என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 12 மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டி குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பூம்புகார், செருதூர், விழுந்தமாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற, மணிவண்ணன், செண்பகம், சிவசுப்பிரமணியன், முருகன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 12 மீனவர்கள் கடந்த 2007 - 09ம் ஆண்டு வரை மாயமாகினர்.

    மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி அவர்களுடைய உறவினர்கள், நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து இருந்தனர். 

    இந்நிலையில் மாயமான மீனவர்கள் இலங்கை சிறையில் இருப்பதாக நாகையில் உள்ள உறவினர்களுக்கு அங்குள்ளவர்கள் மீனவர்கள் சிறையில் இருக்கும் புகைப்படங்களை கடந்த 2014ம் ஆண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

    புகைப்படங்கள் வெளியாகி 7 வருடங்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், இதுவரை மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள புகைப்பட ஆதாரங்களுடன் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த மீனவர்களின் உறவினர்கள், சிறையில் உள்ளதாக கூறப்படும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அருண் தம்பு ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    10 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தந்தை இல்லாமல் காணாமல் போன மீனவர்களின் குழந்தைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தவித்து வருவதாகவும் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

    வேதாரண்யம் நகராட்சியில் போட்டியிடும் 21 அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி 21 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வேதாரண்யம் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் வெளியிட்டார். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் மற்றும் கட்சி பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். 

    1&வது வார்டு முதல் வரிசையாக 21 வார்டு உறுப்பினர்கள் விபரம்:& 

    ராணி, ஹஜிதா அம்மாள், செந்தமிழ்செல்வி, ராதா,  செல்வி, பன்னீர்செல்வம், அம்சலேகா, சத்யா, ஜெகிலா,  சீனிவாசன், குமார பாரதி, புனிதா, குமார், வசந்தி, ரமேஷ், பாபுராஜ், சத்யா, நமசிவாயம், இளங்கோவன், கற்பகம், மணிரஞ்சனா  ஆகியோர் போட்டியிடுவார்கள் என அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் நகர் மன்றத் தலைவர் வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டார்.
     
    நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கிரிதரன், வழக்கறிஞர் சுப்பையன், மாவட்ட கவுன்சிலர் திலீபன் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் குமரவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஓய்வுபெற்ற ஆணையர் ராஜரத்தினம் உள்பட ஏராளமான முக்கிய கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    நாகையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்: 

    நாகை  துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்று இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து நாகை தனிப்படை போலீசார், நாகை துறைமுகம், வேதாரண்யம் கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கண்காணிப்பை பலப்படுத்தினர்.

    இந்நிலையில் நேற்றிரவு நாகை துறைமுகம் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 கார், ஒரு லோடு வேனை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
     
    அப்போது காரில் வந்த 6 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார், லோடு வேனையும், காரையும் சோதனையிட்டனர்.

    அப்போது லோடு வேனில் தவிடு மூட்டைக்கு அடியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 500 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர் சிங்காரவேல், சீர்காழி மற்றும் தேனியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், மணிவாசகம், உமாபதி உள்ளிட்ட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்களும், ஒரு லோடு வேனும், பைபர் படகு ஒன்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. 

    தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து  கஞ்சா பொட்டலங்கள் லோடு வேன் மூலம் நாகை துறைமுகத்திற்கு கடத்தி வரப்பட்டதும், பின்னர் படகு மூலம் இலங்கைக்கு அதனை கடத்திச் செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.

    தொடர்ந்து கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்துள்ளார்.

    வேளாக்குறிச்சி ஆதீனம் மணிவிழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    வேதம் நிறைந்த தமிழ்நாட்டின் கண் உள்ள புனிதமான சைவ ஆதீனங்களில் மாநிலத்தின் ஜீவநதி என போற்றப்படும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளதும், 14-ம் நூற்றாண்டில், சிவபுரம் சத்தியஞான தீர்க்கதரிசிகளால் தோற்றுவிக்கப்பட்டதுமான புகழ்மிக்க திருக்கைலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் 18-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் மணி விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், துலாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்புகலூர் ஆதீன இளவரசு ஸ்ரீஅஜபா நடேஸ்வர சுவாமிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
    கீழ்வேளூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் இரண்டு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    மூன்றாவதாக இருந்த மெயின் கதவை உடைக்க முடியாமல் அப்படியே போட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பியதும்  தெரிய வந்தது.
     
    இதனால் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் பணம் மற்றும் 15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தப்பியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழுநோய் இல்லா இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்ற உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தலைமையில் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் எற்றனர்.

    தொடர்ந்து தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2 ஊனமுள்ள தொழு நோயாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் கவுரவித்தார். 

    நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், இணை இயக்குநர் நலப்பணிகள் ராணி, துணை இயக்குநர் தொழுநோய் சங்கரி, நிலைய மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    பள்ளிக்கூடங்கள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முக்குலத்து புலிகள் கட்சி நிறுவன தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் டெல்டா வைரஸ் கொரோனா, ஒமிக்ரான் இணைந்து சமூகப் பரவலாக தொடங்கி உள்ளதாக கடந்த மாதம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

    அதன் பிறகு தொடர்ச்சியாக இரவு நேர ஊரடங்கு போடப்பட்டது. பிறகு ஞாயிறு முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. டாஸ்மாக் மட்டும் தவிர்த்து வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி மறுப்பு செய்யப்பட்டது.

    இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது. 

    இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். அன்றாடம் 27 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிக்கும் போது ஏன் ஊரடங்கு தளர்த்தி பள்ளிகள் திறக்க வேண்டும்?

    தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் ஊரடங்கு போட மாட்டோம் என்பதை அரசு உத்தரவாதம் அளிக்குமா? பள்ளி மாணவர்களுக்கு 15 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

    அதுவும் 2 டோஸ் போட வில்லை. எந்த அடிப்படையில் கொரோனாவால் 
    மூடி இருந்த பள்ளிக்கூடங்களை இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் திறக்கப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.

    பள்ளி திறப்பதால் எந்த பாதிப்பும் வராது, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்களா? தேர்தல் அரசியலுக்காக மாணவர்கள் 
    நலனை பாதிக்க கூடாது. 

    பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திருமருகலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் அருகில் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருமருகல் ஒன்றிய பொறுப்பு செயலாளர் சந்திரசேகர், பொறுப்பு தலைவர் முத்துவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாய சங்க நாகை மாவட்ட செயலாளர் பாபுஜி கோரிக்கை விளக்கி பேசினார். 

    இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ், திருமருகல் கிளை செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    இரட்டைமடி, சுருக்குமடி போன்ற தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று இலங்கை மீனவர்கள் கூறியதன் பேரில் தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் சென்றதாக கூறப்படுகிறது.
    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைபேட்டையை சேர்ந்தவர் மீனவர் அமிர்தலிங்கம் (வயது 43). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மாவட்டத்தை சேர்ந்த செல்வம், மணிகண்டன், ஆறுமுகம், வினோதன், கந்தன், நரசிம்மன், மணி, தேவா, ஹரி, குணால், வெற்றி மற்றும் அமிர்தலிங்கம் உள்பட 12 மீனவர்கள் கடந்த 29-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    இதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த 9 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    மீனவர் மணிகண்டன் தனது விசைப்படகை நாகை மாவட்டத்தை சேர்ந்த குமாரி என்பவரிடம் இருந்து வாங்கி பதிவு எண்ணை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் மணிகண்டன், அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் நாகை மீன்துறை அலுவலகத்தில் கடலுக்கு மீன் பிடிக்க டோக்கன் பெற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    இரண்டு படகில் இருந்த 21 மீனவர்களும் கடல் வளம் மிகுந்து காணப்படும் காங்கேசன் துறைமுகம் அருகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

    இப்பகுதியில் தமிழக மீனவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீன்படிக்கலாம். ஆனால் இரட்டைமடி, சுருக்குமடி போன்ற தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று இலங்கை மீனவர்கள் கூறியதன் பேரில் தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இதன்பேரில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லை பகுதியான காங்கேசன் துறையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது 9 பைபர் படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் அதிக வெளிச்சம் கொண்ட டார்ச் லைட்டால் 2 படகுகள் மீதும் வெளிச்சத்தை பாய்ச்சி தமிழக மீனவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறீர்களா? இதனால் இப்பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுகிறது என கூறி மணிகண்டன், அமிர்தலிங்கம் படகில் இருந்த 21 மீனவர்களையும் அழைத்து சென்று மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்து புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அமிர்தலிங்கம், மணிகண்டன் ஆகியோரது விசைப்படகும் மயிலட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று காலை காங்கேசன் அல்லது பருத்தித்துறை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்களை ஆஜர்படுத்தி விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.

    நம்பியார் நகர் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நம்பியார் நகர் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டப்பேரவையில் பேசியதோடு, தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை மனுவும் அளித்தேன். அதன் அடிப்படையில், நம்பியார் நகர் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    நாகப்பட்டினம் நம்பியார் நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் அவர்களுக்கும், மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை நிறைவேற துணை நின்ற அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் , தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நன்றி கூறியுள்ளார்.

    மூன்றாவது கதவை உடைக்க முடியாததால் டாஸ்மார்க் கடையில் இருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான மதுபானங்கள் தப்பியது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்து பார்த்தபோது, டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து இதுகுறித்து கீழ்வேளூர் காவல் துறைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். 

    போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் இரண்டு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததும், மூன்றாவதாக இருந்த மெயின் கதவை உடைக்க முடியாமல் கொள்ளை கும்பல் தப்பி சென்று இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து டாஸ்மாக் மேலாளரிடம் புகாரை பெற்ற கீழ்வேளூர் போலிசார் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெயின் கதவை உடைக்க முடியாமல் திருடர்கள் திரும்பி சென்றதால், டாஸ்மாக் கடையின் கல்லாவில் இருந்த 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணமும், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் தப்பித்தது..
    கோடியக்கரை சரணாலய பகுதியில் 247 வகையான 2 லட்சத்து 87 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் 
    சரணாலயம் அமைந்துள்ளது. 

    இங்கு ரஷ்யா, சைபீரியா, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும், 
    இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் 
    ஆண்டு தோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு ஏராளமான பறவைகள் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் இங்கு 
    உணவுக்காக வந்து தங்கி செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டும் கடற்காகம், கடல் ஆலா, செங்கால் நாரை, கூழை கிடா, கொக்கு, உள்ளான் வகைகள் உட்பட 247 வகையான பறவைகள் 
    வந்துள்ளது. 

    இதனை கணக்கெடுக்கும் பணி ஆண்டு தோறும் நடைபெறும். 
    இந்த ஆண்டு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு கணக்கெடுத்து வந்தனர்.

    கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சத்தீஷ் கணக்கெடுப்பு விவரங்களை தெரிவித்தார்.

    அதன் படி தற்சமயம் 67 வகையான பறவைகள் என மொத்தம் 
    2 லட்சத்து 87 ஆயிரம் இருப்பதாக அறிவித்தார். அப்போது 
    கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் உட்பட 
    வனத்துறையினர் இருந்தனர்.
    ×