில் தான் தங்கியிருக்கிறான் என்பதனை உணர்ந்த முருகபக்தர் வேலாயுதம் அம் மரத்தை முருகனாக வணங்கி வந்தார். இதனைக் கேள்விபட்ட அக்கிராம மக்கள் அதனை வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி என்று அழைத்து வந்தனர்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் இக்கிராமத்திற்கு அருகாமையில் உள்ள செவல்பட்டி, ஜமீனில் கணக்குப்பிள்ளை மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமண வாசலில் வைக்க குலை தள்ளிய வாழைமரம் தேவைப்பட்டது. அதற்காக பணியாட்கள் பல ஊர்களில் தேடி அலைந்தனர். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை.

    துலுக்கன்குறிச்சி கிராமத்தில் மட்டுமே குலைதள்ளிய வாழைமரம் இருப்பதை ஜமீனிடம் கூறினர். ஜமீனும், “அப்படியானால் அதனை கொண்டு வாருங்கள்” என்றார் மாப்பிள்ளையான கணக்குப்பிள்ளையின் மகனும் தானே சென்று அதனைக் கொண்டு வருவதாகக் கூறிக்சென்றான். அவன் நேராக முருகபக்தர் வேலாயுதத்திடம் வந்து குலைதள்ளிய வாழைமரம் எங்கும் கிடைக்கவில்லை என்றும், அதனால் தங்களிடம் உள்ள குலைதள்ளிய வாழைமரத்தை தனக்கு அளிக்க வேண்டும்.

    இது ஜமீனின் கட்டளை என்றும் தெரிவித்தான். அனால் வேலாயுதமோ, “அது மரமல்ல நான் வணங்கும் தெய்வம் முருகப்பெருமாள் குடியிருக்கும் கோவில் அதனை வெட்டக்கூடாது. அதற்குமேல் உங்கள் விருப்பம்” என்றார் இவரின் பேச்சைக் கேட்காமல் கணக்குப் பிள்ளையின் மகன் அரிவாள் எடுத்து முருகப்பெருமாள் குடிகொண்டிருந்த வாழைமரத்தை வெட்டினான். வாழை மரத்தில் இருந்து இரத்தம் வந்தது. அது மட்டுமல்லாமல் அதிலிருந்து நாகம் ஒன்று வந்து அரிவாளால் வெட்டிய கணக்கு பிள்ளையின் மகனை தீண்டியது. நாகம் தீண்டியதால் நுரைகக்கி கணக்குப்பிள்ளையின் மகன் இறந்தான்.

    இச்செய்தி காட்டுத் தீ போல அப்பகுதி முழுவதும் பரவியது. அதேபோல் ஜமீனுக்கும், கணக்குப்பிள்ளைக்கும் இச்செய்தி எட்ட அவர்கள் நேராக வேலாயுதம் உள்ள வாழை மரத்தருகே வந்தனர். அங்கே கணக்குபிள்ளையின் மகன் இறந்து கிடந்தைக் கண்டு துடித்தனர். கணக்கு பிள்ளை தன் மகனைப்பார்த்து, “மணக் கோலத்தில் பார்ப்பேன் என்று நினைத்த என்மகனை பிணக்கோலத்தில் பார்கும் நிலை ஏற்பட்டதே” என்று கதறி அழுதார்.

    கணக்குபிள்ளை முருகபக்தர் வேலாயுதமிடம் வந்து, “ஐயா! என் மகன் வாழைமர சுப்பிரமணிய சுவாமி குறித்து தெரியாமல் தவறு செய்து விட்டான். அதனால் அவன் உயிரையே இழக்க நேரிட்டது. தயவு கூர்ந்து என் பிள்ளையை காப்பாற்றித் தாருங்கள். அவனின் செயலுக்காக எங்கள் குடும்பமே மன்னிப்பு கேட்டுகிறோம்” என்று வேண்டினார். முருகபக்தர் வேலாயுதம் கணக்குபிள்ளையிடம். என் இறைவன் அறியாமல் செய்த பிழையை பொறுத்து காத்து அருள்வான். உங்கள் மகன் உயிர்தெழச் செய்ய என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்கிறேன். இறைவனும் நிச்சயம் காப்பாற்றுவான் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறி வாழைமர சுப்பிரமணி முன்பு அமர்ந்து மன முருக வேண்டினார்.

