என் மலர்
அமெரிக்கா
- கலிபோர்னியாவில் 1998ல் தொடங்கப்பட்ட பேபால், பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்தது
- நிறுவனத்தை அதன் சரியான அளவில் நிலைநிறுத்துகிறோம் என்றார் க்ரிஸ்
இணையதள வழியாக பண பரிமாற்றங்களை அனுமதிக்கும் நாடுகளில், பயனர்களுக்கு பண பரிமாற்ற செயலி மூலம் சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனம், பேபால் (PayPal).
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1998ல் தொடங்கப்பட்ட பேபால், ஒரு பன்னாட்டு நிறுவனமாகும்.
இந்தியாவிலும் பேபால் நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரூ மற்றும் ஐதராபாத் நகரில் கிளைகள் உள்ளன.
பேபாலின் தலைமை செயல் அதிகாரி (CEO) அலெக்ஸ் க்ரிஸ் (Alex Chriss) ஊழியர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இன்று மிக சங்கடமான ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.
உலகளாவிய நமது ஊழியர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் குறைக்கப்பட உள்ளது.
சில ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியும், சில காலியிடங்களை நீக்கியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
நமது வர்த்தகத்தை சரியான அளவில் சரியான வேகத்தில் கொண்டு சென்று பயனர்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை அளித்து வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதே நேரத்தில் நமது வணிகத்தில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இடங்களில் முதலீடு செய்வதை தொடர்வோம்.
எந்தெந்த ஊழியர்களின் பெயர் இப்பட்டியலில் உள்ளதோ அவர்களுக்கு இன்றிலிருந்து இவ்வார இறுதிக்குள் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.
வெளியேறும் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம்.
இவ்வாறு அலெக்ஸ் கூறினார்.
பேபாலில் சுமார் 29,900 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, 2500 பணியாளர்கள் பணியிழக்க போவதாக தெரிகிறது.
- 52 வயதான நிக்கி ஹாலே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
- "அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" என்றார் நிக்கி
வரும் நவம்பர் இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் களத்தில் தீவிரமாக போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

குடியரசு கட்சியின் சார்பில், டிரம்பை தவிர, இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் தென் கரோலினா மாநில கவர்னரும், ஐ.நா.வின் முன்னாள் அமெரிக்கா தூதருமான 52 வயதான நிக்கி ஹாலே (Nikki Haley) ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த 2016 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க வழிவகுத்த "அமெரிக்காவை மீண்டும் பெரிய நாடாக மாற்றுங்கள்" (Make America Great Again) எனும் முழக்கத்தையே இவ்வருட தேர்தலுக்கும் முழக்கமாக கையில் எடுத்துள்ளார், டிரம்ப்.
தற்போதைய நிலவரப்படி, வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள தலைவராக டிரம்ப் பார்க்கப்படுகிறார்.
ஆனால், டிரம்புடன் போட்டியிட முன்வந்த பிற தலைவர்கள் பின்வாங்கி விட்ட நிலையிலும் நிக்கி ஹாலே தொடர்ந்து ஆதரவு தேடி பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரசாரத்தில் நிக்கி தெரிவித்ததாவது:
"அமெரிக்காவை மீண்டும் சீராக்குங்கள்" (Make America Normal Again).
80-வயதுடைய இருவர் பணியாற்றியதை விட நாம் சிறப்பாக பணியாற்ற முடியும்.
அவர்கள் இருவரின் பரஸ்பர தாக்குதல் மக்களை களைப்படைய செய்து விட்டது. இதில் குழப்பமும் சச்சரவும் மட்டுமே மிஞ்சுகிறது.
தங்களின் சின்னஞ்சிறு நோக்கங்களுக்காக சண்டையிடும் தலைவர்கள் மக்களுக்கு வேண்டாம். அமெரிக்க மக்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்துபவர்களே அவர்களுக்கு அதிபர்களாக வேண்டும்.
நீங்கள் பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் ஒரு அதிபராக நான் நிச்சயம் பணியாற்றுவேன்.
இவ்வாறு நிக்கி கூறினார்.
