என் மலர்
ஆப்பிரிக்கா
- முதலில் ஒரு நிலநடுக்கமும், 19 நிமிடங்களுக்கு பிறகு மற்றொன்றும் ஏற்பட்டது.
- நேற்றே உயிர்பலி 1000த்தை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் (Marrakech) அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.
தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மராகெச் மற்றும் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. சீட்டு கட்டு சரிவது போல் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
நள்ளிரவு நேரத்தில் இது நடந்ததால் உறங்கி கொண்டிருந்த பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.
அதே போல் காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.
நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என நேற்று மதியம் அறிவிக்கப்பட்டது.
அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 2000-ஐ தாண்டியுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதிகபட்சமாக அல்-ஹவுஸ் பிராந்தியத்தில் 1,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் டரவ்டான்ட் பகுதியில் 452 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்க பகுதிகளில் இன்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
மேலும் 2,059 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 1,404 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.
நில நடுக்கத்தால் பல மலை கிராமங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. அங்கு வீடுகள், கற்குவியலாக காட்சி அளிக்கின்றன. அங்கு மீட்புப்பணிகள் நடந்து வந்தாலும், தொலை தூரத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு அதிகமாக மீட்புக்குழுவினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மலை கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
மராகெச் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. பல கட்டிடங்கள், கடுமையான விரிசல்கள் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளன. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடிந்து விழுந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் யாராவது இருக்கிறார்களா என்பதை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலநடுக்கம் மொராக்கோ நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள மொராக்கோவுக்கு பல்வேறு நாட்டினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அண்டை நாடான அல்ஜீரியா மனிதாபிமான அடிப்படையில் தனது வான்வெளியில் மொராக்கோவுக்கு செல்லும் விமானங்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. மொராக்கோவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2021ல் அந்நாட்டுடன் தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா, தனது வான்வெளியை மொராக்கோ பயன்படுத்த தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் உதவிகளை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளன.
வட ஆப்பிரிக்காவில் கடந்த 120 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்நாட்டில் ஆகஸ்ட் 26 அன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது
- நடந்து முடிந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக இந்த அமைப்பினர் கூறினர்
மத்திய ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையோர பகுதியில் உள்ள நாடு கேபோன். இதன் தலைநகரம் லிப்ரேவில்.
சுமார் 25 லட்சம் மக்கள் தொகையும், 3 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட கேபோன், தனது வருவாய்க்கு பெரும்பாலும் எண்ணெய் ஏற்றுமதியை நம்பியுள்ளது.
இங்கு அதிபராக அலி போங்கோ ஒண்டிம்பா 14 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருந்து வந்தார். இந்நாட்டில் ஆகஸ்ட் 26 அன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பே வன்முறையையும், பொய்செய்தி பரவலை தடுக்கவும் போங்கோ அரசு, இணைய முடக்கத்துடன் கூடிய ஊரடங்கிற்கு உத்தரவிட்டது.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபரான 64-வயது அலி போங்கோ ஒண்டிம்பா, 3-வது முறையாக 64 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அவரை எதிர்த்த ஆல்பர்ட் ஓண்டோ ஓசா 30 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தலுக்கு முன்னரே தனது வெற்றியை உறுதியாக நம்பிய ஓசா, இந்த முடிவை ஏற்று கொள்ளாமல் "ஏமாற்று வேலை" என விமர்சித்தார். நேற்று முன் தினம், ஓசாவின் பிரச்சார மேற்பார்வையாளர் மிக் ஜாக்டேன், "வன்முறை, ரத்தமின்றி ஆட்சியை கொடுத்து விடுங்கள்" என போங்கோவிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் "மாற்றத்திற்கும், நிறுவனங்களை மீட்டெடுப்பதற்குமான கமிட்டி" எனும் அமைப்பை சேர்ந்தவர்களாக தங்களை கூறி கொண்டு, பத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் அரசாங்க தொலைக்காட்சியில் தோன்றி, நடந்து முடிந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சி முடிவிற்கு வந்து விட்டதாகவும், அரசாங்கத்தின் அனைத்தும் அமைப்புகளும் கலைக்கப்பட்டதாகவும் அறிவித்தனர்.
இந்த வீரர்களுடன் நாட்டின் ராணுவ வீரர்களும், காவல்துறையை சேர்ந்தவர்களும் இருந்தனர். இவர்கள் இதனை அறிவிக்கும் போதே தலைநகர் லிப்ரேவில்லில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. திடீரென கேபோன் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படும் 10-வது ராணுவ ஆட்சி மாற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளைக்கு 2 லட்சம் பேரல் எண்ணெய் உறபத்தி செய்யும் திறன் படைத்த நாடு கேபோன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
- மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர்.
கேப் வெர்டே:
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர்.
இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சுமார் 63 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி கப்பலில் புறப்பட்டனர். இந்த படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் 56 உடல்களை மீட்டனர். மேலும் 7 பேரின் உடல்களை தேடி வருகின்றனர் என ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
- வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோது விபத்து.
- விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரொக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் மிக மோசமான சாலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொராக்கோ உள்பட பிற வட ஆப்பிரிக்க நாடுகளின் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அந்நாட்டில் உள்ள பல ஏழை குடிமக்கள் கிராமப்புறங்களில் பயணம் செய்ய மினிபஸ்களைப் பயன்படுத்துகின்றனர்.
