என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருமருகல் அருகே சி.பி.சி.எல். நிறுவனத்தை கண்டித்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் அருகே சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்கம் சார்பில் ஒருநாள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோல் கார்ப்பரேஷன் லிம்மிட்டெட் நிறுவனம் விரிவாக்க பணிகளை தொடங்கி உள்ளது.

    சுமார் 618 ஏக்கர் பரப்பளவில், ரூ.38 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்க வலியுறுத்தியும் அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

    இந்த நிலையில் சி.பி.சி.எல். பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டால் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கம் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    இதில் சி.பி.சி எல் ஆலை விரிவாக்கத்திற்காக தங்களது விளைநிலங்களை இழக்கும், விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு முன் முட்டம் கிராமத்திற்கு அரசால் வழங்கப்பட்ட நியாயமான இழப்பீட்டை வழங்கிட வேண்டும், சி.பி.சி.எல் நிறுவனத்தால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் மற்றும் சாகுபடிதாரர்களின் வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் நிரந்தர பணிக்கு உத்திரவாதம் வழங்கிடவும், பாதிக்கப்படும் விவசாய சாகுபடிதாரர் மற்றும் அனைத்து விவசாய கூலி தொழிலாளர்கள், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும் மாற்று வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திட வேண்டும்.

    சி.பி.சி.எல் நிறுவனம் சுற்றியுள்ள பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், குத்தாலம், முட்டம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களை பாதிக்காத வகையில் கழிவு மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு, வாழ்வதற்கு ஏற்ற சுற்றுச்சூழல், குடிநீர் ஆதாரம் ஆகியவற்றுக்கான பாதுகாப்பை வெளிப்படைத் தன்மையோடு உறுதி செய்திட வேண்டும்.30 ஆண்டுகளுக்கு முன் கொடுத்து இதுவரை நடைமுறைபடுத்தாத வாக்குறுதியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை விளை நிலங்களில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணா விரத போராட் டத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் சுமூக தீர்வு ஏற்படாத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம் பெத்துகுட்டி தெருவிலுள்ள தோப்பு புறம் போக்கு பகுதியில் பண்ணைக்குட்டை அமைக்க 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்ற சென்றனர்.

    அப்போது அங்கு உள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தோப்பு புறம்போக்கு இடத்தில் மீனவர்களுக்கு வீடு கட்டுவதற்காக இடம் கேட்டுள்ளோம் எனவே குளம் வெட்ட கூடாது என்று தடுத்துள்ளனர்.

    உடனடியாக 100 நாள் வேலை வாய்ப்பில் பணியாற்றிய 52 தொழிலாளர்களும் வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்வெட்டி கூடையுடன் வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து வேலை செய்ய அனுமதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த புஷ்பவனம் ஊராட்சி மன்ற தலைவர் நாடிமுத்து, துணைத் தலைவர் ராஜகோபாலன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமலிங்கம், பணி மேற்பார்வையாளர் வேல் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் நாளை இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வேலை வழங்கப்படும் என ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமலிங்கம் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
    திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ் இல்ல திருமண விழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை 5-ந்தேதி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாராஜா மஹாலில் மாலை 6.00 மணிக்கு வரவேற்பு விழாவும்,6-ந்தேதி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாராஜா மஹாலில் காலை திருமண விழாவும் நடைபெற உள்ளது.
    வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம் பெற்றிருந்ததால் நாகை நகராட்சி அ.தி.மு.க. பெண் வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார். இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி தேர்தலில் நாகூர் பட்டினச்சேரி 4-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் எம்.சி.ஏ. பட்டதாரியான அமிர்தவள்ளி (வயது 33) என்பவர் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவம் வாங்குவதற்காக நாகை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

    அப்போது அவருடைய பெயர், வரிசை எண் உள்ளிட்டவைகள் துணை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக அந்த படிவத்தில் இடம்பெற்றிருந்தது.

