என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் பங்கேற்கவில்லை. சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.
    • பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியிலும் ஷிகர் தவான் களம் இறங்கவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    • குருணால் பாண்ட்யா பன்குரி சர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது.

    ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குருணால் பாண்ட்யா. இவர் இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது மனைவி பன்குரி சர்மாவிற்கு கடந்த 21-ந்தேதி ஆண்குழந்தை பிறந்துள்ளது.

    பிறந்த குழந்தை மற்றும் தனது மனைவியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, குழந்தையின் பெயர் வயு (Vayu) எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கவிர் (Kavir) என்ற ஆண்டு குழந்தை பிறந்தது. தற்போது அவனுக்கு இரண்டு வயது நிறைவடைய இருக்கும நிலையில், 2-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    குருணால் பாண்ட்யா மாடல் அழகியான பன்குரி சர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டி20 உலகக் கோப்பையில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் விளாசியர்.
    • கிறிஸ் கெய்ல், உசைன் போல்ட் ஆகியோரும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கை 2024 டி20 உலகக் கோப்பைக்கான தூதராக நியமனம் செய்துள்ளது.

    2007-ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரை அறிமுகப்படுத்தியபோது இங்கிலாந்து அணிக்கு எதிரான பிராட் ஓவரில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸ் அடித்து சாதனைப் படைத்தவர் யுவராஜ் சிங். மேலும், இந்திய அணி 2007 ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

    ஏற்கனவே டி20 கிரிக்கெட்டின் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், அதிவேக ஓட்டப்பந்தைய வீரராக கருதப்படும் உசைன் போல்ட் ஆகியோரையும் ஐசியி தூதராக நியமனம் செய்துள்ளது.

    இது தொடர்பாக யுவராஜ் சிங் கூறியதாவது:-

    ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தது உள்பட டி20 உலகக் கோப்பையில் விளையாடியதில் இருந்து எனது சில அருமையான கிரிக்கெட் நினைவுகள் வந்துள்ளன, எனவே இந்த பதிப்பின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, இது இன்னும் மிகப்பெரியதாக இருக்கும்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விளையாடுவதற்கான சிறந்த இடமாகும். மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்கள் உருவாக்கும் வைப் (vibe), உலகின் மற்ற பகுதியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமானது. அதே நேரத்தில் அமெரிக்காவிலும் கிரிக்கெட் விரிவடைகிறது. டி20 உலகக் கோப்பை மூலம்அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மோதல் இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக இருக்கும், எனவே புதிய மைதானத்தில் உலகின் சிறந்த வீரர்கள் விளையாடுவதைக் காண்பது ஒரு பாக்கியம்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. 20 அணிகள் 9 இடங்களில் 55 போட்டிகளில் விளையாடுகின்றன. இறுதிப் போட்டி ஜூன் 29-ந்தேதி பார்படோஸில் நடக்கிறது.

    • 2021-ல் நெதர்லாந்தின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    • அர்ஜென்டினா வீராங்கனை பெரு அணிக்கெதிராக 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    இந்தோனேசியா- மங்கோலியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி பாலியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசியா 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை நந்தா சகாரினி 61 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் மங்கோலியா 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் இந்தோனேசியாவிள் இளம் வீராங்களை ரொமாலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 24 ரன்னில் சுருண்டது. தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார் ரொமாலியா. மொத்தமாக 3.2 ஓவர்கள் வீசி ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் ஏழு விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இது அவருக்கு முதல் சர்வதேச போட்டியாகும்.

    இதற்கு முன்னதாக 2021-ல் நெதர்லாந்தின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஃப்ரெடெரிக் ஓவர்டிஜ் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியிருந்தது சாதனையாக இருந்தது. அர்ஜென்டினாவின் அலிசன் ஸ்டாக்ஸ் பெரு அணிக்கெதிராக 3 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • மிட்செல் மார்ஷ் மூன்று போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
    • கடந்த முறையில் இதுபோன்று தொடரின் பாதிலேயே வெளியேறினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம் பெற்றிருந்தார். காயம் காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். சுமார் 10 நாட்கள் கழித்து காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மிட்செல் மார்ஷ்க்குப் பதிலாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குல்பதீன் நயிப்பை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அவருடைய அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதன்காரணமாக முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் களம் காண்கிறார் குல்பதீன் நயிப்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ரஷித் கான், நூர் முகமது, ஓமர்ஜாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாடி வருகின்றனர். தற்போது அவர்கள் வரிசையில் குல்பதீன் நயிப்பும் இணைந்துள்ளார்.

