search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    • போலி வலைத்தளங்களை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
    • பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அரசுத் துறைகள் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் இப்போது இணைதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிடப்படுகின்றன. அதேசமயம் அரசுத் துறைகளின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான சமூக வலைத்தள பக்கங்களும் தகவல்களை பரப்பி மக்களை குழப்புகின்றன. எனவே இவற்றை அடையாளம் கண்டுகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

    போலிச் செய்திகள் பரவுவதை சரிபார்ப்பதற்காக, பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது போலி செய்திகள் மற்றும் போலி வலைத்தளங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.

    அவ்வகையில், எல்லைப் பாதுகாப்பு படையின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கம் திறக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் கூறி உள்ளது. @BsfIndia0 என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கு அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்றும், எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு @BSF_India என்றும் தெரிவித்துள்ளது. 

    • சாலையை மூழ்கடித்து சீறிப்பாயும் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி பதிவாகி உள்ளது
    • அந்த வீடியோ கராச்சியில் தற்போதைய வெள்ள பாதிப்பை காட்டும் வீடியோ அல்ல என்பது தெரியவந்துள்ளது

    பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். சுமார் 3.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டையே புரட்டிப் போட்ட இந்த பேரிடர் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதில் ஒரு வீடியோ கராச்சியில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாக்கப்படுகிறது.

    அந்த வீடியோவில், சாலையை மூழ்கடித்து சீறிப்பாயும் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி பதிவாகி உள்ளது. ஆனால் அந்த வீடியோ கராச்சியில்தான் எடுக்கப்பட்டதா? என்பது குறித்து சந்தேகம் எழுப்பட்டது. இதுபற்றி கூகுள் தேடல் மூலம் ஆய்வு செய்ததில், அந்த வீடியோ கராச்சியில் தற்போதைய வெள்ள பாதிப்பை காட்டும் வீடியோ அல்ல என்பதும், உண்மையில் அந்த வீடியோ ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட சுனாமியின்போது வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி என்பதும் தெரியவந்தது. 2011 ஜப்பான் சுனாமி: இஷினோமாகி என்ற தலைப்பில் யூடியூப் சேனலிலும் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், அந்த வீடியோவுக்கும் பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதும், வீடியோ ஜப்பானில் எடுக்கப்பட்டிருப்பதும் உறுதியாகி உள்ளது.

    • நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினர்.
    • நகைகள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கின்றனர்

    சென்னை:

    திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம், நகைகளை கைப்பற்றியதாக கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது. 

    அதில், 'திருமலை திருப்பதி பாலாஜி கோயிலில் 16 அறங்காவலர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரின் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 128 கிலோ தங்கம்... 150 கோடி ரூபாய் ரொக்கம்... 70 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள்!!!' என்று பதிவிடப்பட்டுள்ளது.

    அந்த வீடியோவில், ஏராளமான நகைகள் மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டு அவற்றை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதுபோல் உள்ளது.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் வீடியோவுடன் பகிரப்படும் தகவல் குறித்து கூகுள் மூலம் தேடும்போது, ஏற்கனவே இந்த வீடியோவை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலரான சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையுடன் தொடர்புபடுத்தி கடந்த ஆண்டு வெளியிட்டதும், அது உண்மைல்ல என்றும் தெரியவந்தது. 

    உண்மையில் அந்த வீடியோவது, தமிழகத்தின் வேலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல்துறையினர் மீட்டு, பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டியபோது எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. வீடியோவில் 'மாவட்ட காவல்துறை, வேலூர்' என தெளிவாக இருக்கிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. அதே வீடியோவையே மீண்டும் சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்.

    எனவே, தற்போது பரவும் வீடியோவுக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் வீட்டில் நடந்த ரெய்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது.

    • புதினின் சமீபத்திய தோற்றங்களில் அவரது உயரமும், காதுகளும் மாறி உள்ளன.
    • புதினை போன்று வேறு ஒரு நபரை பயன்படுத்தி வருகிறார்கள்.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர் புற்றுநோயால் அவதிப்படுவதாக கூறப்பட்டது. பிறநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போது, புதினின் கை, கால்களில் நடுக்கம் இருந்தன என்று ஊடகங்கள் தெரிவித்தன.

