search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar link"

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்கவேண்டும்.
    • வாக்காளர் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6 பி-யில் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையம் 29.5.2023 அன்று, 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஏற்கனவே 17-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு முகாம்கள் வருகிற நவம்பர் மாதம் 4, 5, 18, 19-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கான தீர்வு வருகிற டிசம்பர் மாதம் 26-ந்தேதி வெளியிடப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது.

    மேற்சொன்ன நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலங்களிலும், சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும், அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடமும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்கவேண்டும். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    1.1.2024, 1.4.2024, 1.7.2024, 1.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி அடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ-வை நேரில் அளிக்க வேண்டும் அல்லது அதிகாரிக்கு தபாலில் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6 பி-யில் விண்ணப்பிக்கலாம்.

    அதேபோல், நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபனைக்கான வாக்காளர் விண்ணப்பப் படிவம், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்குதல் ஆகியவற்றுக்கு படிவம் 7-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

    வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால், குடியிருப்பை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றுதல், நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல், மாற்றுத்திறனாளிகளை குறிப்பது, மாற்று புகைப்பட அடையாள அட்டை பெறுவது ஆகியவற்று படிவம் 8-ல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    • வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
    • வருகிற 30-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் வட்டார விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.இதுகுறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் கூறியதாவது:-

    பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைத்து வேளாண் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தொடர்ந்து பயனடைய இ.கே.ஒய்.சி. மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை வருகிற 30-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஊக்கத்தொகை வருவது நிறுத்தப்படும்.

    எனவே விவசாயிகள் அருகில் உள்ள வங்கி, இ சேவை மையங்கள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஆதார் எண்ணை உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
    • சிறப்பு முகாம்களை பயன்படுத்திகொள்ள அறிவுரை

    வேலூர்:

    வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நா.ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் 14-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் 11,543 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல்து றையின் கீழ்செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி துவங்க வேண்டும் எனவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவியின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும்.

    இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்ச லகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்துக்கும் மேல் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மின் இணைப்பு தொடர்பாக தவறான கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்துக்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது ஆகும்.

    தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 9-9-2022 அன்று வெளியிட்ட வீதப்பட்டியலில் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில், குடியிருப்பில், ஒரே நபரின் பெயரில், ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளை பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு, வீதப்பட்டியல் மாற்றும் பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

    எனவே, இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின் பகிர்மான வட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இக்குறிப்பிட்ட கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் இதுவரை 2.66 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது.
    • தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கரூர்:

    தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

    அதாவது தமிழ்நாடு முழுக்க அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மின் நுகர்வோர் குறித்து உரிய தரவுகள் இல்லாததால் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்களை இணைக்கும் பணிகளை தமிழ்நாடு மின்வாரியம் தொடங்கியது.

    தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை பெற ஆதார் இணைப்பு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தவும் ஆதார் மின் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

    அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15-ந்தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. இதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆதார் மின் இணைப்பு பணிகள் நடைபெற்றன. முதலில் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவே பிப்ரவரி 15-ந்தேதி வரை முதலில் நீட்டிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு பிப்ரவரி 28-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பெரும்பாலானோர் தங்கள் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்ட போதிலும், இன்னும் சிலர் இணைக்காமல் இருந்தனர்.

    இன்றே ஆதார் மின் இணைப்பு எண்ணை இணைக்கக் கடைசி நாள் என்பதால் இதுவரை ஆதாரை மின் இணைப்பை இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இனிமேல் ஆதாருடன் மின் இணைப்பை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் இளைஞர் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும் மார்ச் 4-ந்தேதி நடைபெறும் அரசு விழாவில் ரூ.267 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 12 லட்சம் மரக்கன்றுகளை நடும் விழாவையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

    இதுவரை தமிழகத்தில் 2.66 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 1.50 லட்சம் இணைப்புகளை இணைக்க வேண்டிய உள்ளது. இன்று மாலையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான கால அவகாசம் நிறைவடைகிறது.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்காக ஏற்கனவே பலமுறை மக்களின் விருப்பத்தின் பேரிலும், வேண்டுகோளின் அடிப்படையிலும் அவகாசம் கொடுக்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் இனிமேல் தரப்படாது. எனவே இன்று மாலைக்குள் தங்களது மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள், விரைந்து ஆதார் எண்களை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குறுகிய காலத்தில் 2.66 கோடி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஏற்கனவே இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் வாயிலாக மின் சேவைகளுக்கான பயன்பாட்டில் எந்த குறைபாடும் இருக்காது.

    சூரிய மின்சக்தியில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்சமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண் இணைப்பில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க நாளை முதல் 2 நாட்கள் வீடு வீடாக ஆய்வு பணி நடைபெற உள்ளது.

    திண்டுக்கல்:

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. வாக்காளர்கள் இடம் மாறி செல்லும்போது பழைய இடத்தில் உள்ள வாக்குரிமையை நீக்காமல் புதிதாக விண்ணப்பித்து பட்டியலில் சேர்ந்து விடுகின்றனர்.

