என் மலர்
பெரம்பலூர்
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
- கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவில் வாரந்தோறும் திங்கள், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திறந்திருக்கும். உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகம் மே 22-ந்தேதி முடிவடைந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி 3 தற்காலிக கோவில் உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்து சமய அறநிலையத்துறையின் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, சரக ஆய்வாளர்கள் தீபாதேவி, வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக 3 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவை எடுக்கப்பட்டு தனித்தனியாக எண்ணப்பட்டது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க ஆன்மிக மெய்யன்பர்கள் 47 பேரும், கோவில் பணியாளர்கள் உள்பட 60 பேர் ஈடுபட்டனர். இதில் ரூ.25 லட்சம் பணமும், 192 கிராம் தங்கமும், 148 கிராம் வெள்ளியும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
- காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனராஜ் தலைமை வகித்தார், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் அர்ஜூன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் டாகட் பாப்புபெஞ்சமின்இளங்கோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரச்சாரம் செய்வது, வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமாக்க ஆக்க சபதம் ஏற்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைதலைவர் தங்கவேல், நிர்வாகிகள் ராஜா, சின்ராஜ், தாமரைமணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
- 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவ,மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான பொது கலந்தாய்வில் முதல் கட்டமாக இன்று (1ம்தேதி) தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 2ம்தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 3ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 6ம்தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
முதல் பொது கலந்தாய்வில் 2ம் கட்டமாக வரும 7ம்தேதி தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும், 8ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 9ம்தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 10ம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ,மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்று சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும். 2ம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 12ம்தேதி முதல் நடைபெறுகிறது. அதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதுகள் பெற விருப்பமுள்ள மற்றும் தகுதியுடையவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்பளித்த தனியார் நிறுவனம், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
எனவே விருதுக்கு தகுதியானவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மனு விசாரணை முகாமில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
- மீதமுள்ள 22 மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பெரம்பலூர் -21, பாடாலூர் -3, மருவத்தூர்- 6, அரும்பாவூர்- 12, அனைத்து மகளிர் காவல்நிலையம் -10, குன்னம் 8, மங்களமேடு-18, வி.களத்தூர் 5, கை.களத்தூர் -4 என மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டு அதில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 22 மனுக்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
- பெரம்பலூர் அருகே விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை மற்றும் ரூ.60 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுப்ரமணியன் 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரிய பெண்மணியை அடுத்த கொலப்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், விவசாயி. இவர் துங்கபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மும்பையை சேர்ந்த யுனிவர்சல் ஷாம்போ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் 2021-22-ம் நிதி ஆண்டில் சுரக்சா காப்பீடு பெற்று இருந்தார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி உள்ளூரில் நடந்த ஒரு துக்க காரியத்திற்காக சுப்ரமணியன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு தனது உறவினர்களுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மாடு குறுக்கே வந்ததால், சுப்ரமணியன் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். பின்பு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுப்ரமணியன் 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து சுப்ரமணியத்தின் மகன் வீரமணி காப்பீடு தொகையை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காப்பீடு செய்து இருந்த நிறுவனம் மற்றும் துங்கபுரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மேலாளர் ஆகிய இருவர் மீதும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வக்கீல் விஜயன் மூலம் வீரமணி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்காகவும் வீரமணியின் மனஉளைச்சலுக்கு காரணமாகவும் இருந்துள்ள முதல் எதிர்மனுதாரர் நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வீரமணிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் காப்பீட்டு தொகையான ரூ.10 லட்சத்தை 45 நாட்களுக்குள் வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 28 மதுபான கூடங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- அனுமதி பெற்று இயங்கி வரும் தனியார் மதுபானம் அருந்தும் கூடங்களை மாவட்ட கலால் உதவி ஆணையர் ஷோபா தலைமையில், டாஸ்மாக் மேலாளர் திருமாறன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் மது அருந்தும் கூடங்களில் போலி மது மற்றும் டாஸ்மாக் தவிர மற்ற மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் அனுமதி பெற்று இயங்கி வரும் தனியார் மதுபானம் அருந்தும் கூடங்களை மாவட்ட கலால் உதவி ஆணையர் ஷோபா தலைமையில், டாஸ்மாக் மேலாளர் திருமாறன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது.இதில் மதுபானக்கூடங்களில் விற்கப்படும் மதுக்கள் டாஸ்மாக்கில் வாங்கப்பட்டதா? என்றும் மேலும் வேறு போலியான மது பானங்கள் விற்கப்படுகிறதா? என்றும் மது பாட்டில்களை நேரில் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுபான கூடத்தில் மதுபானங்கள் இருப்பு மற்றும் போதுமான கழிவறை வசதிகள் உள்ளிட்டவைகள் சரியாக உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் மதுபானம் அருந்தும் கூடத்தில் நேற்று தொடங்கிய ஆய்வு தொடர்ந்து அனைத்து இடங்களிலும் நடைபெறும் என்றும், மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 37 டாஸ்மாக் கடைகளில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 28 மது அருந்தும் கூடங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது அனுமதி பெற்ற மதுபான கூடங்கள் மட்டும் இயங்கி வருவதாக டாஸ்மாக் மேலாளர் திருமாறன் தெரிவித்துள்ளார்.