    இதேபோல் புதின், தன்னை போன்று உருவம் கொண்ட நபர் பொது வெளியில் உலாவ விடுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை ரஷியா திட்டவட்டமாக மறுத்தது.

    இந்த நிலையில் புதினை போன்றே தோற்றம் கொண்ட போலி நபர் உலாவி வருவதாக உக்ரைன் நாட்டு உளவுத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக உக்ரைனின் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் ஒருதொலைக் காட்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதினின் சமீபத்திய தோற்றங்களில் அவரது உயரமும், காதுகளும் மாறி உள்ளன. அவரது புகைப் படங்களில் ஒவ்வொன்றிலும் காதுகள் வித்தியாசமானதாக இருக்கிறது. ஒவ்வொரு நபரின் காதும் தனித்துவமானது. அது ஒரு கைரேகை போன்றது. அதை மீண்டும் செய்ய முடியாது.

    புதினை போன்று வேறு ஒரு நபரை பயன்படுத்தி வருகிறார்கள். சமீப காலங்களில், புதின் பொது வெளியில் தோன்றிய போது வெவ்வேறான பழக்க வழங்கங்கள், வித்தியாசமான நடத்தைகள், வித்தியாசமான நடைகள், நன்கு கூர்ந்து கவனித்தால் வெவ்வேறு உயரங்களை நீங்கள் பார்க்கலாம் என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, கடந்த மாதம் ஈரானுக்கு சென்று அந்நாட்டு அதிபர் மற்றும் துருக்கி அதிபரை சந்திக்க புதினின் போலி நபர் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.

    நான் ஒரு குறிப்பை மட்டும் கொடுப்பேன். ஈரானின் தெக்ரானில், புதின் விமானத்தில் இருந்து கீழே இறங்குவதை பாருங்கள். அது புதினா? என்பதை பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதே போல் உக்ரைன் வட்டாரங்கள் கூறும்போது, தெக்ரானில் விமானத்தில் இருந்து கீழே இறங்கியபோது புதின் வழக்கத்துக்கு மாறாக விரைந்து நடந்து சென்றதாக தெரிவித்துள்ளது.

    புதின் பற்றிய உக்ரைனின் உளவுத்துறை தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி தலைகுனிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக பதிவிட்டிருந்தார்.
    • இந்த புகைப்படத்தை மியான்மரில் 2018ம் ஆண்டில் இருந்தே பரப்பி வருகின்றனர்.

    ஜப்பான் மின்சாரத்துறை மந்திரியின் புகைப்படம் என்று கூறி, சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு புகைப்படம் வலம் வருகிறது. ஜப்பானில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டதற்காக பொதுமக்கள் மத்தியில் மின்சாரத்துறை மந்திரி 20 நிமிடங்கள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்பதாக, அந்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தனர்.

    இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது 2015ல் வெளியான புகைப்படம் என்பதும், அதில் தலைகுனிந்து நிற்பவர் ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி இல்லை என்பதும் தெரியவந்தது. புகைப்பட ஏஜென்சியான நிப்பான் நியூஸ் இந்த புகைப்படத்தை வெளியிட்டு, படவிளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, புகைப்படத்தில் இருப்பவர் ஜப்பானின் முன்னணி கார் நிறுவனமான ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற டகாஹிரோ ஹசிகோ ஆவார். அவர் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது செய்தியாளர்கள் முன்னிலையில் தலைகுனிந்து வணக்கம் தெரிவித்திருக்கிறார். எனவே, அவர் ஜப்பான் மின்சாரத்துறை மந்திரி என்ற கூற்று உண்மையல்ல என்று தெளிவாகிறது.

