என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சிறப்பு கிரேட்டேன் மற்றும் டாஷ்ஹவுண்ட் நாய் கண்காட்சியும் நடைபெற்றது.
    • நீண்ட காலத்துக்கு பிறகு இந்தாண்டு ஆஸ்திரேலியா ஷெப்பர்டு, பூடூல் ரக நாய்கள் பங்கேற்றுள்ளன.

    ஊட்டி:

    ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு கண்காட்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சவுத் இந்தியன் கெனல் கிளப் சார்பில் 132 மற்றும் 133-வது நாய் கண்காட்சி ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதல் நிகழ்ச்சியாக நாய்களின் கீழ் படிதல் போட்டியுடன் கண்காட்சி தொடங்கியது. இதில் லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, கோல்டன் ரிட்டிவர், பீகள், பெல்ஜியம் மேலினாயஸ், டாஷ்ஹ வுண்ட் உட்பட 56 நாய்கள் பங்கேற்றன. கொல்கத்தாவை சேர்ந்த நடுவர் சி.ஆர்.பட்நாயக் நாய்களை மதிப்பிட்டார். இதில் நாய்கள் நடந்து வந்த விதத்தையும், பவ்யமாக படுத்து கீழ்படிதலை காட்டியதை பார்த்து சுற்றுலா பயணிகள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும், சிறப்பு கிரேட்டேன் மற்றும் டாஷ்ஹவுண்ட் நாய் கண்காட்சியும் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட கிரேட்டேன் மற்றும் டாஷ்ஹவுண்ட் நாய்கள் போட்டியிட்டன. நடுவர் பிலிப் ஜான் மதிப்பிட்டார்.

    இது தொடர்பாக தென்னிந்திய கெனல் கிளப் செயலாளர் நகீனா கூறிய தாவது:-

    இந்தாண்டு நாடு முழு வதிலும் இருந்து 56 ரகங்களில் 470 நாய்கள் பங்கேற்கின்றன. நாய்களை மதிப்பிட பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேரிபெல், சிங்கப்பூரை சேர்ந்த ஸ்டான்லி ேஷன் மற்றும் தைவானை சேர்ந்த சங் யூ சேங்க் நடுவர்களாக பணிபுரிகின்றனர்.

    கீழ் படிதல் போட்டியில் ஜம்ஷெட்பூரில் நடக்கும் போட்டியில் தான் அதிகளவு நாய்கள் பங்கேற்கும். அதையடுத்து, ஊட்டியில் நடக்கும் கண்காட்சியில் தான் 56 நாய்கள் பங்கேற்றுள்ளன. நீண்ட காலத்துக்கு பிறகு இந்தாண்டு ஆஸ்திரேலியா ஷெப்பர்டு, பூடூல் ரக நாய்கள் பங்கேற்றுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
    • துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறை காரணமாக ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனை தொடர்ந்து உணவகங்களில் வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு செய்து உணவு தரத்தினை உறுதி செய்யுமாறு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் அடங்கிய குழு ஊட்டி கமர்சியல் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண் டனர்.

    இந்த ஆய்வில் சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 6 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புத்துறையின் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கூறிய உணவகங்கள் தங்கள் சமையலறை உள்ளிட்ட இடங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை தொடர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அனைத்தும் தூய்மையான குடிநீர் மற்றும் நல்ல தரத்துடன் கூடிய உணவு பொருட்களை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அனைத்து உணவகங்களும் தங்களது உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும். மேலும், சமையலுக்காக பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

    உணவு பொருட்களை பரிமாறுவதற்கு செய்தி தாள்களை பயன்படுத்து வதை தவிர்க்குமாறும், இறைச்சி கடைகளில் பொட்டலமிட நெகிழி பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார். மேலும் தவறு செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு தரங்கள் நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • உள் தணிக்கை குழு அமைத்து ஆய்வு நடந்து வருகிறது.
    • தும்மனட்டி, டி.மணிஹட்டி (கலிங்கனட்டி) சாலையில் நடைபெற்ற சாலை பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பான உள் தணிக்கையில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகள் தொடர்பாக உள் தணிக்கை குழு அமைத்து ஆய்வு நடந்து வருகிறது.