இதற்கிடையே, "நிக்கி ஹாலே அதிபரானால் அமெரிக்காவை முடிவில்லா போர்களுக்கு தள்ளி விடுவார். ஏனெனில், நிக்கி போர்களையே விரும்புகிறார். தன்னை ஏன் மக்கள் ஏற்க வேண்டும் எனக் கூற அவரிடம் இதுவரை சரியான வாதங்கள் ஏதுமில்லை" என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
77 வயதான டொனால்ட் டிரம்ப் மற்றும் 81 வயதான ஜோ பைடன், இருவருமே முதுமை நிலையை அடைந்து விட்டதால், வேறு ஒரு இளம் தலைவர் அதிபராக வேண்டும் என பல வாக்காளர்கள் கருதுவதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
- 7-வயது ப்ரைசன் டுவாங், ஆசிய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த சிறுவன்
- காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பித்த போது ப்ராண்டனின் வாகனம் விபத்துக்குள்ளானது
அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியில் உள்ள மாநிலம் அயோவா (Iowa). இதன் தலைநகரம் டெஸ் மாயின்ஸ் (Des Moines).
அயோவாவின் க்ரீன் கவுன்டி பிராந்தியத்தில் உள்ள நகரம் ஜெஃபெர்சன். இங்குள்ள க்ரீன் கவுன்டி ஆரம்ப பள்ளியில் படித்து வந்தவர், ஆசிய வம்சாவளி சிறுவனான, 7 வயது ப்ரைசன் டுவாங் (Bryson Duong).
நேற்று மதியம், ப்ரைசனின் தந்தை ப்ராண்டன் டுவாங் (34), சுமார் 12:40 மணியளவில், பள்ளிக்கு வந்து அங்கு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ப்ரைசன் டுவாங்கை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறினார். அவர்கள் மறுக்கவே, வாக்குவாதம் செய்து ப்ராண்டன் மகனை அழைத்து சென்றார். அவர்கள் இருவரும் டொயோட்டா டகோமா காரில் சென்றனர்.
இதையடுத்து காவல்துறையினருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இருவரும் வீடு திரும்பவில்லை.
இதை தொடர்ந்து "ஆம்பர் அலர்ட்" எனும் எச்சரிக்கை வெளியிட்ட காவல்துறையினர், காணாமல் போன இருவரை குறித்தும் பொதுவெளியில் விவரங்களை வெளியிட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையினருக்கு உடனே தெரிவிக்குமாறு கோரினர்.
நீண்ட தேடுதலுக்கு பிறகு அவர்கள் சென்ற வாகனத்தை கண்ட காவல்துறையினர், அதனை நிறுத்த முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்று வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கிய ப்ராண்டன், சிறுவனை தூக்கி கொண்டு கையில் ஒரு துப்பாக்கியுடன் ஓடினார்.
ப்ராண்டனுடன் பேச்சுவார்த்த நடத்திய காவல்துறையினர், சிறுவனை மீட்டு, ப்ராண்டனை கைது செய்தனர்.
அவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒவ்வொரு ஊழியராலும் நிறுவனம் பெறும் வருவாய் குறைந்து விட்டது
- நிர்வாக ரீதியான தவறான முடிவுகளை லே-ஆஃப் மறைக்கிறது என்றார் பேராசிரியர் ஜெஃப்
2024 வருட ஜனவரியில் அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 25,000 ஊழியர்களை "லே ஆஃப்" எனப்படும் கூட்டு பணிநீக்கம் செய்தன.
புது வருட தொடக்கத்திலேயே இதன் அளவு பரவலாக அதிகரித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் அதிகப்படியான எண்ணிக்கையில் பல நிறுவனங்கள் பணியமர்த்தின. தற்போது உலக பொருளாதாரம் நலிவடைந்து வருவதால் அதிகமாக உள்ள ஊழியர்களை நிறுவனங்கள் வெளியேற்றுகின்றன.
சில வருடங்களாகவே, "ரெவன்யூ பர் எம்ப்ளாயி" (RpE) எனப்படும் ஒவ்வொரு ஊழியராலும் நிறுவனம் பெறும் வருவாய் குறைந்து வருகிறது. அதிக ஊழியர்களால் செலவினங்கள் அதிகரிப்பதை குறைக்க நிறுவனங்கள் பணிநீக்கத்தை ஒரு வழிமுறையாக கடைபிடிக்கின்றன.
இந்நிறுவனங்கள் அனைத்தும் பங்கு சந்தையில் பதிவு பெற்றவை. கடினமான பொருளாதார சூழ்நிலையிலும் வருவாய் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முதலீட்டாளர்களுக்கு காட்ட வேண்டிய கட்டாயம் இந்நிறுவனங்களுக்கு உள்ளது. எனவே ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதன் மூலம் தங்கள் பங்குகள் கணிசமாக ஏற அவை வழிவகுக்கின்றன.
ஒரே துறையில் உள்ள பல நிறுவனங்கள் ஒரே காலகட்டத்தில் லே-ஆஃப் செய்வதால், துறை சார்ந்த சிக்கல் இருப்பதாக கருதி, முதலீட்டாளர்கள், நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட தவறான முடிவுகளை பொருட்படுத்த மாட்டார்கள் என வாஷிங்டன் வணிக மேலாண்மை துறை பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப் ஷுல்மேன் தெரிவித்தார்.