    இந்த சீசனில் மிட்செல் மார்ஷ் மூன்று போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒரு விக்கெட் மட்டும் எடுத்துள்ளார். கடந்த வருடமும் போட்டியில் மத்தியில் இருந்து விலகினார். தற்போது இந்த சீசனிலும் போட்டியின் மத்தியில் இருந்து விலகியுள்ளார். டெல்லி அணி இவரை 6.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • Abhishek Sharma will be ready for India in six months Yuvraj Singh
    • ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 23 வயதான அபிஷேக் சர்மா யார் பந்து வீசினாலும் சிக்சர், பவுண்டரி விளாசுகிறார். டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து பவர்பிளேயில் எதிரணியை பயமுறுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் விளாசியுள்ளார்.

    இவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்டசத்திர ஆல்ரவுண்டர் யுராவஜ் சிங் கூறுகையில் இன்னும் ஆறு மாதங்களில் இந்திய அணிக்கு தயாராகிவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

    அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

    இந்திய அணியில் தேர்வு ஆவதற்கான நிலையில் உள்ளார். ஆனால், தற்போது அவர் உலகக்கோப்பைக்கு தயாராக இருப்பதாக நினைக்கவில்லை. உலகக்கோப்பையை பொருத்தவரையில் நாம் அனுபவமான வீரர்களை எடுக்க வேண்டும். உண்மையிலேயே சில வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர். உலகக் கோப்பைக்கப் பிறகு, அவர் இந்தியாவுக்காக விளையாட தயாராக வேண்டும். இதில்தான் அவர் கவனம் செலுத்த வேண்டும். வரும் ஆறு மாதங்கள் அபிஷேக் சர்மாவுக்கு முக்கியமானது.

    அவருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவருடைய ஸ்டிரைக் ரேட் அபாரம். ஆனால் மிகப்பெரிய ஸ்கோர் இன்னும் வரவில்லை. இதுபோன்ற ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம். சிறந்த ஸ்டிரைக் ரேட் இருந்தபோதிலும், நீங்கள் இந்தியாவுக்கு தகுதியானவராக சில பெரிய ஸ்கோர்கள் தேவை.

    பெரிய ஷாட்டுகள் அடிக்கும் திறன் அவரிடம் உள்ளது. இவர் பெரிய ஷாட் அடிப்பது சிறந்தது. ஆனால், ரொட்டேட் ஸ்டிரைக் செய்வதற்கு சிங்கிள் எடுப்பது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறப்பாக பந்து வீசும் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, மற்ற பந்து வீச்சாளர்களை டார்கெட் செய்வது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

    டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து அவர் அதிக நம்பிக்கை பெற்றுக் கொண்டிருப்பார். தற்போது டிராவிஸ் உலகத்தரம் வாய்ந்த வீரர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்துள்ளார். அவர் மிகப்பெரிய போட்டிக்கான வீரர். சிறந்த தொடக்கத்தை எப்படி மிகப்பெரிய ஸ்கோராக மாற்றுவது என்பதை கற்றுக் கொள்ள அபிஷேக் சர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இதைத்தான் அவர் டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    • எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது.
    • ஆர்.சி.பி.க்கு எதிரான ஆட்டத்தில் அன்றைய தினம் அவர்களுடையதாக அமையவில்லை.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் கிளாசன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த 15-ந்தேதி ஆர்சிபி அணிக்கெதிராக 287 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை பதிவு செய்தது.

    நேற்று மீண்டும் ஆர்சிபி அணியை எதிர்கொண்டது. இதில் எப்படியும் 300 ரன்கள் குவிக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களை ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றும் பரிதாபப்பட்டனர்.

    ஆனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. 207 இலக்கை எளிதாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா பவர்பிளேயில் விளாசி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் அசத்த சன்ரைசர்ஸ் அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டிராவிஸ் ஹெட் 1 ரன்னிலும், மார்கிராம், 7 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 13 ரன்னிலும், கிளாசன் 7 ரன்னிலும் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் எடுத்து யாஷ் யதாள் பந்தில் ஆட்டமிழந்தார்.

    300 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், 207 இலக்கை எட்ட முடியவில்லையே என ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தொடக்க வீரர்களிடம் 14 போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெட்டோரி கூறியதாவது:

    எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இன்றைய நாள் (நேற்று) அவர்களுடையதாக அமையவில்லை. கிரிக்கெட்டில் இதுபோன்ற நாட்கள் அமையும். 14 போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. துரதிருஷ்டவசமாக நாங்கள் மிடில் ஆர்டர் வரிசையில் ஆதரவு பெற முடியவில்லை.

    இது கடினமான தோல்விதான். என்றால், எந்த அணியும் எந்த அணியை ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்கடிக்க முடியும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஐபிஎல் எந்த போட்டியில் எளிதாக போட்டி என்பது கிடையாது.

    இவ்வாறு வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 18 சிக்சர்களும், ஆர்சிபி அணிக்கெதிரான முதல் போட்டியில் 22 சிக்சர்களும்,
    • டெல்லிக்கு எதிராக 22 சிக்சர்களும் விளாசியது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இந்த சீசன் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி அணிகளுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் குவித்தது. ஆர்சிபி-க்கு எதிரான முதல் போட்டியில் 287 ரன்கள் குவித்தது ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்னாகும்.

    நேற்று ஆர்சிபி-க்கு எதிராக 2-வது முறையாக மோதியது. இந்த போட்டியில் 207 இலக்கை எட்டமுடியாமல் 171 ரன்கள் எடுத்து 35 ரன்னில் தோல்வியை தழுவியது. ஆனால், இந்த போட்டியின் 2-வது ஓவரில் அபிஷேக் சர்மா சிக்ஸ் ஒன்று விளாசினார். இந்த சிக்ஸ் மூலம் இநத் ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் 100-வது சிக்ஸ் அதுவாகும்.

    இதன்மூலம் ஒரு சீசனில் 100 சிக்சர்களை முதன்முறையாக கடந்துள்ளது. இதற்கு முன்னதாக 2022 சீசனில் 97 சிக்சர்களும், 2016-ல் 89 சிக்சர்களும், 2018-ல் 88 சிக்சர்களும் அடித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 18 சிக்சர்களும், ஆர்சிபி அணிக்கெதிரான முதல் போட்டியில் 22 சிக்சர்களும், டெல்லிக்கு எதிராக 22 சிக்சர்களும் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கோலி தனது ஆட்டத்தின் நடுவில் அதிரடியை இழந்தது போல் தோன்றுகிறது.
    • கோலியிடம் இருந்து ஒவ்வொரு ரன்னாக வருகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி 9 ஆட்டத்தில் 430 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். ஒரு சதம், மூன்று அரை சதம் அடித்தார்.

    ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் கோலி 43 பந்தில் 51 ரன்கள் எடுத்தார்.

    இந்த நிலையில் கோலி அதிரடியாக விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    கோலி தனது ஆட்டத்தின் நடுவில் அதிரடியை இழந்தது போல் தோன்றுகிறது. நீங்கள் இன்னிங்ஸின் 14 அல்லது 15-வது ஓவரில் அவுட் ஆனதும், உங்களது ஸ்டிரைக் ரேட் 118-ல் இருக்கிறது என்றால் அதை உங்களிடம் இருந்து அணி எதிர்பார்க்கவில்லை.

    கோலியிடம் இருந்து ஒவ்வொரு ரன்னாக வருகிறது. உங்களுக்கு அடுத்து தினேஷ் கார்த்திக், லோம்ரர் இருக்கிறார்கள். எனவே நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும். இந்த அணுகுமுறைதான் பெங்களூரு அணிக்கு தேவை. கோலி ஆட்டத்தை தவறவிடுகிறார். அவர் பெரிய ஷாட்களை முயற்சிக்க வேண்டும் என்றார்.

