search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    • பிபிசி ஆவணப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.
    • ரிச்சர்டு குக்சன் மற்றும் மைக் ரபோர்டு ஆகியோர் பிபிசியின் ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர்.

    2002 குஜராத் கலவரத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்திய அரசு தடை செய்துள்ளது. தொடர்ச்சியான காலத்துவ மனநிலையை இந்த ஆவணப்படம் பிரதிபலிப்பதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், தடையை மீறி பல்வேறு இடங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த ஆவணப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.

    இந்த சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் தயாரிப்பாளருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிற்பதாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்துடன் பகிரப்பட்டுள்ள தகவல் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினர்.

    எனவே, இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது, ராகுல் காந்தியுடன் நிற்பது பிபிசி ஆவணப்பட இயக்குனர் அல்ல, பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கார்பின், இந்திய தொழிலதிபர் சாம் பிட்ரோடா என்பது தெரியவந்தது.

    கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் தேடியபோது இந்த புகைப்படம் பற்றிய உண்மையான செய்திகள் கிடைக்கப்பெற்றன. இதே புகைப்படத்துடன் மே 2022 முதல் வெளியிடப்பட்ட அந்த செய்திகளில், லண்டனில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பின், இந்திய தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்ததாக கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த புகைப்படம் 2022ம் ஆண்டு மே 23ம்தேதி இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரசின் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது.

    ரிச்சர்டு குக்சன் மற்றும் மைக் ரபோர்டு ஆகியோர் பிபிசியின் ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த ஆவணப்படத்துடன் ஜெர்மி கார்பினுக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பகமான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

    எனவே, சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

    • தம்பதியருக்கு பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையல்ல.

    நடிகை அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கும் ஜனவரி 23-ந் தேதி அன்று கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஐபிஎல் போட்டிக்கு பிறகு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தம்பதியருக்கு பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள ஆடம்பர வீடு (50 கோடி) முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து ஆடம்பரமான கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் பைக்குகள் வரை புதுமணத் தம்பதிகளுக்கு அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமண பரிசு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் எதுவுமே உண்மை இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

    இது குறித்து அதியா ஷெட்டி குடும்பத்தினர் கூறியதாவது:-

    வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மையல்ல. இது போன்ற தவறான தகவல்களை பொதுகளத்தில் வெளியிடும் முன் எங்களுடன் விவரங்களை உறுதிப்படுத்துமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இது சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நிறுத்தும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறினார்
    • கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது

    தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையில், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அமைதிப்பூங்கா முதலான பல்வேறு சொற்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கும்போது தவிர்த்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என தீர்மானத்தை வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவர் அவையை விட்டு வெளியேறியதால் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்ந்நிலையில், ஆளுநர் ரவி, சட்டசபையில் இருந்து வெளியில் வந்ததும் தேசிய கீதம் இசைப்பதைக் கேட்டு சட்டசபை வாசலில் நின்று மரியாதை அளித்தார் என்றும், இதனைப் பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் அவருக்கு மரியாதை கொடுத்ததாகவும் கூறி, வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஆளுநருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமென்ட் செய்கின்றனர். ஆளுநர் "தேசிய கீதத்திற்கு" மரியாதை செலுத்தினார். மறைக்கப்பட்ட உண்மை... இதை ஏன் தமிழ் ஊடகங்கள் சொல்லவில்லை என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தேடியபோது, அது பொய்யான தகவலை இணைத்து பரப்பப்படும் வீடியோ என்பது தெரியவந்தது. சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநருக்கு அளிக்கப்பட்ட காவல்துறை அணிவகுப்பு மரியாதையின்போது அந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டது.

    தந்தி டிவி யூடியூப் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "ஆளுநருக்கு பேண்டு, வாத்தியங்களுடன் காவல்துறை அணிவகுப்பு மரியாதை" என்ற தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலகம் வருகை, ஆளுநர் உரையுடன் சற்று நேரத்தில் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம், என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளியேறும்போது தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல, அது ஆளுநர் சட்டசபை வருகையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டதாக கூறி ட்விட்டரில் தகவல் வெளியானது
    • மோடியின் மோர்பி வருகைக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே ரூ.5.5 கோடி செலவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு

    குஜராத் மாநிலம், மோர்பியில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த நடைபாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி மோர்பிக்கு சென்று பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலரை பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றார்.

