என் மலர்tooltip icon

    நீலகிரி

    காமிராக்கள் அனைத்தும் கிளைன்மார்கன் பகுதியில் உள்ள டவருடன் இணைக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பக பகுதி உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்பட அதிகளவிலான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 


    சில நேரங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு முகாம் அமைத்து 24 மணி நேரமும் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் வனத்தை கண்காணிக்கவும், வனத்தீ பரவுவதை அறிந்து தடுக்கவும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 9 இடங்களில் சோலார் தானியங்கி கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் அனைத்தும் கிளைன்மார்கன் பகுதியில் உள்ள டவருடன் இணைக்கப்பட்டுள்ளது.

    காமிராவில் பதிவாகும் காட்சிகளை தெப்பக்காடு கண்காணிப்பு மையத்தில் கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அங்கு வனத்துறை ஊழியர்கள் காமிராவில் பதிவாகும் காட்சிகளை பார்த்து வருகின்றனர். 

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தானியங்கி காமிராக்களில் பதிவாகும் காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவை வனப்பகுதிகளில் வேட்டை மற்றும் வனகுற்றங்கள் ஏற்பாடாமல் தடுக்க மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.
    குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் இதுவரை உறைபனி கொட்ட தொடங்கவில்லை. உறைபனியும் கொட்ட தொடங்கினால் இன்னும் குளிர் அதிகமாக இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் 2 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பின்பு மழை குறைந்து, வெயிலும், குளிரும் மாறி அடித்து வருகிறது.

    தற்போது கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒட்டுப்பட்டரை, வண்டிச்சோலை, குன்னூர் பஜார் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

    இரவு, பகல் என எந்நேரமும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. மாலை 3 மணிக்கெல்லாம் குளிர் அடிக்க தொடங்கி விடுகிறது. குளிருடன் நீர் பனியும் சேர்ந்து கொட்டி வருகிறது. இதனால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர தயங்கும் நிலை காணப்படுகிறது. குளிருக்கு பயந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கி விடுகின்றனர்.

    காலை நேரத்தில் கொட்டும் நீர்பனி மற்றும் குளிரால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலையில் தொப்பி, பனியன் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து கொண்டு தங்கள் பணியில் ஈடுபடுகின்றனர். சிலர் தோட்டங்களில் வேலை பார்க்கும் இடத்தின் அருகே விறகுகளை எரித்து தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டே பணியில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது.

    ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க சுவர்ட்டர், குல்லா போன்றவற்றை அணிந்திருக்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட அதிகமாக குளிர் மற்றும் நீர்பனி நிலவுவதால் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

    இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதிகளவிலான பெரியவர்கள் தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதையும் பார்க்க முடிகிறது.

    இதுவரை குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் உறைபனி கொட்ட தொடங்கவில்லை. உறைபனியும் கொட்ட தொடங்கினால் இன்னும் குளிர் அதிகமாக இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிலவரப்படி குன்னூரில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


    சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
    ஊட்டி:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று 3-வது வாரமாக நீலகிரியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
    நீலகிரி மாவட்டத்திலும் இன்று 3&வது வாரமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப் பட்டிருந்தன. கடைவீதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள், சந்தைகள், என பலவும் மூடப்பட்டு வெறிச்சோடியது. 
    ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-குன்னூர் சாலைகளும் பொதுபோக்கு வரத்து இல்லாததால் வெறிச் சோடியது. இதேபோல் கூடலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் முழு ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடித் தனர்.
    நீலகிரியில் 301 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    ஊட்டியில் ஹில் பங்க் பகுதியில் நடைபெற்ற கொரோனா       தடுப்பூசி  சிறப்பு   முகாமை   கலெக்டர் அம்ரித்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 
     
      தற்போது, கொரோனா தொற்று   அதிக  அளவில் பரவி   வருவதால்,   வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் யாரேனும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் அவர்களிடம், வீடுகளுக்கு அருகிலேயே நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடமும், அங்கு நின்ற பொதுமக்களிடமும் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.  
     