    இதன்படி, ஊட்டி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய, நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில், கோவை திட்டங்கள் உதவிப் கோட்டப் பொறியாளர் உமா சுந்தரி மற்றும் உதவிப் பொறியாளர்கள் விக்னேஷ்ராம், ஸ்ரீபிரியா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தும்மனட்டி, டி.மணிஹட்டி (கலிங்கனட்டி) சாலையில் நடைபெற்ற சாலை பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. இதில் சாலையின் தரம், உறுதித் தன்மை, அளவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் ஊட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ், ஊட்டி உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ், உதவிப் பொறியாளர் ஸ்டாலின் மற்றும் ஊட்டி தரக்கட்டுப்பாட்டு உதவிப் பொறியாளர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

    • 2022-23 ம் நிதியாண்டில் கூடுதலாக 1748 உறுப்பினர்களுக்கு ரூ. 12.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • 64 நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் 2 கூட்டுறவு நகர வங்கிகள், 38 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள், 14 பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், 2 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் 2 கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான நோக்கம் மாவட்டத்தில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குதல் மற்றும் நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில், கூட்டுறவு நகர வங்கிகள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் மூலம் கீழ்கண்ட கடன்கள் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவு நகர வங்கியின் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ம் நிதியாண்டில் கூடுதலாக 1748 உறுப்பினர்களுக்கு ரூ. 12.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 583 உறுப்பினர்களுக்கு ரூ. 77.78 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் மூலம் நகைக்கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 12,116 உறுப்பினர்களுக்கு ரூ. 62.57 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் 64 நியாய விலைக்கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டு உள்ளது.

    02 அரசு மருந்தகம் மற்றும் 04 கூட்டுறவு மருந்தகத்தின் மூலம் 2022-23-ம் நிதியாண்டில் ரூ 3.84 கோடி விற்பனை செய்து இதுவரை ரூ 0.26 கோடி அளவிற்கு பொது மக்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் நீலகிரி கூட்டுறவு நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 நிதியாண்டில் கூடுதலாக ரூ 0.66 கோடி அளவிற்கு அந்தியாவசிய மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    பிரதம கூட்டுறவு பண்டகசாலைகளின் மூலம் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-2023 நிதியாண்டில் கூடுதலாக ரூ 0.18 கோடி அளவிற்கு அத்தியவாசிய மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட் டுள்ளது.

    நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மூலம் முந்தைய நிதி யாண்டை காட்டிலும் 2022-2023 நிதியாண்டில் கூடுதலாக ரூ 24.77 கோடி அளவிற்கு உரம் மற்றும் விதைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
    • 207 பேர் ஒருநாள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி,

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தங்களது 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டம் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், விடுமுறை தின, இரவு நேர, வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகளைக் கைவிடுதல், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட மருத்துவ விடுப்பு. ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வுநிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல், கணினி ஆபரேட்டர்களை பணிவரன் முறை செய்தல், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், அவுட் சோர்சிங் முறையை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 207 பேர் ஒருநாள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக 4 வட்டாரம் 1 தலைமையிடம் ஆகிய இடங்களில் ஒட்டு மொத்த விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள், அலுவலர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

