என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுக் கோட்டை  உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று மளமளவென உயர்ந்து வருகிறது. 

    திருச்சியை  பொறுத்த மட்டில் கடந்த டிசம்பர் 31&ந்தேதி 8 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்றைய தினம் 184 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று 123 பேருக்கு   மட்டுமே  உறுதி செய்யப்பட்டு   இருந்தது. நாளும் தொற்றுகள்  அதிகரித்து வருவதால்  தற்காலிக கொரோனா  சிகிச்சை மையங்களை திறப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை செய்து வருகிறது. 

    இந்த மண்டலத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தொற்று மிக குறைந்த அளவிலேயே வந்து கொண்டிருந்தன. பல நாட்கள் தொற்று இல்லாத  மாவட்டங்களாக இருந்தன. ஆனால் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. 

    மத்திய மண்டலத்தில் நேற்றைய தினம் மொத்தம் 382 பேருக்கு  தொற்று உறுதியாகியுள்ளது.  தஞ்சாவூரிலும்  தொற்று 100&ஐ நெருங்கியது.  இங்கு நேற்றைய பரிசோதனை முடிவில் 80 பேருக்கும், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களில் தலா 17 பேருக்கும், கரூர், திருவாரூரில் தலா 13 பேருக்கும்,   மயிலாடுதுறையில் 12 பேருக்கும், அரியலூரில் 9 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. 

    பொங்கல்  பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொற்றுகள் அதிகரித்து வருவது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:
    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 69 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 20 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 295 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 284 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. தற்போது பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடித்து கொரோனா தொற்று பரவலில் இருந்து தங்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் மற்றும்- போராட்டத்தில் ஈடுபட்ட 215 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    பெரம்பலூர்:

    கொரோனா வைரஸ் 3 ஆம் அலையின் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து அமல்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியும், அனுமதியின்றியும் நேற்று முன்தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடத்தியது.

