என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 161 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் 17- வது கட்டமாக மாவட்டம் முழுவதும், 161 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நாளை (2-ந் தேதி) நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் 20,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவ மனைகள், 128 மற்ற இடங்கள் என மொத்தம் 161 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் வட்டாரத்தில் 40 தடுப்பூசி மையங்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 41 , ஆலத்தூர் வட்டாரத்தில் 37 , குன்னம் வட்டாரத்தில் 43 என மொத்தம் 161 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்கள், மக்களை ஒருங்கிணைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும், சிறப்பு முகாமினை பயன்படுத்தி தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு, நமது மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.