    சில நிமிடங்கள் கழித்து வேலாயுதம் எழுந்து இறந்த கிடந்த கணக்குபிள்ளை மகனின் அருகில் வந்தார். ஒரு பிரம்புக் குச்சியை எடுத்து இறைவனின் நாமமான “முருகா” “முருகா” “முருகா” என்று மூன்று முறை சொல்லி அவனின் மீது மூன்றுமுறை தடவினார். அப்பொழுது ‘திடீரென்று‘ இறந்து கிடந்த கணக்குப் பிள்ளையின் மகன் மெல்ல விழித்து எழுந்தான். கூடியிருந்த மக்கள் ஜமீன்தார் மற்றும் கணக்கு பிள்ளையின் குடும்பம் மொத்தபேரும் இந்த அதிசயத்தைக் கண்டு மெய்சிலிர்த்து “முருகா“ “முருகா“ என்று முருகனின் நாமத்தைச் சொன்னார் கள்.

    இத்திருதலத்தில் தினமும் உலக நன்மைக்காக யாகம் செய்யப்படுகிறது. குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், திருமண பாக்கியம் மற்றும் தங்கள் குறைகள் தீர விரும்பும் பக்தர்கள் தங்கள் கையால் யாகம் செய்யும் அரிய வாய்ப்பும் இக்கோவிலில் வழங்கப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு வி.டி.பாஸ்கரன் 98405 45860.
    நாகபட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் உள்ளது அக்னீஸ்வரர் ஆலயமாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    உலகத்தைக் காப்பதற்காக பல்வேறு வடிவங்களில் மக்களிடையே தோன்றி அருள்தருகிறான், இறைவன். முன்காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களையும் உணர்த்தும் விதமாக ஓரிடத்தில் இறைவன் இருந்தால் எத்தனை சிறப்பு. அங்கு சென்று நாம் வணங்கும் போது முக்காலத்தையும் உணரும் ஆற்றல் நமக்கு கிடைக்கிறது அல்லவா?- அப்படியொரு அற்புதத் தலம்தான் நாகபட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயமாகும்.

    தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான சுந்தரர், சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அவருக்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருநாளில் பெரும் விழா எடுப்பது சுந்தரரின் வழக்கம். அந்த விழாவில் மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்களுக்கு ஆடை அணிவித்து அமுதூட்டி வணங்குவதை தவறாது செய்து வந்தார். இந்த புனித சேவையில் சுந்தரரின் துணைவியார் பரவை நாச்சியாரம்மாள் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார்.

    இவ்வாறு இவர்கள் வழக்கம் போல நடத்தும் இந்த விழாவில் ஒரு சமயம் சுந்தரருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. ‘என்ன செய்வது?.. யாரிடம் கேட்பது?’ என தெரியாமல் தவித்தப்படியே பயணித்தார் சுந்தரர். பல ஆலயங்களுக்கு சென்று இறுதியில் திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஆலயத்தில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் செங்கற்களும் மணலும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நெடுந்தூரம் பயணம் செய்த காரணத்தினால் அவருக்கு அலுப்பு ஏற்பட்டது. திருப்புகலூரில் சற்று ஓய்வு எடுத்தார். மணலை படுக்கையாக்கினார். செங்கற்களை தலையணையாக்கி துயில் கொண்டார்.

    அவர் தூங்கினாலும் கூட அவரது சிந்தனையோ, ‘மகேஸ்வர பூஜையை எப்படி நடத்துவது?’ என்பதிலேயே இருந்தது. அவரது கனவில் “பங்குனி உத்திரத்துக்கு காசு எங்கே?” என்று மனைவி கேள்வி கேட்பதுபோல இருந்தது. உடனே கண் விழித்து பார்த்த போது அவரது தலையணைக்கு பயன்படுத்திய செங்கற்கள் தங்கக் கட்டிகளாக மாறி இருந்ததை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். என்ன இறைவனின் லீலை என ஆனந்தப்பட்டார்.

    இந்த சம்பவத்துக்கு பின் இத்தலம் வாஸ்து பரிகார தலமாகவும் விளங்க ஆரம்பித்தது. இன்றும் புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் 3 செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும். இந்த வாஸ்து பூஜை இத்தலத்தின் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.

    ஒரு சமயம் அக்னி தேவனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அக்னி தேவன் “நானே பெரியவன், என்னை எதிர்த்தால் யாராக இருந்தாலும் பொசுக்கி சாம்பலாக்கி விடுவேன். நான், தாக்கத் தொடங்கினால் மலையானாலும் வெடித்து சிதறும்” என்று தற்பெருமை கொண்டார்.

