search icon
என் மலர்tooltip icon

    சிங்கப்பூர்

    • போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
    • 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    கோலாலம்பூர்:

    தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா்.

    இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா். இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

    அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, உயா்நீதி மன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018-ல் தீா்ப்பு அளித்தது.

    இந்நிலையில், தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) நிறைவேற்றப்பட உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    • மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளது.
    • தங்கராஜு சுப்பையா (வயது 46) என்பவருக்கு வருகிற 26-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

    சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அங்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி போதைப்பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்கராஜு சுப்பையா (வயது 46) என்பவருக்கு வருகிற 26-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

    சிங்கப்பூர் அரசின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்கராஜுவை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற இறுதிவரை போராட உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • சிங்கப்பூர் ஆர்ச்சர்டு ரோட்டில் ஏராளமான இரவு விடுதிகளும், மதுபான பார்களும் உள்ளது.
    • வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முகமது அஸ்பரிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஆர்ச்சர்டு ரோட்டில் ஏராளமான இரவு விடுதிகளும், மதுபான பார்களும் உள்ளது. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்த பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சம்பவத்தன்று தேவேந்திரன் சண்முகம் (வயது 34) என்பவர் சென்றார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த இவர் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் வணிக வளாக படிக்கட்டில் சென்று கொண்டு இருந்த போது முகமது அஸ்பரி அப்துல் கஹா (27) என்பவருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முகமது அஸ்பரி திடீரென தேவேந்திரன் சண்முகத்தின் நெஞ்சில் கை வைத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

    இதில் படிக்கட்டில் இருந்து உருண்டு விழுந்த தேவேந்திரன் சண்முகத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை.

    அங்குள்ள இரவு விடுதி முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதனை அந்த விடுதி நிர்வாகம் மறுத்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முகமது அஸ்பரிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வாய்ப்பு உள்ளது.

    • இருவரும் டாக்டரிடம் ஆலோசனைக்கு செல்ல முடிவெடுத்ததால் சட்ட நடவடிக்கையை காவ்ஷிகன் கைவிட்டார்.
    • இருவரும் 1½ ஆண்டு மருத்துவ ஆலோசனையை தொடர்ந்து வந்தனர். ஆனால் காவ்ஷிகனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரை சேர்ந்தவர் காவ்ஷிகன். இவரும் நோராடான் என்ற பெண்ணும் கடந்த 2016-ம் ஆண்டு நண்பர்களாக பழகினார்கள். இதற்கிடையே நோரா மீது காவ்ஷிகன் காதல் வயப்பட்டார்.

    2020-ம் ஆண்டு நோராவிடம் தனது காதலை தெரிவித்தார். ஆனால் காதலை ஏற்க மறுத்த நோரா, இந்த உறவை நட்பாக மட்டுமே பார்ப்பதாக தெரிவித்தார்.

    இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. தனது காதலை ஏற்க மறுத்து உணர்வு ரீதியாக கொடுமைப்படுத்துவதாக நோரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவ்ஷிகன் முடிவு செய்தார்.

    பின்னர் இருவரும் டாக்டரிடம் ஆலோசனைக்கு செல்ல முடிவெடுத்ததால் சட்ட நடவடிக்கையை காவ்ஷிகன் கைவிட்டார்.

    இருவரும் 1½ ஆண்டு மருத்துவ ஆலோசனையை தொடர்ந்து வந்தனர். ஆனால் காவ்ஷிகனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

    தன் காதலை ஏற்க வேண்டும் அல்லது தொழில், தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்ற முடியாத சேதாரத்தை நோரா சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

    இதனால் காவ்ஷிகனிடம் இருந்து நோரா விலக தொடங்கி இருந்தார். இது காவ்ஷிகனுக்கு மேலும் கஷ்டத்தை கொடுத்தது. இதையடுத்து நோரா மீது கோர்ட்டில் காவ்ஷிகன் இரண்டு வழக்குகளை தொடர்ந்தார்.

    அதில் தன்னை மன அழுத்தங்களுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கியதற்காகவும், என்னுடைய தொழில் வாழ்க்கையை சிதைத்தற்காகவும் 3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பீட்டில் ரூ.24 கோடி) இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு முந்தைய விசாரணை வருகிற 9-ந்தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த கொலை சம்பவம் சிங்கப்பூரையே உலுக்கியது.
    • காயத்ரிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சிங்கப்பூர் :

    சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் (வயது 41). கடந்த 2015-ம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங் நகாய்டான் என்ற பெண் வீட்டு வேலை பணிக்கு சேர்ந்தார்.

    இந்த சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பியாங் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனை செய்தபோது, பல மாதங்களாக அவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காயத்ரி தனது வீட்டு பணிப்பெண் பியாங்குக்கு சரியாக உணவு அளிக்காமல் அடித்து கொடுமைபடுத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு காயத்ரியின் தாயார் பிரேமா நாராயணசாமி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இந்த கொலை சம்பவம் சிங்கப்பூரையே உலுக்கியது.

    இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரி மற்றும் பிரேமா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில் காயத்ரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் காயத்ரியின் தாயார் பிரேமாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

    • பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது.
    • பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் அனுமதி அளிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியுள்ளது.

    இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், அந்துப் பூச்சிகள், தேனிக்கள் போன்ற இனங்களை சிங்கப்பூரில் வசிக்கும் மனிதர்கள் உணவாக உட்கொள்ள முடியும். இந்த பூச்சிகளை நேரடியாகவோ, அல்லது எண்னையில் பொரித்தோ சாப்பிட முடியும் என்று அங்குள்ள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

    பூச்சிகளை உனவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை சிங்கப்பூர் உணவுத்துறை பெற்றுள்ளது.

    முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உணவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    சமீபகாலமாக மனிதர்கள் உணவாக உட்கொள்வதற்காகவும், கால்நடை தீவனத்துக்காகவும் வணிகரீதியான பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஊக்குவித்து வருகிறது.

    • கோத்தபய ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்ட சமூக வருகை பதிவு காலாவதியானதால் வெளியேறினார்
    • கோத்தபய தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிங்கப்பூர்:

    இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்டி ஏற்பட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் புரட்சியாக உருவெடுத்தது. நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்த நிலையில், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்தபடி பதவியை ராஜினாமா செய்தார்.

    சிங்கப்பூரில் கோத்தபய தங்கி இருப்பதற்கான, சமூக வருகை அனுமதி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து கோத்தபய ராஜபக்சேக்கு மேலும் 2 வாரம் அனுமதியை நீட்டிக்கும்படி சிங்கப்பூரிடம் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது.

    இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இன்று வெளியேறினார். அவருக்கு வழங்கப்பட்ட சமூக வருகை அனுமதி காலாவதியானதால் வெளியேறியதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. அவர் தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தாய்லாந்துக்கு கோத்தபய ராஜபக்சேவின் தற்காலிக பயணத்தை தாய்லாந்து பிரதமர் உறுதி செய்துள்ளார். மேலும், நிரந்தர அடைக்கலம் கோரும்போது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டேன் என்று கோத்தபய உறுதியளித்திருப்பதாக தாய்லாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி சென்றார்.
    • சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான விசா காலம் நாளையுடன் முடிவடைகிறது.

    சிங்கப்பூர்:

    இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். அவர் சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான விசா காலம் நாளையுடன் முடிவடைகிறது. கோத்தபய ராஜபக்சேக்கு மேலும் 2 வாரம் விசா நீட்டிப்பு வழங்கும்படி சிங்கப்பூரிடம் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது.

    இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    • இந்திய தூதரகம் ஈஷ்வர் லால் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
    • ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஈஷ்வர் லால் சிங்கை சந்தித்து பேசி உள்ளார்.

    சிங்கப்பூர் :

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடியவர், ஈஷ்வர் லால் சிங் (வயது 92). இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் ஆவார்.

    இவர் 1943-ல் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, சுபாஷ் சந்திரபோசுடன் உரையாடியவர் ஆவார். இவர் சிங்கப்பூரில் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

    அவருடைய நெருங்கிய உறவினரான மெல்விந்தர் சிங் இதுபற்றி கூறும்போது, "ஈஷ்வர் லால் சிங் மரணத்தை மிகுந்த வேதனையுடன் அறிவிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

    அங்குள்ள இந்திய தூதரகம், ஈஷ்வர் லால் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

    ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், கடந்த 2019-ல் சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஈஷ்வர் லால் சிங்கை சந்தித்து பேசி உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

    இந்திய தேசிய ராணுவத்தில் சிங்கப்பூர், மலேசியாவை சேரந்த முக்கிய இனக்குழுக்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் ஆகஸ்டு 11-ந்தேதி வரை தங்க அனுமதி.
    • கோத்தபய ராஜபக்சேவுக்கும் தனிச்சலுகைகளோ, சட்ட பாதுகாப்போ அளிக்கவில்லை.

    சிங்கப்பூர் :

    இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மக்கள் எதிர்ப்பை தொடர்நது, கடந்த மாதம் 13-ந் தேதி மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார். அங்கு எதிர்ப்பு எழுந்ததால், மறுநாள் சிங்கப்பூருக்கு சென்றார். அன்றே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.

