என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடந்த 16-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10-வது நாளாக நேற்று இந்த போராட்டம் நீடித்தது.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 6 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊதியம் வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்தும், கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் உள்ளது போல் புதுச்சேரி உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடந்த 16-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10-வது நாளாக நேற்று இந்த போராட்டம் நீடித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன், துணை பொதுச்செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நாளை (வியாழக்கிழமை) முதல் மக்களை பாதிக்காத வகையில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஊழியர்களின் இந்த போராட்டத்தால், பிறப்பு- இறப்பு சான்றிதழ் வழங்குதல், துப்புரவு பணிகள், வருவாய் மற்றும் பொறியியல் பிரிவு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
    புதுவையில் கொரோனாவால் இறந்தவர்கள் சிகிச்சை குறித்து மருத்துவ வல்லுனர் குழு ஆராயப்பட உள்ளது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி வாட்அப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா நோயாளிகளுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த தனியார் மருத்துவமனை, இந்திய தொழில் கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது. அதன் பிறகு தேவைப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆம்புலன்ஸ்களை நியாயமான முறையில் வாடகைக்கு எடுக்க முடியும். பி.ஆர்.டி.சி. பஸ் டிரைவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், போக்குவரத்து, தொழில் துறையினரிடம் பேசுவதாக கூறி உள்ளார்.

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொடுக்கப்படும் வழிகாட்டுதல் தினமும் அறிக்கையாக வருகின்றது. வருகிற காலங்களில் கொரோனாவில் இறந்தவர் பற்றிய முழு தகவல்கள் பெறப்படும்.

    எந்த தேதியில் அனுமதிக்கப்பட்டார். இறந்தவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் என அனைத்து தகவல்களும் பெறப்பட்டு ஆராயப்பட உள்ளது.

    ஜிப்மர், இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்த மருத்துவ குழு ஆராயும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    புதுவை அரியாங்குப்பத்தில் பங்களாவில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் கணவன், மனைவி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் புதுக்குளம் அந்தோணியார் வீதியை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது44). இவரது மனைவி பத்மாவதி (வயது 40) இவர்களுக்கு ஷில்பியா (17), அன்னாள் (15) ஆகிய 2 மகள்கள் உள்னர்.

    இவர்களது வீட்டின் அருகில் ஒரு பங்களா வீடு உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் லகோத்ராஜ் பிரான்சில் வசித்து வருகிறார். அவரது அனுமதியின் பேரில் அந்த வீட்டை நெப்போலியன் பராமரித்து வந்துள்ளார்.

    தற்போது ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தும், அந்த பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இருந்து பட்டாசுகளை வாங்கி அந்த பங்களா வீட்டில் நெப்போலியன் இருப்பு வைத்து இருந்தார்.

    மேலும் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் விபத்து ஏற்பட்டு, பங்களா வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின.

    இந்த வெடி விபத்தில் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்தது.

    இதில் அந்த வீட்டு சுவர் முழுவதுமாக இடிந்து நெப்போலியன் வசிக்கும் வீட்டில் விழுந்தது. இதில் வீட்டின் சமையல் அறையில் இருந்த நெப்போலியன், பத்மாவதி ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கினர்.

    இந்த நிலையில் வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டதால் அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுவை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.

    இடிபாடுகளில் சிக்கிய கணவன்- மனைவி இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து நடந்த சமயத்தில் நெப்போலியன் ஒரு மகள் கடைக்கு சென்று இருந்தார். மற்றொருவர் சத்தம் கேட்டதும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் உயிர் பிழைத்தார்.

    இந்த வெடி விபத்து குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விவசாயிகளை ஆதரித்து போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் ஆட்சியை கலைத்தாலும் கவலையில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கான விளை பொருட்களை வர்த்தக மயமாக்குவது, உரிய விலை அளிப்பது, அத்தியாவசிய பொருட்கள் சட்ட மசோதாவை திருத்தம் செய்வது ஆகிய 3 மசோதாக்களை நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசு பெரும்பான்மை இருப்பதால் அது நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்கள் அவையில் இந்த சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

    ஆனால் இவற்றை பொருட்படுத்தாமல் மசோதாவை துணை சபாநாயகர் நிறைவேற்றினார். இதனால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேல்சபையில் ஆளும் மத்திய பா.ஜ.க. அரசு ஜனநாயக படுகொலை செய்துள்ளது.