    அவர் வந்து சென்ற சில மணி நேரத்திற்காக குஜராத் அரசு ரூ.30 கோடி செலவு செய்திருக்கிறது என சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இதுபற்றி தகவல் பெறப்பட்டதாக கூறி சகத் கோகலே என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

    அதில், ``பிரதமர் மோடி சில மணி நேரம் வந்து சென்றதற்கு ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த வகையில் ரூ.5 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இறந்த 135 பேரின் குடும்பங்களுக்கு மொத்தமே ரூ.5 கோடிதான் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மோடியின் மோர்பி வருகைக்கான வரவேற்பு, நிகழ்ச்சி மேனேஜ்மெண்ட் மற்றும் போட்டோகிராபிக்கு மட்டுமே 5.5 கோடி செலவு செய்துள்ளனர்'' எனப் பதிவிட்டிருந்தார்.

    இந்த பதிவு வைரலான நிலையில் இதன் உண்மைத்தன்மை குறித்து பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது. அதில், சகத் கோகலே வெளியிட்ட தகவல் உண்மையல்ல என தெரியவந்தது.

    இதுதொடர்பாக PIBFactCheck தனது ட்விட்டரில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் "ஆர்டிஐ சொன்னதாக மேற்கோள்காட்டி, ஒரு ட்வீட்டில் பிரதமரின் மோர்பி வருகைக்கு சில மணி நேரத்துக்கு ரூ.30 கோடி செலவானது என்று கூறப்பட்டது. அந்த தகவல் போலியானது. இது குறித்து RTI பதில் எதுவும் வழங்கவில்லை" என கூறப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான் கான் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார்.
    • 2021ம் ஆண்டு இதே புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் கடந்த வியாழக்கிழமை வசிராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தியபோது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கான் காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை குணமடைந்துவருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான்கான் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிடிஐ கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இறந்து போன ஒருவரின் உடல் அருகே சிறுவன் சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்தனர். அதில், இம்ரான் கான் பேரணியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்துபோனவர் என்று பதிவிட்டனர்.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை தொடர்பாக இணையதளங்களில் தேடிய ஆய்வு செய்ததில், இது பழைய புகைப்படம் என தெரியவந்துள்ளது. 2021ம் ஆண்டு இதே புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் வேறு தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தந்தையின் உடல் அருகே அவரது மகன் இருப்பதாகவும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஹெல்மண்ட் மாகாணத்தில் கொல்லப்பட்ட தனது தந்தையின் சடலத்தின் அருகில் அவரது மகன் கண்ணீருடன் இருப்பதாக மற்றொரு நபர் பதிவிட்டிருந்தார். மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமை அமைப்புகள் எங்கே உள்ளன? என்று கேள்வி எழுப்பிய அவர், ஆப்கான் உயிர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

    இதன்மூலம் இந்த புகைப்படம் பழையது என்பதும், எங்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டது. அத்துடன் சமீபத்தில் பாகிஸ்தானில் இம்ரான் கான் நடத்திய பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையது என்று பொய்யாக பகிரப்பட்ட பழைய புகைப்படம் என்பது தெளிவாகிறது.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்
    • தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. சமூக வலைத்தளங்களில் நியூஸ் கார்டுகள் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில், போராட்டத்தில் கைதான எடப்பாடி பழனிசாமி ஆட்களுக்கு யா மொய்தீன் கடையில் இருந்து பிரியாணி வரவழைக்கப்பட்டதாக மாலை மலர் இணையதளத்தின் பெயரில் ஒரு நியூஸ் கார்டு வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது போலியான நியூஸ் கார்டு ஆகும். இதுபோன்ற வாசகம், மற்றும் புகைப்படத்துடன் மாலை மலர் தரப்பில் எந்த நியூஸ் கார்டும் வெளியிடப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

    • வைரல் புகைப்படத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் சேவாதளம் தனது டுவிட்டரில் 2 முறை ஷேர் செய்தது.
    • இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானது அல்ல என தெரியவந்துள்ளது.

    தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 8ம் தேதி சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், திடீரென மயிலாப்பூர் பகுதியில் தனது காரை நிறுத்தி சாலையோர கடைக்கு சென்றார். கடைகளில் கீரை மற்றும் காய்கறிகள் வாங்கினார்.

    பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் உரையாடினார். விற்பனையாளர்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. நிர்மலா சீதாராமனும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் காய்கறி வாங்கியபோது வெங்காயம் வாங்கியது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெங்காயம் குறித்து பலரும் ட்ரோல் செய்தனர். இந்த புகைப்படத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் சேவாதளம் தனது டுவிட்டரில் 2 முறை ஷேர் செய்தது. அதில், 'மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடவே மாட்டார் என்று பாராளுமன்றத்தில் கேள்விப்பட்டோம். ஆனால் அவர் பாராளுமன்றத்தில் பொய் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் பக்கத்து வீட்டுக்கு வெங்காயத்தை வாங்குகிறாரா? கிண்டலாக கூறப்பட்டிருந்தது.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்தது. எனவே, இதுபற்றி இந்தியா டுடேயின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது. இதில் நிர்மலா சீதாராமன் வெங்காயம் வாங்குவது போன்ற புகைப்படம் போலியானது என்பது தெரியவந்தது. வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டோஷாப் மூலம் எடிட் செய்து வெங்காயத்தை இணைத்து, சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

    அமைச்சர் வெங்காயம் சாப்பிடுகிறரா? இல்லையா? என்பது உண்மைச் சரிபார்ப்புக்கு அப்பாற்பட்டது. இருப்பினும், இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானது அல்ல.

    இதுதவிர நிதியமைச்சரின் டுவிட்டர் பக்கத்தில், அவர் காய்கறி வாங்கும்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களையும் வீடியோவையும் காண முடிகிறது. இவற்றில் எங்கும் அவர் வெங்காயம் வாங்குவதைக் காண முடியவில்லை. வீடியோவில் உள்ள ஒரு பிரேம், வெங்காயங்களைக் கொண்ட வைரல் புகைப்படத்துடன் மிகவும் ஒத்ததாக இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டு வெங்காயம் சேர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்துவதுவதாக குற்றச்சாட்டு
    • அருகில் உள்ள பெட்ரோல் பங்க் டீலரையோ அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

    பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று https://thedealership.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'இந்தியா முழுவதிலும் உள்ள முன்னணி எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கான டீலர்ஷிப் நாங்கள். எனவே வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் பயனளிக்கும் எரிவாயு நிறுவனத்தை இறுதி செய்வது பற்றி வாடிக்கையாளர் தங்கள் விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், விண்ணப்பதாரர் விவரங்களை பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் விண்ணப்ப படிவமும் உள்ளது.

    ஆனால், அந்த இணையதளத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்தது. 'சில இணையதளங்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்துவதுடன், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப்களை மோசடியாக வழங்குகின்றன. மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் அருகிலுள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பிரிவு அலுவலகத்தையோ அல்லது அருகில் உள்ள பெட்ரோல் பங்க் டீலரையோ அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தனது டுவிட்டரில் கூறியிருந்தது.

    இது தொடர்பாக பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    https://thedealership.in என்ற இணையதளம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் பெயரில், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப்களை வழங்குவதாகக் கூறுகிறது.

    ️இந்த இணையதளம் போலியானது. உண்மையான தகவலுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளமான 'https://iocl.com' என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பகவந்த் மானின் இந்த நடத்தை பஞ்சாபியர்களை தலைகுனிய வைத்துள்ளதாக சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்
    • அரசியல் போட்டியாளர்களால் தவறான மற்றும் கீழ்த்தரமான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி விளக்கம்

    சண்டிகர்:

    பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அதிகமாக மது குடித்ததால் சமீபத்தில் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமானத்தில் பகவந்த் மான் பயணிக்க இருந்ததால், அவருக்காக விமானம் 4 மணி நேரம் காத்திருந்ததாகவும், பின்னர் தள்ளாடியபடி அவர் விமானத்தில் ஏறியதாகவும், இது விமானத்தின் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என்பதால், அவர் இறக்கவிடப்பட்டதாகவும் செய்திகள்  வெளியாகி உள்ளன.

    இந்த தகவல் குறித்து ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் டுவிட்டரில் பதிவிட்டு, பஞ்சாப் மாநில அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டை தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது என குறிப்பிட்டுள்ள சுக்பிர் சிங் பாதல், பகவந்த் மானின் இந்த நடத்தை, உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களை தலைகுனிய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    "முதல்வர் பகவந்த் மான் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவரால் நிற்கக்கூட முடியவில்லை என்றும், அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் பயணி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இந்த தகவல் வதந்தி என்றும், பிராங்பர்ட் விமான நிலையத்தில் பகவந்த் மான் இறக்கிவிடப்படவில்லை என்றும் கூறியுள்ளது. அரசியல் போட்டியாளர்களால் தவறான மற்றும் கீழ்த்தரமான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் அக்கட்சி கூறியிருக்கிறது. உடல்நலக் குறைவு காரணமாக முதல்வரால் விமானத்தில் ஏற முடியவில்லை என்று முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறினர்.

