என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானர்கள் வருகிற 14&ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:&
பெரம்பலூர் மாவட்டத்தின் 4 வட்டாரங்களை சேர்ந்த 20 கிராம பஞ்சாயத்துகளில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப் படிப்பு படித்த வேளாண் இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வீதம் 3 பயனாளிகளுக்கு 3 லட்சம் நிதி இலக்கீடு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், காளான் உற்பத்தி செய்தல், பசுமைக்குடில் அமைத்தல், இயந்திர வாடகை மையம் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், அக்ரி கிளினிக் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண் விலை பொருட்கள் ஏற்றுமதி செய்தல் மற்றும் இதர வேளாண் தொடர்பான திட்டங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், பயனடைவதற்கு வயது 21&லிருந்து 40&க்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்க கூடாது. கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இதில் குடும்பத்தில் ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனம் தனியரது பெயரில் மட்டுமே தொடங்கப்பட வேண்டும். நிலம் மற்றும் உட்கட்டமைப்பிற்கான செலவுகள் திட்ட அறிக்கையில் சேர்க்கப்படக்கூடாது.
விரிவான திட்ட அறிக்கையுடன் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியின் மூலம் கடன் பெறின் அதற்கான ஒப்புதல் ஆகிய ஆவணங்களை இணைத்திட வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்புகொண்டு விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும், திட்ட அறிக்கை மற்றும் சம்மந்தப்பட்ட ஆவணங்களை வரும் 14ம்தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story