    இதனைக் கேட்ட வாயு தேவன், “அக்னியே நீ எவ்வளவு சக்தி படைத்தவனாக இருந்தாலும், நீ என் மகன்தான். பஞ்ச பூதங்களின் தோற்றத்தில் என்னிடம் இருந்தே நீ தோன்றினாய். ஆதலால் நீ எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் என் ஆற்றலே உன்னிடம் உள்ளது. ஆதலால் நீ என் ஆற்றலுக்கு முன்னே நிற்காது ஒழிவாயாக' என சாபமிட்டார்.

    தன்னுடைய தந்தையின் சாபத்தை நீக்க என்ன வழி என தன் குல குருவாகிய பிரகஸ்பதியிடம் கேட்டார் அக்னி.

    “தந்தையின் சாபம் பொல்லாதது. அதனால் நீ சோழ நாட்டில் புன்னாக வனம் என்று ஒரு தலம் இருக்கிறது. அங்கே சென்று நாற்புறமும் அகழியை தோண்டி அங்கிருந்து சிவ நாமம் சொல்லி, சிவ பூஜை செய்து வா. அவ்வாறு செய்தால் எந்த சாபமும் உன்னை அண்டாது. உனக்குள்ள இகழ்ச்சிகள் அனைத்தும் நீங்கும்” என்று அருளினார்.

    அக்னி பகவானும் அவ்வாறே சென்று புன்னாக வனத்தின் நடுவில, சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இவருடய பூஜைக்கு மனம் இரங்கிய சிவபெருமான், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அக்னிதேவனுக்கு காட்சி கொடுத்தார்.

    அக்னிதேவன் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கி, “பெருமானே! நான் எதைத் தீண்டினாலும், எதை உண்டாலும் என்னுடைய புனிதத் தன்மை கெடாமல் இருக்க வேண்டும். நீங்கள் இத்தலத்திலும் வீற்றிருந்து உலக மக்களுக்கு அருள் வழங்க வேண்டும்” என்று வேண்டினார்.

    அதன்படியே அக்னிக்கு அருள்புரிந்ததால், இத்தல இறைவன் ‘அக்னீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் புன்னை மரம். இந்த ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள அகழி, ‘பாண தீர்த்தம்’ என்றும், ‘அக்னி தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

    இத்தல இறைவியின் திருநாமம் கருந்தாள் குழலி என்பதாகும். சாயரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    அக்னீஸ்வரர், கருந்தாள்குழலி

    இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்தகால நாதர் பூதேஸ்வரர், எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் தோஷங்கள் நிகழ்காலத்தில் கிடைக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம் என்கிறார்கள். அப்பர் பெருமான் உழவாரப் பணி செய்து கொண்டிருந்த போது, இறைவனடி சேர்ந்த திருத்தலம் இதுவாகும்.

    அனுக்கிரக சனீஸ்வரர்

    நள சக்கரவர்த்தியும், சனீஸ்வரனும் திருப்புகலூர் தலத்தில் ஒரே சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். இது மிகவும் விசேஷமாகும். ஒரு சமயம் நள சக்கரவர்த்திக்கு சனி தோஷம் ஏற்பட்டது. சனி தோஷத்தில் இருந்து விடுபட திருநள்ளாறு செல்வதற்கு முன்பாக இத்தலத்தில் உள்ள சனீஸ்வரனை வழிபட்டார். அப்போது இறைவன் “திருநள்ளாற்றில் உன்னைப் பிடித்த சனியை விலக்கி கொள்கிறேன்” என அசரீரி வாக்காக கூறினார். அதனால் இங்குள்ள சனீஸ்வரனை ‘அனுக்கிரக சனி’ என்று அழைக்கிறார்கள். இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