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 30 பேர் மீதும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 30 பேர் மீதும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த 80 பேர் மீதும், பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய கேங்மேன் பயிற்சி பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இது தொடர்பாகவும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த 75 பேர் மீதும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகம் மற்றும் நூலகம் திறக்கப்பட்டது.
    பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வசித்து வரும் போலீசார் பணியின்போது, அவர்களது குழந்தைகள் வீட்டில் தனிமையாக இருப்பதை உணர்ந்து, காவலர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகம் திறக்க மாவட்ட காவல் துறையினரால் முடிவு செய்யப்பட்டது.
    அதன்படி, ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.  தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த நூலகத்தையும் திறந்து வைத்தார். 
    இதில் நாவல்கள், தொடர் கதைகள், பொது அறிவு புத்தகங்கள் என 100&க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில், ஆயுதப்படை துணை  கண்காணிப்பாளர் சுப்பராமன், ஆய்வாளர் அசோகன் உள்பட காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூரில் மனநிலை பாதிக்கப்பட்டு கருணை இல்லத்தால் மீட்கப்பட்ட நபர் குணமடைந்த நிலையில் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு, ரோட்டில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த நரசிம்மன் (எ) நரசிம்மலு என்பவர் கடந்த 16.03.2016 அன்று வேலா கருணை இல்லத்தின் மூலம் மீட்கப்பட்டார். 
    பின்பு மாவட்ட மனநல மருத்துவரின் பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி, மனநலத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவரின் சிந்தனை நல்வழிப்படுத்துவதற்கு தொழிற்பயிற்சி விவசாயம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.  
    சிகிச்சைக்குப் பின்பு நரசிம்மன் (எ) நரசிம்மலு அளித்த தகவலின் அடிப்படையில், அவர் வீட்டாருக்கு வேலா கருணை இல்லத்தின் நிர்வாகி அனிதா அருண்குமார் மூலம் ஆந்திர மாநிலம் குண்டூர் காந்திப்பேட்டையில் வசிக்கும் அவரது சகோதரி மஞ்சுளா சாரதா அஜ்சநேயலுக்கு தகவல் அளிக்கப்பட்டது.  
    பின்னர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா அறிவிப்பின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மியின் முன்னிலையில் தகுந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவரின் சகோதரி மற்றும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    பெரம்பலூர்: தெற்காசிய நாடுகளுக்கிடையேயான கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கதேச தலைநகரான டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான கபடி போட்டியில், 19 வயதினருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் பங்கேற்ற இந்திய அணி தங்கம் வென்றது. இந்த அணியில் விளையாடிய வீரர்களில் ஆண்கள் பிரிவில் 3 பேரும், பெண்கள் பிரிவில் 4 பேரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
    இந்திய இளையோர் விளையாட்டுக் கழகம் சார்பில், தெற்காசிய நாடுகளுக்கிடையேயான கபடி போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட வீரர்களில் பெண்கள் அணியில் இடம்பெற்ற பெரம்பலூர் மாவட்டத்தைச்சேர்ந்த திவ்யா, பிரியதர்ஷினி, கௌசிக்பிரபா, கௌசல்யா ஆகியோரும், ஆண்கள் அணியில் இடம்பெற்ற சாகிர் அகமது, புண்ணிய மூர்த்தி ஆகியோரும் பெரம்பலூர் வந்தனர்.
    பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் அகமது இக்பால் தலைமையில், கட்சி நிர்வாகிகள் வீரர், வீராங்கனைகளுக்கு பொன்னாடை அணிவித்தனர். மேலும், பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானர்கள் வருகிற 14&ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:& 
    பெரம்பலூர் மாவட்டத்தின் 4 வட்டாரங்களை சேர்ந்த 20 கிராம பஞ்சாயத்துகளில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப் படிப்பு படித்த வேளாண் இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வீதம் 3 பயனாளிகளுக்கு 3 லட்சம் நிதி இலக்கீடு பெறப்பட்டுள்ளது.
    இத்திட்டத்தில் இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், காளான் உற்பத்தி செய்தல், பசுமைக்குடில் அமைத்தல், இயந்திர வாடகை மையம் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், அக்ரி கிளினிக் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண் விலை பொருட்கள் ஏற்றுமதி செய்தல் மற்றும் இதர வேளாண் தொடர்பான திட்டங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
    இத்திட்டத்தின் கீழ், பயனடைவதற்கு வயது 21&லிருந்து 40&க்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்க கூடாது. கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இதில் குடும்பத்தில் ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனம் தனியரது பெயரில் மட்டுமே தொடங்கப்பட வேண்டும். நிலம் மற்றும் உட்கட்டமைப்பிற்கான செலவுகள் திட்ட அறிக்கையில் சேர்க்கப்படக்கூடாது.
    விரிவான திட்ட அறிக்கையுடன் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியின் மூலம் கடன் பெறின் அதற்கான ஒப்புதல் ஆகிய ஆவணங்களை இணைத்திட வேண்டும்.
    இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்புகொண்டு விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும், திட்ட அறிக்கை மற்றும் சம்மந்தப்பட்ட ஆவணங்களை வரும் 14ம்தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (5-ந்தேதி) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார்.