    இதனால் இரட்டை வாக்குரிமை பெறும் சூழல் உள்ளது. இது போன்ற இரட்டைப்பதிவை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்து சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இருந்தபோதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண் இணைப்பில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 38 லட்சத்து 66 ஆயிரத்து 626 வாக்காளர்கள் கொண்ட சென்னை மாவட்டத்தில் 31.83 சதவீத வாக்காளர்கள் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    மாநில அளவில் ஆதார் இணைப்பு குறித்த பட்டியலில் 38வது கடைசி இடத்தில் சென்னை உள்ளது. அரியலூர் மாவட்டம் 97.12 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில் 81.88 சதவீத பணி முடிந்து விருதுநகர் மாவட்டம் 6-வது இடத்திலும், 68.06 சதவீதத்துடன் திண்டுக்கல் 21வது இடத்திலும், 66.21 சதவீதத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் 25வது இடத்திலும், 65.85 சதவீதத்துடன் சிவகங்கை 26-வது இடத்திலும், 56.57 சதவீதத்துடன் தேனி மாவட்டம் 31வது இடத்திலும், 54.42 சதவீதத்துடன் மதுரை மாவட்டம் 2வது இடத்திலும் உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க நாளை முதல் 2 நாட்கள் வீடு வீடாக ஆய்வு பணி நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 17 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆதார் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்காளர் பட்டியலில் சேரும்போது ஆதார் விபரங்களை அளித்திருந்தாலும் அவை பட்டியலுடன் இணைக்கப்படவில்லை. முகவரி மற்றும் அடையாள சான்றுக்காக மட்டுமே ஆதார் பயன்படுத்தப்பட்டது.

    வாக்காளர்கள் விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் விபரங்களை அளித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். இதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

    • சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன.
    • 15-ந்தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைப்பு பணி முடிய வேண்டும் என்ற இலக்கோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்கள் தயக்கம் காட்டினர்.

    பின்னர் இதனால் இலவச மின்சாரம் துண்டிக்கப்படாது என்று அரசு சார்பில் விளக்கம் அளித்ததை தொடர்ந்து ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோரின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு முதலில் டிசம்பர் 31-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் ஆதாரை இணைக்காததால் ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகங்களிலும், கம்ப்யூட்டர் சென்டரிலும் சென்று ஆதாரை இணைத்தனர். ஆனாலும் 40 லட்சம் பேர் ஆதாரை இணைக்காமல் இருந்தனர்.

    அதனால் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. வருகிற 15-ந்தேதியுடன் கால அவகாசம் முடிவடைகிறது. இதற்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

    இதையடுத்து மீதமுள்ள மின்நுகர்வோர்கள் ஆதாரை இணைப்பதில் தீவிரம் காட்டினார்கள். 90 சதவீதத்திற்கு மேல் ஆதாரை இணைத்துவிட்ட நிலையில் மின்வாரிய ஊழியர்களும் களத்தில் இறங்கினர். இன்னும் 4 நாட்களே இருப்பதால் வீடுவீடாக சென்று ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் பெயர் விவரங்களை சேகரித்து அவர்களின் வீட்டிற்கே சென்று ஆதாரை இணைக்கின்றனர்.

    சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ஆதார் எண் இணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன. சொந்த வீட்டில் வசிப்பதாக இருந்தாலும் அவர்களின் ஆதார் எண்ணை வாங்கி அந்த இடத்திலேயே பதிவு செய்கின்றனர்.

    வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர் செல்போன் எண்ணை வாங்கி அங்கிருந்தவாறே ஆதார் எண்ணை பெற்று மின் ஊழியர்கள் பதிவு செய்கின்றனர். ஒரு வீட்டில் 4, 5, 6 பதிவு மின் இணைப்புகள் இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்து இந்த பணியை விரைவாக முடிக்கிறார்கள்.

    15-ந்தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைப்பு பணி முடிய வேண்டும் என்ற இலக்கோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

    • படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள்.
    • ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அரசு அறிவுறுத்தி வருகிறது.

    படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்து விடுகிறார்கள். மற்ற பொதுமக்கள் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வந்தனர்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் மூலமும் ஆதார் எண்களை இணைத்து கொடுக்கின்றனர்.

    இதில் இதுவரை மொத்தம் 2.59 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார். ஆதார் எண்ணை இணைக்க இந்த மாதம் 15-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதால் இதுவரை இணைக்காதவர்கள் மின்வாரிய அலுவலகம் சென்று பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்ததில் சில இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்துள்ளது. அதாவது வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமல் அவர்களது ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதுபற்றி அனைத்து பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரிய இயக்குனர் (வினியோகம்) அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    நேற்று இரவு 7 மணி நிலவரப்படி மின் இணைப்புடன் ஆதார் எண்களை 97.98 சதவீதம் பேர் இணைத்து உள்ளனர்.