    பாணாசுரனால் உண்டான தீர்த்தம்

    பாணாசுரன் என்ற அசுரனின் தாய், சிவன் மீது மிகுந்த பற்று கொண்டவர். தனது தாய் வழிபடுவதற்காக பாணாசுரன் தினமும் பூலோகத்தில் இருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வருவான். அவ்வாறு ஒரு நாள் புகலூருக்கும் வந்தான். இங்கே உள்ள அக்னீஸ்வரரை பெயர்தெடுக்க முயன்றான்; முடியவில்லை. நான்கு புறமும் அகழி போல குழி தோண்டி லிங்கத்தை தூக்கிப் பார்த்தான். அப்போதும் மூர்த்தியின் அடித்தளத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. நான்கு புறமும் தண்ணீர் தோன்றி தீர்த்தமானது. தன் தவறை உணர்ந்த பாணாசுரன், இறைவனை வேண்டி இந்த தீர்த்தம் மக்களின் நோய் தீர்க்கும் மருந்தாக வேண்டும் என்று வேண்டினான். பாணாசுரன் ஏற்படுத்திய அகழி தீர்த்தம் என்பதால் ‘பாண தீர்த்தம்’ என்றும், இந்த தீர்த்தத்தைக் கொண்டு அக்னி பகவான் சிவனை பூஜித்ததால் ‘அக்னி தீர்த்தம்’ என்றும் பெயர் பெற்றது. முன்பு நான்கு புறமும் தண்ணீரால் சூழப்பட்டிருந்த ஆலயத்தை அப்பர் சுவாமிகள் கூட படகில்தான் கடந்து சென்று வழிபட்டுள்ளார். பிற்காலத்தில் மண்டபம் கட்டப்பட்ட காரணத்தால் தற்போது மூன்று பக்கம் மட்டும் நீர் உள்ளது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் அருகே திருப்புகலூர் உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மாயவரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்புகலூரை அடையலாம்.

    -முத்தாலங்குறிச்சி காமராசு
    108 வைணவ திவ்ய தேசங்களில் 79-வது ஸ்தலமாக திகழ்கிறது நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில்.
    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில். இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 79-வது ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். நெல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    ராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    ‘நம்பாடுவான்’ என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம ராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோயிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோயிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது.

    ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அப்போது வயதானவர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார்.

    நம்பாடுவான் அவரிடம் முன்பு பிரம்ம ராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். ராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் ராட்சசனைக் கண்டு “ தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்” என்றும் கூறினார்.

    ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம ராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம ராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.திருக்குறுங்குடி நம்பியை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    தனிச்சிறப்பு

    இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் முக்தியடைந்துள்ளார். ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்.

    ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரி களிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..

    இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட அந்த தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

    பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘ பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்..

    இந்த கோவிலில் தினசரி விஸ்வரூபம், காலசந்தி, உச்சி கால பூஜை. சாயரட்சை, அத்தாழம், அர்த்தசாமம் ஆகிய பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம் கார்த்திகை மாதம் கைசிகஏகாதசி திருவிழாக்கள் நடந்து புரட்டாசி நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்திப் பெற்றது ஆகும். விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது. அன்றைய தினங்களில் காலை, மதியம் 2 நேரங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும், பகலில் நம்பி சுவாமிகளுக்கு திருமஞசனமும், இரவில் கருட சேவை உற்சவமும் இடம்பெறும்.

    புரட்டாசி மாத பூஜைகள்


    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் திருமலை நம்பிக்கு சிறப்பு பூஜைகள், வெகு விமரிசையாக நடைபெறும்.
    ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு நித்திய பூஜைகள் நடைபெறும். நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை பால், எண்ணெய் உள்ளிட்டவைகளை கொண்டு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அன்றைய தினங்களில் பெருமாளை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அன்று மட்டும் பகல் 2.15 மணி முதல் 6 மணி வரை பக்தர்களுக்காக சிறப்பு துப பூஜை, தீப பூஜை, குட பூஜை, கற்பூர ஆராத்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    பெருமாளுக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல், நைவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறும். தொடர்ந்து கட்டளைதாரர்களுக்கு சிறப்பு மரியாதை செய்தல் நடைபெறும். மாலை 6 மணிக்கு திருமலை நம்பிக்கு சாயரட்சை பூஜைகள் நடைபெறும்.
    கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரை யோரத்தில் அமைந்துள்ளது.
    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப் பட்டுள்ளது.

    கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.

    கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.
    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.

    திருமணம்

    திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.

    இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.

    புனித தீர்த்தங்கள்

    இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன.

    தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி உற்சவம்

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் வெகுவிமர்சையாக விழா நடந்து வருகிறது. அதிகாலையில் 2 மணிக்கு பெருமாள் விஷ்வரூப தரிசனம் நடக்கிறது. சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மாலையில் சாமி வீதி உலா நடைபெறும்.

