என் மலர்
பெரம்பலூர்
- ஒப்பந்த மின் ஊழியர் பேரவை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்ட கிளை சார்பாக ஒப்பந்த ஊழியர் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்து பேசினார். இதில் மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 வழங்கிட கோரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கலெக்டரிடம் வரும் 4ம்தேதி மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொறுப்பாளர்கள் வினோதன் ,அபிமன்னன், மலரவன், குப்புசாமி, கருப்பையா, பெருமாள், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூரில் வன விலங்கு வேட்டையை முற்றிலும் தடுக்க வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டனர்
- இந்த ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் பெரம்பலூர் வனவர் குமார், வனக்காப்பாளர்கள் அன்பரசு, மணிகண்டன் மற்றும் களப்பணியாளர்கள் கொண்ட குழுவினர் கல்பாடி, சிறுவாச்சூர், சத்திரமனை, வேலூர், மங்கூன், அம்மாபாளையம், குரும்பலூர், லாடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பன்றி , மான், முயல் உள்ளிட்ட வனவிலங்கு வேட்டை தடுப்பு, இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.இந்த ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் புதிய தமிழகம் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கையேடு விநியோகிக்கபட்டது
- நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கையேடு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குணா கலந்துகொண்டு புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுதிய டாஸ்மாக் குடியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்ற விழிப்புணர்வு கையேட்டினை விநியோகித்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கபிலன், சதீஷ், சிவசூரியன், இளைஞரணி பொறுப்பாளர் விஜய்பிரபு, மாவட்ட இணையதள பிரிவு அமைப்பாளர் பிரகாஷ் , மணிகண்டன், வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- லெப்பைகுடிகாடு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
- கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் ஓம் நமச்சிவாய என பக்தி பரவசமாக கோஷங்களை எழுப்பினர்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள லெப்பைக்குடிக்காட்டில் அமைந்துள்ள செல்வ விநாயகர்,சுப்ரமணியர், பெரியநாயகி அம்பாள் சமேத, மஹாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகளோடு யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து கும்ப பூஜை, சூரிய பூஜை, நான்கு கால யாக வேள்வி பூஜை நிறைவு பெற்ற பிறகு திரவ்யாஹுதியும், அதனையடுத்த பூர்ணாஹீதியும் நடைபெற்றது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து, கயிலாய வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் வேதவிற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையுடன்பு, கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
லப்பைக்குடிகாடு, ஆடுதுறை, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்து, கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மேற்பட்ட பக்தர்கள் ஓம் நமச்சிவாய என பக்தி பரவசமாக கோஷங்களை எழுப்பினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கு அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை டாக்டர் தினகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். கோவில் செயல் அலுவலர் கருணாகரன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சண்முகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. பெண் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேருராட்சி தலைவராக இருப்பவர் பாக்யலட்சுமி. (திமுக) இவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். பூலாம்பாடி பேரூராட்சி பகுதியில் கடம்பூர் கிராமம் உள்ளது. கடம்பூர் கிராமத்தில் தொடக்கவேளாண் கூட்டுறவு அலுவலகம் எதிரே தனியார் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,அதற்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடம்பூரை சேர்ந்த 3 பேர் பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமியை அவரது வீட்டிற்கே சென்று திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கடம்பூரில் தொடக்கவேளாண் கூட்டுறவு அலுவலகம் எதிரே வீடுகள் கட்ட மனைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.அரசு விதிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதால் மேற்கண்ட மனைப்பிரிவிற்கு அனுமதிதரவில்லை.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் சதீஸ்குமார், சின்னசாமி மகன் ரெங்கநாதன், தேனூர் கந்தன் மகன் கிருஷ்ணண் ஆகிய 3 பேர் எனது வீட்டிற்கு கம்பு, கல் ஆகியவற்றுடன் வந்து என்னை ஜாதியை சொல்லி திட்டி, தகாதவார்த்தைகளால் அசிங்கமாக பேசினர்.
ஜாதியை சொல்லி திட்டாதீர்கள் என கூறிய என் கணவர் செங்குட்டுவனையும் தாக்க முயன்றனர். நாளைக்குள் மனைப்பிரிவிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். எனவே ஜாதிபெயரை சொல்லி அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்த மூன்றுபேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் டிஎஸ்பி பழனிச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.
- சிறுவாச்சூர் சந்தையில் ரூ.20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஆடுகள் வளர்ப்போர், வியாபாரிகள் வந்திருந்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஆட்டுச்சந்தை நடந்தது. பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் லாரி, ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிகாலையில் இருந்தே சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் குவிந்தனர். வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் குர்பானி கொடுக்க ஆடுகளை வாங்க முஸ்லிம்கள் ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர்.
இதனால் ஆட்டுச்சந்தை களை கட்டியது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஆடுகள் வளர்ப்போர், வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடுகளை பேரம் பேசி வாங்கி சென்றனர். ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், சுமார் ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் சிறுவாச்சூரில் வருகிற செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் மீண்டும் ஆட்டுச்சந்தை நடத்துமாறு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தனியார் பஸ் மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்.
- இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 34). இவரது மனைவி கார்த்திகா(31). இவர் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருள்மடல் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் இல்லம் தேடி கல்வித்திட்டம் சம்பந்தமாக பெரம்பலூரில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அசோக்குமார் தனது மனைவி கார்த்திகாவை ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூருக்கு அழைத்து வந்தார்.
