என் மலர்
பாலஸ்தீனம்
- இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
- இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
காசா:
இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே தவிக்கும் நிலை உருவானது.
எனவே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்பினருக்கும் இடையே 20 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனால் காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்தார்.
இதனையடுத்து காசாவிடம் தற்போது உயிருடன் உள்ள 20 பணய கைதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைப்பது, காசாவில் நிறுத்தப்பட்டு உள்ள இஸ்ரேல் ராணுவத்தை பின்வாங்குவது, நீண்ட காலமாக இஸ்ரேல் சிறையில் உள்ள 250 பேர் மற்றும் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட 1,700 பேரை விடுவிப்பது என இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கூறியதை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், காசாவில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்வமுடன் தாயகம் திரும்பி வருகின்றனர்.
- இதற்கு ஈடாக இஸ்ரேல் 250 பாலஸ்தீனக் கைதிகளையும், காசாவிலிருந்து சிறை பிடிக்கப்பட்ட சுமார் 1,700 பேரையும் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது.
- ஃபதா (Fatah) என்ற இயக்கத்தை நடத்தி வந்த பர்குத்தி பாலஸ்தீனத்தில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்குப் பிறகு தலைமை ஏற்கத் தகுதி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.
காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து, ஹமாஸ் அமைப்பு சுமார் 20 இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவிக்க உள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேல் 250 பாலஸ்தீனக் கைதிகளையும், காசாவிலிருந்து சிறை பிடிக்கப்பட்ட சுமார் 1,700 பேரையும் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை இந்த செயல்முறை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாலஸ்தீனர்களிடையே அதிக செல்வாக்கு கொண்ட தலைவராக கருதப்படும் மர்வான் பர்கௌதி (Marwan Barghouti), இஸ்ரேல் விடுவிக்கவுள்ள கைதிகள் பட்டியலில் இடம்பெறாதது பேசுபொருளாகி உள்ளது.
பர்கௌதி உட்பட முக்கியமான உயர்நிலைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் வலியுறுத்தி வருவதாகவும், இதுதொடர்பாக மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஃபதா (Fatah) என்ற இயக்கத்தை நடத்தி வந்த பர்கௌதி பாலஸ்தீனத்தில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்குப் பிறகு தலைமை ஏற்கத் தகுதி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவர் பால்ஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா என்று கருதப்படுகிறார்.
தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
இதேபோல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய மர்வான் பர்கௌதி 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, கடந்த 23 ஆண்டுகளாக ஐந்து ஆயுள் தண்டனைகளுடன் இஸ்ரேலியச் சிறையில் உள்ளார்.
பாலஸ்தீனக் குழுக்களின் அரசியல் பிளவுகளைத் தாண்டி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் மிகப்பெரிய செல்வாக்கையும் ஆதரவையும் பர்கௌதி பெற்றுள்ளார்
பர்கௌதியை விடுதலை செய்தால் பாலஸ்தீனத்தில் குறிப்பிடத்தக்க தலைமையாக அவர் மாறக்கூடும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்றும் கூறப்படுகிறது.
- 2 வருட காசா இனப்படுகொலையில் 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
- போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சவரையும் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அக்டோபர் 2023 இல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் 2 வருடங்கள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் -இன் முயற்சியால் முடிவுக்கு வர உள்ளது.
பணய கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பும் , இஸ்ரேலும் ஏற்றுக்கொண்ட நிலையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இன்று இந்த போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சவரையும் ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி காசாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறும். இஸ்ரேலியக் காவலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள். ஹமாஸ் காவலில் உள்ள மீதமுள்ள இஸ்ரேலியக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.