    தேசிகர் உற்சவம்

    மேலும் புரட்டாசி மாதத்தில் முக்கிய விழாவாக தேவநாதசாமியின் பக்தராக இருந்து தியானம் செய்து முக்தி அடைந்த தேசிகர் மகா உற்சவம் நடக்கிறது.
    இந்த விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது பின்னர் இரவு ஹம்ச வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

    தினமும் காலை மற்றும் மாலையில் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், பிள்ளைகிளை வாகனம், சந்திர பிரபை, மோகன அவதாரம், வெள்ளி சிம்ம வாகனம், வெண்ணைத்தாழி சேவை, யானை வாகனம், சூர்ணாஅபிஷேகம், தங்க விமானம், பேட்டை உற்சவம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. பின்னர் வருகிற அக்டோபர் 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை தேசிகர் தேர் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் நவராத்திரி 9-ம் நாள் உற்சவ விழாவும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    பிரம்ம உற்சவ விழாவின் முக்கிய விழாவாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவோணம் நட்சத்திரத்தன்று தேசிகர் ரத்னாங்கி சேவை அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் கோலாகலமாக நடைபெறுகிறது. பின்னர் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், ராமன், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் , பள்ளி கொண்டநாதர், ஆண்டாள், ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு சாமி சன்னதிகளில் சென்று வழிபடுகிறார்.

    பின்னர் மாலையில் சாமி வீதி உலா உற்சவம் தீர்த்தவாரி பெருமாள் தாயார் தேசிகருக்கு சாற்றுமுறை உற்சவம் நடக்கிறது. இதையடுத்து கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து 9-ந்தேதி காலை, மாலை இருவேளையும் தேசிகர் பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. கடைசி நாள் உற்சவத்தில் தேசிகர் சாமி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

    நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள்


    புரட்டாசி மாதம் வரக்கூடிய நான்கு சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவநாதசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
    திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பொது மக்கள் மொட்டை யடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.

    இதில் முதல் சனிக் கிழமை, 2-வது சனிக் கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 3-வது சனிக்கிழமைகளில் குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

    திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதுமட்டுமன்றி புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளிலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இரவு கோவில் வளாகம் அருகே தங்கி விட்டு அதிகாலையில் பெருமாளை தரிசித்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    கோவில் நடை  திறக்கும் நேரம்

    இந்த கோவிலில் புரட்டாசி மாதம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும். மற்ற மாதங்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு சாற்றப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும்.
    108 திவ்ய தேச கோவில்களில் 8-வது திவ்ய தலமாகவும். பஞ்சரங்க கோவில்களில் இரண்டாவது இடமாக அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் கோவிலடியில் எழுந்தருளியிருக்கும் அப்பால ரெங்கநாதர்.
    108 திவ்ய தேச கோவில்களில் 8-வது திவ்ய தலமாகவும். பஞ்சரங்க கோவில்களில் இரண்டாவது இடமாக அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் கோவிலடியில் எழுந்தருளியிருக்கும் அப்பால ரெங்கநாதர்.

    கல்லணை- திருக்காட்டுப் பள்ளி சாலையில் கோவிலடி கிராமத்தில் காவிரி கரையோரத்தில் தரைமட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது அப்பால ரெங்கநாதர் கோவில்.

    கடந்த காலத்தில் துர்வாச முனிவரின் கடும் கோபத்திற்கு ஆளான உபமன்யு என்ற மன்னன் தன் நாடு நகரங்களை இழந்தான். செய்வது அறியாமல் திண்டாடிய உபமன்யுதன் சாபம் தீர தனக்கு சாபம் அளித்த துர்வாச முனிவரிடமே சரண் அடைந்து சாபம் தீர வழி வேண்டினார். துர்வாச முனிவர் உபமன்யு வின் சாபம் தீர அன்னதானம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    இதன்படி அன்னதானம் செய்ய கோவிலடி பகுதியில் தங்கியிருந்து அன்னதானம் செய்து வந்தார். அன்னதானம் செய்து வந்த ஒரு நாளில் வயதான அந்தணர் ஒருவர் மன்னன்முன் தோன்றி அன்னம் கேட்டார். தயாரித்து இருந்த உணவு அனைத்தையும் ஒருசேர உண்ட முதியவர் மீண்டும் உணவு கேட்டார்.

    இதை கண்டு வியப்படைந்த மன்னர் முதியவரிடம் மன்னிப்பு கேட்டு தங்கள் பசியாற இன்னும் என்ன வேண்டும் என்று கேட்க. முதியவர் ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டார். அப்போது தான் வந்திருக்கும் முதியவர் பெருமாளே என்று எண்ணி விரைந்து அப்பம் தயாரித்து குடத்தில் இட்டு முதியவரிடம் அளித்தார். அப்பம் நிரம்பிய குடத்தை உபமன்யுவிடம் இருந்து பெற்ற முதியவர் தன் உண்மையான உருவத்தை காட்டினார். இதனால் உபமன்யு சாபம் நீங்கியது. இந்த அற்புதம் நிகழ்ந்த இந்த இடமே கோவிலடி ஆகும்.

