search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti Corruption Department"

    • இடமாறுதல் உத்தரவு பெற்ற நர்சுகளை சம்மந்தப்பட்ட மாவட்ட துணை இயக்குனர்கள், தாமதம் செய்யாமல் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
    • லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.

    இங்கு துணை இயக்குனராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் முத்துமணி என்பவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

    மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு பணியாளராக பணியாற்றி, தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சக்தி முருகன் என்பவர் அடிக்கடி இந்த அலுவலகத்திற்கு வந்துசெல்வார்.

    சென்னை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் மாநில அளவிலான கவுன்சிலிங் அடிப்படையில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை அனைத்து மாவட்டங்களிலும், பல்வேறு இடங்களில் பணிபுரியும், ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளை அவர்களின் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

    இந்த கவுன்சலிங் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த 76 ஒப்பந்த நர்சுகள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு பெற்றனர். இடமாறுதல் உத்தரவு பெற்ற நர்சுகளை சம்மந்தப்பட்ட மாவட்ட துணை இயக்குனர்கள், தாமதம் செய்யாமல் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன் ஆகியோர், கவுன்சலிங் மூலம் இடமாறுதல் பெற்ற ஒப்பந்த நர்சுகளை, தற்போது பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்க திட்டம் தீட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து இடமாறுதல் பெற்ற நர்சுகளிடம் ஒவ்வொருவருக்கும் அவர்களை விடுவிக்க ரூ. 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காத நர்சுகளை பணியில் இருந்து விடுவிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

    லஞ்சப் பணம் கொடுக்காமல் மாறுதல் உத்தரவு பெற முடியாது என்று நினைத்து சில நர்சுகள் பணம் கொடுத்து மாறுதல் உத்தரவு பெற்றுச் சென்றுவிட்டனர்.

    இது குறித்து ரகசிய தகவல் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஒப்பந்த அடிப்படையில், பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய ஒரு நர்ஸ் தேனி மாவட்டம், அல்லி நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கவுன்சலிங் மூலம் இடமாறுதல் பெற்றிருந்தார். அவரை இங்கிருந்து விடுவிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து, முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை கூகுள்பே கணக்கு மூலம் கொடுத்துள்ளார். மீண்டும் அதே முறையில் ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    இதேபோல் எலச்சிபாளையம், வினைதீர்த்தபுரம், திருமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றிய ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளிடமும் கூகுள்பே மற்றும் வங்கி கணக்கு மூலம் லஞ்சம் பெற்றுள்ளனர்.

    சிலரிடம் நேரடியாக பணமாகவும் வாங்கியுள்ளனர். மேலும் துணை இயக்குனரின் வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் நடைபெற்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், ஹெல்த் இன்ஸ்பெக்டர் முத்துமணி, மற்றும் சக்திமுருகன் ஆகிய 3 பேர் மீது, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

    இதையொட்டி அவர்கள் மீது விரைவில் துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர்கள் 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    ×