    • பஞ்சாப் அணி நிலையற்ற ஆட்டத்தால் தடுமாறுகிறது.
    • பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், சாம் கர்ரன், அர்ஷ்தீப் சிங், ரபடா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு (2 முறை) டெல்லி, லக்னோ அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (சென்னை, ராஜஸ்தானிடம்) 10 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் சுனில் நரின் (286 ரன்), பில் சால்ட் (249), ஆந்த்ரே ரஸ்செல், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங் ஆகியோர் அதிரடி காட்டுகிறார்கள். பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஆல்-ரவுண்டர்கள் சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் வலுசேர்க்கிறார்கள். அதிக விலைக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும்.

    பஞ்சாப் அணி நிலையற்ற ஆட்டத்தால் தடுமாறுகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றதும் இதில் அடங்கும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டும் பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் பஞ்சாப்புக்கு வாழ்வா-சாவா? போன்றது.

    அந்த அணியில் பேட்டிங்கில் பின்வரிசை வீரர்களான ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா அவ்வப்போது கலக்குகிறார்கள். தொடக்க மற்றும் மிடில் வரிசை பேட்டிங் வலுவற்றதாக இருப்பது பாதகமான அம்சமாகும். பிரப்சிம்ரன் சிங், லிவிங்ஸ்டன், ரோசவ், பேர்ஸ்டோ ஆகியோர் தொடர்ந்து சொதப்புகிறார்கள். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை. அடுத்த ஆட்டத்திற்கு முன்பாக அவர் உடல்தகுதியை எட்டி விடுவார் என்று நம்புவதாக பஞ்சாப் பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி நேற்று தெரிவித்தார்.

    பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், சாம் கர்ரன், அர்ஷ்தீப் சிங், ரபடா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார் ஏற்றம் கண்டால் மேலும் பலம் சேர்க்கும்.

    நடப்பு தொடரில் 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கும் கொல்கத்தா அணி தனது மின்னல்வேக பேட்டிங்கை தொடர ஆர்வம் காட்டும். அதே நேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 21 ஆட்டத்திலும், பஞ்சாப் 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரின், ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங் அல்லது வைபவ் அரோரா, மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ரோசவ் அல்லது பேர்ஸ்டோ, சாம் கர்ரன் (கேப்டன்) லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
    • ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி கோலி- பட்டிதாரின் அரை சதம் மற்றும் கேமரூன் க்ரீனின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த ஸ்கோரை ஐதராபாத் அணி எளிதாக எட்டிவிடும் என நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஆர்சிபி. ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 7, நிதிஷ் ரெட்டி 13, கிளாசன் 7, அபிஷேக் 31, சமத் 10 என விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதி கட்டத்தில் வந்த பேட் கம்மின்ஸ் 15 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த வந்த புவனேஸ்வர் குமார் 3 பவுண்டரிகளை விளாசி 13 ரன்னில் வெளியேறினார். இறுதி வரை போராடிய ஷபாஸ் அகமது 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி அரை சதம் விளாசினார்.
    • அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, பட்டிதார் 50 ரன்கள் குவித்தனர்.

    அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இதுவரை நடைபெற்ற 17 ஐ.பி.எல் சீசன்களில் 10 சீசன்களில் 400-க்கும் அதிக ரன்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைத் கோலி படைத்து உள்ளார்.

    அந்தவகையில், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ரன்களை குவித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு 505 ரன்களும், 2016 -ம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 973 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகள் விளையாடிய விராட் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ரன்கள் எடுத்துள்ளார்.

    2019-ம் ஆண்டில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 464 ரன்களும், 2020-ம் ஆண்டு 466 ரன்களையும் எடுத்திருக்கிறார் விராட் கோலி. அதேபோல், 2021-ம் ஆண்டில் 15 போட்டிகள் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் உட்பட மொத்தம் 405 ரன்களும், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 639 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்லின் 17-வது சீசனில் 400 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். இவ்வாறாக இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில் சுமார் 10 சீசனில் 400-க்கும் அதிகமான ரன்கள எடுத்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

    ×