    இந்த புகைப்படத்தை ஜப்பான் மந்திரியுடன் தொடர்புபடுத்தி மியான்மரில் 2018ம் ஆண்டில் இருந்தே பரப்பி வருகின்றனர். கடந்த மே மாதம் 6ம் தேதியில் இருந்து மீண்டும் இப்படம் வைரலானது. அதில், 'நீங்கள் மியான்மரில் மந்திரியாக இருந்தால் எப்போதும் குனிந்து ஒரு கட்டத்தில் விழுந்து இறந்துவிடுவீர்கள்' என்று தங்கள் கருத்தையும் பதிவிட்டு வைரலாக்கினர். பலமுறை இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.

    தற்போது தமிழகத்தை தொடர்புபடுத்தி, வாசகத்தை மாற்றி இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். சில இடங்களில் செடி வளர்ந்து மின்கம்பியோடு மோதும் பொழுது அதில் அணில் ஓடும், அணில் மின்கம்பிகளில் ஓடும்போது இரு கம்பிகளும் இணைவதால் மின்தடை ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அவர் சொன்னதை வைத்து கேலி செய்யும் வகையில் இந்த புகைப்படத்துடன் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். 

    • பீதியை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.
    • பொதுமக்கள் தேவையில்லாத அழைப்புகளை எடுக்காமல் உஷாராக இருப்பது நல்லது என அறிவுறுத்தல்

    சென்னை:

    மும்பை போலீசார் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 140 என்று தொடங்கும் செல்போன் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அதை எடுக்காதீர்கள், அப்படி எடுத்து பேசினால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும், எச்சரிக்கையாக இருங்கள், என்று போலீசார் கூறுகின்றனர். மும்பையில் உள்ள சாலையில் போலீசார் நின்ற படியும், ரோந்து வாகனங்களில் சென்ற படியும் இது பற்றி ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுகிறார்கள். இதேபோல் மகாராஷ்டிர காவல்துறை கூறியதாக வாட்ஸ்அப் குழுக்களில் ஒரு எச்சரிக்கை தகவல் பரப்பப்பட்டது.

    ஒரு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் செய்த வித்தியாசமான விளம்பரப் பிரச்சாரத்தால்தான் இந்த பிரச்சனை ஆரம்பித்து, மும்பைவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. 140ல் தொடங்கும் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பேசிய நபர், ஒரு கொலையை நேரில் பார்த்ததாகவும், அந்த கொலையை தனது போனில் படம் பிடித்ததாகவும், கொலையாளிகள் தன்னைப் பின்தொடர்ந்ததாகவும் கூறி உள்ளார். மறுமுனையில் அவரது உரையாடலை கேட்ட நபர் அதிர்ச்சியில் உறைய, 'இது புதிய நிகழ்ச்சிக்கான விளம்பர அழைப்பு' என்று கூறியிருக்கிறார்கள். இதுபோன்று பலரை தொடர்புகொண்டு பேசி உள்ளனர்.

    அந்த நபர் பேசியதை பதிவு செய்து காவல்துறையின் டுவிட்டர் மற்றும் ஹெல்ப்லைனில் பலரும் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகே 140ல் தொடங்கும் எண்களில் இருந்து வந்தால் யாரும் அழைப்பை எடுக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தலை வழங்கி உள்ளனர்.

    இந்த தகவல் வேகமாக பரவ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மைதானா? என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.

    இதுபற்றி, மகாராஷ்டிர காவல்துறையின் சைபர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி விளக்கம் அளித்தார். ரோந்து காவல்துறையின் மொபைல் வேன்கள் தவறான எச்சரிக்கையை வெளியிட்டதாகவும், 140ல் தொடங்கும் எண்கள் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் எண்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.

    மேலும், ஒருவர் தனது வங்கிக் கணக்கு விவரங்கள், OTP அல்லது கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு எண்ணை கொடுக்காத வரையில் எந்த பாதிப்பும் இல்லை என்று சைபர் போலீஸ் தெரிவித்துள்ளது. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.

    எனவே, 140 என்று தொடங்கும் செல்போன் அழைப்பை எடுத்தால் வங்கி பணம் பறிபோகும் என்ற கூற்று உண்மையில்லை என்பது தெளிவாகிறது. இருப்பிலும் இந்த தகவல் மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுகிறது.

