என் மலர்tooltip icon

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். குடும்பத்தினர் 3 பேர் காயம் அடைந்தனர்.
    காரியாபட்டி:

    மதுரை வளர்நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). இவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அரசு வழக்கறிஞராக உள்ளார்.

    இவர் தனது மனைவி மகேஸ்வரி (37), மகன் முகேஷ் (9), மகள் நிதன்யா (7) ஆகியோருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு மகன் முகேசுக்கு மொட்டை போட்டு விட்டு மதுரைக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரியாபட்டியை அடுத்த கல்குறிச்சி அருேக வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் முருகானந்தம், முகேஷ், மகேஸ்வரி, நிதன்யா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் முகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    முருகானந்தம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மல்லாங்கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதத்தை போலீசார் விதித்தனர்.
    ஆலங்குளம்:

    தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்ேவறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அத்துடன் வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

    முக கவசம் கண்டிப்பாக அணிய வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவது ஒருபுறம் இருந்தாலும், அவ்வாறு அணியாமல் வருபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

    ஆலங்குளம், டி.கரிசல்குளம், கொங்கன்குளம், வலையபட்டி மேலாண்மறைநாடு, அப்பையநாயக்கர் பட்டி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம், கீழாண் மறைநாடு, ஏ.லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், போலீசாருடன் சென்று கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கண்டிப்பாக பொதுமக்கள் வெளியில் வரும் போது முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இதையடுத்து முக்கிய இடங்களில் முக கவசம் இல்லாமல் யாரும் வருகிறார்களா என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் ஆலங்குளம் அருகே உள்ள டி.கரிசல்குளத்தில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் அந்த வழியாக வந்த 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
    கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 6-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் தி.முக. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் பி.எஸ்.டபிள்யு.மாதவராவ் (வயது64) போட்டியிட்டார்.

    இவர் கடந்த மாதம் 17-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 3 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    கடுமையான சளி, காய்ச்சலால் அவதிப்பட்ட மாதவராவ் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து அவருக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அவருக்கு நுரையீரல் தொற்று தீவிரமானது. இதனால் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. உடனே அவர் நேற்று அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமானது.

    அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். ஆனாலும் மாதவராவ் இன்று காலை சுமார் 8 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

    இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மரணம் அடைந்த மாதவராவுக்கு டாக்டர் சீத்தாலட்சுமி என்ற மனைவியும், திவ்யா (25) என்ற மகளும் உள்ளனர். மனைவி சீத்தாலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மகள் திவ்யாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

    மாதவராவ் கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் உள்ள அய்யம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.

    இவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் எம்.ஏ. பொருளாதாரமும், சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். படிப்பும் படித்துள்ளார். மேலும் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றுள்ளார். மேலும் அவர் விளையாட்டிலும் சிறந்த வீரராக திகழ்ந்து வந்தார். தடகளம், நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

    பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் சென்னை அம்பத்தூரில் குடும்பத்துடன் குடியேறினார். சென்னையில் கியாஸ் ஏஜென்சி மற்றும் பெட்ரோல் பங்க்குகள் நடத்தி வந்தார்.

    காங்கிரஸ் கொடி

    சிறு வயதில் இருந்தே மாதவராவ் காங்கிரஸ் கட்சி மீது தீவிர பற்றுடன் இருந்தார். மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகள் அருணாசலம், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருடன் நெருங்கிய நட்புடன் இருந்து வந்தார்.

    கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளராகவும், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பதவி உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    தேர்தலில் நிற்பது இவரது நீண்டநாள் கனவாகும். பலமுறை இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கட்சி மேலிடத்தில் விருப்ப மனு கொடுத்தார். மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தென்காசி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். அவருக்கு முதல் முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

    இந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகிவிடலாம் என மாதவராவ் நினைத்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவை அறியாமல் அவர் மரணம் அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மரணம் அடைந்த மாதவராவ் உடல் இன்று ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன் பிறகு அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படுமா? அல்லது சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுமா? என்பது பற்றி முடிவு செய்யப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
    மாவட்டத்தில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 749 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
    விருதுநகர்:

    ெகாரோனா பாதிப்பை தவிர்க்க மாநிலங்களுக்கு, மத்திய அரசு உதவிட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த மாவட்டத்தில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 749 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 750-வது நபராக நான் தடுப்பூசிபோட்டுக் கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    இம்மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சம் பேர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதனை எனது வேண்டுகோளாக கூறுகிறேன்.

    இதன் மூலமே கொரோனா பாதிப்பை தடுக்க முடியும். நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் மாநிலங்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல.

    அவர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாகவும் நடந்துகொள்ளவில்லை. ஒரு டாக்டராகவும் நடந்துகொள்ளவில்லை.

    மத்திய அரசு கொரோனா 2-வது அலையின் தாக்கம் மாநிலங்களில் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன் வர வேண்டும்.

    அப்போதுதான் பாதிப்பினை தவிர்க்க முடியும். அதை விடுத்து மாநில அரசின் மீது பழி போடுவது ஏற்புடையதல்ல. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏழு அம்ச திட்டம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மத்திய மந்திரிகள் பிரதமருக்குத்தானே கடிதம் எழுதியுள்ளார் என்று கருதி நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளனர்.

    யார் ஆலோசனை கூறினாலும் அதன் தன்மை குறித்து ஆய்வு செய்து அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தடுப்பூசி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது உள்ள நிலைமை இப்படி தடுப்பூசி போட்டால் நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

    எனவே தடுப்பூசி போடும் வேகத்தினை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய படைகளை கையாளும் விதம் எவ்வாறு என்பதற்கு எடுத்துக்காட்டு மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற சம்பவமாகும்.