    அப்பக்குடத்தான்

    உபமன்யு மன்ன னிடம் இருந்து அப்பம் பெற்றதால் கோவிலடி திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாள் அப்பக் குடத்தான் என்று அழைக்கப்படு கிறார்.
    மூலஸ்தானத் தில் வலது கரத்தில் அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் புஜங்க சயனத்தில் மேல்நோக்கி உள்ளார் அப்பக்குடத்தான். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முந்தி அடியெடுத்து வைத்த தலம் என்பதால் கோவிலடி என்று பெயர் வழங்கப்படு வதாகவும் கூறப் படுகிறது. புராணங்களில் திருப்பேர்நகர் என்று அழைக்கப்பட்டு வரும் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு தினமும் அப்பம் செய்து நைவேத்தியம் செய்யப்பட்டு வருகிறது.

    கோவிலடி பெருமாளுக்கு திருமண தடை உள்ளவர்கள்இரண்டு துளசி மாலையை கொண்டு வந்து பெருமாளுக்கு சாத்தி வழிபட்டு ஒரு மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். அப்பக்குடத்தான் சேவடி யில் பூமிதேவி தவம் செய்து கொண்டிருப்பதால் நிலம் தொடர்பாக தீராத பிரச்சினைகள் உள்ள வர்கள் கோவிலடிக்கு வந்து பூஜை செய்து வழிபட்டால் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை.

    நோய் வாய்ப்பட்டவர்கள் மூன்று சனிக்கிழமைகள் கோவிலடி பெருமாள் கோவிலுக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட உடல் நலம் பெறுவார்கள். தங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நிலை காரணமாக நிதி நெருக்கடி மற்றும் கணவன்- மனைவி களுக்கிடையே மன மாச்சர்யம் உள்ள தம்பதிகள் வெள்ளிக் கிழமைகளிலும். திருவோண நட்சத்திர நாளிலும் கோவிலடிக்கு வந்து பெருமாள் மற்றும் தாயார் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீங்கி ஏற்றம் பெறுவார்கள்.

    இத்திருக் கோவிலில் குழந்தை பேறு இல்லாத தம்பதியர் சந்தான கோபால கிருஷ்ணனுக்கு வளர்பிறை நாட்களில் கற்கண்டு நைவேத்யம் செய்து 10 குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தாங்களும் சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும். கோவிலடி திருக்கோவிலில் மூலவர் அப்பக்குடத் தான். தாயார் கமலவள்ளி தாயார். இத்திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ராபத்து நாட்கள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி நாளில் சுவாமி பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார். பங்குனி மாதத்தில் பெரிய தேரில் பெருமாள் வீதியுலா வருவார். இத்திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் அன்ன தானம் நடைபெறுகிறது.

    இந்தத் திவ்ய தேசத்திலிருந்து தான், நம்மாழ்வார் மோட்சத்திற்குப் போனதாகச் சொல்வார்கள். இக்கோயிலில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ் வார்கள், கருடன், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. வைகுண்ட ஏகாதசி விழாவில் 10- நாட்களும் கலந்து கொள்பவர்களுக்கு மோட்சம் உண்டாகும்.

    புரட்டாசி மாத வழிபாடுகள்

    கோவிலடி அப்பக்குடத்தான் கோவிலில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமானதாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவார். நவராத்திரி விழாவில் 9 நாட்களும் கமலவள்ளி தாயார் கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். இக்கோவிலில் அப்பம் நைவேத்யமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    தஞ்சையில் இருந்து கல்லணை செல்லும் அனைத்து பஸ்களும் கோவிலடியில் நின்று செல்லும்.
    சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட அழகு ஆலயம் பெருவளநல்லூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட அழகு ஆலயம் பெருவளநல்லூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். இந்த ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. பழமையின் நினைவுச் சின்னமாகத் திகழும் ஐந்தடுக்கு ராஜகோபுரத்தை கடந்ததும், விசாலமான மண்டபம் உள்ளது. அதைத் தாண்டியதும் அழகிய மகாமண்டபம்.

