என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.22.46 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்ட பணிகள் தொடங்கபட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.22.46 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்புலியூர் சிலோன் காலனி அருகில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.49.21 லட்சம் மதிப்பீட்டில் கீழப்புலியூர் சிலோன் காலனி முதல் சிறுகுடல் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், நமையூர் கிழக்கு தெரு, முருக்கன்குடி பேருந்து நிலையம் அருகில் (பொன்னகரம் காலனி தெரு) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.22.30 லட்சம் மதிப்பீட்டில் சிறுமத்தூர் முன்னுரிமை பணிகளையும், நோவா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நல குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.12.20 லட்சம் மதிப்பீட்டில் திருமாந்துறை நோவா நகரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், பென்னகோணம் வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் பென்னக்கோணம் தேரோடும் வீதியில் (வடக்கு வீதி) தார்சாலை அமைக்கும் பணியினையும், நன்னை பேருந்து நிலையத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் நன்னை கிளியூர் தார்சாலையை அமைக்கும் பணியினையும், மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.6.54 கோடி மதிப்பீட்டில் நன்னை முதல் பரவாய் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், கோவிந்தராஜபட்டிணம் ஆற்றுக்கு செல்லும் பாதையில் நபார்டு – 28 திட்டத்தின் மூலம் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் கோவிந்தராஜபட்டிணம் முதல் கைப்பெரம்பலூர் வரை ஆற்றுப்பாலம் அமைக்கும் பணியினையும், வீரமநல்லூர் ஏரிக்கரை அருகில் மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் வீரமநல்லூர் முதல் குழுமூர் வரை சாலை மேம்படுத்துதல் பணியினையும், கீழப்பெரம்பலூர் பிள்ளையார் கோவில் தெருவில் மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் கீழப்பெரம்பலூர் முதல் கோழியூர் வரை சாலை அமைக்கும் பணியினையும்,கீழப்பெரம்பலூர் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.61.00 லட்சம் மதிப்பீட்டில் கீழப்பெரம்பலூர் ஜெய்குமார் கடை முதல் ஆதிதிராவிடர் காலனி செல்லும் வரை சாலை அமைக்கும் பணியினையும், அகரம் சீகூர் – அரியலூர் ரோடு பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் ரூ.21.20 லட்சம் மதிப்பீட்டில் அகரம்சீகூர் மேல்நிலைநீர்தேக்கதொட்டி அமைக்கும் பணியினையும் என மொத்தம் 22.46 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து, பணிகளை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திருமதி முத்தமிழ்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பிரேமலதா ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், கீழ பெரம்பலூர் சத்யா காமராஜ், நன்னை சின்னு, அகரம்சீகூர் முத்தமிழ் செல்வன் துணை தலைவர் இந்துமதி தர்மராஜ் ஒன்றிய கவுன்சிலர் பெரு கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதில் இருந்து 45 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 45 வயதில் இருந்து 55 வயது வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் (யூ.ஒய்.இ.ஜி.பி.) நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசாணையின் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் 25 சதவீத அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என்ற அடிப்படையில் திட்டம் செயல்பட்டு வந்தது. இந்த நிதியாண்டில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதற்கு அரசு மானியம் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதில் இருந்து 45 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 45 வயதில் இருந்து 55 வயது வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் வியாபார தொழில் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப நகலை பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்திலும் ஒப்படைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு செல்போன் எண்கள் 8925533977, 8925533978 மற்றும் 04328 225580 ஆகிய தொலைபேசி எண்ணில் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் அருகே மகாலிங்கம் சித்தர் குருபூஜை விழா நடைபெற்றது
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் சமத்துவபுரத்தில் மகாலிங்கம் சித்தர் மற்றும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடைபெற்றது. எளம்பலூர் சமத்துவபுரத்தில் மகாலிங்கம் சித்தர் குருபூஜை விழா மற்றும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா பெரம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது. டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி தலைமை தலைமையில், அரசு வக்கீல் சுந்தரராஜன் முன்னிலையில், சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் ஆகியோர் பூஜைகளை நடத்தி வைத்தனர். அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன், கோமாதா பூஜை, 210 மகா சித்தர்கள் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து பொது மக்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சன்மார்க்க சங்க பொறுப்பாளர் கிஷோர்குமார், தயாளன், ராமமூர்த்தி, இயக்குனர் செந்தில், சுகுமார், தமிழ்செல்வன், சுந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவிலில் திருட்டு முயற்சி நடந்தபோது அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கடைவீதி அருகே பூசாரி தெரு சாலையில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை மர்மநபர்கள் அந்த கோவில் கதவின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட முயன்றுள்ளனர். அப்போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் கோவிலில் திருடாமல் அங்கிருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து அலாரம் ஒலித்ததால், சத்தம் கேட்டு கோவிலை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் எழுந்து கோவிலுக்கு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வேன் மீது கார் மோதியதில் வாலிபர் காயமடைந்தார்.
    • இது குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, திம்மயம்பட்டியை சேர்ந்தவர் மகேஷ்குமார்(வயது 24). இவர் நேற்று காலை சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி ஒரு காரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள தம்பை பகுதியில் அந்த கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த வேன் மீது திடீரென மோதியது. இதில் காரின் முன்பகுதி வேனின் பின்புற சக்கரம் உள்ள பகுதிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மகேஷ்குமார் காயமடைந்தார். அவரை போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் வேனில் வந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    • முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(60). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராமசாமி கடந்த வாரம் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒகளூர் பேருந்து நிலையம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு மறியல் நடைபெற்றது
    • மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் செல்லம்மாள் என்பவர் உயிரிழந்தார்.