தொழில்நுட்ப துறையில் துவங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி வழங்கி வந்த முதலீட்டாளர்கள் குறைந்து வருகின்றனர். எனவே, அவையும் பணிநீக்கத்தில் ஈடுபடுகின்றன.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறை பெரும் வளர்ச்சி பெறும் என நம்பி, 1 வருடத்திற்கும் மேலாக இந்நிறுவனங்கள் பிற துறைகளில் முதலீடுகளை குறைத்து ஏஐ துறையில் முதலீடுகளை அதிகரித்து வருவதும் ஒரு காரணம்.
உலக பொருளாதார மந்தநிலை நீடித்தால், இந்த சிக்கல் மேலும் தீவிரமடையலாம் என பொருளாதார வல்லுனர்களும், மனிதவள நிபுணர்களும் எச்சரிப்பதால் மென்பொருள் துறை ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
- உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ராணுவ உதவி செய்து வருகிறது
- ஆயுத விற்பனை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சம்
கடந்த 2023ல் அயல்நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள ராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.
2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அளவிற்கு அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையை தவிர, அமெரிக்க அரசே நேரடியாக விற்பனை செய்த $81 பில்லியன் வணிகமும் இதில் அடங்கும்.
இப்பட்டியலில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நார்வே ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), ஆஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகியவை அமெரிக்காவிற்கு சாதகமான ஆயுத விற்பனை வர்த்தகத்திற்கு உதவும் நாடுகள் ஆகும்.
இது குறித்து அமெரிக்க அரசு, "பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்" என தெரிவித்தது.
ஆயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷியாவிடமிருந்து வாங்குவதை நிறுத்திய பல உலக நாடுகள் அமெரிக்காவிடம் வாங்க தொடங்கி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.
அமெரிக்க அரசிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள், அமெரிக்காவின் தனியார் ராணுவ தளவாட விற்பனை நிறுவனங்களிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி பெற்று கொள்ளலாம் அல்லது தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் வாங்கலாம்.
ஆனால், இரண்டு வழிமுறைகளுக்கும் அமெரிக்க அரசின் முன்அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
- பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கிடந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவை சேர்ந்த மாணவர் நீல் ஆச்சர்யா, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று முன்தினம் திடீரென்று மாயமானார். இதுகுறித்து நீல் ஆச்சாரியாவின் தாய் கவுரி ஆச்சார்யா, எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, எனது மகன் நீல் ஆச்சார்யா மாயமாகி உள்ளார்.
அவரை கடைசியாக பல்கலைக்கழகத்தில் காரில் இருந்து இறக்கி விட்ட உபெர் டிரைவர் பார்த்துள்ளார். எனது மகனை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து நீல் ஆச்சார்யாவை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.
இந்த நிலையில் மாயமான மாணவர் நீல் ஆச்சார்யா உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கிடந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனித மூளையிடும் கட்டளைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது நியூராலிங்க்
- மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் தென்படுவதாக நியூராலிங்க் தெரிவித்தது
அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீசுவரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவியது, நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனம்.
மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டது நியூராலிங்க்.
கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஒரு மனிதரின் மூளையில் "சிப் பொருத்துதல்" வெற்றிகரமாக நடந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
மேற்கொண்டு எந்த தகவலையும் நியூராலிங்க் வழங்கவில்லை.
நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பக்கவாதம் போன்ற மனிதர்களை செயலிழக்க செய்யும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகள் அசைவற்று போய் விடும். அந்நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் மூளை, உடல் உறுப்புகளுக்கு எண்ணங்கள் மற்றும் கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பும் பரிமாற்றமும் நின்று விடும்.
அத்தகைய குறைபாடு உள்ளவர்களின் மூளையில் மின்னணு சிப் பொருத்தி, அவற்றை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தி, அதன் பயனாக உறுப்புகளை செயல்பட வைக்க முயல்வதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியர்கள் வீடற்றவர்களுக்கு உணவு மற்றும் போர்வை வழங்கி உதவுகின்றனர்
- காவல்துறையை அழைக்க போவதாக விவேக், ஜூலியனை எச்சரித்தார்
அமெரிக்காவின் பல மாநிலங்களிலும், ஆண்டு வருமானம் $45,000த்திலிருந்து $75,000 வரை மட்டுமே உள்ளவர்கள் அதிகரித்து வரும் வாடகை பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வருமானம் கூட இல்லாத பலர், வசிப்பிடம் இல்லாமல் சாலையோரங்களிலும், சுரங்கப்பாதைகளிலும் வசிக்கின்றனர்.