    இதன் மேல் திசையில் உள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்ததும், கருவறையில் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கும் பிரகதீஸ்வரரை வழிபடலாம். இந்த லிங்கம் பவள லிங்கமாக காட்சி தருகிறது. மகாமண்டபத்தின் எதிரே இறைவி பிரகந்நாயகி நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னையின் மேல் இருகரங்களில் அங்குசமும் பாசமும் இருக்க, கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரைகளைக் காட்டி பக்தர்களை கவர்ந்திருக்கிறார் இந்த அன்னை.

    ஆலயத்தின் திருச்சுற்றில் மேற்குப் பகுதியில் விநாயகர் அருளாசி வழங்குகிறார். இவரது சன்னிதியை அடுத்து, முருகப்பெருமான் சன்னிதி இருக்கிறது. வள்ளி- தெய்வானை சமேதராக ஆறுமுகத்தோடும், பன்னிரு கரங்களோடும் மயில் வாகனத்தில் அமர்ந்தபடி அருளும் இந்த முருகப்பெருமானைக் காண கண்கோடி வேண்டும்.

    திருச்சுற்றின் வடக்குப் பகுதியில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்புரிகின்றனர். இங்கு நவக்கிரகங்களின் அமைப்பு வித்தியாசமாக உள்ளது. தனது துணைவியுடன் நடுநாயகமாக சூரியன் வீற்றிருக்க, பிற கிரக நாயகர்கள் சூரியனை பார்த்தபடி அருள்பாலிப்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். ஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. பொதுவாக சூரியன் மற்றும் பைரவர் திருமேனிகள் ஆலயத்தின் கிழக்கு பிரகாரத்தில் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ராஜகோபுரத்தின் உட்புறம் அழகான மாடத்தில் வலதுபுறம் பைரவரும், இடது புறம் சூரியனும் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயம் விசாக நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாகவும் விளங்குகிறது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது ஜென்ம நட்சத்திர தினத்தில் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.

    நாம் வணங்கும் போது பவளமாய் பளிச்சிட்டு நமக்கு அருள்புரியும் இத்தல இறைவன், நம் வாழ்க்கையிலும் பளீரென ஒளி விளக்கேற்றி பகை விலக்கி நம்மை நிறைவோடும், வளமோடும் வாழ வைப்பார் என பக்தர்கள் நம்புவது உண்மையே.

    தினமும் இரண்டு கால ஆராதனைகள் நடைபெறும் இந்த ஆலயமும், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருச்சி- அன்பில் பேருந்து சாலையில் லால்குடியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருவளநல்லூர் திருத்தலம்.
    108 திவ்ய தேசங்களில் ஒப்பிலியப்பன் கோவிலில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆயிரம் ஆண்டுகள் கடந்து மிளிரும் அழகுடன் சுத்தானந்த விமானத்துடன் கூடிய கருவறையில் திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற நின்ற திருக்கோலத்துடன் கிழக்கு திசை நோக்கி சுமார் 9 அடி உயரத்தில் ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீனிவாசன், திருவிண்ணகரப்பன், உப்பிலியப்பன் எனும் திருநாமங்கள் கொண்டும் அழைக்கிறார்கள். பெருமாளுக்கு வலது புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலத்துடன் அருளும் (தனி சன்னதி கிடையாது) தாயார் பூமா தேவி பூமி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

    இவர்களுக்கு இடது புறம் பெருமாளுக்கு கன்னிகாதானம் செய்து வைத்த மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்த நிலையில் வணங்கும் நிலையில் உள்ளார்.
    இத்தல தீர்த்தம் அகோ ராத்ர புஷ்கரணியாகும். திருப்பதி வெங்கடா சலபதி சுவாமிக்கு செய்து கொண்ட பிரார்த் தனைகளை அவரின் அண்ணனான இத்தல ஸ்ரீனிவாசப் பெருமாளிடம் செலுத்தலாம். ஆனால் இங்கு பிரார்த்தனை செய்து கொண்டு திருப்பதியில் செலுத்தக்கூடாது என்பது ஐதீகம்.

