என் மலர்
பெரம்பலூர்
- எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.
- ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள காரை கிராமம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்-மஞ்சுளா தம்பதியினர். நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இந்த தம்பதியின் மகள் கோகிலா.
ஊசிபாசி மணிகள் விற்று பிழைப்பு நடத்தி வரும் சுப்பிரமணியன் தனது மகளை படிப்பில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் படிக்க வைத்தார்.
அதற்கேற்ப தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்ற நிலையில் கோகிலாவும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பிரதிபலனாக தற்போது நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் பெற்று நரிக்குறவர் சமுதாயத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவி என்ற பெருமையை கொண்டுள்ளார்.
பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 459 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த கோகிலாவுக்கு தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.
பழங்குடியின் மாணவிகள் தேர்ச்சிக்கு 109 மதிப்பெண்கள் போதுமானது என்ற நிலையில் மாணவி கோகிலா 161 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சராசரி மாணவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மதிப்பெண்களாக இருந்தபோதிலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊசிபாசி விற்று என்னை படிக்க வைத்த பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், கல்வி கற்க வறுமையோ, தான் சார்ந்த சமுதாயமோ ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நீட் தேர்வை நான் தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டேன். அதற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்.
தற்போது தான் பெற்ற கல்வியை எனது சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நரிக்குறவ சமூக மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகிறேன். மற்ற நேரங்களில் பெற்றோருக்கு உதவியாக ஊசிபாசி தயாரித்து கொடுக்கிறேன். ஊசிபாதி பிடித்த கையில் ஸ்டெத் தஸ்கோப்பை பிடிக்கும் காலம் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு
- விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் 2022 - 23 ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார். பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு எச்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற பிட்ஸ் பிலானி கல்லூரியில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டரிங், டிசைனிங்) பட்டப் படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் மேனேஜ்மெண்ட் சேர்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராகவும், 2022 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் 60 சதவீதமும், 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எச்.சி.எல். மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இந் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்புக்கான செலவுகளை தாட்கோ ஏற்கும். இத் திட்டத்தில் ஆண்டு ஊதியமாக ரூ. 1.70 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் வரையிலும், திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப் பயிற்சியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
- ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது
- பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. சியாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களுக்கு பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கவாத்து பயிற்சியில், காவலர்களுக்கு உடல்பயிற்சி, லத்தி பயிற்சி, துப்பாக்கிகளை கையாளும் ஆயுதப்பயிற்சி, கும்பலை கலைக்கும் பயிற்சி, கலவரத்தை கையாளும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தங்கம் மற்றும் ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. சியாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களுக்கு பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கவாத்து பயிற்சியில், காவலர்களுக்கு உடல்பயிற்சி, லத்தி பயிற்சி, துப்பாக்கிகளை கையாளும் ஆயுதப்பயிற்சி, கும்பலை கலைக்கும் பயிற்சி, கலவரத்தை கையாளும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தங்கம் மற்றும் ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- போலீசாரை கண்டித்து சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்
- தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி போக்குவரத்து பாதிப்பு
பாடாலூர்.
பேரீச்சம் பழம் ஏற்றிச்சென்ற லாரி ஆந்திர மாநிலம், நாயுடு பேட்டையில் இருந்து பேரீச்சம் பழங்களை ஏற்றிக்கொண்டு திருச்சி பால் பண்ணைக்கு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை, அதன் உரிமையாளர் திருவண்ணாமலை மாவட்டம், கணேசபுரத்தை சேர்ந்த சாமிகண்ணுவின் மகன் பாலாஜி (வயது 34) என்பவர் ஓட்டினார். நேற்று காலை 10.15 மணியளவில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் அருகே அந்த லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, போக்குவரத்து விதிமுறைகளை மீறி அந்த லாரி இயக்கப்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்ஸ்பெக்டரிடம் பாலாஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டு லாரியை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அந்த லாரியும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையே சுமார் ½ மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
- பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில விவசாயி பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு பரவாய் கிராமத்தில் வேப்பூர் செல்லும் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து வந்தார். அதேநேரத்தில் குன்னம் அருகே உள்ள கல்லம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(38) என்பவர், வேப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பரவாய் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற முருகேசன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாலையில் விழுந்த முருகேசனுக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முருகேசனின் தம்பி சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியாயினி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து முருகேசனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த முருகேசனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
- பெரம்பலூர் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
- கலெக்டர் கற்பகம் வழங்கினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் கற்பகம், குரும்பலூரில் விளிம்பு நிலையில் உள்ள இருளர் இன மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளையும், முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள இருளர் இன மக்கள் குடிநீர், கழிவறை வசதிகள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், இங்குள்ள மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுவிட்டதா, எத்தனை பேருக்கு வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, தயாராக இருந்த 23 பேரின் இ பட்டாக்களை 20 பேருக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கினார். குரும்பலூர் பேரூராட்சித் தலைவர் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், ஸ்டாலின் செல்வகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் மெர்சி, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
பெரம்பலூர் :
பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறை அபராதரட்சகர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் அலுவலர்கள்-விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
- கருத்து கேட்பு கூட்டம் அறிவித்த இடத்தில் அறிவித்த நேரத்தில் தொடங்கப்படாததால் விவசாயிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகி நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை பாசன வாய்க்கால்கள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக புஜங்கராயநல்லூர் உள்ளிட்ட கிராம விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் கருத்து கேட்பு கூட்டம் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்ததால் விவசாயிகள் அங்கு சென்றனர்.