    • ஏலக்காய், காபி, பாக்கு உள்ளிட்ட பயிர்களை கடந்த சில வாரங்களாக தினமும் சேதப்படுத்தி வருகிறது.
    • சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல தோன்ற மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை பகுதியில் காட்டு யானை விவசாய நிலத்துக்குள் புகுந்து ஏலக்காய், பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். முதுமலை வனப்பகுதியில் இருந்து தினமும் இரவு 2 காட்டு யானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கொல்லி பகுதியில் ஏலக்காய், காபி, பாக்கு உள்ளிட்ட பயிர்களை கடந்த சில வாரங்களாக தினமும் சேதப்படுத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு ஜார்ஜ் உள்ளிட்ட சில விவசாயிகளின் பயிர்களை 2 காட்டு யானைகள் நாசம் செய்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை உடைத்து தின்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- முதுமலை வனத்திலிருந்து வெளியேறி தினமும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து வருகிறது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு பல முறை தகவல் தெரிவித்தும் நேரில் வருகின்றனர். ஆனால் காட்டு யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. காட்டு யானைகள் வருகை குறித்து தகவல் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

    இதனால் தொடர்ந்து பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல தோன்ற மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாய பயிர்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயத்தில் உள்ள பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோடை விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலா துறை சாா்பில் ஊட்டி படகு இல்லத்தில் படகுப் போட்டி நடைபெற்றது.
    • பெண்களுக்கான இரட்டையா் போட்டியில் சென்னையை சோ்ந்த பரணி, ஐஸ்வா்யா ஆகியோா் முதலிடத்தையும், நா்மதா, பிரியா ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா்.

    ஊட்டி:

    மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா சிறப்பாக நடைபெறும். நடப்பு ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த வாரம் காய்கறி கண்காட்சி தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நாளை (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இந்நிலையில் கோடை விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலா துறை சாா்பில் ஊட்டி படகு இல்லத்தில் படகுப் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் ஆண்கள் இரட்டையா் போட்டி, பெண்கள் இரட்டையா் போட்டி, தம்பதி போட்டி, படகு இல்லத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கான போட்டி என தனித்தனியாக நடைபெற்றது.

    இதில், ஆண்களுக்கான இரட்டையா் போட்டியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த நிஷாத், ஆசீப் ஆகியோா் முதலிடத்தையும், ஊட்டியைச் சோ்ந்த தேவா, சுபாஷ் ஆகியோா் இரண்டாம் இடத்தையும், கோவையை சோ்ந்த திருமூா்த்தி, நிதீஷ் ஆகியோா் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

    பெண்களுக்கான இரட்டையா் போட்டியில் சென்னையை சோ்ந்த பரணி, ஐஸ்வா்யா ஆகியோா் முதலிடத்தையும், நா்மதா, பிரியா ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா். தம்பதியருக்கான போட்டியில் கா்நாடகத்தை சோ்ந்த மிா்துன் ஜெய், புரவி தம்பதி முதலிடத்தையும், ஒடிசாவை சோ்ந்த ஆட்நவாஸ், அல்பாகான் தம்பதி இரண்டாம் இடத்தையும் பிடித்தனா்.

    வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் கோப்பைகளை வழங்கி பாராட்டினாா். ஊட்டி கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

    கூடலூர் மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று தொடங்கியது. வருகிற 14-ந் தேதி வரை 3 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.

    • பாதாள சாக்கடை மற்றும் நடைபாதை புதுப்பிக்கும் பணி ரூ.9.95 லட்சம் செலவில் தொடங்கியது.
    • நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மேகநாதன் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாதாள சாக்கடை மற்றும் நடைபாதை புதுப்பிக்கும் பணி ரூ.9.95 லட்சம் செலவில் தொடங்கியது.

    இதனை நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி மேகநாதன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் நகராட்சி கமிஷனர் மற்றும் நகர மன்ற தலைவரை சந்தித்து அப்பகுதியில் இருக்கும் குறைகளை கூறினார்கள்.

    • கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க ஆபரேஷன் 4.0 என்ற பெயரில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.
    • போலீசார் 3.5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையில் மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க ஆபரேஷன் 4.0 என்ற பெயரில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.

    இளைய சமுதாயத்தை சீரழிக்கும் கஞ்சாவை விற்பனை செய்பவர்களை பாரபட்சம் பார்க்காமல் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் கான் தலைமையிலான போலீசார் முஜாஹிர், சுரேந்தர் ஆகியோர் கட்டபெட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகாரை சேர்ந்த கஞ்சன்குமார் என்பதும், பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.