இதனால் பணய கைதிகள் விடுதலையை எதிர்கொக்கும் இஸ்ரேலியர்களும், தினந்தோறும் நிகழும் தாக்குதல்களில் இருந்து விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை பெற்ற காசா மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த 2 வருடங்களில் நடந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் 67,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐநா கூறுகிறது. இதற்கிடையே உணவுப் பொருட்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்ததன் காரணமாக இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் காசா சுகாதர அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2 வருட காசா இனப்படுகொலையில் 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. அவர்களின் 1,029 குழந்தைகள் ஒரு வயதுக்குட்பட்டவர். இனப்படுகொலையின் போது பிறந்து பின்னர் 420 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள இடிபாடுகளை அகற்றவே 10 வருடங்கள் ஆகும் என ஐநா தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொடர் சோகங்களுக்கு முடிவுரையாக காசா மக்களுக்கு தற்போதைய போர் நிறுத்தம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், வியாழக்கிழமை அதிகாலையில் காசாவின் வடக்கு பகுதிகளில் குண்டுவெடிப்புகள் மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்ததாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் சில பகுதிகளில் தொடர்ந்த போதிலும் காசாவின் பல்வேறு பகுதிகளில் இந்த போர் நிறுத்தத்திற்கான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கான் யூனிஸில் உள்ள இளைஞர்கள் வீதிகளில் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர். கான் யூனிஸைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்ற இளைஞர், "போர் நிறுத்தம், இரத்தகளரி, கொலைகளுக்கு முடிவு வந்துவிட்டது. ஒட்டுமொத்த காசா பகுதி, அரபு மக்கள் மற்றும் உலகமே மகிழ்ச்சி அடைகிறது" என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
காசாவில் இரண்டு ஆண்டுகளாக நடந்த கொலைகளுக்கும் இனப்படுகொலைக்கும் பிறகு பாலஸ்தீனிய குடிமக்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தருணம் இது என்று காலெத் ஷாத் என்ற இளைஞர் குறிப்பிட்டார்.
- காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.
- வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 373.5 டிரில்லியன்) ஆகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும்.
போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம்.
குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களே மறுகட்டமைப்புக்கு நீண்ட காலம் எடுக்கக் காரணம்.

இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.
காசாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையில் 90% பேர் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர். காசாவின் 80% பகுதி இராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போருக்கு முன் பயிரிடப்பட்ட நிலங்களில், தற்போது 232 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யக்கூடியதாக உள்ளது. அதாவது, வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

வளமான மண் இல்லாதது உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. போருக்கு முன்பு காசா தனது மொத்த ஏற்றுமதியில் 32% ஸ்ட்ராபெர்ரிகள், 28% தக்காளி மற்றும் 15% வெள்ளரிகளை ஏற்றுமதி செய்து வந்தது.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் 83% பாசனக் கிணறுகளை அடைத்துள்ளன. வெடிபொருட்கள் மற்றும் இரசாயனங்கள் காரணமாக காசாவின் மண்ணில் ரசாயன அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த போரினால் ஏற்பட்ட சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா முன்னதாக தெரிவித்திருந்தது.
ஐநாவின் சுயாதீன விசாரணை கமிஷன் காசாவில் இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை என வரையறுத்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து எகிப்தில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்த பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க வேண்டியது அவசியம் என்று வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
- பசியால் வாடும் காசா மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் அனுப்ப ஐ.நா. தயாராக உள்ளது என்று அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
2023, அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லபட்டனர்.
இதன்பிறகு காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் பதிலடித் தாக்குதல்களில் இதுவரை 67,160 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
ஹமாஸ் தாக்குதல் தொடுத்து இன்றுடன் 2 இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிரழந்தவர்கள், பணய கைதிகளாக உயிரிழந்தர்வர்களுக்கு நினைவேந்தல் நடைபெற்றது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை ஏற்று போரை முழுவதுமாக நிறுத்துவது குறித்துஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் ரிசார்ட் நகரில் இன்று (அக்டோபர் 7) இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.
நேற்று (திங்கட்கிழமை) முதற்கட்டமாக நடந்த நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தையில், பிணைக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தம் ஆகிய முதல் கட்ட நிபந்தனைகளில் பெரும்பாலானவற்றை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்கள், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தூதுக் குழுவினருடன் தனித்தனியாகப் பேசினர்.
அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று டிரம்ப்புக்கு நிலவரங்களைத் தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க வேண்டியது அவசியம் என்று வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்து, மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் மற்றும் காசாவின் எதிர்கால நிர்வாகம் எப்படி இருக்கும் என்பன போன்ற முக்கிய கோரிக்கைகளில் இன்னமும் தெளிவின்மை நீடிக்கிறது.
