என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் காணாமல்போன நோயாளி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
- இறந்த மதியழகனுக்கு சர்மிளா என்ற மனைவியும், 5 வயதில் கபில் வளவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர்;
பெரம்பலூர் சங்குபேட்டை பின்புறம் உள்ள பெரம்பலூர் கீழேரி எனப்படும் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியில் நேற்று காலை 6.15 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தார். அவர் உள்ளாடை மட்டும் அணிந்திருந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏரியில் பிணமாக மிதந்து கொண்டிருந்த ஆண் உடலை பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் ஏரியில் இருந்து இறந்தவரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதனை தொடர்ந்து போலீசார் இறந்தவர் யார்?, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஏரியில் பிணமாக மிதந்தவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த மருதமுத்துவின் மகன் மதியழகன் (வயது 29) என்பது தெரியவந்தது.
மதியழகன் அதிக மது போதையில் உயர் ரத்த அழுத்தத்தால் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மனநலம் சரியில்லாதவர்போல் நடந்து கொண்ட காரணத்தால் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் கடந்த 24-ந் தேதி காலை 10 மணியளவில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 25-ந் தேதி மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து மதியழகன் தப்பித்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை.
இதனால் அவரை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் மதியழகன் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் வெள்ளந்தாங்கியம்மன் ஏரியில் மதியழகன் நேற்று காலை இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மதியழகன் இறந்தது தொடர்பாக, அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மதியழகன் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால், அவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மதியழகனுக்கு சர்மிளா என்ற மனைவியும், 5 வயதில் கபில் வளவன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேம்பால பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த 3 மாதங்களாக எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை. சாலையின் இருபுறங்களிலும் பள்ளங்கள் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதேபோல் சிறுவாச்சூர் பகுதியில் மேம்பால பணிகள் நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன
. இத்தகைய காரணத்தினால் வார விடுமுறை நாட்களில் சிறுவாச்சூரில் இருந்து விஜயகோபாலபுரம் வரை வாகனங்கள் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதே சமயம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- டிராக்டர் டிப்பர் கதவு அடித்ததில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.
- போலீசாா்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சிறுகளப்பூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி விஜயா(வயது 70). இவர் கடந்த 23-ந் தேதி பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் கிராமத்தில் நடந்த கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர் சுரேஷ் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இரவில் விஜயா இயற்கை உபாதை கழிப்பதற்காக நொச்சியத்தில் இருந்து சிறுவாச்சூருக்கு செல்லும் குறுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நொச்சியத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் டிராக்டர் ஓட்டி வந்தார்.
அந்த டிராக்டர் பின்னால் உள்ள டிப்பரில் (பெட்டி) திறந்த நிலையில் இருந்த கதவு சாலையோரம் நின்று கொண்டிருந்த விஜயா மீது அடித்தது. இதில் படுகாயமடைந்த விஜயாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக விஜயாவின் மகன் செல்வராசு கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசாா் டிராக்டர் டிரைவர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர்,
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில், நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் வெங்கடேசன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி ஆம்புலன்ஸ் நிர்
வாகம் உடனடியாக பணி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் சதவீத அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். தற்பொழுது வழங்கப்பட்ட பணி வரையறை அட்டவணைப்படி தொழிலாளர்களை அழைக்கழிக்காமல் நாளுக்கு ஒரு லொகேஷன் என்று மாறி மாறி பணி வழங்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே அதாவது கடைசி நேரத்தில் எந்த இடத்தில் பணி என்பதை கூறாமல், உரிய நேரத்தில் பணி மாவட்ட அதிகாரிகளால் கூற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
- புதிய தமிழகம் கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்ட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர், புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விஷசாராயம் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், டாஸ்மாக்கில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக வாங்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டவிரோத டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்ட்டது.
- தொழில் முனைவோருக்கு கடனுதவியுடன் மானியம் வழங்கபடும் என கலெக்டர் தெரிவித்தார்
- மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 8925533976 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம்.
பெரம்பலூர்,
தமிழக அரசு எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியுடன் இணைந்த மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு வேறெந்த கல்வித் தகுதியும் தேவையில்லை. மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீத அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். எனவே பயனாளர்களுக்கு தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.
ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 8925533976 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தொழில் முனைவோர்கள், இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு, கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்.
- பெரம்பலூர் காவல்துறையில் பணிபுரிய 11 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது
- மாவட்ட எஸ்.பி. ஷ்யாமளாதேவி வழங்கினார்
பெரம்பலூர்,
தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திற்கான எழுத்து தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் மருத்துவ சோதனைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை முடித்து தகுதியுள்ள நபர்களை தமிழக காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 11 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தகுதி பெற்ற 11 நபர்களில் 3 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கும், பெரம்பலூர் எஸ்.பி. ஷ்யாமளாதேவி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்களி 9 பேர் மாவட்ட சேமநலப்படை, 2 பேர் தமிழக சிறப்பு காவல்படையில் பணிபுரிவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.
- விதிமுறைகள் மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்படும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
- 16 பஸ்களுக்கு நோட்டீஸ் விடபட்டுள்ளது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகன ஆய்வு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷ், சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) ராஜாமணி, கண்காணிப்பாளர் வேலாயுதம், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு ஆகியோர் தனியார் பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வாகனங்களில் அவசரகால வழி, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி உள்ளிட்ட உச்ச நீதிமன்றம் மற்றும் அரசு வகுத்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு குறித்து கலெக்டர் கற்பகம் கூறும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் 64 தனியார் பள்ளிகளில், மொத்தம் 380 பஸ்கள் உள்ளன. முதற்கட்டமாக 225 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய விதிமுறைகள் பின்பற்றாத, குறைபாடுடைய 16 பஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.அதனை சரி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும்.
பஸ்களில் முன்புறமும், பின்புறமும் சென்சார், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் தனியார் பள்ளி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.முன்னதாக விபத்து போன்ற அவசர காலங்களில் டிரைவர்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துகளில் இருந்து பள்ளி குழந்தைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூலமாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
- அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஆட்டோ நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து செல்லும் ஆட்டோக்கள் சாலைகளில் அதிவேகமாக செல்வதினால் பொதுமக்களும், ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளும் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தெருநாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்
- இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினாலும், தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினாலும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மற்றும் பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு 1998-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2023-2024 கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இதில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.நாதசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைப்பள்ளியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணாக்கர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.400 வழங்கப்படுகிறது. அரசுப் பஸ்களில் இலவச பயண சலுகை பெறலாம்.
பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மற்றும் பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்.1, மதனகோபாலபுரம், நான்காவது தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலும், தொலைபேசி எண் 04328-275466 மற்றும் கைபேசி எண் 8072519559 ஆகிய எண்களின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
- பெரம்பலூரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மின்சாரம் அடிக்கடி தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நேற்று காலை முதல் மதியம் 3 மணி வரை அனல் காற்றுடன் கடுமையான வெப்பநிலை இருந்தது. அதைத்தொடர்ந்து இதமான தட்பவெப்ப நிலை நிலவியது. சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. பெரம்பலூர், எசனை, வேப்பந்தட்டை, சிறுவாச்சூர், பாடாலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பரவலான மழை பெய்தது. பல இடங்களில் முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெரம்பலூரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மின்சாரம் அடிக்கடி தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பலத்த காற்று வீசியதால் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் சாலையோரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்களை சரிசெய்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் இருந்து தொழிலாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சாலையில் சாய்ந்து கிடந்த புளிய மரத்தின் கிளைகளை மோட்டார் எந்திரங்கள் உதவியுடன் அறுத்து அகற்றி, கிளைகளை அப்புறப்படுத்தினர்.