    இதனால் அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவத்தை வழங்க முடியாது என நகராட்சி அலுவலர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி தான் உயிரோடு இருக்கும்போது தனது பெயர் துணை வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரோடு இடம்பெற்றது எப்படி? இந்த தவறுக்கு யார் காரணம்? என்று நகராட்சி அலுவலர்களிடம் முறையிட்டார். ஆனாலும் அங்கு அவருக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே வந்த அ.தி.மு.க. வேட்பாளர் அமிர்தவள்ளி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவத்தை நகராட்சி அலுவலகத்தில் வாங்குவதற்காக நேற்று காலை எனது கணவருடன் வந்தேன்.

    வேட்பு மனு படிவத்தை கேட்டபோது நான் இறந்து விட்டதாகவும், இதனால் என்னுடைய பெயர் துணை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர் அட்டவணையில் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்து நகராட்சி அலுவலர்கள் எனக்கு வேட்பு மனு படிவம் தர மறுத்து விட்டனர்.

    ஆனால் முதன்மைப் பட்டியலில் என்னுடைய பெயர் உள்ளது. இப்போது துணை பட்டியலில் என்னுடைய பெயர் நீக்கப்பட்டுள்ளதாக இடம் பெற்றிருக்கிறது என நகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

    நான் தான் அமிர்தவள்ளி என்பதை நிரூபிக்க எனது ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை காட்டியும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

    இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் மணிவேலன் நேரில் வந்து இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்தார்.


    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் நாட்டு நல பணித்திட்டம் சார்பில் யோகா பயிற்சி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு யோகா பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சியும் அளிக்கப்பட்டது. 

    யோகப் பயிற்சி செய்வதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும், உடல் சுறுசுறுப்போடு செயல்படும் என யோகா பயிற்றுநர் பாண்டியன் விளக்கம் அளித்தார். 

    இதில் கல்லூரியின் கல்விக் குழுமத் தலைவர் எஸ்.ஜோதிமணி அம்மாள், செயலர் எஸ்.பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாஷம், சங்கர் கணேஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் ராமபாலன், தேர்வு நெறியாளர் சின்னதுரை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சிவராம கிருஷ்ணன், முதலாம் ஆண்டு துறைத்தலைவர் தீபா, முனைவர் தாரணி, உடற்கல்வி இயக்குனர் வேலவன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ& மாணவிகள், பேராசிரியர்கள கலந்து கொண்டனர்.
    வேதாரண்யம் அரியாண்டி குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 108 தீர்த்த குளம், ஏரி, குட்டைகள் உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. 

    பல குளங்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த குளங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு நீர் செல்லும்படி வைத்திருந்தனர். 

    நீர் வடியும் வாய்க்கால்கள் பெரும்பாலும் பாதிக்கு மேல் தூர்க்கப்பட்டு தார் சாலைகளாக மாறிவிட்டது.மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வடிய பெரும் சிரமமாக இருக்கிறது.

    இதேபோல் வேதாரண்யம் மையப் பகுதியில் போக்கு வரத்து நெரிசல் உள்ள இடமான மாரியம்மன் கோவில் தெரு ஆரம்பத்தில் அரியாண்டி குளம் என்ற அக்னி தீர்த்த குளம் உள்ளது. 

    இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இந்த குளத்தில் தான் பயன்படுத்தி தீ அணைக்க உதவியது. தற்சமயம் இந்த குளம் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. 

    மேலும் இந்த குளத்தில் மூட்டை மூட்டையாக கழிவுப் பொருளை கட்டி அந்த குளத்தில் போட்டுவிடுகிறார்கள். இதனால் துர்வாடை வீசுகிறது. 

    இந்த குளத்தின் உடைய துர்நாற்றத்தால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தை தூர்வாரி மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரை செடி கொடிகளை அகற்றி நீரை இறைத்து சுத்தப்படுத்தி கரைகட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வாழ்மங்கலம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் பூஜை விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலத்தில் அமைந்துள்ள பேழைக்குள்ளிருந்து அருள்பாலிக்கும் ஏழு திருத்தலங்களில் ஒன்றான துமான வாழ்மங்கலம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் பூஜை விழா நடைபெற்றது.

    முன்னதாக அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும், அம்பாள் தரிசனமும் நடைபெற்றது.