    இது தொடர்பாக சென்னையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தொலைபேசியில் பேசும் மோசடி கும்பல் வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களை கேட்டறிந்து மோசடி செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு நம்பர், ரகசிய நம்பர் ஆகியவற்றை வாங்கி மோசடியில் ஈடுபடுகிறது.

    மும்பையில் 140 என்று தொடங்கும் போன் நம்பரை எடுத்ததும் வங்கி பணம் மோசடி செய்யப்படுவதாக தகவல் பரவுகிறது.

    சென்னையில் இது போன்ற மோசடி இதுவரை நடைபெறவில்லை. ஆனாலும் பொதுமக்கள் இது போன்ற தேவையில்லாத அழைப்புகளை எடுக்காமல் உஷாராக இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நத்திங் போனுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது.
    • #DearNothing என்கிற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டானது.

    நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்தியது. லண்டனைச் சேர்ந்த இந்நிறுவனம் அங்கு நடைபெற்ற ஈவண்ட்டில் நத்திங் போன் 1 மாடலை அறிமுகம் செய்தது. பயனர்கள் எதிர்பார்த்தபடி ஏராளமான சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த போனுக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பும் கிளம்பியது.

    இதற்கு காரணம் ஒரு லெட்டர் தான். தென்னிந்தியாவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், நேற்று நத்திங் போன் வெளியான சமயத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் நத்திங் போன் அடங்கிய பாக்ஸை பிரிக்கும் போது அதில் போன் எதுவும் இன்றி காலியாக இருப்பது போலவும், ஒரு லெட்டர் மட்டும் அதில் இருப்பது போலவும் அந்த வீடியோவில் அவர் காட்டி இருந்தார்.


    அந்த லெட்டரில் 'இந்த சாதனம் தென்னிந்திய மக்களுக்கு வழங்கப்படாது' என எழுதப்பட்டிருந்தது. இந்த லெட்டர் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆனது. நத்திங் நிறுவனம் பயன்படுத்தும் ஸ்டைலிலேயே அந்த லெட்டரில் உள்ள எழுத்துக்கள் இருந்ததனால் நெட்டிசன்களும் அது நத்திங் நிறுவனத்தில் இருந்து வந்த லெட்டர் தான் நம்பி, கொதித்தெழுந்தனர்.

    இதையடுத்து #DearNothing என்கிற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டானது. ஏராளமானோர் நத்திங் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வந்தனர். இதனால் பரபரப்பி நிலவியது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு லெட்டரை நத்திங் நிறுவனம் அனுப்பவே இல்லையாம். அது அந்த யூடியூபர் செய்த பிராங்க் வீடியோ என்பது பின்னர் தான் தெரியவந்தது. நத்திங் நிறுவனமும் இந்த சர்ச்சை குறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

    • இதுவரை இல்லாத அளவிற்கு குளிர் அதிகரிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
    • வானிலை ஆய்வு மையம் கூறியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று பிஐபி உறுதிப்படுத்தி உள்ளது.

    இந்த ஆண்டு சூரியனில் இருந்து பூமி மிக தொலைதூர புள்ளியான அபெலியன் நிலையை அடையும் நிகழ்வு ஜூலை 4-ந்தேதி முதல் ஆகஸ்டு 22-ந்தேதி வரை நடைபெறும் என்றும், சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் இதுவரை இல்லாத அளவிற்கு குளிர் அதிகரிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கிமீ என்றும், ஆனால் அபெலியன் நிகழ்வின் போது தூரம் 66% அதிகரித்து 15.20 கோடி கிமீ ஆக அதிகரிக்கப்போகிறது என்றும் அந்த தகவலில் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் செய்திகளும் வெளிவந்தன.

    சூரியனில் இருந்து பூமி விலகிச் செல்வது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்தி பரவியது. இந்த தகவல் குறித்த உண்மைத் தன்மையை சரிபார்த்ததில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் அதிகரிக்கும் தூரம் குறித்து, வெளியான தகவல் தவறானது என தெரியவந்தது. 9 கோடி மைல்கள் என்பது 9 கோடி கிமீ என கவனக்குறைவாக செய்தி பகிரப்பட்டுள்ளது. மேலும் குளிர் எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று பத்திரிகை தகவல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

    பூமியானது சூரியனுக்கு மிகத் தொலைவில் இருக்கும் அபெலியன் மற்றும் மிக அருகில் இருக்கும் பெரிஹெலியன் ஆகியவை பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள புள்ளிகள் மட்டுமே. அபிலியன் சூரியனில் இருந்து 15.2 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெரிஹெலியன் 14.7 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    பொதுவாக, பூமி சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. சுற்றுப்பாதை ஒரு சரியான வட்டம் அல்ல என்பதால், சூரியனிலிருந்து பூமியின் தூரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும், சராசரியாக, பூமியிலிருந்து சூரியனுக்கான தூரம் சுமார் 15 கோடி கிலோ மீட்டர் ஆகும். இந்த சராசரி தூரம் ஒரு வானியல் அலகு என்று அழைக்கப்படுகிறது.

    பெரிஹெலியன் மற்றும் அபெலியனை ஒப்பிடும்போது, தூரத்தில் சுமார் 3.3% மாற்றம் இருக்கும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அபெலியனில் அதிகரிப்பு வெறும் 1.4% மட்டுமே. எனவே, சமூக வலைத்தள தகவல்களில் கூறியபடி, சில அபெலியன் நிகழ்வின்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 66% அளவுக்கு அதிகரிப்பதில்லை.

    இந்த ஆண்டில், பூமி சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் புள்ளியான அபெலியன், ஜூலை 4 அன்று நடந்தது. பெரிஹெலியன் கடந்த ஜனவரி 4 அன்று நடந்தது. அபெலியன் மற்றும் பெரிஹெலியன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்கின்றன. ஏனெனில் பூமி எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கிறது மற்றும் சூரியனை சுற்றி வருகிறது. எனவே, ஜூலை 4 முதல் 22 ஆகஸ்ட் 2022 வரை அபெலியன் நிகழ்வு நடைபெறும் என்று கூறுவது சரியல்ல, அபெலியன் மற்றும் பெரிஹெலியன் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகள் என்பதே உண்மை. அதேபோல் வானியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு இந்த நிகழ்வு முக்கிய காரணம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    • திமுகவில் இருந்து அய்யப்பன் எம்எல்ஏ தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
    • சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவி வருவதாக விளக்கம்

    கடலூர் சட்டமன்ற உறுப்பினர், கோ.அய்யப்பன், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கடலூர் மாநகராட்சி தேர்தலின் போது திமுக கட்சிக்கு எதிராக மாற்று வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக கட்சி தலைமை இதுவரை முடிவு எடுக்கவில்லை.

    இந்த சூழ்நிலையில், அய்யப்பன் எம்எல்ஏ பாரதிய ஜனதா கட்சிக்கு செல்ல உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் இது வதந்தி என விளக்கம் அளித்துள்ளார் அய்யப்பன் எம்எல்ஏ.

    'தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் மக்கள் பணியை மும்முரமாக செய்து வருகிறேன். தற்போது சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. அது முழுக்க முழுக்க வதந்திதான். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன்' என்றார்.

    • 2010ல் ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் இதே புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
    • டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக, சிறகுகள் கொண்ட பாம்பின் புகைப்படம் வைரலானது. அது உண்மையான பாம்புதான் என்ற வகையில் கருத்து பகிரப்பட்டது. அந்த படத்தைப் பார்த்த மக்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர். அதேசமயம், இது உண்மையாக இருக்காது, ஏமாற்று வேலை என்றும் பலர் கமென்டில் பதிவிட்டனர்.

