search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் 19-ந் தேதி மலர் கண்காட்சி: 35 ஆயிரம் தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் 325 வகையான மலர்கள்
    X

    மலர்க்காட்சி திடலில் வண்ண மலர்த்தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தபோது எடுத்தப்படம்.

    ஊட்டியில் 19-ந் தேதி மலர் கண்காட்சி: 35 ஆயிரம் தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் 325 வகையான மலர்கள்

    • கடந்த ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
    • ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    ஊட்டி:

    ஊட்டியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு கோடை விழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. டன் கணக்கில் காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

    கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த ஆண்டு சிறப்பம்சமாக ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்ஸி, சைக்லமன் மற்றும் பல புதிய ரக ஆர்னமென் டல்கேல், ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆன்டிரைனம், ட்யுப்ரஸ், பிகோனியா, பலவகையான கிரைசாந்திமம், ஹெலிகோனியா, ஆர்கிட், ஆந்தூரியம் போன்ற 325 வகையான மலர்கள் இடம் பெறுகின்றன. இவை 35 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இதுதவிர பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலர் நாற்றுகளும மலர்ந்து அழகாக காட்சி அளிக்கிறது.

    மலர் காட்சி திடலில் வண்ண மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த பணியை தொடங்கி வைத்தார்.

    கடந்த ஆண்டு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இந்த பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தை சுற்றி பார்க்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலாவானது நாளை மறுநாள் தொடங்குகிறது.

    கூடலூரில் விளையும் வாசனை திரவியங்களை காட்சிப்படுத்தும் விதமாக தோட்டக்கலைத்துறை சாா்பில் வாசனை திரவியக் கண்காட்சி நடத்தப்படும். இந்த கண்காட்சி நாளை முதல் 14-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் மேடை மற்றும் அரங்குகள் அமைக்கும் பணி, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினா் செய்து வருகின்றனா்.

    தொடர்ந்து நடைபெற உள்ள கண்காட்சிகள் நீலகிரியில் குவியும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    Next Story
    ×