    இதையடுத்து நேற்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அவரது கார் டிரைவர் ஜான் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் மூவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் கடந்த சில தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டும், பெரம்பலூர் நகரத்தில் உள்ள வார்டுகளில் வீடு, வீடாக சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும்வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் எம்.எல்.ஏ. பிரபாகரன் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் சென்று வந்தனர். எனவே அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கணவர் தினமும் குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த தொழிலாளி பூட்டிய வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்டார்
    பெரம்பலூர் ; பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துசாமி, கூலித்தொழிலாளியான இவருக்கு  மனைவி லட்சுமி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.  இதனை கவனித்த அப்பகுதியினர், உள்பக்கமாக பூட்டியிருந்த கதவை தட்டியுள்ளனர். உள்ளே இருந்து எந்த சத்தமும் வராததால், ஜன்னலை திறந்து பார்த்தபோது முத்துசாமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.
    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்  பேரில் சப்&இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்றனர். தூக்கில் பிணமாக கிடந்த முத்துசாமியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்த போலீசார், உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், முத்துசாமி வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டிற்கு வரும்போது, மது அருந்தி விட்டு வருவதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மது  அருந்திவிட்டு வந்த, முத்துசாமியை, மனைவி லட்சுமி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி, 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களாக மன விரக்தியில் இருந்த முத்துசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    ஏரிகள் மீண்டும் நிரம்பி கடைகால் பகுதியில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. பகல் நேரத்தில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த வட கிழக்கு பருவமழை வழக்கத்தைவிட கடந்த ஆண்டு (2021) அதிகமாக கொட்டித் தீர்த்ததால் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகள், 33 அணைகள், 10 தடுப்பணைகள் 2 நீர்த்தேக்கங்கள் ஆகிய நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பின.

    தற்போது மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் மழை பெய்யாமல் இருந்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வெகுவாக குறைய தொடங்கியது.

    இந்தநிலையில் மீண்டும் கடந்த 4 நாட்களாக அவ்வப் போது மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேற்று அதிகாலை விட்டு, விட்டு மழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்று புத்தாண்டு அன்று காலை முதல் மாலை வரை பலத்த மழை விட்டு, விட்டு பெய்தது. இரவிலும் மழை நீடித்தது.

    இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரிகள் மீண்டும் நிரம்பி கடைகால் பகுதியில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. பகல் நேரத்தில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

    மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. புத்தாண்டு அன்று பகல் நேரத்திலும் தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களில் பலர் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர்.

    பயிர் சாகுபடி பரப்பை பொறுத்த வரை தற்போது 88,802 எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு சராசரி மழையளவை விட 490.18 மி.மீ. அதிகமாக மொத்தம் 1,351.18 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    செட்டிகுளம்-57, பாடாலூர்-35, அகரம் சீகூர்-60, லெப்பைக்குடிகாடு-36, புது வேட்டக்குடி-28, பெரம்பலூர்-73, எறையூர்-26, கிருஷ் ணாபுரம்-12, தழுதாழை-28, வி.களத்தூர்-27, வேப்பந்தட்டை-28.

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த வட கிழக்கு பருவமழையால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. தற்போது பெய்த மழையால் மேலும் பாதிப்படைய தொடங்கியுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 17- வது கட்டமாக மாவட்டம் முழுவதும், 161 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நாளை (2-ந் தேதி) நடைபெற உள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் 17- வது கட்டமாக மாவட்டம் முழுவதும், 161 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நாளை (2-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இம்முகாம்களில் 20,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவ மனைகள், 128 மற்ற இடங்கள் என மொத்தம் 161 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் வட்டாரத்தில் 40 தடுப்பூசி மையங்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 41 , ஆலத்தூர் வட்டாரத்தில் 37 , குன்னம் வட்டாரத்தில் 43 என மொத்தம் 161 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்கள், மக்களை ஒருங்கிணைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும், சிறப்பு முகாமினை பயன்படுத்தி தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு, நமது மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    விவசாயிகள் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட பெரம்பலூர் துணை மண்டல மேலாளர் அலுவலகத்தை 9443139926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய இணையதளம் மூலம்பதிவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc.edpc.in இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மேற்கண்ட இணையதளத்தில்எதிர்வரும் சம்பா பருவம் 2022-க்கு கடந்த 16ம்தேதி முதல் இணைய வழி பதிவு முறையின் (ஆன்லைன்) மூலம் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல்கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்தும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.

    விவசாயிகள் தங்களது செல்போனில் எண்ணில் பெறப்பட்ட எஸ்.எம்.எஸ் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெற இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட பெரம்பலூர் துணை மண்டல மேலாளர் அலுவலகத்தை 9443139926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ×