என் மலர்tooltip icon

    நீலகிரி

    • 19 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
    • டிரைவர்கள் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை பூந்தமல்லியில் இருந்து குடும்பத்துடன் 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

    நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, இன்று காலை ஊட்டியில் இருந்து கோத்தகிரி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளை யத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வேன் சென்றுக் கொண்டிருக்கும் போது, டிரைவர் பிரேக் போட முயன்றுள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்தி ற்குள்ளானது.சிகிச்சை

    உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் ரோந்துப் போலீசார் வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுவதால், டிரைவர்கள் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • நகராட்சி மூலம் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டது.
    • நடவடிக்கை எடுக்காமல், கழிப்பிடத்தை மூடிவிட்டனர்.

    குன்னூர்

    குன்னூர் பஸ் நிலையத்தில் மூடிக்கிடக்கும் கழிப்பிடத்தால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. சமவெளி பகுதியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் குன்னூர் வழியை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் குன்னூர் பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் காட்சிமுனை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

    இதனால் ஊட்டிக்கு செல்லும் வழியில் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக உள்ளூர் பஸ் நிலையம் கோத்தகிரி சாலையிலும், வெளியூர் பஸ் நிலையம் ஊட்டி சாலையிலும் அமைந்துள்ளது.

    இங்கு அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. குறிப்பாக உள்ளூர் பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. அதன்பின்னர் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு நகராட்சி மூலம் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு, அதை தனியார் ஒப்பந்ததாரர் எடுத்து நடத்தி வந்தார்.

    அதில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாமல், சுகாதாரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல், கழிப்பிடத்தை மூடிவிட்டனர்.

    இதன் காரணமாக பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணி நடைபெறுவதாக கூறினார்கள். எனினும் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கழிப்பிடம் மூடி கிடப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • 125-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
    • மலர்த்தொட்டிகளை மாடங்களில் அடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ஊட்டி:

    மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்துக்கு கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடு எதுவும் இல்லாததாலும், சமவெளி பகுதியில் வெயில் அதிகம் சுட்டெரிப்பதாலும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது அரசு துறைகள் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 13-ந்தேதி ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    பல வண்ண மலர்களால் உருவான ஈபிள் டவர், கிரிக்கெட் மட்டை, பந்துடன் மைதானம், கால்பந்து, காலணியுடன் கூடிய மைதானம் மற்றும் மயில் உள்ளிட்ட பறவைகளின் உருவங்கள், மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் உருவம் என உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்களும் சுற்றுலாபயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளன. 2 நாட்களில் ரோஜா கண்காட்சியை 35 ஆயிரம் பேர் ரசித்து பார்த்துள்ளனர். 3 நாட்களாக நடந்த ரோஜா கண்காட்சி இன்று மாலை நிறைவுபெறுகிறது.

    இதுதவிர அரசு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், லேம்ஸ்ராக் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 125-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. அங்கு மலர்த்தொட்டிகளை மாடங்களில் அடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    மலர் கண்காட்சியையொட்டி இந்த வாரம் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதற்கிடையே கூடலூரில் நடந்து வாசனை திரவியக்கண்காட்சி நேற்று நிறைவடைவதாக இருந்தது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    • ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர்.
    • கண்ணாடி மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறும். இந்த சீசன் சமயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    அதன்படி தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. மேலும் சமவெளி பகுதியில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளுகுளு காலநிலை நிலவும் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவு வாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.

    அவர்கள் கண்ணாடி மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள பல வகையான கள்ளி செடிகளையும் பார்வையிட்டனர்.

    இதற்கிடையில் நேற்று முன்தினம் ரோஜா பூங்காவில் கண்காட்சி தொடங்கியது. இதில் பல வண்ண ரோஜா மலர்களால் ஈபிள் டவர் உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்து, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதை 2-வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

    ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகு, அதிவேக படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர்.

    இது தவிர பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து இருந்தது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், ரோஜா பூங்காவில் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே உள்ள ராப்ராய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி ருக்குமணி (வயது75). இவர் தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் குழாய் அருகே சென்றுள்ளார்.

    அப்போது அங்குள்ள புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த கரடி ருக்குமணியை தாக்கியது. இதனால் கை, மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டி விட்டு, காயமடைந்த ருக்குமணியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததுடன், காய்மடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வரும் ருக்மணிக்கு ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்கு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டுள்ளது.
    • சுய உதவிக்குழுவின் உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவராக இருக்க வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30,122 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முதல்வரால், ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வரின் காலை உணவு திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது இரண்டு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பள்ளி சமையலறை மையங்களை நிர்வகிப்பதுடன், குழந்தைகளுக்கு காலை உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக தகுதியுடைய சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இப்பணிக்கு தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மைய பொறுப்பாளர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அதே கிராம ஊராட்சியில், நகர்ப்புற பகுதியில் வசிப்பிடமாக கொண்டு வசிப்பவராக இருக்கவேண்டும்.காலை உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் போதுமான அடிப்படை திறன் பெற்றிருக்க வேண்டும்.

    சுய உதவிக்குழுவின் உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்ப டும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் 5-ம் வகுப்பை நிறைவு செய்யும் பட்சத்திலோ அல்லது அப்பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றலாகும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்பட்டு வேறு உறுப்பினர் இப்பணியில் அமர்த்தப்படுவார்.சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்சம் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மகளிர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய ஆன்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும்.

    இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ள முதன்மை தேர்வு குழுவால் தற்காலிக பணிக்கு தேர்வு செய்யப்படுவார். இப்பணி தற்காலிகமான, விருப்பபணி மட்டுமே. அரசு நிர்ணயம் செய்யப்படும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதர படிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.