- அரசுப்பள்ளிகள், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
- புவி வெப்பமயமாதலை தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையிலும், தொடர்ந்து மழை பொழிந்திடவும் மரக்கன்றுகளை வளர்ப்பது இன்றைய காலத்தில் இன்றியமையாததாகும்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க பணிக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பேசும்போது கூறியதாவது:- பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியினை வனத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை பொது மக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பல்வேறு திட்டங்களின் மூலம் நாம் நடும் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து அவற்றை மரங்களாக வளர்த்துக் காட்ட வேண்டும். புவி வெப்பமயமாதலை தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையிலும், தொடர்ந்து மழை பொழிந்திடவும் மரக்கன்றுகளை வளர்ப்பது இன்றைய காலத்தில் இன்றியமையாததாகும். எனவே வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றம் உழவர் நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் அதிகளவிலான மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.
அரசுப்பள்ளிகள், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். நமது பெரம்பலுார் மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் உள்ள மாவட்டமாக, பசுமை போர்வையால் போர்த்தப்பட்ட மாவட்டமாக உருவாக அரசு அலுவலர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருளாளன், பயிற்சி உதவி கலெக்டர் பிரியதர்ஷினி மற்றும் வனச்சரகர்கள் கலந்து கொண்டனர்.
- லாரி மோதி வாலிபர் பலியானார்.
- விபத்தில் பலத்த காயம் அடைந்த பரதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பரதன் (வயது 18). இவர் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே துறையூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பரதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரதன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேலகுலத்தெருவை சேர்ந்த மணிவேலை (51) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பரவாய் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்
- தீயணைப்பு வீரர்கள் மீட்ட உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் திருமூர்த்தி(வயது 74). இவர் சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் திருமூர்த்தி நேற்று முன்தினம் மாலை தனது வயலுக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த உறவினர்கள் திருமூர்த்தியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை காணாமல்போன திருமூர்த்தி வயல் அருகே குமரசாமி என்பவரது வயலில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் திருமூர்த்தியின் செருப்பு மற்றும் துண்டு, சட்டை கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கூறியுள்ளனர். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தேடி பார்த்த போது திருமூர்த்தி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பிச்சுமணி விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் விசாரணையில் திருமூர்த்தி வயலுக்கு வரும்போது தனியாருக்கு சொந்தமான கிணற்றில் இறங்கி பாட்டிலில் தண்ணீர் எடுப்பாராம். அதேபோல் தான் பாட்டிலில் தண்ணீர் எடுக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது.
- பெரம்பலூர் விவசாயி வீட்டு பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
- கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயின் உதவியுடன் போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ்(வயது 55). விவசாயியான இவர் கடந்த 27-ந் தேதி பெரம்பலூர் அருகே உள்ள புது நடுவயலூர் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு அந்த ஊரை சேர்ந்த தனது உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் ரங்கராஜ் வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நேற்று காலை பார்க்கும்போது ரங்கராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.இதுகுறித்து உடனே அவர் ரங்கராஜை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் நேற்று காலை 6 மணி அளவில் ரங்கராஜ் வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் ஆகியவை கொள்ளைபோய் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர் உடனே பாடாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழக அரசை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- மாவட்ட பொறுப்பாளர் வரகூர் அருணாசலம் தலைமை நடந்தது
பெரம்பலூர்,
பெரம்பலூரில் காந்தி சிலை முன்பு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான வரகூர் அருணாசலம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடுகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.இதில் மாவட்ட அவைத்தலைவர் குணசீலன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், செல்வமணி, ரவிச்சந்திரன், சசிக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் ராஜாராம், ராணி, ராஜேஸ்வரி, முத்தமிழ்செல்வன், ராஜேந்திரன், கருணாநிதி, டாக்டர் நவாப்ஜான், குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார், துறைமங்கலம் சந்திரமோகன், வக்கீல் ராமசாமி, கீழப்புலியூர் நடராஜன், மருவத்தூர் வெள்ளையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.