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என வலியுறுத்தி மனு கொடுத்தபோதிலும் அதையும் மீறி ஜனாதிபதி அவசர, அவசரமாக ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியானா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை எந்த மாநிலத்திற்கும் கொண்டு செல்லலாம். சிறு, குறு விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். எந்த நாட்டிற்கும் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். ஆனால் விவசாயிகளுக்கு உரிய பணம் கிடைக்காது. அந்த லாபம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சென்று சேரும். இந்த சட்டத்தை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    ஏற்கனவே பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் வகையில் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. தொழிலாளர் சட்டங்களிலும் கை வைத்துள்ளனர். எனவே மத்திய அரசை எதிர்க்க விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் தயாராக வேண்டும்.

    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவித்ததும் கவர்னர் கிரண்பேடி எனக்கு கடிதம் அனுப்பினார். இந்த ஆர்ப்பாட்டம் விதிகளுக்கு உட்பட்டு தான் நடத்தப்படுகிறது. அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்து நிற்கின்றனர். வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்த படிதான் கலந்து கொண்டுள்ளனர். முதலில் நான் காங்கிரஸ் கட்சியின் தொண்டன். அதன்பிறகு தான் மாநில முதல்-அமைச்சர். எனவே என்னிடம் பூச்சாண்டி காட்டும் வேலை வேண்டாம். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் போராட்டத்தில் கூட அம்மாநில முதல்-அமைச்சர் கலந்து கொண்டுள்ளார்.

    விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காக புதுவை மாநில காங்கிரஸ் அரசை கலைத்தாலும் கவலையில்லை. மக்கள் நன்மைக்காக, விவசாயிகளுக்காக ஆட்சியை இழக்க தயார். இது ஆரம்பம் தான். இன்னும் கிராமம், கிராமமாக சென்று நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம். விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 மசோதாக்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 387 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,066 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 70 ஆயிரத்து 589 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்து 45 ஆயிரத்து 292 ஆக உயர்ந்தது.

    கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 776 ஆகும். இதன்மூலம் மொத்த பலி  எண்ணிக்கையும் 96,318 ஆக அதிகரித்து இருக்கிறது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 47 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 51 லட்சத்து 01 ஆயிரத்து 398 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,066ஆக உயர்ந்துள்ளது.
    புதுவையில் 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் 156 பலியானதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விபத்துகள் குறித்து தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை விட புதுவையில் விபத்துகளில் இறப்போர் அதிகம் என முடிவுகள் வந்துள்ளது. தேசிய சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 31.5 பேர் இறக்கும் நிலையில் புதுவையில் ஒரு லட்சம் பேரில் 72.8 பேர் விபத்தில் இறக்கின்றனர்.

    தமிழகத்தில் இது 29.6 ஆக உள்ளது. புதுவையில் 2019-ம் ஆண்டில் ஆயிரத்து 103 ஆண்கள், 144 பெண்கள் விபத்தில் இறந்துள்ளனர். ஆயிரத்து 619 பேர் காயமடைந்துள்ளனர்.

    இது 2018-ம் ஆண்டை விட 9 சதவீதம் குறைவு. இருப்பினும் தேசிய சராசரியை விட இருமடங் காக நீடித்து வருகிறது. பெரும்பாலான விபத்துகள் அதிவேகத்தால் ஏற்படுகிறது. காயமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்க மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதே காரணம் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதுவையில் சாலை, ரெயில் விபத்தில் 156 பேர் (136 ஆண்கள், 20 பெண்கள்) இறந்துள்ளனர். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி கடலில் குளிப்பதால் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

    இதுபோல் புதுவையில் 51 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். 15 பேர் மின்சாரம் தாக்கியும், 6 பேர் கீழே விழுந்தும், 81 பேர் திடீர் நெஞ்சுவலியாலும் இறந்துள்ளனர். 24 பேர் வி‌ஷத்தால் இறந்துள்ளனர். அதிகபட்சமாக 770 பேர் அடையாளம் தெரியாத காரணங்களால் இறந்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய சராசரியை விட புதுவையில் இறப்பு அதிகரிக்க இதுவே காரணம்.