    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி,  ஊட்டி  வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி,  வட்டாட்சியர் ராஜசேகரன், நகர்  நல அலுவலர்  ஸ்ரீதரன்,  வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் மேலும் 301 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

    இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை வெளியிடப்பட்ட   அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 301 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்றின் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊட்டியைச் சர்ந்த  65 வயது பெண் உயிரிழந்துள்ளார். 

    சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 35,456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 1,838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிலும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் இங்கிருந்த வெளிநாட்டினை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் உள்பட 600 பேர் சமீபத்தில் பயிற்சிக்காக புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு பயிற்சிக்கு சென்றனர்.

    பயிற்சி முடிந்து சில நாட்களுக்கு முன்பு குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு திரும்பி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொடர்ந்து அங்குள்ள மற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 63 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் கூறும்போது, சமீபத்தில் இங்குள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்காக நாட்டின் பல்வேறு பகுதிக்கு சென்று வந்தனர். அவர்களில் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என்றனர்.
    பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைக்கு ரூ.1000 அபராதம விதிக்கப்பட்டது
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவும் உள்ளது. 

    இதனையும் மீறி சிலர் இங்குள்ள கடைகளில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கு பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். 

    அவ்வப்போது ஊட்டி நகராட்சி அதிகாரிகள் நகரில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வது மட்டுமின்றி, அந்த கடைகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். 

    இந்நிலையில், நேற்று நகர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் சுகாதார ஆய்வாளர் வைரம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கமர்சியல் சாலையில் உள்ள சில கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அவர்கள், அந்த கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். 

    மேலும், தொடர்ந்து இது போன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். மேலும், ஹெலிபங்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல், குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்காமல், லாரிகள் மூலம் கொண்டு சென்று பொது இடத்தில் கொட்டியதற்காக, அவர்களுக்கும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
    ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இயற்கை விவசாய குழு கூட்டம் இணையதளம் மூலமாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. 

    இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள், மற்றும் இதர துறையினை சார்ந்த அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். விவசாய சங்கங்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரியதுறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 60 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

    மேலும் தோட்டக்கலைத் துறையின் மூலம் கீழ்க்கண்ட விபரங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் இயக்குநரகத்தால் வருடந்தோறும் பயிற்சி, கண்டுனர் சுற்றுலா போன்ற அனைத்து இனங்களுக்கும் விவசாயிகளின் விருப்பப்படி தலைப்புகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

    மேலும் புதிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சிகள் தேவைப்படும் பட்சத்தில் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தால் அடுத்த ஆண்டு செயல்திட்டத்தில் அனுமதி பெற்று பயிற்சிகள் வழங்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது.

    தோட்டக்கலைத் துறையின் மூலம் உயர்ரக காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறி விதை மற்றும் இயற்கை வேளாண் இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி  பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

    மேலும், மாவட்ட அளவிலான இயற்கை விவசாயம் குழு கூட்டத்தில், விவசாயிகளிடையே மண் பரிசோதனை அடிப்படையில் உரங்கள் இடுவதை அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இயற்கை விவசாயத்திற்கு அடிப்படையாக இருக்கும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை நம் மாவட்டத்தில் அதிகரிக்கவும், மாட்டு தீவன உற்பத்தியினை அரசாங்க நிலங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் இயற்கை விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். 
    கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழகத்தின் பிற பகுதிகள், கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    தற்போது அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர சுற்றுலா தலங்களை காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கி விட்டது.

    இதனால் பூங்காக்கள், படகு இல்லங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அவ்வாறு வர கூடிய ஒரு சில சுற்றுலா பயணிகளும் நகரில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.

    இதனால் சுற்றுலா தலங்களுக்கு அருகில் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் ஊட்டி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    தொற்று பாதிப்பு அதிகரித்து வர கூடிய நிலையில் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாக கூடிய சூழல் உருவாகி உள்ளது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும், 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த, 2020-ல் 6 லட்சம், 2021-ல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டும் வருகை தந்துள்ளனர்.