ஹமாஸ் ஆயுதங்களைக் களைந்த பிறகு இஸ்ரேல் தனது படைகளை காசாவிலிருந்து திரும்பப் பெறும். பின்னர் காசாவுக்கு ஒரு சர்வதேச பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டு, டிரம்ப் மற்றும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோர் மேற்பார்வையிடும் ஒரு சர்வதேச நிர்வாகத்தின் கீழ் காசா இருக்கும்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் முன்மொழிவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பசியால் வாடும் காசா மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் அனுப்ப ஐ.நா. தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
- உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.
- பட்டினியால் இறந்தவர்களில் 154 குழந்தைகள் அடங்குவர்.
டிரம்ப் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் அறிவித்தார்.
ஆனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் பட்டினி இறப்பு எண்ணிக்கை 460 ஆக உயர்ந்தது. பட்டினியால் இறந்தவர்களில் 154 குழந்தைகள் அடங்குவர். ஆகஸ்ட் மாதம் பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 182 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இன்றைய தாக்குதல் தொடர்பாக பேசிய இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும், இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.
இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு ஒன்று, கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸுடன் திங்கட்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.
- டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.
கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
இதன் பின் ஹமாஸ் இதில் விரைந்து முடிவெடுக்க வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிரம்ப் காலக்கெடு விதித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உடனடி உதவி வழங்குவதற்கும், அரபு, இஸ்லாமிய நாடுகள் மற்றும் டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் திட்டத்தின் பிற விவரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தைநடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
ஆயுதத்தை கைவிடுவது உள்ளிட்ட அம்சங்களை ஹமாஸ் ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது.
- அங்கிருந்து வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என்று இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
- 20 அம்ச திட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, 48 பணயக்கைதிகளை விடுவித்து, அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்.
காசாவில் நேற்று இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பான மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு அல்-மசாவி உட்பட காசா முழுவதும் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியது.
அல்-மசாவியில் ஒரு உணவகத்தில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஒரு முதியவர், அவரது நான்கு மகன்கள் மற்றும் பேரன் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய காசாவின் அல்-புரேஜ் அகதிகள் முகாமில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டனர்.
மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலாக்கில் ஒரு வீட்டின் மீது நடந்த மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக புதன்கிழமை அன்று மக்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேற்ற இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் தெற்கில் இருந்து வடக்கு காசாவுக்குச் செல்லும் வழியை அடைத்தது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தங்கள் படைகள் காசா நகரை சுற்றிவளைக்கும் நிலைக்கு நெருங்கிவிட்டதாகவும், அங்கிருந்து வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கருதப்படுவார்கள் என்று கூறினார்.
இதற்கிடையே கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு டிரம்ப் உடைய 20 அம்ச போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதில் ஹமாஸ் முடிவெடுக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் அளிக்கும் என்று வெள்ளை மாளிகை எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபரின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வியாழக்கிழமை தெரிவித்தார்.
20 அம்ச திட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, 48 பணயக்கைதிகளை விடுவித்து, அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்.
பதிலுக்கு, இஸ்ரேல் கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்து, காசாவில் ஒரு அமைதி காக்கும் படை அவர்களை மாற்றிய பிறகு படிப்படியாக தனது படைகளை வாபஸ் பெறும்.
இந்த திட்டத்தை ஏற்பது குறித்து ஹமாஸ் கலந்தாலோசித்து வரும் நிலையில் நேற்றைய தாக்குதல் பின்னடைவாக அமைந்துள்ளது.
- காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
- இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன நகரமான காசா மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்கள் கிடைப்பதையும் கட்டுப்படுத்தி வருகிறது.
இதனால் ஒரு புறம் இஸ்ரேலின் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கிகளுக்கு இரையாகும் மக்கள் மறுபுறம் பட்டினியாலும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது.
மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து குளோபல் சீ ஃப்ளோட்டிலா புறப்பட்டது. இந்த ஃப்ளோட்டிலா 44 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய கப்பல்களைக் கொண்ட குழுவாகும்.