பின்னர் கூட்டம் முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் செல்வம் (வயது 29). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கனகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். செல்வத்துக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவது வழக்கம். இதனால் மன உளைச்சலில் மதுவும் குடித்து வந்தார். கடந்த 22-ந்தேதி காலை 10 மணியளவில் செல்வம் அதேபகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக தனது பெரியப்பாவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மயங்கி கிடந்த செல்வத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வம் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிரியரை தாக்கி மாணவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளான்
- போலீசார் வழக்குப்பதிந்து ஜேம்ஸ் பாண்டியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஆசிரியர் திருச்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (வயது 41). இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வாஞ்சிநாதன் நேற்று காலையில் ஊருக்கு செல்வதற்காக பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே சினிமா தியேட்டர் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவரான பெரம்பலூர்-விளாமுத்தூர் ரோடு, சங்குபேட்டையை சேர்ந்த பாண்டியனின் மகன் ஜேம்ஸ்பாண்டி(வயது 19) என்பவர் வந்தார்.
அப்போது அவர் தான் 10-ம் வகுப்பு படிக்கும்போது தன்னை ஏன் அடித்தாய் என்று ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் கேட்டு, அவரை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது தொடர்பான புகாரின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து ஜேம்ஸ் பாண்டியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். ஜேம்ஸ்பாண்டி தற்போது பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் அவரது தந்தை பாண்டியன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.22.46 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்ட பணிகள் தொடங்கபட்டது
- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.22.46 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்புலியூர் சிலோன் காலனி அருகில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.49.21 லட்சம் மதிப்பீட்டில் கீழப்புலியூர் சிலோன் காலனி முதல் சிறுகுடல் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், நமையூர் கிழக்கு தெரு, முருக்கன்குடி பேருந்து நிலையம் அருகில் (பொன்னகரம் காலனி தெரு) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.22.30 லட்சம் மதிப்பீட்டில் சிறுமத்தூர் முன்னுரிமை பணிகளையும், நோவா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நல குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.12.20 லட்சம் மதிப்பீட்டில் திருமாந்துறை நோவா நகரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், பென்னகோணம் வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் பென்னக்கோணம் தேரோடும் வீதியில் (வடக்கு வீதி) தார்சாலை அமைக்கும் பணியினையும், நன்னை பேருந்து நிலையத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் நன்னை கிளியூர் தார்சாலையை அமைக்கும் பணியினையும், மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.6.54 கோடி மதிப்பீட்டில் நன்னை முதல் பரவாய் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், கோவிந்தராஜபட்டிணம் ஆற்றுக்கு செல்லும் பாதையில் நபார்டு – 28 திட்டத்தின் மூலம் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் கோவிந்தராஜபட்டிணம் முதல் கைப்பெரம்பலூர் வரை ஆற்றுப்பாலம் அமைக்கும் பணியினையும், வீரமநல்லூர் ஏரிக்கரை அருகில் மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் வீரமநல்லூர் முதல் குழுமூர் வரை சாலை மேம்படுத்துதல் பணியினையும், கீழப்பெரம்பலூர் பிள்ளையார் கோவில் தெருவில் மாநில அரசு நிதித்திட்டத்தின் மூலம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் கீழப்பெரம்பலூர் முதல் கோழியூர் வரை சாலை அமைக்கும் பணியினையும்,கீழப்பெரம்பலூர் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.61.00 லட்சம் மதிப்பீட்டில் கீழப்பெரம்பலூர் ஜெய்குமார் கடை முதல் ஆதிதிராவிடர் காலனி செல்லும் வரை சாலை அமைக்கும் பணியினையும், அகரம் சீகூர் – அரியலூர் ரோடு பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் ரூ.21.20 லட்சம் மதிப்பீட்டில் அகரம்சீகூர் மேல்நிலைநீர்தேக்கதொட்டி அமைக்கும் பணியினையும் என மொத்தம் 22.46 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து, பணிகளை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திருமதி முத்தமிழ்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பிரேமலதா ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், கீழ பெரம்பலூர் சத்யா காமராஜ், நன்னை சின்னு, அகரம்சீகூர் முத்தமிழ் செல்வன் துணை தலைவர் இந்துமதி தர்மராஜ் ஒன்றிய கவுன்சிலர் பெரு கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதில் இருந்து 45 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 45 வயதில் இருந்து 55 வயது வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
தமிழகத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் (யூ.ஒய்.இ.ஜி.பி.) நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசாணையின் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் 25 சதவீத அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என்ற அடிப்படையில் திட்டம் செயல்பட்டு வந்தது. இந்த நிதியாண்டில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு அரசு மானியம் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதில் இருந்து 45 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 45 வயதில் இருந்து 55 வயது வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் வியாபார தொழில் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப நகலை பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்திலும் ஒப்படைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு செல்போன் எண்கள் 8925533977, 8925533978 மற்றும் 04328 225580 ஆகிய தொலைபேசி எண்ணில் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் அருகே மகாலிங்கம் சித்தர் குருபூஜை விழா நடைபெற்றது
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூர் சமத்துவபுரத்தில் மகாலிங்கம் சித்தர் மற்றும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடைபெற்றது. எளம்பலூர் சமத்துவபுரத்தில் மகாலிங்கம் சித்தர் குருபூஜை விழா மற்றும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா பெரம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது. டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி தலைமை தலைமையில், அரசு வக்கீல் சுந்தரராஜன் முன்னிலையில், சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் ஆகியோர் பூஜைகளை நடத்தி வைத்தனர். அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையுடன், கோமாதா பூஜை, 210 மகா சித்தர்கள் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து பொது மக்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சன்மார்க்க சங்க பொறுப்பாளர் கிஷோர்குமார், தயாளன், ராமமூர்த்தி, இயக்குனர் செந்தில், சுகுமார், தமிழ்செல்வன், சுந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