    அவருக்கு 14 நாட்கள் தங்கி இருப்பதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டை சிங்கப்பூர் அரசு வழங்கியது. இந்த அனுமதி மேலும் 14 நாட்களுக்கு (ஆகஸ்டு 11-ந் தேதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி. ஜெரால்டு ஜியாம் கேட்ட கேள்விக்கு அந்நாட்டு வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொதுவாக, பிற நாட்டு அரசுகளின் முன்னாள் தலைவர்களுக்கு சிங்கப்பூர் அரசு எவ்வித தனிச்சலுகைகளோ, சட்ட பாதுகாப்போ, விருந்தோம்பலோ அளிப்பது இல்லை.

    கோத்தபய ராஜபக்சேவுக்கும் தனிச்சலுகைகளோ, சட்ட பாதுகாப்போ அளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ''அரசியல்வாதிகள் தஞ்சம் கோரும் இடமாக சிங்கப்பூர் மாறிவிடுமா?'' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட மந்திரி கே.சண்முகம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    வெளிநாட்டினர் உரிய பயண ஆவணங்களுடன் வந்தால், சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயத்தில், தேசநலன் கருதி, வெளிநாட்டினரை அனுமதிக்க மறுப்பதற்கும் நமக்கு உரிமை உள்ளது.

    ஒரு வெளிநாட்டுக்காரர், அவரது நாட்டில் தேடப்படுபவராக இருந்தால், அவரது அரசு வேண்டுகோள் விடுத்தால், அவரை பிடிக்க சட்டத்துக்கு உட்பட்டு சிங்கப்பூர் அரசு உதவும். ஒரு வெளிநாட்டுக்காரரின் முன்னாள், இ்ந்நாள் அந்தஸ்தை கருதி, அவருக்கான அச்சுறுத்தலை ஆய்வு செய்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • கோத்தபய ராஜபக்சே 28-ந்தேதிவரை மட்டுமே சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும்.

    கொழும்பு :

    போராட்டக்காரர்களின் எதிர்ப்பை தொடர்ந்து, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். 13-ந் தேதி, மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். மறுநாள், அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார்.

    அத்துடன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு 14 நாட்கள் தங்கி இருப்பதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டை சிங்கப்பூர் அரசு வழங்கி உள்ளது. எனவே, அவர் 28-ந் தேதிவரை மட்டுமே அங்கு தங்கி இருக்க முடியும்.

    இந்நிலையில், நேற்று கொழும்பு நகரில் பேட்டி அளித்த இலங்கை போக்குவரத்து மந்திரியும், மந்திரிசபை செய்தித்தொடர்பாளருமான பந்துல குணவர்த்தனாவிடம் இதுதொடர்பாக நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு அவர் கூறியதாவது:-

    கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவோ அல்லது மறைந்து வாழ்வதாகவோ நாங்கள் கருதவில்லை. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பி வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அட்டார்னி ஜெனரலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது பற்றியும் நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு பந்துல குணவர்த்தனா, ''அத்தகைய சூழ்நிலை உருவானால், கோத்தபய ராஜபக்சேவுக்கு எந்த தீங்கும் நேராதவாறு நாட்டில் உள்ள பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்'' என்று கூறினார்.

    தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வக்கீல்கள் சிலர், தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்துக்காக கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக கைது செய்யுமாறு சிங்கப்பூர் அட்டார்னி ஜெனரலிடம் குற்றவியல் புகார் கொடுத்துள்ளனர்.

    இதுவரை அதிபராக இருந்ததால், கோத்தபய ராஜபக்சேவுக்கு சட்ட பாதுகாப்பு இருந்தது. இப்போது சட்ட பாதுகாப்பு இல்லாததால் அவர் மீது புகார்கள் அளிக்கப்படுகின்றன.

    • கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்.
    • கோத்தபய ராஜபக்சே கடந்த 14-ந் தேதி சிங்கப்பூருக்கு சென்றார்.

    சிங்கப்பூர்:

    இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். 13-ந் தேதி இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கு எதிர்ப்பு எழுந்ததால், சிங்கப்பூர் சென்றார். தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும், அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது.

    இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே பயணம் தொடர்பான பத்திரிகைகளின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் குடியேற்ற ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அந்த ஆணையம் கூறியிருப்பதாவது:-

    தனிப்பட்ட பயணமாக கோத்தபய ராஜபக்சே கடந்த 14-ந் தேதி சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.

    பொதுவாக இலங்கையை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது, 30 நாள்வரை தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்படும் அதற்கு மேல் தங்குவதை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். தகுதி அடிப்படையில் அவை தனித்தனியாக பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.

    இதற்கிடையே, சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மக்கள், இலங்கையில் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    ஆட்சி மாற்றத்துடன் உறுதியான கொள்கை மாற்றமும் வர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சிலர் ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்து, அதற்கான பணத்தை சேமித்து, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு சைக்கிள் பயன்படும் என்பதால், வேறு சிலர் சைக்கிள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள். நம்பகமான நபர்கள் மூலம் உதவி அனுப்புவதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

    ×