கடும் குளிரில், உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அத்தியாவசிய தேவைகளும் இன்றி அவ்வாறு கூட்டம் கூட்டமாக வசித்து வருவது வருடாவருடம் அங்கு கூடி வருகிறது.
அமெரிக்காவில் சென்று பணியாற்றும் பல இந்தியர்கள் இவர்களுக்கு உணவு மற்றும் போர்வை உள்ளிட்டவைகளை வழங்கி உதவுகின்றனர்.
அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள ஜியார்ஜியா மாநில டிகால்ப் கவுன்டி பகுதியின் தென்கிழக்கில் உள்ள நகரம் லிதோனியா (Lithonia). அப்பகுதியில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட் எனும் உணவகத்தில் பகுதி-நேர வேலை பார்த்து வந்தவர், இந்தியரான விவேக் சைனி (25).
அந்த உணவகத்தில் சில தினங்களுக்கு முன் ஜூலியன் ஃபால்க்னர் (Julian Faulkner) எனும் வீடற்ற ஒருவர் உணவும் குடிநீரும் கேட்டு வந்தார். அவர் மேல் இரக்கப்பட்டு விவேக்கும் உணவக பணியாளர்களும் அவருக்கு உணவு, சிப்ஸ், மற்றும் கோக் வழங்கினர். குளிருக்கு போர்வை கேட்ட ஜூலியனுக்கு அவர்கள் தங்களிடம் இருந்த உடைகளை வழங்கினர்.
அடிக்கடி அங்கு வருவதும் போவதுமாக இருந்த ஜூலியனுக்கு விவேக் தன்னால் இயன்ற உதவிகளை தினமும் செய்து வந்தார்.
உணவக வாசலை வசிப்பிடம் போல் ஜூலியன் பயன்படுத்தி உறங்க தொடங்கியதும் அவரை விவேக் வேறு எங்காவது சென்று விடுமாறு கூறினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடை வாசலில் இருந்து வெளியேறா விட்டால் காவல்துறையினரை அழைக்க வேண்டி வரும் என விவேக் ஜூலியனிடம் எச்சரித்தார்.
சிறிது நேரத்தில் விவேக் வீட்டிற்கு புறப்பட தயாராகி வெளியே வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மறித்த ஜூலியன், கையில் மறைத்து வைத்திருந்த ஒரு சுத்தியலால் விவேக்கின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். விவேக் முகத்தில் ஜூலியன் சுமார் 50 முறை சுத்தியலால் தாக்கினார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த விவேக், சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தார்.
சம்பவத்தை கண்ட பிற பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு நின்று கொண்டிருந்த ஜூலியனை கைது செய்து அவரிடம் சுத்தியலை தவிர இருந்த மேலும் 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.
ஜூலியனை சிறையில் அடைத்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பி.டெக் பட்டப்படிப்பை முடித்து 2 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபுகுந்த விவேக், சில மாதங்களுக்கு முன் வணிக நிர்வாகத்தில் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.
- தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது.
வாஷிங்டன்:
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இதனால் ஹமாசுக்கு ஆதரவாக இருக்கும் போராளிகள் குழுக்கள் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளன.
இந்த நிலையில் ஜோர்டானில் நடந்த டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிரியா எல்லைக்கு அருகில் வட கிழக்கு ஜோர்டானில் அமெரிக்க படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்த படைகளை குறி வைத்து அதிரடி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிர் இழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக அமெரிக்க படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜோர்டானில் அமெரிக்க தளங்களின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்களை இழந்து இருக்கிறோம். இந்த தாக்குதலின் உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது. இது சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் தீவிர ஈரான் ஆதரவு போராளி குழுக்களால் நடத்தப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இதற்குதக்க பதிலடி கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2022ல் எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை வாங்கி எக்ஸ் என பெயரை மாற்றினார்
- குழந்தைகள் குறித்த வீடியோக்களை ஆஸ்டின் அலுவலகம் கண்காணிக்கும்
பயனர்களின் உரையாடல்களுக்கான உலகின் முன்னணி சமூக வலைதளம், எக்ஸ் (X).
எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ள பயனர்கள் ஒருவருக்கொருவர் உரை, புகைப்படம், வீடியோ, கோப்பு உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் செய்திகளை பிறருடன் பரிமாறி உரையாட முடியும்.
கடந்த 2022ல், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.