    திரிணாமுல்காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தற்போது இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதுபற்றி நாட்டு மக்களுக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 25-க்கும் குறைவாக இருந்த நிலையில் நேற்று திடீரென பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 17,100 ஆக உயர்ந்துள்ளது. 16,689 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 178 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 234 பேர் நோய் பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர். கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 25-க்கும் குறைவாக இருந்த நிலையில் நேற்று திடீரென பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டது.
    சாத்தூர்:

    தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டது.

    அதேபோல பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதில் ஒன்றாக கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது. சாத்தூர் டவுன் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் முக கவசம் இல்லாமல் யாரும் வருகிறார்களா என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பணியில் சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்யது இப்ராகிம், பாக்கியராஜ், கிருஷ்ணசாமி, மற்றும் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முக கவசம் அணியாமல் வந்த 250 பேருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

    அத்துடன் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
    வத்திராயிருப்பு:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்தநிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முக கவசம் இ்ல்லாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன் முக கசவம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் போலீசார், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    தமிழக அரசு விதிக்கும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அனைவரும் கடைபிடித்தால் கண்டிப்பாக கொரோனா தாக்குதலில் இருந்்து விடுபடலாம் என போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

    ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துபட்டி கிராமத்தில் காட்டு பகுதியில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
    தாயில்பட்டி:

    ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ராமநாதபுரம் என்ற மடத்துபட்டி பகுதியில் ஏராளமான விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர்.

    பருத்தி அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் திடீரென காட்டு பகுதியில் தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக பரவ தொடங்கியது. இதுகுறித்து விவசாயிகள், வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.

    3 மணி நேரத்திற்கு பிறகு போராடி தீயை அணைத்தனர். இதனால் பருத்தி செடியில் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டது. தீயில் இருந்து பருத்தியை காப்பாற்றிய தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

    அதேபோல சத்திரம் கிராமத்தில் காட்டுப்பகுதியில் புல்லில் பிடித்த தீ வேகமாக பரவுவதாக வெம்பக் கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன் அருகே தான் பட்டாசு ஆலைகள் உள்ளன. விரைவாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    புனித ரமலான் மாதம் தொடங்க உள்ளதால் பள்ளிவாசல்களில் இரவு 10 மணிவரை நோய்த்தடுப்பு விதிகளை பின்பற்றி தொழுகை நடத்த அனுமதி பெற்றுத்தரக்கோரி கலெக்டரிடம் அனைத்து முஸ்லிம் ஜமாஅத்தார்கள் மனு கொடுத்தனர்.
    விருதுநகர்:

    தமிழக அரசு மாநிலத்தில் நோய் பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை வழிபாடுகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

    மேலும் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக வழிபாட்டுத்தலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத்தார்கள் நேற்று கலெக்டரிடம் கோரிக்கைமனு கொடுத்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:- புனித ரமலான் மாதம் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. ரமலான் மாதத்தை ஒட்டி பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை தொழுகை நடத்தப்படும். இந்தநிலையில் தமிழக அரசு நோய் பரவலை தடுக்க வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    எனவே ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இரவு 10 மணி வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த உரிய அனுமதி பெற்று தர வேண்டுகிறோம்.

    அரசு அறிவித்துள்ள நோய் தடுப்புவிதிமுறைகளை முறையாக பின்பற்றுவோம் என உறுதி கூறுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கண்ணன் இது குறித்து அரசிடம் தெரிவித்து அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பதாக தெரிவித்தார்.

    சிவகாசி அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள நடுவப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவருக்கும் இவரது மனைவி சங்கரேஸ்வரி (34) என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரேஸ்வரியின் பெற்றோர், மருமகனை சமாதானம் செய்து வைக்க மாரிமுத்து வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் மாரிமுத்து தனது மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து சங்கரேஸ்வரி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய மாரிமுத்துவை கைது செய்தனர்.
    மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் குண்டாற்று படுகையில் நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் தொடரும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குண்டாற்று படுகையில் மணல் திருடப்படுவதாக ஏற்கனவே பல பொதுநல வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு இதனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட நீதிபதியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு அதனை தொடர்ந்து மேலும் ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனை ஐகோர்ட்டு நியமித்தது.

    இதனைத்தொடர்ந்து குண்டாற்று படுகையில் மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனாலும் மாவட்டத்தின் கிழக்கு பகுதியிலுள்ள கிராமங்களில் குண்டாற்று படுகையில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெறுகிறது. ஏற்கனவே திருச்சுழி பகுதியில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டதால் அப்பகுதியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கிழவநேரி புதுப்பட்டி கிராமங்களில் எந்திரங்கள் மூலம் ஏராளமான லாரிகளில் அனுமதியில்லாமல் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதேபோல குண்டாற்றுபடுகையில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் கிழவநேரி மற்றும் புதுப்பட்டி கிராமங்களில் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    மேலும் ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பணக்குடியைச் சேர்ந்தவர் அழகுமுத்து. இவரது மனைவி சரண்யா (வயது 24). இவர்களுக்கு 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர்.

    அழகுமுத்து சரியாக வேலைக்கு செல்லாததால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா, கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் சங்குவள்ளி வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் அங்கு சரண்யாவும், அவரது மகனும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சங்குவள்ளி, மகள் மற்றும் பேரனை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக இறந்தார். 4 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வி‌ஷம் குடித்த சரண்யா பாட்டிலை கீழே வீசி இருக்கலாம். அதனை எடுத்து சிறுவன் குடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். மகனுக்கு வி‌ஷம் கொடுத்துவிட்டு சரண்யா குடித்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    ×