    ஆனால் இப்பணியை ஆய்வு செய்ததில் உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்கு தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே அதிக அளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்படுகிறது.

    எனவே ஆதார் இணைப்பை இறுதி செய்வதற்கு முன்பு அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தகுதியான நபர்களின் ஆதார் எண்ணை மட்டுமே சேவை இணைப்புகளுடன் இணைக்கவும், அதை உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன.
    • கால அவகாசம் கொடுத்தும் இன்னும் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.

    சென்னை:

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 3 நாட்களே அவகாசம் உள்ளதால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து, தமிழ்நாடு மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி தொடங்கியது.

    டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் இணைக்காததால், வரும் 31-ந்தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்காக, மாநிலம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை 2.25 கோடி பேர் மட்டுமே இணைத்துள்ளனர். இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என மின்வாரியம் தெரிவித்து உள்ளது. இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாததோடு, அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) மாநில செயலாளர் எஸ்.கண்ணன் கூறும்போது, இவ்வளவு நாட்கள் கால அவகாசம் கொடுத்தும் இன்னும் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.

    மேலும், நுகர்வோரின் தரவுகளை முறையாக சேமித்து வைக்கும் அளவுக்கு மின் வாரியத்தில் இணைய தள கட்டமைப்பு வசதி இல்லை. விடுமுறை நாட்களிலும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கணக்கீட்டு பிரிவு மற்றும் கள பணி ஊழியர்கள் இப்பணியை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதால், அவர்களால் தங்களுடைய பணியை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

    இதனால் ஊழியர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளதோடு, மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர். அரசிடம் ஆலோசித்து இதற்கு தீர்வு காணப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது.
    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அந்தந்த மின் கட்டண அலுவலகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கடந்த மாதம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின் வாரியம் குறுந்தகவல் அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்துபவர்கள், ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 

    இதனிடையே, ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது. குறிப்பாக 100 யூனிட் இலவச மின் திட்டம் நிறுத்தப்படுமா? மின் கட்டணம் செலுத்த முடியாமல் போகுமா? என மின் நுகர்வோர் குழப்ப நிலையில் இருந்தனர்.

    இந்நிலையில், பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மின் கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. 

    அதன்படி, கடந்த மாதம் 28-ந்தேதி தமிழகம் முழுவதும் 2,811 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. இதில், பொதுமக்கள் நேரடியாக வந்து ஆதாரை இணைத்து கொள்ளலாம் என மின்துறை அறிவித்தது.

    மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதாரை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அந்தந்த மின் கட்டண அலுவலகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன.

    முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைக்காமல் எளிதில் ஆதாரை இணைக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டன. அதேபோல், செல்போன் மற்றும் கணினி வாயிலாக ஆன்லைன் மூலம் பலர் ஆதாரை இணைத்தனர்.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் மின் இணைப்பு பெற்றுள்ள 2.37 கோடி மின்நுகர்வோரில் 1.09 கோடி பேர் சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உதவித்தொகைகளை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.
    • பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

    தேனி:

    தமிழகத்தில் "பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி" திட்டமானது பிப்ரவரி-2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில், 13-வது தவணையாக, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    பயனாளிகள் பொது சேவை மையம், செல்போன் மூலம் தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். பொது சேவை மையத்திற்கு சென்று, பெயர் பி.எம்.கிசான் இணைய தளத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.யை பதிவு செய்து உறுதி செய்யலாம். அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும் உங்களது செல்போனிலும் இணையதள வசதியை பயன்படுத்தி, ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    எனவே பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இது நாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர்.
    • மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள், 1.65 லட்சம் விசைத்தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பொதுமக்கள் சிரமத்தை போக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்படைந்துள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள்.

    சென்னையில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், வடபழனி என பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கட்டண வசூல் மையங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கவுண்டர்களில் வரிசையில் நின்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தனர்.

    தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர். கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர்.

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் தொடங்கிய முதல் நாளான நேற்று பல அலுவலகங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர்.

    மற்ற அலுவலகங்களில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். தமிழகம் முழுவதுமே நேற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பொதுமக்கள் மின் கட்டண அட்டை, ஆதார் அட்டை, ஓ.டி.பி. வருவதற்கான செல்போன் ஆகியவற்றை கையோடு கொண்டு வர வேண்டும். சிலர் வீடுகளில் மற்றவர்கள் பயன்படுத்தும் செல்போன் நம்பரை கொடுத்து ஓ.டி.பி.-க்காக அவர்களிடம் போன் செய்து கேட்டு சொல்வதால் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.

    ஓ.டி.பி. அனுப்ப பயன்படுத்தும் செல்போன்களை முகாமுக்கு எடுத்து வந்தால் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க முடியும்.

    மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம்களில் தற்போது கூடுதல் கவுண்டர்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக சிறப்பு முகாம்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இன்றும் அனைத்து அலுவலகங்களிலும் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் நின்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    ×