ஆனால் அங்கு விவசாயிகள் அமருவதற்கு போதிய அளவு இடவசதி, இருக்கை வசதி இல்லை. கருத்து கேட்பு கூட்டம் அறிவித்த இடத்தில் அறிவித்த நேரத்தில் தொடங்கப்படாததால் விவசாயிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகி நீண்ட நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். கூட்டம் தொடங்கப்படாததால் விவசாயிகளுக்கும், ஆர்.டி.ஓ. அலுவலக அலுவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திலேயே கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் விவசாயிகள் ஆத்திரமடைந்தனர்.இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தாமதமாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் புஜங்கராயநல்லூர் கிராம விவசாயிகள் எங்கள் கிராமத்தில் விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் வசதி உள்ளது. இதனால் எங்கள் கிராமத்தில் மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு கிளை வாய்க்கால்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டாம். அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- இந்த கடையிலிருந்து மது போதையில் வாகனங்களில் வரும் நபர்களால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர்-துறையூர் பிரதான சாலையில் பாளையம் கிராமத்திலுள்ள பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையிலிருந்து மது போதையில் வாகனங்களில் வரும் நபர்களால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதையறிந்த கிராம மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், தொடர்ந்து நடக்கும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் டாஸ்மாக் கடையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் முத்துசாமி (60) என்பவர் சாலையோரம் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி காயமடைந்தார். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் தாசில்தார் நூர்ஜஹானிடம் மனு அளித்தனர்.
- பெரம்பலூரில் சன்மார்க்க சங்க போட்டி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழாவையொட்டி சன்மார்க்க சங்கம் சார்பில் நாளை (16ம்தேதி) நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சன்மார்க்க சங்க மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூரில் வரும் 18ம்தேதி தேதி நடைபெற உள்ள வள்ளலார் 200 முப்பெரும் விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் , மாணவியர்களுக்கான சன்மார்க்க பேச்சுப்போட்டி, திருவருட்பா ஒப்புவித்தல் போட்டி, திருவருட்பா இசை போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மரகதவல்லி தாயார் திருமண மண்டபத்தில் நாளை (16ம் தேதி) காலை 10 மணியளவில் தொடர்ந்து நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும் பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- வாலிகண்டபுரத்தில் பா.ஜ.க. கொடிக்கம்ப கல்வெட்டு சேதமடைந்துள்ளது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கொடி மற்றும் கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மஙகமேடு அருகேயள்ள வாலிகண்டபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பா.ஜனதா கட்சியின் 30 அடி உயர கொடிக்கம்பம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மர்ம ஆசாமிகள் கழட்டி சென்றதுடன், டிஜிட்டல் பேனர் மற்றும் கல்வெட்டுகளையும் சேதப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா கொடி மற்றும் கல்வெட்டை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- வேப்பந்தட்டை அருகே கடன் வாங்கி ஏமாற்றிய ஆசிரியர் பள்ளிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
- ஆசிரியர் ஒருவர் கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் வட்டிக்கு கடனாக பல லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் கடந்த கல்வியாண்டில் இப்பள்ளியில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் வட்டிக்கு கடனாக பல லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பணத்தை திருப்பி தராமல் அரும்பாவூர் பள்ளிக்கு பணி மாறுதலாகி சென்று விட்டார். இந்தநிலையில் மீண்டும் விசுவக்குடி பள்ளிக்கு பணி மாறுதலாகி நேற்று வேலைக்கு வந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணிபுரிய கூடாது. பணிக்கு வந்தால் நாங்கள் பள்ளியை இழுத்துப்பூட்டுவோம் என கூறி முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மாலா ரோஸ்லின் இந்த தகவலை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அம்சவள்ளிக்கு தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அம்சவள்ளி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் இந்த பள்ளியில் இருந்து அந்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்படுவார் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