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள ஒகளூர் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் செல்லம்மாள் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உறவினர்கள் செல்லம்மாளின் உடலை வாங்க மறுத்து ஒகளூர் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது செல்லம்மாளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு சென்ற மங்களமேடு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 27 மனுக்கள் பெறப்பட்டன.
    • போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 27 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    • பெரம்பலூர் ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • சாய்பாபாவுக்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் இரவு மகாதீபாராதனையும் நடந்தது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் எதிரே அமைந்துள்ள ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருடாபிஷேக விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 9-வது வருடாபிஷேக விழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை மகாகணபதி ஹோமம், சாய்பாபா சிலைக்கு புனிதநீர் அபிஷேகம், வண்ணமலர் அலங்காரம் மற்றும் மகாதீப ஆரத்தி நடந்தது. மாலையில் பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர் கோவிலில் இருந்து முளைப்பாரி, பால்குடம் மற்றும் பாபா திருவுருவ ஊர்வலம் புறப்பட்டது.

    ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து சாய்பாபாவுக்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் இரவு மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபா திருவுருவத்தையும், துவாரகாமயி பாதுகைகளையும் வழிபட்டனர். காலையில் தொடங்கி இரவு வரை அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • பேக்கரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • உரியகாலத்திற்குள் வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் அரணாரையில் வடக்கு தாஜ் நகரில் ஸ்நாக்ஸ், இனிப்பு ஆகிய உணவுபொருட்கள் தயாரிக்கும் ேபக்காி உள்ளது. இதன் உரிமையாளர் ராமஜெயம் (வயது 48). இவர் தனது காருக்கு பெரம்பலூர் பள்ளிவாசல் தெருவில் இயங்கிவரும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தார். காப்பீட்டை புதுப்பித்து தருவதற்காக பிரீமியத்தொகை ரூ.29 ஆயிரத்து 772-ஐ காசோலையாக செலுத்தியிருந்தார்.காப்பீடு 19.7.2022 முதல் 18.7.2023 வரை அமலில் உள்ளதாக தெரிவித்து காப்பீட்டு பாலிசி ராமஜெயத்திற்கு வழங்கப்பட்டது.

    இதனிடையே ராமஜெயம் கொடுத்திருந்த காசோலை மிகவும் தாமதமாக வங்கி கலெக்சனுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. இந்தநிலையில் வங்கி கணக்கில் போதியளவு பணம் இருந்தும், ராமஜெயம் காப்பீட்டு நிறுவனத்திற்கு கொடுத்திருந்த காசோலையில் குறிப்பிட்ட தொகைக்கு எண்ணால் எழுத்தால் எழுதியிருந்ததற்கு வித்தியாசம் இருப்பதாக கூறி, காசோலை திருப்பி வந்துவிட்டதாக தெரிவித்து காப்பீட்டு கிளை மேலாளர் ராமஜெயத்திற்கு 55 நாட்களுக்கு பிறகு, இதுகுறித்து நோட்டீசு அனுப்பினர்.

    மேலும் அவருக்கு அளித்திருந்த காப்பீட்டு பாலிசியை ரத்து செய்திட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, காப்பீட்டு நிறுவன கிளை மேலாளர் கடிதமும் அனுப்பி உள்ளார். ராமஜெயம் தனக்கு அளிக்கப்பட்ட நோட்டீசை எடுத்துக்கொண்டு காப்பீட்டு நிறுவன கிளை மேலாளரிடம் முறையிட்டுள்ளார். காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ராமஜெயத்தை அவமரியாதை செய்து, திட்டி, அவரை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

    இதில் மனவேதனை அடைந்த ராமஜெயம், தனது வக்கீல் வீரமுத்து மூலம் காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை பொதுமேலாளர், மதுரை மண்டல மேலாளர் மற்றும் பெரம்பலூர் கிளை மேலாளர் ஆகியோர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 20.10.2022 அன்று மனுசெய்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர்.

    இதில் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக, புதுப்பிக்கப்பட்ட காப்பீட்டு ஆவணத்தை மனுதாரருக்கு உடனே வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை 45 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். உரியகாலத்திற்குள் வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.

    • குன்னத்தில் நாளை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
    • நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    பெரம்பலூர் :

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநலம் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முகாமில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களுக்கு முதல்-அமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் இப்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் நடைபெறும் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. எனவே குன்னம் தாலுகாவை சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-6 மற்றும் தேசிய அடையாள அட்டையை புதுப்பித்து கொள்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கத்தினை தொடங்கினர்
    • கையெழுத்து இயக்கத்தினை ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்
    பெரம்பலூர்,


    பெரம்பலூரில் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த இதற்கான தொடக்க விழாவில், ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் எம்.எல்.ஏ.வு.மான சின்னப்பா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பிரபாகரன், முன்னாள் சேர்மன் அட்சயகோபால், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜா, முதல் கையெழுத்து இட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த தொடக்க விழாவில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் வக்கீல் தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×