என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலத்த மழையால் மீண்டும் நிரம்பி வழிந்தோடும் பெரம்பலூர் ஏரி.
    X
    பலத்த மழையால் மீண்டும் நிரம்பி வழிந்தோடும் பெரம்பலூர் ஏரி.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் பெய்த பலத்த மழையால் மீண்டும் வேகமாக நிரம்பும் ஏரிகள்

    ஏரிகள் மீண்டும் நிரம்பி கடைகால் பகுதியில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. பகல் நேரத்தில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த வட கிழக்கு பருவமழை வழக்கத்தைவிட கடந்த ஆண்டு (2021) அதிகமாக கொட்டித் தீர்த்ததால் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகள், 33 அணைகள், 10 தடுப்பணைகள் 2 நீர்த்தேக்கங்கள் ஆகிய நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பின.

    தற்போது மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் மழை பெய்யாமல் இருந்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வெகுவாக குறைய தொடங்கியது.

    இந்தநிலையில் மீண்டும் கடந்த 4 நாட்களாக அவ்வப் போது மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேற்று அதிகாலை விட்டு, விட்டு மழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்று புத்தாண்டு அன்று காலை முதல் மாலை வரை பலத்த மழை விட்டு, விட்டு பெய்தது. இரவிலும் மழை நீடித்தது.

    இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரிகள் மீண்டும் நிரம்பி கடைகால் பகுதியில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. பகல் நேரத்தில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

    மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. புத்தாண்டு அன்று பகல் நேரத்திலும் தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களில் பலர் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர்.

    பயிர் சாகுபடி பரப்பை பொறுத்த வரை தற்போது 88,802 எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு சராசரி மழையளவை விட 490.18 மி.மீ. அதிகமாக மொத்தம் 1,351.18 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    செட்டிகுளம்-57, பாடாலூர்-35, அகரம் சீகூர்-60, லெப்பைக்குடிகாடு-36, புது வேட்டக்குடி-28, பெரம்பலூர்-73, எறையூர்-26, கிருஷ் ணாபுரம்-12, தழுதாழை-28, வி.களத்தூர்-27, வேப்பந்தட்டை-28.

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த வட கிழக்கு பருவமழையால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. தற்போது பெய்த மழையால் மேலும் பாதிப்படைய தொடங்கியுள்ளது.

    Next Story
    ×