என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் 15க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு ஒளிரும் பட்டைகளை வழங்கினார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மேற்பார்வையில், திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே ஆயில் மில், காக்களூர் சாலை, செங்குன்றம் சாலை, டோல்கேட் பகுதி போன்ற பகுதிகளில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பணி புரிய ஏதுவாக ஒளிரும் பட்டைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் 15க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு ஒளிரும் பட்டைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    திருத்தணியில் நடைபயிற்சி சென்ற முதியவர் கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அரக்கோணம் சாலையில் குப்பா ரெட்டி (வயது 71) என்பவர் நடைபயிற்சி சென்றார். அப்போது அவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டிரைவர் தப்பி ஓடினார். ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட குப்பா ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் அருகே மண்எண்ணெய் குடித்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு நமச்சிவாயபுரம் கிருஷ்ணர் கோவில் தெருவை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது 72). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கடந்த 12ந் தேதி வீட்டில் இருந்த மங்கம்மாள் தண்ணீர் குடிக்க சென்றார். அப்போது தண்ணீர் என்று நினைத்து அருகில் இருந்த மண் எண்ணெயை தவறுதலாக குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மங்கம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    குன்றத்தூர் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பூந்தமல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆசாத் (42). இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் குன்றத்தூர் மணிகண்டன் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள 3 மாடிக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் தோல் தொழிற்சாலை நடத்தி வரும் இவர் கடந்த 8-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்று விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது 2-வது மாடியில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர். இதில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைத்து 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருமண மண்டபம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமானது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திடீரென லிஜ்ப்ட் அறுந்து விழுந்தது. இதில், லிஃப்டிற்குள் இருந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரணடு பேர் காயமடைந்துள்ளனர்.

    உணவு பொருட்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டின் இரும்பு கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், திருமண மண்டபம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமானது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதையும் படியுங்கள்.. ஜம்மு காஷ்மீரில் பேருந்து தீப்பிடித்ததில் 4 பேர் பலி- 20 பேர் படுகாயம்
    ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தங்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது என்று போலீசில் புகார் அளித்தனர்.

    பூந்தமல்லி, மே.13

    திருவேற்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர் (22) இவரது நண்பர் பரத்குமார் (20). இருவரும் நேற்று இரவு திருவேற்காடு சிவன் கோவில் தெருவில் உள்ள பிரபல ஓட்டலில் சாப்பிட்டனர்.

    வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் இருவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து அவர்கள் திருவேற்காடு போலீசில் புகார் அளித்தனர். அதில், “திருவேற்காடு, சிவன் கோவில் தெருவில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட தங்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. தரமான உணவு இல்லை. எனவே ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.

    இதுகுறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த ஓட்டலில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

    திருவள்ளூர் தேரோட்டத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் திருவள்ளூரில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தார். நேற்று அவர் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் மர்ம நபர் இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் நகரில் மீன் மார்க்கெட் அமைக்கும் இடங்களை திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மெர்சி அமலா மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரில் மீன் மார்க்கெட்டிற்கு என்று தனி இடம் கிடையாது. இதனால் தனியார் வாடகை கடைகளில் சாலை ஓரங்களிலும் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வந்து அங்கேயே வெட்டி சுத்தம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் மீன் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அவ்வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.

    எனவே பல்வேறு இடங்களில் இயங்கி வரும் மீன் கடைகளை ஒன்றிணைத்து தனியாக மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து திருவள்ளூர் நகரில் மீன் மார்க்கெட் அமைக்கும் இடங்களை திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மெர்சி அமலா மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டு வருகிறார்கள். அவர்கள் உழவர் சந்தை, பூ மாலை உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடத்தினை மீன் மார்க்கெட் அமைக்க அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.

    கலால் பிரிவு உதவி ஆணையரும், பொன்னேரி பொறுப்பு வருவாய் கோட்டாட்சியருமான பரமேஸ்வரி தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பொன்னேரி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டத்தில் 249 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள சில கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரிவர பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனவும், எடை குறைவாக வழங்கப்படுவதாகவும், விலையில்லா அரிசி தரப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    மேலும் பல இடங்களில் கைரேகைப் பதிவு கருவிகள் செயல்படவில்லை என கூறி பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டை தாரர்களின் கைரேகைகளை பதிவு செய்யாமல் முறைகேடு நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளன.

    இந்த நிலையில் கலால் பிரிவு உதவி ஆணையரும், பொன்னேரி பொறுப்பு வருவாய் கோட்டாட்சியருமான பரமேஸ்வரி தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பொன்னேரி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள ரேசன் கடை, கவுரி தியேட்டர் அருகே உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் பதிவேட்டில் உள்ளபடி உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளனவா? எடைஎந்திரம், கைரேகை பதிவு கருவி ஆகியவை சரியாக செயல்படுகிறதா ? என்பது குறித்தும் சோதனை செய்தனர். மேலும் பொருட்கள் வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்களிடம் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இணையதள சேவையில் ஏற்படும் குளறுபடி காரணமாக சில நேரங்களில் ரேசன் கடைகளில் கைரேகை பதிவு கருவியில் சிக்கல்கள் ஏற்படுகிறது. முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ஆரணி அருகே சரக்கு வேனில் கடத்திய 1 1/2 டன் ரேசன் அரிசி கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தை அடுத்த ஆரணி அருகே உள்ள போந்தவாக்கம் கிராமம், புதுவாயல் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது போந்த வாக்கம் கிராமத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி சென்ற ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 1 1/2 டன் எடை கொண்ட ரேசன் அரிசி 32 மூட்டைகளில் கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து வேன் டிரைவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் வேனுடன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு ரேசன் அரிசி கிடைத்தது எப்படி? யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    பழவேற்காடு பகுதியில் இன்று காலை 7.30 மணி அளவில் திடீரென மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது. மேலும் வீடுகள் அதிர்ந்தது போன்று பொதுமக்கள் உணர்ந்தனர்.
    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை ஒட்டி சுமார் 20 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்படும் செயற்கைக்கோள்கள் மேலே செல்லும் போது பழவேற்காடு பகுதியில் இருந்து பொதுமக்களால் தெளிவாக பார்க்க முடியும்.

    இந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் இன்று காலை 7.30 மணி அளவில் திடீரென மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது. மேலும் வீடுகள் அதிர்ந்தது போன்று பொதுமக்கள் உணர்ந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். வீடுகள் அதிர்வு குறித்து குழப்பம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்காக என்ஜின் சோதனை செய்த போது ஏற்பட்ட சத்தத்தால் பழவேற்காடு பகுதியில் அதிர்வு உணரப்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து பொன்னேரி தாசில்தார் ரஜினிகாந்த் கூறும்போது, பழவேற்காடு கிராமத்தில் இன்று காலை 7.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டதாகவும் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக விசாரணை செய்தபோது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் திட்டத்திற்காக ஆராய்ச்சி நடைபெற்ற போது ஏற்பட்ட சத்தத்தால் அதிர்வு உணரப்பட்டு உள்ளது. நில அதிர்வு எதுவும் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
    பூந்தமல்லி அருகே கட்டிட பணியில் தவறிவிழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய்சவுரி (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் பூந்தமல்லி அடுத்த கூடபாக்கத்தில் நடைபெற்று வந்த தனியார் தொழிற்சாலை கட்டிடப் பணியில் வேலை செய்து வந்தார்.

    இவர் பணியில் ஈடுபட்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்ந்தார். உடனடியாக அவரை மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனிற்றி விஜய்சவுரி இறந்து போனார். இதுகுறித்து ராம்மாலிக் வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×