    • குழந்தைகள் தொடர்பான உதவிக்கு 112 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்க வேண்டும் என்று செய்தி பரவியது
    • ஹெல்ப்லைன் 1098ஐ பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடர்ந்து இயக்கும்.


    குழந்தைகள் உதவி எண் 1098 மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுவதாகவும், ERSS ஹெல்ப்லைன் எண் 112ன் கீழ் செயல்படும் என்றும் நாளிதழில் செய்தி பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகள் உதவி எண் 1098 இருக்காது என்றும், குழந்தைகள் தொடர்பான உதவிக்கு 112 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்க வேண்டும் என்றும் செப்டம்டபர் 14ம் தேதி செய்தி வெளியிடப்பட்டதை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பார்வைக்கு வந்துள்ளது. இந்த செய்தியின் தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கங்கள், பொது மக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சகத்தின் உண்மை நிலையை சரிபார்க்காமல் எழுதப்பட்டுள்ளது.

    குழந்தைகள் ஹெல்ப்லைன் 1098 உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுவதாகவும், அது ERSS ஹெல்ப்லைன் எண் 112ன் கீழ் செயல்படும் என்று வெளியிடப்பட்ட அந்த செய்தி முற்றிலும் தவறானது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனையில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. சிறார் நீதிச் சட்டம் 2015 இன் விதிமுறைகளுக்கு இணங்க, ஹெல்ப்லைன் 1098ஐ அமைச்சகம் தொடர்ந்து இயக்கும். 1098-க்கான அழைப்புகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு வரும். மேலும் குழந்தைக்குத் தேவையான உதவிகள் தற்போது வழங்கப்படுவது போன்றே வழங்கப்படும். மேலும், ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு சேவை போன்ற கூடுதல் அவசர உதவி தேவைப்பட்டால், உள்ளூர் காவல்துறையும் உஷார்படுத்தப்படும்.

    இவ்வாறு பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது

    • சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.
    • சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, 'திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு பிரசாதத்தை சாப்பிடும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அதற்கு அதிகாரி தர்மா ரெட்டி பதிலளிக்கையில், சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்குவது தொடர்பாக ஆலோசித்து அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்‌. இந்த தகவலை வைத்து, சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

    ஆனால் இந்த தகவல் வதந்தி என திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருப்தி லட்டு காப்புரிமை பெறப்பட்டது என்றும், சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் நீரிழிவு நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சர்க்கரை இல்லாத லட்டு வழங்கினால், பின்னர் வேறு ஏதாவது காரணத்தை வைத்து வேறு சில பக்தர்கள் வேறு சில பிரசாதங்களை கேட்பார்கள் என்றும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

    • பேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவை போஸ்ட் செய்துள்ளார்.
    • இது போலி வீடியோ என்றும், இதுபோல் நடக்க சாத்தியமில்லை என்றும் பலர் கூறி உள்ளனர்.

    பெண் ஒருவரின் காதுக்குள் புகுந்துள்ள பாம்பை மருத்துவர் அகற்ற முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவரின் காதில் பாம்பு நுழைந்து தெரிவது போன்றும், அதனை ஒருவர் எடுக்க முயற்சிப்பதும் இடம் பெற்றுள்ளது. ஆனால் பாம்பை வெளியே எடுத்தார்களா? எங்கே நடந்த‌து என்பது போன்ற எந்த விவரம் அந்த வீடியோவில் இடம்பெறவில்லை.

    பேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவை போஸ்ட் செய்துள்ளார். காதுக்குள் புகுந்த பாம்பு என்ற தலைப்பிட்டு அவர் பகிர்ந்த வீடியோ, அதிகம் பகிரப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். சிலர் வீடியோவைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரிடம் முழு வீடியோவையும் வெளியிடும்படி கூறி உள்ளனர். பாம்பு எப்படி காதுக்குள் நுழைந்தது? என பலர் ஆச்சயரித்துடன் தெரிவித்தனர். அந்த பெண்ணின் நிலை குறித்து சிலர் வருத்தம் தெரிவித்தனர். இது போலி வீடியோ என்றும், இதுபோல் நடக்க சாத்தியமில்லை என்றும் பலர் கூறி உள்ளனர்.

    ×