    கஞ்சன்குமார் பீகாரில் இருந்து கோத்தகிரிக்கு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிய வந்துள்ளார். இங்கு அவருக்கு போதிய வேலை கிடைக்கவில்லை. இதனால் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க அவர் ஆசைப்பட்டார். இதையறிந்த பீகாரைச் சேர்ந்த அவரது நண்பரான பங்கஜ் குமார், ஊருக்கு சென்று விட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். அந்த கஞ்சாவை கஞ்சன்குமாரிடம் கொடுத்து விற்கச் சொல்லியுள்ளார். அவ்வாறு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது தான் போலீசாரிடம் கஞ்சன்குமார் சிக்கிக் கொண்டார்.

    போலீசார் கஞ்சன்குமாரையும், பங்கஜ்குமாரையும் கைது செய்தனர். போலீசார் அவர்களிடத்தில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3.5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிடி பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்த னர்.

    • கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் அரங்கில் அ.தி.மு.க சார்பில் கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞர்கள் இளம்பெண் பாசறை மகளிர் குழு அமைப்பது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். இதில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்சுணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கம்பட்டி குமார், தப்பகம்பை கிருஷ்ணன், ஸ்டீபன் என்ற வேலு, பேரூராட்சி செயலாளர் நஞ்சு என்ற சுப்பிரமணி ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

    உடன் கலைபிரிவு மாவட்ட செயலாளர் உயிலட்டி கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் ஒன்றிய, பேரூராட்ச்சி நிர்வாகிகள் மகளிரணி, சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, கிளைக்கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
    • ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    ஊட்டி:

    ஊட்டியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு கோடை விழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. டன் கணக்கில் காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

    கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த ஆண்டு சிறப்பம்சமாக ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்ஸி, சைக்லமன் மற்றும் பல புதிய ரக ஆர்னமென் டல்கேல், ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆன்டிரைனம், ட்யுப்ரஸ், பிகோனியா, பலவகையான கிரைசாந்திமம், ஹெலிகோனியா, ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற 325 வகையான மலர்கள் இடம் பெறுகின்றன. இவை 35 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இதுதவிர பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலர் நாற்றுகளும மலர்ந்து அழகாக காட்சி அளிக்கிறது.

    மலர் காட்சி திடலில் வண்ண மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த பணியை தொடங்கி வைத்தார்.

    கடந்த ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இந்த பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தை சுற்றி பார்க்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலாவானது நாளை மறுநாள் தொடங்குகிறது.

    கூடலூரில் விளையும் வாசனை திரவியங்களை காட்சிப்படுத்தும் விதமாக தோட்டக்கலைத்துறை சாா்பில் வாசனை திரவியக் கண்காட்சி நடத்தப்படும். இந்த கண்காட்சி நாளை முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் மேடை மற்றும் அரங்குகள் அமைக்கும் பணி, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினா் செய்து வருகின்றனா்.

    தொடர்ந்து நடைபெற உள்ள கண்காட்சிகள் நீலகிரியில் குவியும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    • இந்த தொழிற்சாலையில் 2000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • இந்த கட்டிடத்தில் இது முதல்முறை தீ விபத்து அல்ல கடந்த ஆண்டும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடிபொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் தொழிற்சாலையில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள சிடி பிரிவில், 3 வி.கே பகுதியில் உள்ள கட்டிடத்தில் ரோலிங் எந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அந்த எந்திரத்தில் சிறிய புகை ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டதில் அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதமும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த கட்டிடத்தில் இது முதல்முறை தீ விபத்து அல்ல கடந்த ஆண்டும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது. அப்போதும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதே கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதைப் பற்றி தொழிற்சாலை நிர்வாகம் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதியில் தொழிலாளர்களை பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்த்தினர் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×