    இதன் மூலம், 6 கோடி ரூபாய் மட்டும் நுழைவு கட்டணம் வசூல் ஆகியுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணை மூலம் அதிக வருவாய், ஊட்டி தாவரவியல் பூங்கா மூலம்தான் வசூலாகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்ததால், 16 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

    கரடிகள் வீடுகள் மற்றும் கோவில்களில் வைத்திருக்க கூடிய எண்ணெய்களையும், மரத்தில் உள்ள தேனையும் குடிப்பதற்காக அங்கேயே முகாமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ளது கரிமறா அட்டி கிராமம்.

    இந்த கிராமத்தை சுற்றிலும் வள்ளுவர் நகர், வாசுகி நகர், பெரியார் நகர், வசம்பள்ளம் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தை சுற்றி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதில் சில தேயிலை தோட்டங்கள் பராமரிப்பின்றி காடுகள் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் வனத்தை விட்டு வெளியில் வரும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களில் பதுங்கி கொண்டு இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் புகுந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. சிறுத்தை இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து வீடுகளில் வளர்க்க கூடிய நாய் மற்றும் வீட்டு விலங்குகளை அடித்து கொன்று விடுகிறது.

    கரடிகள் வீடுகள் மற்றும் கோவில்களில் வைத்திருக்க கூடிய எண்ணெய்களையும், மரத்தில் உள்ள தேனையும் குடிப்பதற்காக அங்கேயே முகாமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    கரடிகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 2 சிறுத்தைகள் மற்றும் 3 கரடிகள் ஒரே நேரத்தில் கரிமாறா அட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது. கரடிகளும், சிறுத்தையும் வெகுநேரமாக அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தன.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த உர மூட்டையையும் எடுத்து தூக்கி சாலையில் எறிந்து விட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டன.

    குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த கரடிகள் கூட்டம்.


    வெகுநேரத்திற்கு பிறகே சிறுத்தைகளும், கரடிகளும் அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றன. இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் முத்து என்பவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனை பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சிறுத்தை, கரடி நடமாட்டம் இருப்பதால் இங்கு வாழ அச்சமாக இருப்பதாகவும், உடனே சிறுத்தை, கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நீலகிரியில் சிறுமிக்கு மதபோதகர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி என்ற சூரி ஸ்டீபன்(வயது34). மதபோதகரான இவர் அந்த பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி யும் 2 மகள்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் சூரி ஸ்டீபன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள மற்றொரு பகுதிக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் 13 வயது சிறுமி தனியாக இருந்தாள். இதனை அறிந்து கொண்ட சூரி ஸ்டீபன் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

    பின்னர் சிறுமியின் அருகே சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியான சிறுமி சத்தம் போட்டார். பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறுமியின் தாய் மாலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை தாயிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் தாய், அவரை அழைத்து கொண்டு ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் சூரி ஸ்டீபன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. உடனடியாக போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் அவரை ஊட்டி கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 

    அவரை 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்று குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பது பற்றி கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சிறப்பு மலைப்பகுதி மேம்பாடு திட்ட கூட்டரங்கில்  பண்டைய பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், செடிகல் பழங்குடியினர் கிராமத்தில் நேரடியாக பழங்குடியின மக்களை பார்வையிட்டு கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு, நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பட்டியல் தயாரிக்கவும், வட்ட அளவில் பட்டியல் தயாரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

     கோட்ட அளவில் அந்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு பின்னர் மாவட்ட அளவில் அந்த பட்டியலை குழு மூலம் சரிபார்க்கப்பட்டு, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்படும். அரசின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் தேவையான அடிப்படை வசதிகள் மேலும் மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். 

    பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து பழங்குடியின மக்களுக்கு அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

     கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்  சுகந்தி பரிமளம், பழங்குடியின ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார், பழங்குடியின சமுதாயத்தை சார்ந்தவர்கள்  சத்தியராஜா,  சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
    பூங்கா ஊழியர்கள் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று குன்னூர் சிம்ஸ் பூங்கா. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் வருவார்கள்.

    தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சுற்றுலா தலங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பணிபுரியக் கூடிய 16 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குன்னூர் சிம்ஸ் பூங்கா வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது.

    மேலும் தொற்று உறுதியான ஊழியர்களுடன் வேலை பார்த்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்களுக்கு தொற்று உறுதி காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடி கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வருகிறார்கள்.

    ×