    இதையடுத்து இந்த படத்தின் உண்மைத்தன்மையை சரிபார்த்ததில், சாதாரண பாம்பின் புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் சிறகுகள் இணைத்து உண்மையான பாம்பு போன்று சித்தரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம், படத்தை தேடியபோது, ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்களுக்கான ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் அதே படம் பகிரப்பட்டிருந்தது தெரியவந்தது. குராமே என்ற பயனர் 2010இல் அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் திட்டத்திற்காக இதை உருவாக்கியதாக கூறியிருந்தார். ஒரு பாம்பின் புகைப்படம் மற்றும் இறக்கைகளின் படத்ததை தனித்தனியாக சேகரித்தாக கூறியிருந்தார். எனவே, டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது. பழைய படத்தை சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக்கி வருவதும் தெரியவந்தது.

    மேலும், இன்றுவரை சிறகுகள் கொண்ட பாம்பு போன்ற உயிரினங்கள் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் கூட இத்தகைய உயிரினம் இருந்ததற்கான பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களோ அல்லது படங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பிடிஐ செய்தி நிறுவனத்தின் பெயரில் வெளியான ஒரு டுவிட்டர் பதிவு வைரலானது.

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடனான கூட்டணியை சிவ சேனா முறித்துக்கொண்டு பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க வேண்டும் என அதிருப்தி குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

    இந்த சூழ்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்தின் பெயரில் வெளியான ஒரு டுவிட்டர் பதிவு வைரலானது. மகாராஷ்டிர முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுக்காவிட்டால் சகி நாகா ரெயில் நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன், என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுப்பதாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பார்த்த பலரும் அன்னா ஹசாரேவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.

    இதையடுத்து, உண்மை சரிபார்க்கும் ஊடக நிறுவனமான பூம், இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட பதிவு வெளியான டுவிட்டர் கணக்கு பிடிஐ பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் போலியான கணக்கு என்பது கண்டறியப்பட்டது. அத்துடன், மகாராஷ்டிராவில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பாக, அன்னா ஹசாரே எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவந்தது.

    மேலும், அந்த தகவலின் குறிப்பிட்டபடி மும்பை அந்தேரி கிழக்கில் அமைந்துள்ள சகி நாகாவில் ரெயில் நிலையம் இல்லை, மெட்ரோ நிலையம் மட்டுமே உள்ளது. எனவே, பிடிஐ பெயரில் வெளியிடப்பட்ட பதிவு போலியானது என உறுதி செய்யப்பட்டது.

    • பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறியதாக சமூக வலைத்தங்களில் நியூஸ் கார்டு பரவியது.
    • கலவரம் ஏற்படுத்த தூண்டிவிடும் தேச விரோத சக்திகளை மக்கள் கண்டறிய வேண்டும் என நிர்மல் குமார் கூறுகிறார்

    ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வட மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. வன்முறையாளர்களுக்கு ராணுவத்தில் இடம் இல்லை என ராணுவ உயர் அதிகாரி கூறி உள்ளார்.

    இந்த சூழ்நிலையில், அக்னிபாத் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளவேண்டும் என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் கூறியதாக சமூக வலைத்தங்கள் மூலம் தகவல் (நியூஸ் கார்டு) பரவியது. அந்த கார்டில், "மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் தேசவிரோதிகளை சுட்டுத் தள்ள வேண்டும். பிரதமர் மோடியின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் உறங்கிக் கொண்டு இருப்பது அசிங்கமாக உள்ளது – நிர்மல் குமார் ( பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு)" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நியூஸ் கார்டு வைரலான நிலையில், இது போலியாது என நிர்மல் குமார் கூறி உள்ளார். அந்த நியூஸ் கார்டையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு Fake Card என தெரிவித்துள்ளார்.

    அதேசமயம், அக்னிபாத் போராட்டத்திற்கு எதிராக நிர்மல் குமார் தொடர்ந்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார்.

    இன்று வெளியிட்ட பதிவில், "17 வயதில் ஏழை எளிய மக்களுக்கு வேலையை உறுதி செய்துள்ள மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சொத்துக்களை சேதம் விளைவிக்க மற்றும் கலவரம் ஏற்படுத்த தூண்டிவிடும் தேச விரோத சக்திகளை மக்கள் கண்டறிய வேண்டும்..." என கூறியிருக்கிறார் நிர்மல் குமார்.

    ×