என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் வடக்குப்பட்டி வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராம்கி (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி உள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்ததால் ராம்கி மீது ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த இளம்பெண் புகார் கொடுத்தார். அப்போது அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. ராம்கி மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இந்த வழக்கு ஆலங்குடியில் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்பின் இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ராம்கி இடைக்கால ஜாமீனில் இருந்து வந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறியிருக்கிறார். ஆனால் திருமணம் செய்யாததால் அவர் மீண்டும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் ராம்கி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று ராம்கி மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்ப்பமான பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கோர்ட்டு வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு ராம்கி தனது காதலிக்கு தாலி கட்டினார். அப்போது அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீல்கள் உடன் இருந்தனர். திருமணம் முடிந்த பின் ராம்கி சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ருத்ர தாண்டவம் படத்தில் இந்து மக்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதித்து நடக்கவில்லை. கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் தங்க நகைகளை உருக்கக்கூடாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வெட்டான்விடுதி அருகே உள்ள கருக்காகாடு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். அ.தி.மு.க. ஆதரவாளரான இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி. முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
முதலில் புதுக்கோட்டையில் பணியில் இருந்த அவர் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், பழனிவேல் ஆகியோர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் ஒப்பந்தங்களை எடுத்து நடத்தி வந்தனர்.
இதில் ரவிச்சந்திரனும் திருவரங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். முருகானந்தமும், ரவிச்சந்திரனும் அரசு ஊழியர்களாக இருந்த போதிலும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் துணையோடு அரசு ஒப்பந்தங்களை எடுத்து நடத்தினர்.
குறிப்பாக எல்.இ.டி. மின் விளக்குகள், பிளீச்சிங் பவுடர் வாங்குவது, அரசு விளம்பர பதாகைகள் வைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் ஒப்பந்ததாரராக இருந்தனர். இதற்காக சகோதரர்கள் மூவரும் கட்சியினர் மற்றும் அதிகாரிகளை தங்கள் கைக்குள் வைத்திருந்தனர்.
தற்போது முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமாக புதுக்கோட்டையில் வணிக வளாகங்கள், திருமண மண்டபம், ஏராளமான நிலங்கள், வீடுகள் உள்ளன. அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் உள்ளாட்சி ஒப்பந்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார்கள் வந்தன.
அதுமட்டுமின்றி குறைந்த காலத்தில் பழனிவேல், முருகானந்தம், ரவிச்சந்திரன் ஆகியோர் அளவுக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இது தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையிலும், புகார்களின் பேரிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 40-க்கும் மேற்பட்டோர், துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன் தலைமையில் இன்று புதுக்கோட்டை வருகை தந்தனர்.
அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள ஒப்பந்ததாரர் பழனிவேல் வீடு, வெட்டான்விடுதியில் உள்ள முருகானந்தம் வீடு, கருக்காகாடு பகுதியில் உள்ள சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகள், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரில் உள்ள பிரமாண்டமான விஜய் பேலஸ் வணிக வளாகம் உள்பட 6 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
காலை 6.30 மணிக்கு அதிரடியாக அலுவலகங்கள், வீடுகளில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சோதனை நடத்தப்பட்டு வரும் இடங்களில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வந்துள்ளன. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
இதற்கிடையே முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்கள் பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி சோதனை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... இங்கிலாந்தில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை - அரசு எடுத்த அதிரடி முடிவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் அன்பழகன். இவர் தனது வாக்கி- டாக்கியுடன் கடந்த 24-ந்தேதி இரவு கீரனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு ரோந்துப்பணி சென்றார்.
இதற்கிடையே அவர் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணல் கடத்தும் தொழிலில் ஈடுபட்ட இன்பசுரேஷ் என்பவருக்கும், போலீஸ்காரர் அன்பழகனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்தநிலையில் அன்பழகனை இன்பசுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் முகேஷ், சீனிவாசன், செந்தில் ஆகிய 4 பேரும் அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளனர்.
போதை தலைக்கேறிய நிலையில் அன்பழகன் வைத்திருந்த வாக்கி-டாக்கி தவறி கீழே விழுந்துள்ளது. அதனை எடுத்துக்கொண்ட மணல் திருடர்கள் 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். போதை தெளிந்த போலீஸ்காரர் அன்பழகனுக்கு அப்போதுதான் தனது வாக்கி- டாக்கி மாயமானது குறித்து தெரியவந்தது.
பின்னர் அவர் இதுபற்றி கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அன்பழகனுக்கு மது வாங்கி கொடுத்த 4 பேரும் சேர்ந்து வாக்கி-டாக்கியை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். அதன்பேரில் வாக்கி- டாக்கியை திருடிய இன்ப சுரேஷ் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் வாக்கி-டாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சமரசம் பேச சென்ற போலீஸ்காரர் அன்பழகன் அஜாக்கிரதையாக செயல்பட்டதோடு, பணியின் போது மது அருந்தியது தொடர்பாக அவர் பணியாற்றி வரும் போலீஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் தீவிர விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், போதையில் வாக்கி- டாக்கியை தவற விட்ட போலீஸ்காரர் அன்பழகனை இன்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்... 165 ஆண்டு கால வரலாற்று பெட்டகமாக எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகம்






