search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறப்பு முகாம்- ஒரே நாளில் 5 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தனர்
    X

    சிறப்பு முகாம்- ஒரே நாளில் 5 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தனர்

    • கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர்.
    • மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள், 1.65 லட்சம் விசைத்தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பொதுமக்கள் சிரமத்தை போக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்படைந்துள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள்.

    சென்னையில் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், வடபழனி என பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கட்டண வசூல் மையங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கவுண்டர்களில் வரிசையில் நின்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தனர்.

    தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர். கடந்த 15-ந் தேதி முதல் இதுவரை ஆன்லைனிலும், சிறப்பு முகாமிலும் 20 லட்சம் பேர் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்துள்ளனர்.

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் தொடங்கிய முதல் நாளான நேற்று பல அலுவலகங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தனர்.

    மற்ற அலுவலகங்களில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். தமிழகம் முழுவதுமே நேற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

    மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பொதுமக்கள் மின் கட்டண அட்டை, ஆதார் அட்டை, ஓ.டி.பி. வருவதற்கான செல்போன் ஆகியவற்றை கையோடு கொண்டு வர வேண்டும். சிலர் வீடுகளில் மற்றவர்கள் பயன்படுத்தும் செல்போன் நம்பரை கொடுத்து ஓ.டி.பி.-க்காக அவர்களிடம் போன் செய்து கேட்டு சொல்வதால் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.

    ஓ.டி.பி. அனுப்ப பயன்படுத்தும் செல்போன்களை முகாமுக்கு எடுத்து வந்தால் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க முடியும்.

    மின் கட்டண வசூல் மையங்களில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு முகாம்களில் தற்போது கூடுதல் கவுண்டர்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 2-வது நாளாக சிறப்பு முகாம்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இன்றும் அனைத்து அலுவலகங்களிலும் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் நின்று மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    Next Story
    ×