இவை இன்று (வியாழக்கிழமை) காலை உதவிகளுடன் காசாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் வருகை தந்த ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிறரை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தி சிறைபிடித்துள்ளது.
குளோபல் சுமுட் கப்பல்கள் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த மக்கள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோதல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று இஸ்ரேலிய கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்களின் பாதையை மாற்றுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுமுட் புளோட்டிலா தனது அறிக்கையில், இஸ்ரேலிய கடற்படை, அல்மா, சிரியஸ் மற்றும் அதாரா ஆகிய கப்பல்களை இடைமறித்து, கப்பல்களில் ஏறி நேரடி தகவல்தொடர்புகளைத் துண்டித்ததாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது.
- இஸ்ரேல்-ஹமாஸ் போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
- இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.
காசா சிட்டி:
பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், தங்களை தனி நாடாக அங்கீகரித்ததற்காக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு
வரவேற்பு தெரிவித்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- பின்னர் லாரியில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தினார்.
காசாவில் இஸ்ரேல் தரைவழியாக பீரங்கிகள் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீன பொதுமக்களின் எண்ணிக்கை 65,100 ஐ தாண்டியுள்ளது. மக்கள் நகரை விட்டு அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நேற்று, காசாவில் உள்ள மருத்துவமனைகள் அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. காசா நகரில் தரைவழித் தாக்குதல் தொடங்கிய பின்னர், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
காசாவில் உள்ள அல்-ஷிஃபா மற்றும் அல்-அஹ்லி மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி 15 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நேற்று தெற்கு காசாவின் ரஃபாவில் ஹமாஸ் நடத்திய எதிர் தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேஜர் ஓம்ரி சாய் பென் மோஷே (26), லெப்டினன்ட் எரான் ஷெலெம் (23), லெப்டினன்ட் ஈதன் அவ்னர் பென் இட்ஷாக் (22), மற்றும் லெப்டினன்ட் ரான் அரிலி (20) ஆகியோர் கொல்லப்பட்டனர். நேற்று காலை 9:30 மணிக்கு ஹமாஸ் போராளிகள் அவர்கள் பயணித்த இராணுவ வாகனத்தைத் தாக்கினர்.
இதற்கிடையே இஸ்ரேலிய துறைமுக நகரமான ஈலாட் மீது ஹவுத்திகள் நேற்று ட்ரோன் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ஹோட்டல் தீப்பிடித்தது.
மேலும், மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான ஆலன்பி கிராசிங்கில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஜோர்டானிய லாரி ஓட்டுநர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய அதிகாரிகள் லாரியை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தியவர் இஸ்ரேலியர்கள் மீது கைத்துப்பாக்கியால் சுட்டார். பின்னர் லாரியில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தினார். சம்பவ இடத்திலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை 150-க்கும் மேற்பட்ட முறை காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் காசா நகரத்தின் பெரும் பகுதிகளை அழித்தன. சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கிய தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்துகிறது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மட்டும் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, அக்டோபர் 7, 2023 முதல் இதுவரை 65,062 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 165,697 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை 150-க்கும் மேற்பட்ட முறை காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சம் அடைந்துள்ள கூடார முகாம்களுக்கு அருகில் உள்ள உயரமான கட்டிடங்களை தரைமட்டமாக்கியுள்ளன.

இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் காசா நகரத்தின் பெரும் பகுதிகளை அழித்தன. சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்தத் தாக்குதல்களால், பல மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன.
காசா நகரில் இருந்து தென் பகுதிக்கு மக்கள் வெளியேறுவதற்காக இரண்டு நாட்களுக்கு புதிய வழித்தடம் ஒன்றை இஸ்ரேல் திறந்துள்ளது. வாகனங்களிலும், கால்நடையாகவும் பாலஸ்தீன மக்கள் காசா நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வான், கடல் மற்றும் நிலத்திலிருந்து நகரம் மீது கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதாகவும், மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாகவும் தப்பிச் செல்லும் மக்கள் தெரிவித்தனர்.
உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தன. இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவை என்று மக்கள் விவரிக்கின்றனர்.
இதற்கிடையே காசா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்தியுள்ளது. கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளன
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு, இஸ்ரேல் இனப்படுகொலையை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.