    திருவிண்ணகரம் என அழைக்கப்பட்ட இத்தலத்தினை இன்றைய காலக் கட்டத்தில் பக்தர்கள் தென்னக திருப்பதி என்றும் உப்பிலியப்பன் கோயில் என்றும் அழைக்கின்றார்கள். இத்தலம் ஸ்ரீவைணவ ஆழ்வார களால் மங்களா சாசனம் செய்யப் பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார், திருமங்கை யாழ்வார், பொய்கையாழ்வார், மற்றும் பேயாழ்வார் என 4 ஆழ்வார்களாலே மொத்தம் 47-பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட உப்பிலியப்பன் கோவிலை ஒப்பிலியப்பன் கோயில் என்றும் அழைக்கிறார்கள்

    தல வரலாறு

    இத்தலத்தில் நம்மாழ்வார் தனது திருவாய்மொழி (6-3-9) மங்களா சாசனத்தில் தன்னொப் பாரில்லப்பன் என பாடுகிறார். இதனால் தனக்கு ஒப்பார் இல்லாத அப்பன் - ஒப்பில்லா அப்பன் என்பதால் ஒப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார். “மிருகண்ட மகரிஷியின் புதல்வரான பக்த மார்க்கண்டேயர் இத்தலத்தில் விஷ்ணு பகவானை நோக்கி தவம் இயற்ற துளசி பறிக்க சென்றார். அப்போது அந்த துளசி வனத்தில் ஒரு செடியின் அருகில் சிரித்த வண்ணம் மயக்கும் கயலுடன் வியக்கும் அழகுடன் மழலையாக மலர்ந்த மலராக பூத்திருந்த ஸ்ரீ மகாலட்சுமியை கண்ட மார்க்கண்டேயர் பாசம் பொங்கும் மனதுடன் எடுத்து வளர்த்து வந்தார்.

    காலங்கள் கடந்தன. மகாலட்சுமி மழலை மொழி தெளிந்தாள். அப்போது அவளை திருமணம் செய்து கொள்ள பெருமாள் வயது முதிர்ந்த அந்தணர் வடிவில் பங்குனி மாதம், ஏகாதசி, திரு வோணம் கூடிய சுபதினத்தில் வந்து மார்க்கண்டேயரிடம் தான் மணமுடிக்க ஸ்ரீமகாலட்சுமி யை பெண் கேட்க மார்க்கண்டேயரோ “என் பெண்ணோ சிறுகுழந்தை அவள் சமையலில் லவணம் (உப்பு) சேர்க்கக்கூட அறியா வயது.. அப்படி இருக்க எப்படி இது சாத்தியமாகும்? என்று வினவ ...

    அந்தணர் வடிவில் வந்த பெருமாள் தங்களின் புதல்வி உப்பு சேர்க்காமல் சமைத்தாலும் கூட நான் அதை அமுதமாக ஏற்றுக்கொள்வேன் என பெருமாள் பதிலுரைக்க, வந்திருப்பது மகா விஷ்ணு தான் என பின்பு அறிந்து மார்க்கண்டேய மகரிஷி பெருமாளுக்கு தன் பெண்ணை கன்னிகாதானம் செய்துகொடுத்த தலம் இதுவாகும்.

    ஆதலால் இத்தலத்தில் இன்றும் பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை. எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்ப தால் ” லவண வர்ஜித வேங்கடேசன்” (உப்பினை விலக்கிய பெருமாள் ) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் - உப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
    108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மார்க்கண்டேய மகரிஷி, கருடபகவான், காவிரி அன்னை, தர்ம தேவதை ஆகியோர் இத்தல பெருமாளை வணங்கி பேறு பெற்றுள்ளார்கள். இத்தலத்திலுள்ள பூமி நாச்சியார் சமேத உப்பலியப்பனை பசு நெய் தீபம் இட்டு துளசி பத்திரம் கொண்டு வழிபட வாழ்வில் வளமும், நலமும் நிறையும் என்பது ஐதீகம்.

    இக்கோவிலில் பிரார்த்தனைத் திருக்கல்யாண உற்சவம், கருடசேவை, மூலவர் திருமஞ்சனம், முதலியன வைபவங்களுக்கு பக்தர்கள் தேவஸ் தானத்தில் அதற்கான உரிய தொகை செலுத்தி செய்யலாம். ஒவ்வொரு மாதம் சிரவண நட்சத்திரத்தன்று சிரவண தீப விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இங்கு பங்குனி மாதம் பிரம்மோற்சவம், புரட்டாசி சனிகிழமைகளில் சிறப்பு வழிபாடுகள், ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
    கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தூரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் இருக்கிறது.

    தென்னக திருப்பதி

    தென்னக திருப்பதி என்று ஒப்பிலியப்பன் கோவில் போற்றப்பட்டு வருகிறது. இதனால் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இக்கோவிலில் வருடப்பிறப்பன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்றைய தினம் முழுவதும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதேபோல் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சிதம்பரம், போன்ற ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
    ×