    புதுவையில் பல்வேறு இடங்களில் இருந்து குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர் கோவில், சுற்றுலா தலங்களில் பிச்சை எடுத்து வாழ்கின்றனர். இவர்களின் இறப்பும், சந்தேக மரணம் ஆகியவையும் 174 சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதனால் நாட்டிலேயே புதுவையில்தான் இறப்பு அதிகம் என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி நர்சிங் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    மரக்காணம் அருகே உள்ள கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஸ்ரீதர் (வயது 20), துளசிராமன் (18) என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தேவராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனை தொடர்ந்து அவரது மகன்கள் கட்டிட வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். துளசிராமன் நர்சிங் படித்துக்கொண்டு விடுமுறை நாட்களில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாக்குமுடையான்பேட்டில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலை நடந்தது. அங்கு பில்லர் எழுப்பும் பணியில் துளசிராமனும் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மின்சார ஒயரில் துளசிராமனின் கை உரசியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கொரோனா அச்சமின்றி புதுவை மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்காததால்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்தது.

    இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் அருண் ஆகியோர் நாள்தோறும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் உள்ளூர் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

    அரசின் உத்தரவின்பேரில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனைகள் நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும், முக கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இந்துக்கள் பெரும்பாலானோர் அசைவத்தில் இருந்து சைவ உணவுகளுக்கு மாறி உள்ளனர். இதனால் விடுமுறை நாளான நேற்று புதுவையில் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது.

    நெல்லித்தோப்பு மார்க்கெட், புதிய பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், உழவர்சந்தை, லாஸ்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக அலைமோதியது. அவர்கள் கொரோனா குறித்த எந்தவித அச்சமுமின்றி சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு கூட்டமாக நின்று காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்களை ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனர். முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடி புகழ் பெற்றவர் இசைக்கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவர் அதன்பின் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். திரை உலகத்தினர் மட்டுமின்றி நாடே அவருக்காக அழுதது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பணி மிகவும் சிறப்பானது. நான் அவருடன் பழகி இருக்கிறேன். ஏனாமில் 2020-ல் நடைபெற்ற கலாசார விழாவில் கலந்துகொண்டு நான், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விருது வழங்கி உள்ளேன். மிகச்சிறந்த பாடகரை நாம் இழந்துள்ளோம். அவரது இழப்பு கலை உலகம் மட்டுமல்ல, இசை உலகுக்கே மிகப்பெரிய இழப்பு. அவரது பணிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவை, காரைக்காலில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அனைத்து வகுப்புகளின் இறுதி தேர்வும், கல்லூரியில் இறுதி பருவம் தவிர மற்ற தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுவையில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், கல்வித்துறை செயலாளர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், கல்வித்துறை செயலாளர் ருத்ரகவுடு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.



    இந்த கூட்டத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாகவும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக புதுவை கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவுபடி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளை திறக்க பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களில் ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். அதேபோல் 9-ம் வகுப்பு மற்றும் 11- ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் மதிய உணவை கல்வித்துறை ஏற்பாடு செய்யலாம். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை. பள்ளிகளில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். மாணவர்களிடையே போதிய சமூக இடைவெளியையும் பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தினமும் உடல் வெப்பநிலையை பரிசோதித்து பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

    சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை தினந்தோறும் ஆய்வு செய்வது அவசியம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் மேலும் 372 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் சுகாதாரத் துறை மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 372 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
     
    இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,400 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 513 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், ஒரே நாளில் 443 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,648 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை புதுச்சேரியில் 5,239 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு பஸ் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    கொரோனா அச்சுறுத்தலை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. இதில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து சில நிபந்தனைகளுடன் கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டன.

    புதுவையில் இன்னும் தனியார் பஸ் போக்குவரத்து, தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. ஆனால் நகர் பகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு சார்பில் சில பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் பஸ்களுக்கான சாலைவரியை தள்ளுபடி செய்ய வேண்டும், முழு அளவில் பயணிகள் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை பஸ்களை இயக்கப்போவதில்லை என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் புதுவையில் பஸ் போக்குவரத்து முழுமையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    நகர் பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் புதுவை அரசு பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத அளவுக்கு பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். கிராமப் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று வர முடியாத நிலையும் இருந்து வருகிறது. இதனால் தனியார் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு சென்று வர முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்தநிலையில் பஸ்களை இயக்குவது தொடர்பாக சட்டமன்ற கமிட்டி அறையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான், செயலாளர் சரண், ஆணையர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது புதுவையில் முழுமையாக அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அக்டோபர் 1-ந்தேதி முதல் தனியார் பஸ்களை இயக்க பஸ் உரிமையாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதுவரை காத்திருக்காமல் விரைவிலேயே தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார். தமிழக பகுதிக்கு பஸ்களை இயக்குவது குறித்து ஏற்கனவே தனியார் பஸ் உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    ×