சில தினங்களுக்கு முன் உலக புகழ் பெற்ற அமெரிக்க பாடகி டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift) தோன்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டீப்ஃபேக் (deepfake) வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகியது. எக்ஸ் நிறுவனத்தில் உடனடியாக புகார்கள் அளிக்கப்பட்டும் அவற்றை நீக்கவே பல மணி நேரங்கள் ஆனது.
இதனையடுத்து, செயற்கை நுண்ணறிவு வீடியோக்களால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக இத்தகைய தளங்களை நடத்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்நிலையில், எக்ஸ், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில ஆஸ்டின் (Austin) நகரில் தளத்தின் உள்ளடக்கத்தில் இது போன்ற வீடியோக்கள் வெளியாகாமல் தடுக்க ஒரு அலுவலகத்தை நிறுவ முடிவு செய்துள்ளது.
100 பணியாளர்களுக்கும் மேல் இந்த அலுவலகத்தில் குழந்தைகள் குறித்து இடம் பெறும் தகாத உள்ளடக்கங்களை கண்டறிந்து உடனுக்குடன் நீக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்கள்.
- நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.
- ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர்.
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏர்லைன்ஸ் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஹெலன்மேரி ஹார்வத். இவர் 2-ம் உலக போரில் பங்கேற்றவர். தனது 21 வயதில் வெர்ஜினியாவில், உலக போர் நடைபெற்ற கால கட்டத்தில் அங்கு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.
இந்நிலையில் அவரது 102-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஹெலனுக்கு எதிர்பாராத பரிசளிக்க அவரது மகன் முடிவு செய்தார். அவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது தாயின் பிறந்தநாள் குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்ததும் அந்த விமான நிறுவனம் உலக போரில் பங்கேற்ற ஹெலன்மேரி ஹார்வத்தின் 102-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது.
அதன்படி ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர். செயின்ட் லூயிசில் அவர் இறங்கியதும் ஹெலனை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் அமெரிக்க கொடிகளை அசைத்து ஹெலனின் தலையில் கிரீடம் அணிவித்தனர். மேலும் ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஹெலனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
- ஷார்க் டேங்க் தொட்டியில் நீந்தியவாறே சுறா மீன்களை காணலாம்
- தொட்டி நீர் ரத்தமாக மாறியதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்
அமெரிக்காவின் மேரிலேண்டு மாநிலத்தின் உள்ளது பால்டிமோர் (Baltimore).
பால்டிமோரில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவு (Atlantis Paradise Island) பகுதியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஸ்னார்கெலிங் (snorkeling) எனப்படும் நீர் விளையாட்டு பிரபலமானது.
"ப்ளூ அட்வென்சர்ஸ் பை ஸ்டூவர்ட் கோவ்" எனும் நிறுவனம், இத்தீவில் "ஷார்க் டேங்க்" எனும் சுறா மீன் உள்ள மிக பெரிய தொட்டியில் பார்வையாளர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், ஷார்க் டேங்க் தொட்டியில் "ஸ்னார்கெலிங்" செய்தவாறே சுறா மீன்களை காணும் வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்த விளையாட்டிற்காக தங்கள் 10 வயது மகனுடன் ஒரு தம்பதியினர் வந்திருந்தனர். அவர்களும் அந்த தொட்டியில் நீந்தியவாறே சுறா மீன்களை கண்டுகளித்து வந்தனர்.
அச்சிறுவன் சுறா மீன்களை ஆர்வமாக கண்டவாறு மகிழ்ச்சியில் நீந்தி கொண்டிருந்தான்.
அப்போது இரு சுறாக்கள் அவன் அருகே நீந்தி வந்தன. எதிர்பாராதவிதமாக அதில் ஒரு சுறா திடீரென அவன் மீது பாய்ந்து கடித்தது.
அத்தொட்டி நீர் ரத்த போல் மாறியது. உடன் நீந்திய அவனது பெற்றோர் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அச்சிறுவனின் தந்தை உடனடியாக நீந்தி தனது மகனருகே வந்து அவனை மேலே தூக்கி சென்றார்.
பாதுகாவலர்கள் உதவியுடன் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவன் கால் பலமாக சுறாக்களால் கடிக்கப்பட்டது தெரிய வந்தது.
அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமடைந்து வருகிறான்.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் முன்பாக ஆபத்துகளை விளக்கும் சில கோப்புகளில் சிறுவனின் பெற்றோர் கையெழுத்திட்டிருந்தனர். எனவே, அவர்கள் அபாயத்தை உணர்ந்து தாங்களாக முன்வந்து இதில் பங்கேற்றதால், நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் அதன் பொறுப்பை துறந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ராயல் பஹாமாஸ் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