மொராக்கோவில் ஆண்டுதோறும் சராசரியாக 3,500 சாலை இறப்புகள் மற்றும் 12,000 காயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தேசிய சாலை பாதுகாப்பு அமைப்பின்படி, சராசரியாக ஒரு நாளைக்கு 10 இறப்புகள் பதிவாகின்றன.
- செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- போலீசாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தினர். தலைநகர் டக்கார் மற்றும் தெற்கில் உள்ள ஜிகுயின்ச்சோர் நகரில் பெரும் வன்முறை மூண்டது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையை ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் போலீசாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த மோதலில் 9 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக உள்துறை மந்திரி அன்டோயின் பெலிக்ஸ் அப்துலே டியோம் கூறும்போது, "வன்முறையை தூண்டுவதற்காக போராட்டக்காரர்கள் பயன்படுத்திய சில சமூக ஊடக தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்றவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
- பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்.
மத்திய ஆப்பிரிக்கா கேமரூனில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி அருகே டூடவாலா- எடியா சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
கேமரூனில் தெற்கு நகரமான எசேகா நோக்கி பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மணல் ஏற்றிச் செல்லும் கனரக லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் அதிகளவில் சாலை விபத்துகள் நடப்பதாகவும், ஆண்டுக்கு சுமார் 1,500 பேர் விபத்துகளில் இறக்கிறார்கள் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
- சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
- விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன.
- வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 3 வாகனங்கள் ராணுவ டிரோன் துப்பாக்கி சூட்டில் அழிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் செவரே பகுதியில் மூன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். சுமார் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தாக்குதலில் 20 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
இதற்கிடையே வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 3 வாகனங்கள் ராணுவ டிரோன் துப்பாக்கி சூட்டில் அழிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
- 4 முறை இரட்டை குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பது 5 முறை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் 5 முறை பிறந்துள்ளது.
- மரியத்தின் சொத்துக்களை எல்லாம் எடுத்து கொண்டு அவரது கணவர் குடும்பத்தை விட்டு ஓடி விட்டார்.
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்தவர் மரியம் நபடான்சி. இவருக்கு இளம் வயதிலேயே திருமணமாகி உள்ளது. அதாவது மரியத்திற்கு 12 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அவர் தனது 13-வது வயதிலேயே கர்ப்பமானார். அவருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர் தான் உலகின் மிகவும் ஸ்பெர்டைல் பெண்ணாக கருதப்படுகிறார்.
அதன் பிறகு தொடர்ந்து குழந்தைகள் பெற்றெடுத்த மரியத்திற்கு தற்போது 40 வயது ஆகிறது. இதுவரை அவருக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் 4 முறை இரட்டை குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பது 5 முறை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் 5 முறை பிறந்துள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு இருக்கும் ஹைப்பர் ஓவுலேட் என்ற நிலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவர் மொத்தம் 44 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அதில் 6 குழந்தைகள் உயிரிழந்து விட்டது.
இப்போது 20 சிறுவர்களும், 18 சிறுமிகளும் மட்டுமே இருக்கிறார்கள். மரியத்தின் சொத்துக்களை எல்லாம் எடுத்து கொண்டு அவரது கணவர் குடும்பத்தை விட்டு ஓடி விட்டார். இதனால் மரியம் தனது குழந்தைகளை வளர்க்க கஷ்டப்பட்டு வருகிறார்.
- கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல்.
கம்பாலா:
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.
அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகிய வற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
அவர் கூறும்போது, இந்த மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் நமது பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவுவதாகும் என்றார்.
இந்த மசோதா பாராளுமன்றததில் 389 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. தற்போது மசோதா, ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்கிடையே ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இது வெறுக்கத்தக்க சட்டம் என்று தெரிவித்தனர்.
மனித உரிமை ஆர்வலர் சாரா கசண்டே கூறும்போது, "உகாண்டாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள். வெறுப்பை ஊக்குவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயல்கிறது" என்றார்
ஓரினச் சேர்க்கை ஆர்வலர் எரிக் நடாவுலா கூறும் போது, "பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல். எங்கள் எம்.பி.க்களின் தீர்ப்பு வெறுப்பு மற்றும் ஓரினச் சேர்க்கையால் மழுங்கடிக்கப்பட்டது பயமாக இருக்கிறது. இந்தக் கொடூர சட்டத்தால் யாருக்கு லாபம்?" இந்த மசோதா சட்டமாக கையொப்பமிடப்பட்டால், "கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டான உரிமைகள் உள்பட பல அடிப்படை உரிமைகளை மீறும்" என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
- கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
- சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டை பிரெட்டி என்ற பருவகால சூறாவளி தாக்கியது.
- இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 326 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மலாவி:
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும். இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய அமைச்சக அறிக்கை எச்சரித்து இருந்தது. இதற்கேற்ப சூறாவளி புயலால் பரவலாக பாதிப்பு ஏற்பட்டது என இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்துள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், நிலைமை மோசமடைந்து எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது. இதேபோல், பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என அந்தத் துறைக்கான ஆணையாளர் சார்லஸ் கலேம்பா கூறியுள்ளார்.
இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 326 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. தெளிவற்ற வானிலையால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.