    இதில் திருமருகல், திட்டச்சேரி, திருப்பட்டினம், அகரக்கொந்தகை, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று ஸ்ரீ வீரமாகாளியம்மன் பேழையில் மீளவும் ஸ்தாபிதம் செய்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
    வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்று ஊர் திரும்பிய ராணுவ வீரரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார். 

    இந்நிலையில் பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய முத்துக்குமாருக்கு தகட்டூர் கடை தெருவில் பொதுமக்கள் புடைசூழ முத்துகுமரன் கையில் தேசிய கொடி ஏந்தி மேள தாளங்கள் முழங்க தென்னடாருக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகனம் முன் செல்ல ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். 

    வழிநெடுகிலும் பொதுமக்கள் மாலை சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இந்த நிகழ்ச்சியில் நாகை, திருவாரூர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் நலச்சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சிங்காரவேல், மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் செல்வம், பிரபல ஜோதிட நிபுணர் பொதுவுடை மூர்த்தி, ஆசிரியர் பாஸ்கரன், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் ஜெயகுமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆழியூர், திருக் கண்ணங்குடி, பட்டமங்களம், இராதாமங்களம் ஆகிய ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங் களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், 

    வடக்காலத்தூர் ஊராட்சியில் ரூ.16.61 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 250 மீட்டர் தொலைவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், இலுப்பூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் ரூ.297 லட்சம் மதிப்பீட்டில் 4360 மீட்டர் தொலைவில் சாலை அமைக்கும் பணியினையும், மற்றும் 23.20 லட்சம் மதிப்பீட்டில் 480 மீட்டர் தொலைவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், 

    தேவூர் ஊராட்சியில் ரூ.14.40 இலட்சம் மதிப்பீட்டில் 270 மீட்டர் தொலைவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் தேவூர் ஊராட்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவெண்காடு அருகே நாங்கூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 108 வைணவ திவ்ய தேச பெருமாள் கோவில்களில், 11 பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக உள்ளன. ஆண்டுதோறும் இந்த பெருமாள்கள் நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருட சேவை உற்சவம் நடைபெறுtவது வழக்கம். நேற்று கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலுக்கு குடமாடு கூத்தர், செம்பொன் அரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜ பெருமாள், வைகுண்ட நாதர், மாதவப் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், காவளம் பாடி கண்ணன் மற்றும் நாராயண பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் பக்தர்களால் பல்லக்கில் நாராயண பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர்.

    கோவிலின் வாயிலில் திருமங்கை ஆழ்வார், பெருமாள்களை வரவேற்றார். பின்னர் அனைத்து பெருமாளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் 11 பெருமாள்களும் கோவிலின் பந்தலில் இரவு 10 மணிக்கு எழுந்தருளினர். அப்போது திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். மேலும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் பாடப்பட்டன. இதன் முடிவில் நள்ளிரவு மேளதாளம் முழங்கிட 11 பெருமாளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு கருடசேவை உற்சவம் நடந்தது.

    திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கிராம பொது நல சங்க தலைவர் அன்பு உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.
    நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மனிதநேய வார விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி வளாகத்தில் உள்ள அப்துல் காலம் அரங்கத்தில் மனிதநேய வார விழா நடைபெற்றது. 

    சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராமு, காவல்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் ஊர்குடி தங்க பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கல்லூரி தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலாளர் முனைவர். பரமேஷ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள் பிரகாசம், சங்கர் கணேஷ், இயக்குநர் த. விஜயசுந்தரம், தேர்வு நெறியாளர் முனைவர். சின்னதுறை, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.நடராஜன், துணை முதல்வர். கலியபெருமாள், மற்றும் முனைவர் கற்பகம் 

    பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் தனசேகர், நாகூர் காவல் துணை ஆய்வாளர் ராஜேஷ், தமிழ் துறை கூடுதல் தலைவர் ரமேஷ், காதர் ஷா, அப்சர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

    இறுதியில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தேர் அலங்கரிக்கும் பணிக்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    இந்த ஆண்டு மாசி மக பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா 28 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். வரும் 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    அந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தேர் அலங்கரிக்கும் பணிக்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    வேத சிவாச் சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், உபயதாரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×