    இப்பணிக்கு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் முதன்மை குழு உறுப்பினர்கள் மீதோ, இதர மக்கள் பிரதிநிதிகள் மீதோ, புகார்கள் ஏதும் வரப்பெற்றால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    • குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பட்டாம் பூச்சிகள் பூங்கா அமைத்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ணங்களில் மலர்கள் நடவு செய்யப்பட்டது.

    ஊட்டி,

    குன்னூரில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பூங்காவிற்கு பட்டாம்பூச்சிகள் வருகை புரிய தொடங்கியுள்ளது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளிலுள்ள 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகள், நகராட்சிக்கு உட்பட்ட ஓட்டுப்பட்டரை வசம்பள்ளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு துர்நாற்றம் வீசுவதால் இந்த இடத்தின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்திய குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பட்டாம் பூச்சிகள் பூங்கா அமைத்தனர்.

    அந்தப் பூங்கா பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ணங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மலர்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது புதிய பூங்காவாக மாற்றப்பட்டு குப்பை மேலாண்மை பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் தொடர் மழை பெய்து வருவதாலும் பூங்காவில் மலர்கள் அதிக அளவில் மலர்ந்து உள்ளதால் பூங்காவிற்கு பட்டாம் பூச்சிகள் வருகை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த பட்டாம்பூச்சி வருகையை காண உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் இப்பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர்.
    • இதுகுறித்து வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்த புலியால் வாகன ஒட்டிகள் புலியை நேரில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டியில் இருந்து மசின குடி செல்லும் கல்லட்டி சாலை வனப்பகுதி வழியாக செல்லும் மலை பாதையாகும். இந்த கல்லட்டி மலை பாதையில் 36-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையை வீடியோ பதிவு செய்தபடி வந்த போது சீகூர் பாலம் அருகில் திடீரென வன பகுதியிலிருந்து புலி ஒன்று சாலையை நோக்கி பாய்ந்து, அடுத்த பகுதியில் இருந்த வனப்பகுதிக்கு சென்றது.

    தீடிரென மின்னலை போல் சாலையை கடந்த புலியை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.

    • அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் பணிகளை ஆய்வு செய்தார்.
    • எம்.ஜி.ஆர் நகர் மக்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்,

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 25 ஆண்டுகளாக மழை காலங்களில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஆற்று வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் முன்னாள் நகர மன்ற தலைவரும் அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் சுமார் ரூ.50 லட்சம் செலவில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் செல்லாதபடி தடுக்கும் வகையில் நீண்ட தடுப்புசுவர் அமைக்கும் பணிக்கு நிதி பெற்றுக்கொடுத்து தற்போது நடைப்பெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

    தங்களின் நீண்ட 20 ஆண்டுகால கோரிக்கையை ஒரே ஆண்டில் நிறைவேற்றிய அதிமுக கவுன்சிலர் சரவணகுமாருக்கு எம்.ஜி.ஆர் நகர் மக்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்,

    • சிறுத்தை எமரால்டு காவல் நிலைய வளாகத்தில் நேற்று இரவு உலவியது
    • சிறுத்தை உலவி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் எமரால்டு சுற்றுவட்டாரப் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறுத்தைகள் வருவது சமீபகாலமாக தொடா்ந்து வருகிறது.

    இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை எமரால்டு காவல் நிலைய வளாகத்தில் நேற்று இரவு உலவியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் காவல் நிலைய வளாகத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை உலவி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் வெலிங்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
    • தடை செய்யப்பட்ட 12 மூட்டைகள் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தசாமி, வெலிங்டன் இன்ஸ்பெக்டர் ஆனந்த நாயகி மற்றும் போலீசார் வெலிங்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 12 மூட்டைகள் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.அவற்றை கடத்தி வந்த வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த ஜாபர் அலி (45), அப்துல் மஜீத் (54) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் இவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து குட்கா வாங்கி வந்து குன்னூரில் விற்பனை செய்ய திட்டமிருந்தது தெரியவந்தது.

    • ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி இன்று காலை தொடங்கியது.
    • ரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் வைக்கப்பட்டிருந்தன.

    ஊட்டி:

    கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் ஊட்டியில் அரசு துறைகள் சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகளும் நடத்தப்படும்.

    இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி 2 நாட்கள் நடந்தது. பல டன் காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டு இருந்த உருவங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. 2 நாள் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்துச் சென்றனர்.

    கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நேற்று தொடங்கியது. ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டியும் நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி இன்று காலை தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். கலெக்டர் அம்ரித் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.

    ரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் வைக்கப்பட்டிருந்தன. பூத்துக்குலுங்கிய பல வண்ண ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கண்காட்சியில் 27 அடி உயரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு ஈபிள் டவர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஈபிள் டவர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு தொடர்பான உருவ மாதிரிகளும் ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. சிறுவர்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் யானை, முயல், மயில் போன்ற வடிவங்களும் வடிவமைத்து இருந்தனர்.

    தமிழக அரசின் திட்டமான மீண்டும் மஞ்சள் பை திட்டத்தினை அனைவரும் கடைபிடிக்கும் வண்ணம் விழிப்புணர்வு மஞ்சள் பை அலங்காரம், உலக சர்வதேச சிறுதானிய ஆண்டினை கொண்டாடும் வகையில் அதன் சின்னம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் கோ ஆர்கானிக், ஊட்டியின் 200-வது வயதை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 சின்னம் என பலவகையான அலங்காரங்கள் 50 ஆயிரம் வண்ண ரோஜாக்களை கொண்டு செய்யப்பட்டு இருந்தன.

    இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ×